தாலியை வாங்கி ஷர்மிளாவின் கழுத்தில் கௌதம் முடிச்சிட, உன்னதி அடுத்து செய்வாள் என்று பார்த்தவர்களின் பார்வை துணுக்குற்றது.
கடகடவென்று மூன்று முடிச்சுக்களையும் அவனே போட்டுவிட்டு திரும்பிவிட சிதம்பரமும், அஞ்சுகாவும் உன்னதியை பார்த்தனர்.
அவள் எப்போதும் போலவே தான் இருந்தாள். எல்லாவற்றையும் பார்வையாளனாய் பார்த்துக்கொண்டிருந்த அலெக்ஸ் மயூரனுக்கு அவளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அடுத்தடுத்து நடந்த விஷயங்களை கொண்டு புரிந்துகொள்ள முடிந்தது.
திருமணமும் நல்லபடியாக முடிய கௌதமிடம் எதுவும் கேட்க முடியவில்லை வீட்டினரால்.
இதோ ஓரளவு கூட்டம் களைய பரிசு பொருளுடன் ஜார்ஜ், மற்றும் அலெக்ஸ் மயூரன் இருவரும் மேடைக்கு செல்ல, லிங்கேஸ்வரன் ஓடி வந்துவிட்டார்.
“வாங்க ஜார்ஜ்…” என்று அவனின் தோளோடு அணைத்துக்கொண்ட லிங்கேஸ்வரன்,
“அலெக்ஸ், இப்பத்தான் பார்க்கறேன். எப்படிப்பா இருக்க? ரெசார்ட் வேலை எல்லாம் நல்லபடியா போகுதா?…” என்று அவனையும் ஆரத்தழுவி விசாரித்தவர்,
“சம்பந்தி இவர் ஜார்ஜ். என்னோட சிநேகிதன். நட்புக்கு வயசு இருக்கா என்ன? நான் ரொம்ப மதிக்க கூடியவங்கள்ல முதன்மையான ஆள். அலெக்ஸ் கூட அப்படித்தான்…” என்றவர்,
“இவங்களும் சென்னையில தான் பிஸ்னஸ் பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ நாலு வருஷமா சொந்த ஊருக்கே வந்துட்டாங்க…” என்று சொல்லிவிட்டு அலெக்ஸை பார்த்தார்.
“இவர் ஜார்ஜ் தம்பி அலெக்ஸ். பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் முடிச்சிட்டு இங்க டீ பேக்டரில எக்ஸ்பீரியன்ஸ்க்காக வொர்க் பண்ணிட்டிருந்தார். இப்ப இடுக்கி டேம் பக்கத்துல எஸ்டேட் வாங்கி அங்க ரெசார்ட் பில்ட் பண்ணிட்டிருக்கார். திறமையான பிள்ளை…” என்றார் அத்தனை பெருமையுடன் அவர்களை.
தேவ்விற்கு பற்றிக்கொண்டு வந்தது. இத்தனை வருடத்தில் தன்னை இந்தளவிற்கு பெருமையாய் பூரித்து பேசி இருப்பாரா என்று.
ஜார்ஜ் என அவ்வப்போது வீட்டில் அவர் பேசினாலும் பெரிதாய் யார் என அறிந்துகொள்ளவேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்பட்டதே இல்லை.
இப்படி ஒரு அறிமுகத்தை நினைத்தும் பார்க்கவில்லை அவன். அதிலும் அலெக்ஸ் மயூரன் உன்னதிக்கு பிடித்தமானவன் என்று தெரிந்ததில் இருந்து அவ்வளவு ஆத்திரம்.
முகத்தில் காண்பிக்காமல் இருக்க பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியதாகி போனது.
“வந்து நில்லுங்க. வாங்க…” என்று புகைப்படத்திற்கு அவர்களை நிற்க செய்ய, அவரறியாமல் உன்னதி விலகி வந்துவிட்டாள்.
கௌதமிற்கு அவர்கள் இருவரையும் பார்த்ததும் முகமே விழுந்துவிட்டது.
இவன் எப்படி இங்கே என்று யோசிக்கும் முன் அவனின் மாமனார் தான் உருகிவிட்டாரே.
போலியாய் ஒரு புன்னகையை சிந்தியபடி நின்றவன் பார்வை அவ்வப்போது உன்னதியை தொட்டு மீள, அவள் முகத்தில் உணர்வுகள் துடைக்கப்பட்ட பாவனை தான்.
“ஓகே வாங்க சாப்பிட போகலாம்…” லிங்கேஸ்வரன் அழைக்க,
“வர்றேன் நீங்க போய் மத்தவங்களை கவனிங்க…” என்று சொல்லவும் சிதம்பரம் அங்கிருந்து நகர்ந்தால் போதும் என்று வர,
“டூ மினிட்ஸ் ண்ணா…” என்ற அலெக்ஸ் மயூரன் சிதம்பரத்தின் பின்னே சென்றான்.
“ஒருநிமிஷம் நில்லுங்க…” என்று சொல்லவும் திடுக்கிட்டவர் சட்டென்று நின்று திரும்ப,
“கொஞ்சம் பேசனும்…” என்றான் அலெக்ஸ் மயூரன்…”
“என்ன? என்ன பேசனும்?…” என்கையில் இளங்கோ வேகமாய் இறங்கி வருவது தெரிய எங்கே கைகலப்பாகி போகுமோ என்று மகனை பார்வையால் அங்கேயே இருக்கும்படி தடுத்துவிட்டார்.
“முக்கியமான விஷயம். பேசியே ஆகனும். பேசிட்டு தான் போவேன்…” என்று மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அழுத்தமாய் அவன் நிற்க, சிதம்பரத்திற்கு ஒன்றும் அசையவில்லை.
மயூரனின் விழிகள் அவரை நகரவிடாமல் செய்ததோடு பார்வை பக்கவாட்டில் அலச அங்கே புருவங்களை உயர்த்தியபடி வேடிக்கை பார்த்து நின்றாள் உன்னதி. பார்த்ததும் அவளை கண்டு புன்னகைத்தவன்,
“உங்க பொண்ணை கூப்பிடுங்க சிதம்பரம் ஸார்…” என்றான் தன்மையுடன் அவரிடத்தில்.
“ஏன்? எதுக்கு?…” என அவர் மறுத்து நகர,
“இப்ப நீங்க கூப்பிட்டா நம்ம மூணுபேருக்குள்ள பேசலாம். இல்லைன்னா நான் பேசுவேன். சத்தமா அத்தனை பெரும் கேட்கும் விதமா உன்னதியை எனக்கு பிடிச்சிருக்கு, நாங்க கல்யாணம் செஞ்சுக்க போறோம்ன்னு…” என்று சொல்ல ஸ்தம்பித்து நின்றுவிட்டார் சிதம்பரம்.
“உங்களுக்கே தெரியும். உன்னதி எந்த சூழ்நிலையிலையும் பொய் சொல்ல மாட்டான்னு…” என்றும் கூறியவன், அவர் அழைக்க மாட்டார் என்று உணர்ந்து,
“நானே கூப்பிடறேன்…” என்று சொன்னதோடு உன்னதியின் புறம் திரும்பி வா என்பதை போல தலையசைக்க, உன்னதியின் புருவங்கள் உயர்ந்தது.
“உன்னதி, என் நதி. இங்க வா…” என்றான் அலெக்ஸ் மயூரன் கொள்ளையாய் புன்னகைத்து.