மெய் சிலிர்க்கும் வண்ணம் – 6 (3)

தாலியை வாங்கி ஷர்மிளாவின் கழுத்தில் கௌதம் முடிச்சிட, உன்னதி அடுத்து செய்வாள் என்று பார்த்தவர்களின் பார்வை துணுக்குற்றது.

கடகடவென்று மூன்று முடிச்சுக்களையும் அவனே போட்டுவிட்டு திரும்பிவிட சிதம்பரமும், அஞ்சுகாவும் உன்னதியை பார்த்தனர்.

அவள் எப்போதும் போலவே தான் இருந்தாள். எல்லாவற்றையும் பார்வையாளனாய் பார்த்துக்கொண்டிருந்த அலெக்ஸ் மயூரனுக்கு அவளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அடுத்தடுத்து நடந்த விஷயங்களை கொண்டு புரிந்துகொள்ள முடிந்தது.

திருமணமும் நல்லபடியாக முடிய கௌதமிடம் எதுவும் கேட்க முடியவில்லை வீட்டினரால்.

இதோ ஓரளவு கூட்டம் களைய பரிசு பொருளுடன் ஜார்ஜ், மற்றும் அலெக்ஸ் மயூரன் இருவரும் மேடைக்கு செல்ல, லிங்கேஸ்வரன் ஓடி வந்துவிட்டார்.

“வாங்க ஜார்ஜ்…” என்று அவனின் தோளோடு அணைத்துக்கொண்ட லிங்கேஸ்வரன்,

“அலெக்ஸ், இப்பத்தான் பார்க்கறேன். எப்படிப்பா இருக்க? ரெசார்ட் வேலை எல்லாம் நல்லபடியா போகுதா?…” என்று அவனையும் ஆரத்தழுவி விசாரித்தவர்,

“சம்பந்தி இவர் ஜார்ஜ். என்னோட சிநேகிதன். நட்புக்கு வயசு இருக்கா என்ன? நான் ரொம்ப மதிக்க கூடியவங்கள்ல முதன்மையான ஆள். அலெக்ஸ் கூட அப்படித்தான்…” என்றவர்,

“இவங்களும் சென்னையில தான் பிஸ்னஸ் பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ நாலு வருஷமா சொந்த ஊருக்கே வந்துட்டாங்க…” என்று சொல்லிவிட்டு அலெக்ஸை பார்த்தார்.

“இவர் ஜார்ஜ் தம்பி அலெக்ஸ். பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் முடிச்சிட்டு இங்க டீ பேக்டரில எக்ஸ்பீரியன்ஸ்க்காக வொர்க் பண்ணிட்டிருந்தார். இப்ப இடுக்கி டேம் பக்கத்துல எஸ்டேட் வாங்கி அங்க ரெசார்ட் பில்ட் பண்ணிட்டிருக்கார். திறமையான பிள்ளை…” என்றார் அத்தனை பெருமையுடன் அவர்களை.

தேவ்விற்கு பற்றிக்கொண்டு வந்தது. இத்தனை வருடத்தில் தன்னை இந்தளவிற்கு பெருமையாய் பூரித்து பேசி இருப்பாரா என்று.

ஜார்ஜ் என அவ்வப்போது வீட்டில் அவர் பேசினாலும் பெரிதாய் யார் என அறிந்துகொள்ளவேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்பட்டதே இல்லை.

இப்படி ஒரு அறிமுகத்தை நினைத்தும் பார்க்கவில்லை அவன். அதிலும் அலெக்ஸ் மயூரன் உன்னதிக்கு பிடித்தமானவன் என்று தெரிந்ததில் இருந்து அவ்வளவு ஆத்திரம்.

முகத்தில் காண்பிக்காமல் இருக்க பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியதாகி போனது.

“வந்து நில்லுங்க. வாங்க…” என்று புகைப்படத்திற்கு அவர்களை நிற்க செய்ய, அவரறியாமல் உன்னதி விலகி வந்துவிட்டாள்.

கௌதமிற்கு அவர்கள் இருவரையும் பார்த்ததும் முகமே விழுந்துவிட்டது.

இவன் எப்படி இங்கே என்று யோசிக்கும் முன் அவனின் மாமனார் தான் உருகிவிட்டாரே.

போலியாய் ஒரு புன்னகையை சிந்தியபடி நின்றவன் பார்வை அவ்வப்போது உன்னதியை தொட்டு மீள, அவள் முகத்தில் உணர்வுகள் துடைக்கப்பட்ட பாவனை தான்.

“ஓகே வாங்க சாப்பிட போகலாம்…” லிங்கேஸ்வரன் அழைக்க,

“வர்றேன் நீங்க போய் மத்தவங்களை கவனிங்க…” என்று சொல்லவும் சிதம்பரம் அங்கிருந்து நகர்ந்தால் போதும் என்று வர,

“டூ மினிட்ஸ் ண்ணா…” என்ற அலெக்ஸ் மயூரன் சிதம்பரத்தின் பின்னே சென்றான்.

“ஒருநிமிஷம் நில்லுங்க…” என்று சொல்லவும் திடுக்கிட்டவர் சட்டென்று நின்று திரும்ப,

“கொஞ்சம் பேசனும்…” என்றான் அலெக்ஸ் மயூரன்…”

“என்ன? என்ன பேசனும்?…” என்கையில் இளங்கோ வேகமாய் இறங்கி வருவது தெரிய எங்கே கைகலப்பாகி போகுமோ என்று மகனை பார்வையால் அங்கேயே இருக்கும்படி தடுத்துவிட்டார்.

“முக்கியமான விஷயம். பேசியே ஆகனும். பேசிட்டு தான் போவேன்…” என்று மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அழுத்தமாய் அவன் நிற்க, சிதம்பரத்திற்கு ஒன்றும் அசையவில்லை.

மயூரனின் விழிகள் அவரை நகரவிடாமல் செய்ததோடு பார்வை பக்கவாட்டில் அலச அங்கே புருவங்களை உயர்த்தியபடி வேடிக்கை பார்த்து நின்றாள் உன்னதி. பார்த்ததும் அவளை கண்டு புன்னகைத்தவன்,

“உங்க பொண்ணை கூப்பிடுங்க சிதம்பரம் ஸார்…” என்றான் தன்மையுடன் அவரிடத்தில்.

“ஏன்? எதுக்கு?…” என அவர் மறுத்து நகர,

“இப்ப நீங்க கூப்பிட்டா நம்ம மூணுபேருக்குள்ள பேசலாம். இல்லைன்னா நான் பேசுவேன். சத்தமா அத்தனை பெரும் கேட்கும் விதமா உன்னதியை எனக்கு பிடிச்சிருக்கு, நாங்க கல்யாணம் செஞ்சுக்க போறோம்ன்னு…” என்று சொல்ல ஸ்தம்பித்து நின்றுவிட்டார் சிதம்பரம்.

“உங்களுக்கே தெரியும். உன்னதி எந்த சூழ்நிலையிலையும் பொய் சொல்ல மாட்டான்னு…” என்றும் கூறியவன், அவர் அழைக்க மாட்டார் என்று உணர்ந்து,

“நானே கூப்பிடறேன்…” என்று சொன்னதோடு உன்னதியின் புறம் திரும்பி வா என்பதை போல தலையசைக்க, உன்னதியின் புருவங்கள் உயர்ந்தது.

“உன்னதி, என் நதி. இங்க வா…” என்றான் அலெக்ஸ் மயூரன் கொள்ளையாய் புன்னகைத்து.

மெய் சிலிர்க்கும் வண்ணம் – 6 (2)

“நீ செய், உன் அண்ணனும், ஏன் அப்பாவும் செய்யட்டும். இங்கயே இவ்வளவு பேர் முன்னாடி நான் என் விருப்பத்தை சொல்லுவேன். ஏன் இங்கயே என்னை கல்யாணம் பண்ணினாலே ஆச்சுன்னு முடிச்சு காட்டறேன்…” என்றவள்,

“உன்னை மாதிரி வேறு பேச்சுல நிக்கமாட்டேன் தம்பி. சொன்ன சொல் தவறமாட்டாள் உன்னதி. நீ செய்யத்தான நானும் வெய்ட்டிங். நடத்து. நானும் நடத்திக்கறேன்…” என்றவள்,

“அன்னைக்கு மாதிரி உன் கால்ல விழுந்து அழுது கெஞ்சுவேன்னு நினைச்ச இல்ல? யார் வேணா யார் நெஞ்சுல வேணா ஏறி மிதிக்கலாம்டா. என்னோட நல்லதுன்னு ஒரு நல்ல மனுஷனை எங்க வரை கொண்டுட்டு போய் அசிங்கப்படுத்தின நீ…” என்றவளின் விழிகளில் அத்தனை கனல்.

அசந்து நின்றான் இளங்கோ. வாயை திறக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவளின் குரல் வேறு ஜலதோஷம் பிடித்து அத்தனை தீனமாய் வந்திருந்தாலும் நெருப்பாய் பொசுக்கியது அவள் வார்த்தைகள்.

அவனை சவாலாய் பார்த்துவிட்டு தாயை அழைத்துக்கொண்டு முன்னே திரும்பியவள், அங்கிருந்த ஒரு பூங்கொத்தினை கையில் பிடித்துக்கொண்டாள்.

“பிராப்பரா ப்ரப்போஸ் பண்ண சரியான வெப்பன் வேணுமே? இதோ ரோஜா கொத்து. தேங்க்ஸ் ப்ரோ, சும்மா இருந்திருந்தாலும் நான் சும்மாவே இருந்திருப்பேன். என்னை நீ சும்மாவே இருக்க விடமாட்டேன்றியே. என்ஜாய்…” என கூறிவிட்டு நடந்தவளுக்கு மீண்டும் உடல் தீயாய் தகிக்க துவங்கியது.

அதுவரை அவளையே அவதானித்துக்கொண்டிருந்த அலெக்ஸ் மயூரனின் விழிகளில் அத்தனை வேதனை.

ஒற்றையாய் எத்தனையை தாங்குகிறாள் என்று. இளங்கோவிடம் பேசியது எல்லாமே அவன் கவனித்திருந்தான்.

அதிலும் அந்த அசைவுகளும், மாற்றங்களும், கோப பார்வைகளும் என்று அலெக்ஸ் மயூரனுக்கு நிலைமையை படம் பிடித்து காண்பிக்க அவள் முன்னே வர வர பாராமல் ஒரு பார்வை பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.

அவன் அமர்ந்திருந்த இருக்கை வரிசையை தாண்டி செல்லும் முன் மின்னல் நொடி பார்வை அவன் மீது வீசியவள், ‘இங்கே என்ன? அங்கே பார்’ என்பதை போன்ற ஜாடையை நொடிநேரத்தில் கடத்திவிட்டு அதட்டலாய் வெட்டி செல்ல, கவலை தோய்ந்த முகம் சட்டென புன்னகையை மீட்டெடுத்தது.

இன்னும் சிதம்பரத்தின் பார்வை அவர்கள் மீது விழவில்லை. ஜார்ஜை அழைத்துக்கொண்டு சென்ற லிங்கேஸ்வரன் அவனை அமர சொல்லிவிட்டு சம்பந்தியை தேட,

“கல்யாணம் முடியட்டும். பார்த்துக்கலாம். நீங்க மேடைக்கு போங்க ஸார்…” என்றான் ஜார்ஜ்.

அவரை விட வயதில்  குறைந்தவனாக இருந்தாலும் தொழில் ரீதியான இருவரது நட்பும் வலுவாகவே இருந்தது இந்த சில வருடங்களில்.

மௌனமாய் நடப்பவற்றை பார்த்திருக்க அப்போதுதான் வேறொரு சொந்தத்தை வரவேற்று அவளித்துக்கொண்டு மேடையேறிய சிதம்பரம் பார்வை அலெக்ஸ் மயூரனின் மீது பதிந்து விலகி, பின் மீண்டும் பதறி விழுந்தது.

தான் பார்த்தது அவனை தானா என மீண்டும் ஒருமுறை அழுத்தமாய் ஆழ்ந்து பார்த்து அவன் தான் என உறுதிப்படுத்துவதும் அலெக்ஸ் மயூரனுக்கு தெள்ளத்தெளிவாய் விளங்கியது.

விழிகள் இன்னும் கூர்மை பெற புன்னகைக்கவும் இல்லாமல் அப்படி ஒரு பார்வை பார்த்தான் அவரை.

உண்மையில் தடுமாறித்தான் போனார் சிதம்பரம். மயூரனின் விழிகளை அவரால் சந்திக்க முடியவில்லை.

அதையும்விட அருகில் இருந்த ஜார்ஜ். அவனின் மாறா புன்னகையில் உள்ளுக்குள் சரிந்தேவிட்டது அவரின் ஆணவம்.

எப்போதும் போலவே அவரை பார்த்ததும் ஜார்ஜ் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெள்ளையாய் புன்னகைக்க, அவ்விடத்தில் தான் சிறுத்து போனதாய் உணர்ந்தவரால் அதே போல் பதில் புன்னகையை சிந்த முடியவில்லை.

அதையெல்லாம் ஜார்ஜ் பெரிதுபடுத்தாததை போல மயூரனிடம் திரும்பி பேச ஆரம்பித்துவிட்டார்.

இன்னும் கௌதம் அவனை கவனிக்கவில்லை. அவனிருந்த மனநிலை, அத்தனை மகிழ்ச்சியாய் இருக்க இதை எல்லாம் எங்கே பார்க்க?

மேடைக்கு உன்னதியும் வந்துவிட இதோ அவளோடு அவர்கள் குடும்பமும், இளங்கோவை ஒட்டிக்கொண்டு தேவ்வும்.

“இது வேற அங்க இங்க தொங்கிட்டிருந்துட்டு இப்ப இங்க…” என்று தலைவேதனையாய் போனது.

“இப்ப எப்டி இருக்கு உன்னதி? காய்ச்சல் பரவாயில்லையா?…” என அவளின் பார்வையை கண்டு தேவ் அருகில் வந்துவிட,

“அதை விசாரிக்க தான் என்னோட ஆள் என்னை தேடி வந்திருக்காங்க. ஸோ க்ளோஸ் யூர் டோர்…” என்று பேச முகத்திலடித்ததை போன்ற பாவனையை அவனால் பொறுக்க முடியவில்லை.  

“நானும் ரொம்ப பொறுமையா போறேன் உன்னதி. எல்லாம் உனக்காக தான்…”

“இப்பவும் எனக்காக தான் சொல்றேன். பேசாம தள்ளி நில்லுங்க. இல்லைன்னா கோவத்துல ஹோம குண்டத்துக்குள்ள தள்ளி விட்டு நான் மயங்கிருவேன்…”

“உன் அண்ணன் கல்யாணம் உன்னதி…”

“முதல்ல என் நிம்மதி. அப்பறம் தான் எவன் நிம்மதியும். புரிஞ்சதா? ஸ்டே அவேன்றதுக்கு மீனிங் தெரியனும்ன்னா…” என்று அவள் சொல்லும்பொழுதே நகர்ந்துவிட்டான் தேவ்.

“இவனுங்களை சமாளிக்கிறதுல சைட் மிஸ்ஸாகுது. ச்சை. நிம்மதியா ரசிக்க முடியுதா இந்த எனக்குன்னு பிறந்து தொலைஞ்சவனை. இவனுங்க வேற குறுக்க மணல் லாரி சைஸ்ல…” என்றவள் இளங்கோவை தேடினாள்.

“வாட் ப்ரோ?…” என்று அனைவரும் கேட்க சத்தமாகவே அவள் இரு கைகளையும் உயர்த்தி தலையசைத்து பேச,

“என்ன உன்னதி?…” என்றார் லிங்கேஸ்வரன்.

“உங்க சின்ன மாப்பிள்ளை ஸ்பெஷலா என்னவோ செய்ய போறேன்னு சொல்லிட்டிருந்தார். அதான் என்னன்னு கேட்டேன் மாமா. மாங்கல்யம் வேற மேடைக்கு வர போகுது. அதான்…” என்று சொல்ல, இளங்கோ பேந்த பேந்த விழித்தான்.

“எதுவும் சர்ப்ரைஸாடா?…” கௌதம் சிரிக்க,

“ஹாம், ஆமா,,, இல்ல இல்லண்ணா…” என இங்குமங்குமாக தலையை அசைத்து தடுமாறி சமாளிக்க முடியாமல் திணறினான்.

“சிறப்பான சம்பவம்ன்னு சொன்னான் மாமா உங்க சின்ன மாப்பிள்ளை…” என்று வேறு தேவ்வை ஒரு பார்வை பார்த்துவிட்டு சின்ன மாப்பிள்ளை என்று சொல்லியதில் அவ்வளவு அழுத்தம் வேறு கொடுக்க பல்லை கடித்தான் இளங்கோ.

அவள் என்ன அர்த்தத்தில் கூறுகிறாள் என்று தான் அவனுக்கு தெரிந்திருந்ததே.

முறைக்கவும் முடியாமல் மற்றவர்களின் பார்வையையும் எதிர்கொள்ள முடியாமல் அல்லாடி நிற்க,

“கேட்ச்…” என்று ஒரு கிப்ட் பாக்ஸை தூக்கி இளங்கோவிடம் வீசியவள்,

“கிப்ட் பண்ணிக்கோ…” என்று சொல்ல,

“அட இது தானா?…” என்று அத்தனைபேரும் சிரித்தவன்.

அதில் கௌதம்மிற்கும், அவனின் மனைவியாகப்போகும் ஷர்மிளாவிற்கும் மோதிரங்கள் இருந்தது.

கௌதம்மிற்கு புரிந்துபோனது தங்கையின் எண்ணம் என்னவென்று. முகம் திருப்பி அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அந்த பரிசை அவளே தந்தாலே என்ன என்னும் கேள்வி நிறைந்திருந்தது.

“அண்ணி உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ், என்னோட கிப்ட்ன்னு கூட வச்சுக்கோங்களேன்…” என்று ஷர்மிளாவிடம் சொல்லியவள்,

“இன்னைக்கு மூணு முடிச்சும் உங்க அவங்களே தான் போடனுமாம். நான் நாத்தனார் முடிச்சு போட கூடாதுன்னு முன்னவே ஆடர். அதான் சர்ப்ரைஸ இப்பவே உடைச்சுட்டேன். என்னை போட விடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க இல்ல….” என்று கேலி போல சொல்லி ஷர்மிளாவையும் சந்தோஷப்படுத்தி அதிலிருந்து விடுபட்டுவிட்டாள் உன்னதி.

இதனை கௌதம் துளியும் எதிர்பார்க்கவில்லை. தங்கை இப்படி பேசிய பின் இல்லை என்று மறுக்க முடியாத நிலையில் கௌதமின் கண்கள் கலங்கிவிட்டது.

அத்தனை தூரமா தங்களை தாண்டி சென்றுவிட்டாள் அவள் என்று நினைக்க, திருமாங்கல்யம் மேடைக்கு வந்துவிட்டது.

ஷர்மிளா ஆசையாய் கௌதம்மை பார்த்ததோடு நட்பாய் உன்னதியின் கைகளையும் பற்றிக்கொள்ள,

“வாழ்த்துக்கள் அண்ணி…” என்று அவளின் கையை பிடித்து குலுக்கிவிட்டு நிமிர்ந்து நகர்ந்து நின்றாள் உன்னதி.

மெய் சிலிர்க்கும் வண்ணம் – 6 (1)

வண்ணம் – 6

               தன் விழி கடந்து உள்ளே கை வீசி சென்றவனின் மீதான பார்வையை திருப்ப இயலாது பெருமூச்சுடன் தலையசைத்தாள் உன்னதி.

லேசாய் பார்வை நகர்ந்ததும் அங்கே இளங்கோவும், தேவ்வும் ஒருவரை ஒருவர் பரத்துவிட்டு கோபமாய் அலெக்ஸ் மயூரனை பார்த்து வைக்க,

“இவங்க வேறையா?…” என வெளிப்படையாவே தலையில் கைவைத்துவிட்டவளுக்கு என்ன தான் நடக்கிறதென பார்க்கும் சுவாரஸியம்.

அதையும் விட தன் தந்தை, நினைக்கையில் குரல்வளையை யாரோ இறுக்கி பிடிப்பதை போலொரு உணர்வு.

ஏற்கனவே உடல் நிலை, காய்ச்சல். இதில் பக்கம் பக்கமாய் வாய் குறையாது பேசி வைத்து தொண்டை வேறு கட்டி இருக்க அயர்ந்தது அவளுள்ளம்.

இந்த நான்கு வருடங்களாய் அவள் தன் வீட்டினரிடம் போராடியதை விட அவளுள் அவளே போராடியது தான் அதிகம்.

எதிர்பாராத விதமாய் அவனை பார்த்த விதம் ஒன்று, பார்த்ததும் அவனை தாண்டி செல்லமுடியாமல் தேடி தவித்த மனதிற்கென அவனிடம் சில நொடிகளை விருந்தாக்கி உள்மனம் புசித்து பசியாறிய தவிப்புகளின் தீனி என்று அலைகழிக்கப்பட்டு இதோ இன்னும் மீள முடியாமல் நின்றிருக்கிறாள்.

“உன்னால நான் கண்ட காய்ச்சல் போதாதா? திரும்ப என்னை பார்த்து சும்மா இல்லாம கிளப்பிவிட்டு ஏன்டா படுத்தற? இப்ப தான் என்னை நினைக்க தோணுச்சா? போடா…” என சத்தமின்றி முணுமுணுத்துக்கொண்டாள் உன்னதி.

அவன் நடந்து சென்றதும் அங்கே யாரோ அவனிடம் கை குலுக்குவதும் தெரிய பார்த்திருந்தவளின் அருகில்,

“ம்க்கும்…” என்றொரு கணீர் குரல்.

“ஜார்ஜ் அண்ணா…” என அழைத்துக்கொண்டே சட்டென அவள் திரும்பியதும், பார்த்த நொடி கண்களும் கசியும் போலிருந்தது.

“எப்படிம்மா இருக்க உன்னதி?…” என்றான் அத்தனை அன்புடன் மகளென தந்தை பார்க்கும் பார்வையுடன்.

“ஹ்ம்ம்…” தொண்டை அடைத்தது உன்னதிக்கு இப்போதும்.

“ஸாரி அண்ணா…” இதனை எத்தனை முறைவேண்டுமானாலும் அவனிடம் கேட்க தயங்கமாட்டாள் உன்னதி.

இப்போதும் அவனிடம் அவள் கேட்க, ஜார்ஜிற்குமே அவ்வளவு வருத்தம்.

“ப்ச், போடாம்மா. இன்னும் கண்ணு கலங்கிட்டு…” என்றவன்,

“உடம்பு எதுவும் சரியில்லையாப்பா? முகமே வாடி இருக்கே?…” என கேட்க உன்னதியின் தலை அசைந்தது.

வார்த்தைகள் வரவில்லை. பார்வை அவனின் கழுத்தில் பதிந்தது. வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தவனின் கழுத்துப்பகுதியில் இன்னும் அந்த வெளீர் கோடுகள் தெரிவதை போல் பிரம்மை.

கூடவே அதனின் இதயப்பகுதியில் அவள் விழிகள் இறங்கியது. எத்தனை பலமாய் கீழே தள்ளி மிதித்திருந்தான் இளங்கோ.

எந்த காலத்திலும் அதனை மன்னிக்க தோன்றாது உன்னதிக்கு. எப்பேர்ப்பட்ட மனிதன் அவன்? இவனை போய் என்று மனம் வருந்தா நாளில்லை.

“இங்க கிளைமேட் சேரலையோ?…” என்று ஜார்ஜ் அவளிடம் கேட்டுக்கொண்டிருக்க,

“அடடே ஜார்ஜ் ஏட்டா…” என்று அழைத்துக்கொண்டே வந்துவிட்டார் மணமகளின் தகப்பனான லிங்கேஸ்வரன்.

“என்ன இங்கயே நின்னுட்டீங்க? உள்ள வாங்க…” என்று அழைக்க,

“இப்ப தான் வந்தேன்…” என்ற ஜார்ஜ் லிங்கேஸ்வரனின் அணைப்பில் புன்னகையுடன் உன்னதியை திரும்பி பார்த்தான்.

“என் ப்ரெண்ட் ம்மா உன்னதி…” என்று அவளுக்கும் அவனை அறிமுகம் செய்வித்ததோடு,

“மாப்பிள்ளையோட தங்கச்சி…” என்று கூறிவிட்டு உள்ளே அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

ஜார்ஜ் அவளை திரும்பி பார்த்து தலையசைத்துவிட்டு உள்ளே சென்றுவிட அலெக்ஸ் மயூரனை நோக்கி வேகமாய் சென்ற இளங்கோ, தேவ் இருவரின் நடையும் லிங்கேஸ்வரன் ஜார்ஜுடன் வரக்கண்டு தடைபட்டது.

இளங்கோ என்னவோ சொல்ல தேவ் அமைதியாய் நின்றிருந்தான் அவர்களை பார்த்து.

“இவனுங்க வேற புதுசா கல்யாணம் ஆனா ஜோடிங்க மாதிரி. ஸ்யப்பா…” என்று தலையில் கை வைக்காத குறையாக பார்த்தாள்.

கூடவே சிரிப்பு ஒரு பக்கம். இளங்கோவை பார்த்து நக்கலாய் புன்னகைக்க அவனுமே அவளை பார்த்து அப்பட்டமாய் முறைத்தான்.

அதற்குள் மணமகள் இருவரும் மேடைக்கு அழைக்கப்பட வேகமாய் மகளை தேடி வந்தார் அஞ்சுகா.

“உன்னதி யாரு வந்திருக்கான்னு பார்த்தியா?…” என படபடப்புடன் கேட்க,

“ஜார்ஜ் அண்ணா தானே? பார்த்தேன் ம்மா…” என சொல்லிக்கொண்டிருக்க இளங்கோவும் வந்து நின்றவன்,

“கண்டவன் உன் அண்ணனா? பல்லை தட்டி கையில குடுத்துருவேன்…” என்றான் அடிக்குரலில் மிரட்டலாய்.

“நான் செஞ்சே காமிச்சிருவேன். தட்டி தரவா?…” என்று தானும் தீயை உறுத்து விழித்தாள் இளங்கோவை.

இத்தனை நாள் எல்லாம் அவள் புன்னகைக்கு பின் தன் கோபதாபங்களை மறைத்து வைத்திருக்க, இன்று ஜார்ஜை கண்டதும் அத்தனையும் அப்பட்டமாய் வெளிப்பட்டது.

“அவன் உனக்கு அண்ணனா? இனி அப்படி சொன்ன?…” என இளங்கோ கொந்தளித்தான்.

கூடவே மற்றவர்களின் கவனம் தங்கள் மீது பட்டுவிடாதவாறு வேறு சமாளிக்க வேண்டுமே.

“உன்னை வேணா அண்ணன் இல்லைன்னு சொல்லுவேன். யோசிக்கவே மாட்டேன். ஜார்ஜ் அண்ணாவை அப்படித்தான் சொல்லுவேன். என்னடா செய்வ?…” என உன்னதியும் பேச,

“அட பிள்ளைங்களா பேசாம இருங்களேன்….” என்ற அஞ்சுகா,  

“அங்க மேடைக்கு உன்னை கூப்பிடறாங்க உன்னதி. வா…” என்றார் மகளிடம்.

“ப்ச், வர்றேன்…” என்று தாயோடு செல்ல,

“அவன்கிட்ட எதாச்சும் பேசு. உன்னை பேசிக்கறேன்…” என செல்லும்பொழுது இளங்கோ தங்கையை எச்சரிக்க,

“இரும்மா…” என்று தாயிடமிருந்து தன் கையை விடுவித்தவள் மீண்டும் இளங்கோவின் முன் வந்து நின்றாள்.

“பேசினா?…” என்று இப்போது அத்தனை உணர்வுகளையும் பின் தள்ளி அவனின் முன் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவள் புன்னகை முகமாக கேட்க,

“பேசினா அப்ப தெரியும் நான் யாருன்னு. உன்னை ஒன்னும் செய்யமாட்டேன். ஆனா அவனை முழுசா போய் சேர விடமாட்டேன்…”

“ஓஹ், இப்பவும் என்னை நீ எதுவும் செய்யமாட்ட. அப்படித்தானே?…” என்று எள்ளலாய் கேட்டவள்,

“எனக்கும் ரொம்பநாளா நீ என்ன தான் செய்ய போறன்னு பார்க்க ஆசை. அதனால இன்னைக்கு நான் ஒண்ணு பன்றேன். இப்ப போய் நான் அவங்க கிட்ட, பேசறேன்….” என்று சொல்ல,

“உன்னதி…” என்றார் அஞ்சுகா.

“இவன் யாருன்னு நான் பார்க்கனும் ம்மா. சொல்லிட்டே இருக்கானே. தெரிஞ்சுக்கறேன். எனக்காக எனக்காகன்னு தானே இவன் எதையும் செய்வான்னு சொல்றான். இன்னைக்கு என்னத்தை…” என்றவள் அங்கிருந்த ஒரு பூச்செடியின் இலையை கிள்ளி வீசியவள்,

“என்னத்த பன்றான்னு பார்க்கறேன்…” என்றாள் அவ்வளவு சிரிப்போடு.

“வேண்டாம் உன்னதி. என்னை நீ ப்ரவோக் பன்ற…” என இளங்கோ விழி சிவக்க,

“என்னைக்கோ என்னை உடைச்சு போட்டாச்சு. இனி நீ உடைஞ்சா எனக்கென்ன? உம்மியானா எனக்கென்ன? போடா…” என்றவள்,

“தாலி கட்டட்டும். நீ யாருன்னு நீ காமி. நான் யாருன்னும் நான் காமிக்கறேன்…” என்று பேச,

“உன்னதி, அப்பா கூப்பிடறாங்க…” என்றார் அஞ்சுகா.

எதை சொன்னால் மகள் கோபத்தை விடுத்து திசை திரும்புவாளோ அவர் அதை கூறியதே வினையாகிற்று.

மெய் சிலிர்க்கும் வண்ணம் – 5 (2)

“முதல்ல சாப்பிட்டு மாத்திரையை போட சொல்லுங்க…” கௌதம் கூற,

“நீ போய் ரெடியாகு கௌதம்…” என்று மகனை அனுப்பி வைத்தார் சிதம்பரம்.

“இதுக்கு தான் சென்னையிலையே கல்யாணம் வச்சிடலாம்ன்னு சொன்னேன்…” என அஞ்சுகா வழக்கம் போல் துவங்கினார்.

“ப்ச், இப்ப வரை இதை விடமாட்டியா நீ?…” சிதம்பரம் எரிச்சலாக,

“பின்ன, இப்படி நசநசன்னு மழை பெய்ஞ்சுட்டே இருந்தா? ஒரு நிம்மதியா போய் வர முடியுதா? என் பேச்சை யார் கேட்கா?…”

“ம்மா, பேசாம இரேன்…” என்று உன்னதி சோர்வுடன் கூற,

“இந்தா இன்னும் ரெண்டு வாய். சாப்பிட்டு மாத்திரை போடு…” என்று சொல்லியவர்,

“இது சீசன், இந்த ஜனவரில இப்படித்தான் இங்க இருக்கும்ன்னு நமக்கே தெரியும்போது அவங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்ல. நான் சொல்லும்போது சரின்னு சொல்லாம. என்னவோ போ…” என அவரின் புலம்பல் ஆறவில்லை.

“ப்பா நீங்க போங்க…” என்று அவரை கிளம்ப சொல்லிவிட்டு,

“ம்மா, இப்ப புலம்பினா உடனே மூணாறு சென்னையாகி இந்த மழை நின்னு அங்க கல்யாணம் நடந்திடுமா?…” என்று அதட்டினாள்.

“அதில்லடா உதி…”

“மூச், இங்க தான் நடக்கனும்ன்னு ஏற்பாடு பண்ணிட்டாங்க. இப்ப அந்த மழையை விட நீ தான் நசநசன்னு பேசற. இனி பேச கூடாது. புரிஞ்சதா?…” என்று சொல்லிக்கொண்டிருக்கையில்,

“ம்மா…” என்று வந்துவிட்டான் இளங்கோ. கூடவே சகாதேவ்.

வந்ததுமே அவனின் விழிகள் அவளை நலம் விசாரிக்கும் முன் பாதாதிகேசம் ஒரு அளவிடல் செய்து துளைக்க,

“ஹலோ, மிஸ்டர். இப்படித்தான் பார்ப்பாங்களா ஒரு பொண்ணை?…” என பட்டென்று கேட்டுவிட தேவ் முகம் மாறிவிட்டது.

“இல்ல உன்னதி, உனக்கு பீவர்னு இப்ப தான் அப்பா சொல்லிட்டு போனாங்க. ரொம்ப டென்ஷனாகிடுச்சு. அதான் பார்க்க வந்தேன்…” என அவன் கூற,

“வந்ததும் வந்துட்டீங்க. அந்த பீவரை தயவு செஞ்சு கூட்டிட்டு போயிருங்க. இம்சை. எப்ப பார்த்தாலும் காதுக்குள்ள நுழைஞ்ச கொசு மாதிரி உயிரை வாங்குது. ஒருநாள் பொட்டுன்னு போட போறேன்…” என்று பேச,

“உன்னதி…” என்று பல்லை கடித்தான் இளங்கோ.

“என்னண்ணா?…” என்றவள்,

“பார்த்தாச்சுல. நீங்க கிளம்புங்க. பொண்ணோட அண்ணன். உங்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்…” என்று வேறு தேவ்விடம் கிளம்பும்படி கூற,

“இல்ல இளங்கோ தனியா வரனும். சேர்ந்தே போறோமே. நீங்க பேசிட்டு வாங்க இளங்கோ. நான் வெளில வெய்ட் பன்றேன்…” என்று சொல்லிவிட்டு அவன் வெளியேறியதும் இளங்கோ தங்கையை திட்ட அந்த அறையின் கதவை சாற்ற, கடகடவென்று அப்படி ஒரு சிரிப்பு உன்னதியிடம்.

“ம்மா அஞ்சு, நான் சொல்லலை. இது அது தான்….” என்று வேறு பேச,

“எது அது? உனக்கு வாய் கூடிருச்சு. என்ன சொன்ன நீ?…” என்று இளங்கோ முறைப்புடன் கேட்க,

“சொன்னா நீ வருத்தப்படுவ. வேணா…”

“ஆஹா, நான் வருத்தப்படுவேன்னு எல்லாம் நீ கவலைப்படுவியா? என்னவோ சொல்லிருக்க. இப்ப சொல்லு…” என்று இளங்கோ வம்பாய் நிற்க,

“சொல்லிரவா? சரி கேட்டுக்கோ. இண்ட்ரப் பண்ணின பார்த்துக்கோ…” என்றவள்,

“பிரிக்க முடியாதது தேவாங்கும், வானரமும்…”

“பிரியக்கூடாதது தேவாங்கும் வானரமும்…”

“பிரிய வேண்டியது அப்கோர்ஸ் தேவாங்கும் வானரமும்…”

“பிரிஞ்சாலும் சேரத்துடிப்பது தேவாங்கும் வானரமும்…”

“வாவ் வாட் எ ரைமிங்? வாரணமாயிரம் ரேன்ச்ல ஒரு பிக்சரைஸ் பீல் குடுக்குதுல. நீ நடத்துடா அண்ணா….”

“உன்னதி…”

“கவலையே படாத. உன்னை எப்டியாச்சும் காப்பாத்தி விட்டுடறேன். எங்கிருந்தாலும் வாழ்க. பிழைச்சு போடா அண்ணா. என் ஆசிர்வாதம் எப்பவும் உனக்கு உண்டு. நான் எல்லாம் உன்னை மாதிரி இல்லை…” என உன்னதி பேச கோபத்தில் இளங்கோ.

“ம்மா, இவளை என்னன்னு பெத்து வளர்த்தீங்க. பொம்பளை புள்ளை மாதிரியா பேசறா? எவ்வளோ திமிர். என்னை என்னலாம் சொல்றா பாருங்க…” என்று சொல்லியவன்,

“காய்ச்சலாச்சேன்னு பார்க்கேன். இல்ல செவிலு பேந்துடும்…” என்று மிரட்ட,

“ஹலோ தம்பி, இந்த செவில் எல்லாம் எனக்கு மட்டும் தான் இருக்கா?…” என உன்னதியும் பேச, மீண்டும் கதவு தட்டும் சத்தம்.

“உன் ஆளு கூப்பிடுது பாரு. ஓடு ஓடு…” என்று சொல்ல,

“நீ ஊருக்கு வா. பேசிக்கறேன்…” என்று சொல்லிவிட்டு சென்றான் அவன்.

“என்னடா உன்னதி, ஏன் இப்படி பன்ற?…”

“எனக்கும் எனர்ஜி வேண்டாமா ம்மா? காய்ச்சல் கூட போயிரும் போல இவன் ஆட்டத்தை பார்த்து…” என்றவள் மெல்ல எழுந்து தயாரானாள்.

இப்போதும் திருமணத்திற்கென்று வீட்டில் எடுத்துக்கொடுத்த புடவையை அவள் அணியவில்லை.

அவர்களின் சூப்பர்மார்க்கெட் ஒன்றை உன்னதி தான் பொறுப்பேற்று கவனித்ததோடு அதற்கான சம்பளத்தையும் பெற்றுக்கொண்டிருக்க அதில் தான் அத்தனையும் வாங்கி இருந்தாள்.

கவலையுடன் அஞ்சுகா பார்த்திருக்க அவரின் கன்னத்தை கில்லி கொஞ்சிக்கொண்டவள்,

“அந்த சேரி அப்பா எடுத்து தந்திருந்தா கண்டிப்பா கட்டிருப்பேன். உன் தலைச்சனுக்கு எல்லாம் நான் தலைபணிஞ்சு போக முடியாது. இவன் நினைச்சா எனக்கு பட்டா பகட்டுக்கு எடுத்து நீட்டுவான். இல்லையா போட்ருக்கற ட்ரெஸ், எல்லாம் அப்பாவோடதுன்னு பேசுவான். என்னால எல்லாம் எல்லா நேரமும் அவனை மாதிரி மாற முடியாது…” என்று இலகுவாய் சொல்லிவிட்டு அஞ்சுகாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

தூறல் கூட நின்று லேசாய் காற்றோடு ஈரப்பதம் மட்டுமே ஒட்டிக்கொண்டு குளிரை பரப்பிக்கொண்டிருந்தது.

மணமேடைக்கு மணமக்கள் வர இருக்க உறவு பெண்களுடன் உன்னதியும் முன்பகுதிக்கு வருபவர்களை வரவேற்க நின்றுகொண்டாள்.

எங்கே உள்ளே இருந்தால் தன்னை ஒவ்வொன்றிலும் இழுப்பார்களே என்று வந்து நின்றுவிட அங்கிருந்தவர்களுடன் கலகலத்தபடி பொழுது நகர்ந்தது.

நான்கு பேராக இருந்தவர்களில் இப்போது இருவர் மட்டுமே இருக்க வருபவர்களுக்கு பன்னீர் தெளித்தபடி புன்னகை முகமாய் அவள் வரவேற்க, அவளின் இருப்பினை முகப்பிலேயே கண்டுவிட்டவனின் முகத்தில் துள்ளல் புன்னகை.

“வெரி குட்மார்னிங் நதி…” என்றவன் குரலில் பட்டென்று திரும்ப அங்கே அலெக்ஸ் மயூரன் நின்றிருந்தான்.

‘இவன் எங்கே இங்கே?’ என்று திகைத்து பார்த்தபடி நின்றவள் அசையாதிருக்க,

“எனக்கில்லையா?…” என லேசாய் அவன் தலை சாய்த்து புருவங்கள் உயர அவளிடம் கேட்ட பாவனையில் ஒருகணம் ஸ்தம்பித்து ததும்பியது அவளுள்ளம்.

“ஒரு நிமிஷம் உன்னதி…” என உடன் நின்ற பெண்ணும் சொல்லிவிட்டு நகர்ந்ததில் உன்னதி தெளிய, முகத்தினை இயல்பாக்கியவள் சட்டென பன்னீரை தெளித்துவிட்டு,

“வாங்க…” என்று வரவேற்க,

“ஹ்ம்ம், வந்துட்டேன். நமக்காக…” என்று வேறு பேச, அடடா, பின்றானே. இதெல்லாம் இப்ப தானாடா பேசுவ நீ. போடா வேணா’ என்று அவன் பேச்சும் பேச்சின் திசையும் உணர்ந்துகொண்டவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வருவதை போலிருக்க முயன்று அதனை இறுக்கியவள்,

“வர்றவங்களுக்காக மாப்பிள்ளையும் பொண்ணும் இங்க வந்து தாலி கட்டி காமிக்க முடியாது ஸார். கல்யாணத்துக்கு தான வந்திருக்கீங்க. உள்ள போங்க…” என்று சொல்ல,

“எஸ் அப்கோர்ஸ், கல்யாணத்துக்கு தான் வந்திருக்கேன். கல்யாணத்துக்காக…” என்று குறும்பாய் புன்னகைத்து கூற, ‘அடேய் அண்ணா, இதான் உன் கவனிப்பு லட்சணமா? என்னை இம்ப்ரெஸ் பண்ணினவன் இம்ப்ரஸ் பண்ண பார்க்கறான்’ என விழிகள் துழாவ,

“ஹேவ் எ நைஸ் டே நதி…” என்று கூறியவன் அங்கிருந்த கல்கண்டை எடுத்துக்கொண்டு ஒரு ரோஜா பூவினை எடுத்து அவள் கைகளுக்குள் நொடியில் திணித்துவிட திகைத்து பார்த்து நிமிர்ந்தாள் உன்னதி.

சட்டென்று மின்னலாய் ஒரு கண்சிமிட்டல். மீசையுடனான அதரங்கள் அழுந்தி மூடி திறக்க அலெக்ஸ் மயூரன் நொடிப்பொழுதில் உன்னதியை அசத்தி அசரவைத்து உள்ளே சென்றான்.

“தலைக்கு தில்லு தான்.  கண்ணடிக்கிறது என்ன? ஹிடன் கிஸ் என்ன? பார்ப்போம், என்னதான் பன்றான்னு…” என முணுமுணுத்துக்கொண்டே திரும்ப அங்கே ‘வானரமும், தேவாங்கும்’.

மெய் சிலிர்க்கும் வண்ணம் – 5 (1)

வண்ணம் – 5

            ஆஷா தலையில் கைவைக்காத குறையாக கலவரத்துடன் பார்த்திருந்தாள் அண்ணனையும் தம்பியையும்.

அதிலும் எல்லாம் சொல்லிவிட்டு ஒன்றும் அறியாததை போல அமர்ந்திருந்த அலெக்ஸ் மயூரன் முகத்தை காண்கையில் அடப்பாவி என்றிருந்தது அவளுக்கு.

“நிஜமாவே முடிவு பண்ணிட்டியா நீ?…” என கேட்க,

“ப்ச், எத்தனை தடவை சொல்லனும்?…” என்றான் மயூரன்.

“அதுக்கில்ல அலெக்ஸ், அத்தம்மாவுக்கு தெரிஞ்சா?…”

“இப்பவே யார் சொல்ல போறா?…” என மயூரனும்,

“நீ சொல்லிடுவியா?…” என ஜார்ஜும் கேட்க,

“அம்மாடியோ. என்னை ஆளை விடுங்க….” என்று கையெடுத்து கும்பிட இருவரின் முகத்திலும் புன்னகை.

ஆஷாவிற்கு சந்தோஷம் தான். ஆனாலும் ஜார்ஜ்ஜிடம் அந்த குடும்பத்தினர் நடந்துகொண்ட விதம் இன்றளவும் நெஞ்சில் நீங்காமல் பதிந்திருக்கிறதே?

சிறு குழந்தைகள் முன்பு அவர்கள் கெஞ்ச கதற என்னவெல்லாம் பேசி செய்திருந்தனர்?

மனதின் கசப்பு முகத்தில் வெளிப்பட மயூரன் முகத்தில் அவ்வளவு சஞ்சலம்.

“ப்ச், அதை யோசிக்காத ஆஷா…” என மனைவியின் தோளை தட்டினான் ஜார்ஜ்.

“அதெல்லாம் இல்லைங்க…” என்றாலும் முகம் கசங்கிவிட்டது அவளுக்கு.

இனி அவர்கள் உறவாகுபவர்களா? எல்லாம் மறந்து பார்த்து பேசி சிரித்து உறவாட வேண்டுமே என உள்ளமும் சோர்ந்துவிட கூடவே உன்னதியின் முகம்.

சட்டென்று ஒரு வேகம். இப்போதும் சரி எப்போதும் சரி உன்னதியை அவள் பிரித்து பார்க்கவே தோன்றாது ஆஷாவுக்கு.

அத்தனை பிடித்தம் அவளை. கொஞ்சமும் அச்சமின்றி எத்தனை அழகாய் அந்த சூழ்நிலையை அவள் கையாண்டிருந்தாள்?

நினைக்கையில் அவளின் மீதான அன்பு இன்னுமே வலுபெற்றது ஆஷாவிற்கு.

“ஆனாலும் அவ மாறவே இல்லைல…” ஆஷா கேட்க,

“ஹ்ம்ம், பேக்டரில வச்சு அந்த அவன் முன்னாடியே பேசறா…” அலெக்ஸ் மயூரன் புன்னகை முகமாய் கூற,

“பெருமை தான்…” என்ற ஆஷா,

“உன் அண்ணன் அந்த இன்விடேஷனை பார்த்து சொல்லவும் எனக்கு நம்பவே முடியலை. போறதா வேண்டாமான்னு வேற யோசனை…” என்றாள்.

“ஹ்ம்ம், லிங்கேஸ்வரன் நல்லா தெரிஞ்சவர். நண்பரும் கூட. அதனால போகாம இருக்க முடியாது அலெக்ஸ். அதான் உடனே சரின்னு சொன்னேன்…” என ஜார்ஜ் கூற,

“ராணியம்மாவுக்கு அவங்க இன்வைட் பண்ண வரும்போது யாருன்னு தெரியலையா அண்ணா?…” என்றான்.

“அத்தம்மாவுக்கும் பெருசா யாரு மாப்பிள்ளைன்னு தெரியலை. அவங்க அதை கவனிச்ச மாதிரியும் இல்லை. உன் அண்ணனும், நானும் தான் இருந்தோம். அவங்க வாங்கன்னு கேட்டுட்டு உள்ள போய்ட்டாங்க…” ஆஷா சொல்லவும்,

“நானுமே இன்னார் தான் மாப்பிள்ளை வீடுன்னு தெரியப்படுத்தலை அலெக்ஸ். சொல்லிருந்தா அப்பருந்தே கச்சு கச்சுன்னு இருந்திருப்பாங்க…” என்றதும்,

“எப்படியும் தெரியத்தான் போறது. என்ன ஆகுமோ. பார்த்துக்கலாம். நீங்க நாளைக்கு போய்ட்டு வாங்க. எல்லாம் நல்லபடியே நடக்கட்டும்…” என ஆஷா கூற,

“சரி நீ தூங்கு அலெக்ஸ். மார்னிங் நான் சொல்றேன். சேர்ந்தே போகலாம்…” என கூறிவிட்டு ஜார்ஜ் எழுந்து சென்றுவிட்டான்.

அவன் கடந்து செல்லும் வரை மயூரனும் ஆஷாவும் அமைதியாகவே இருந்தனர்.

கீழே சென்று விட்டான் என தெரிந்ததும் தான் பெருமூச்சுடன் நிம்மதியாய் பார்க்க,

“ஆனாலும் உனக்கு துணிச்சல் தான். அத்தைட்ட சொல்லாம…” ஆஷா கேட்க,

“சொல்லும் போது சொல்லிக்கலாம் அண்ணி. முதல்ல சொல்லவேண்டியவங்க கிட்ட சொல்லனும். அதையும் விட உன்னதி…” என்றவன் தலை தன்னை போல் ஆயாசமாய் அசைந்தது.

“என்னாச்சு அலெக்ஸ்?…” ஆஷா யோசனையுடன் பார்க்க,

“என்ன ஆக போகுதோ? என்ன ஆனாலும் பார்த்துக்கலாம் தான். அது உன்னதியோட பேரன்ட்ஸ், அவ அண்ணனுங்க வரை சரி. அதெல்லாம் விஷயமே இல்லை. ஆனா அவ இருக்காளே அவ…” என்றவனுக்கு தவிப்புடன் கூடிய தடுமாற்றமும், புன்னகையும் சேர்த்தே அவனை மூழ்கடிக்க,

“இன்னும் உன் மேல உயிரா தான் இருக்கா அவ. நீயே சொல்றியே அவ்வளோ கான்பிடன்ட்டா…” என்றதும் மயூரனின் முகத்தில் கீற்றாய் கவலை ரேகை.

“எனக்கு என்னவோ அவங்க தான் பிரச்சனை பண்ணுவாங்களோன்னு தோணுது. கண்டிப்பா நாளைக்கு கல்யாணத்துக்கு போகவே தான் வேணுமா அலெக்ஸ்…” என ஆஷா கேட்க அவளின் எண்ணம் புரிந்தது.

“இன்னொருதடவை அண்ணனை யார்கிட்டயும் அவமானப்பட நான் விடமாட்டேன் அண்ணி. என்னால அவங்க வருத்தப்படறது மாதிரியும் நடந்துக்க முடியாது…” என கூற,

“இல்ல அலெக்ஸ், நான் அப்படி சொல்லலை…” என ஆஷா தடுமாறினாள்.

“நீங்க நினைச்சாலும் தப்பில்லை அண்ணி. ஏன் சங்கடப்படறீங்க? அப்படித்தானே நடந்தது…”

“சரி விடு, அதையே பேச வேண்டாம். உன் அண்ணனுக்கு தெரிஞ்சா அதுக்கும் திட்டு விழும்…” என்றவள்,

“ஏன் உன்னதியை நினைச்சு தயங்கற?…”

“தயக்கமா? பயந்து வருது…” என்றவன் கைகள் நெற்றியை அழுத்தமாய் தேய்த்துக்கொண்டது.

“தான் வேண்டாம் என்று வார்த்தையால் மறுக்கும் முன்பே புரிந்துகொண்டு அதனை அவன் கூறும் அவகாசத்தை கூட தராமல் பேசி விலகி சென்றவள் தானே?

தான் சொன்னவுடன் அவள் சந்தோஷப்பட்டுவிடவும் போவதில்லை. ஒப்புக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் போவதில்லை என உள்மனம் அறுதியிட்டு கூறியது.

“அலெக்ஸ்…” என ஆஷா அழைக்க,

“அண்ணி நீங்க போய் தூங்குங்க. லேட்டாகுது பாருங்க. நாளைக்கு பேசலாம்…”

“தனியா இருக்கனும்னா சொல்லேன். அதுக்கேன் லேட்டாகிடுச்சுன்னு அனுப்பற…” என்று அவனின் தோளில் தட்டிவிட்டு எழுந்தவள்,

“சரி நாளைக்கு உன்னதியை கேட்டேன்னு சொல்லு…” என கூறிவிட்டு கீழே சென்றுவிட்டாள்.

ஆஷா சென்றதுமே தன் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தவன் ச்சோவென்று பெய்துகொண்டிருந்த மழையை பார்த்தபடி நின்றான்.

அன்று மாலையில் இருந்தே அவ்வளவு மழை. இதில் நாளை திருமணம் வேறு. அங்கே எப்படி உள்ளதோ என்று சிந்திக்க, கூடவே உன்னதியின் புன்னகை முகம்.

மறுநாள் தன்னை பார்த்ததும் என்னவிதமான பாவனையை அவள் வெளிப்படுத்துவாள் என்று ஒவ்வொன்றாய் சிந்தித்து பார்த்தது அவனுள்ளம்.

இன்னும் மழை அடித்து பெய்ய இப்போது நினைவுகள் அன்றொருநாளை நோக்கி சென்றது.

உன்னதியிடம் முதன் முதலில் அவனாக பேசியதும் அந்த மழை இரவில் தான்.

அவளை அழைத்துக்கொண்டு அவளின் வீடு வந்து விட்டதும் அந்த மழை இரவில் தான்.

அதே மழை இரவில் தான் வாசலோடு சென்றவனை நிறுத்தி வைத்து தன் விருப்பம் என்று அவளின் குடும்பத்தினருக்கு அவள் தெரியப்படுத்தியதும் கூட.

அதிர்வு குறையாமல் அவளிடம் பேச அழைத்த அன்றும் வானம் கொட்டிக்கொண்டு தான் இருந்தது.

இரண்டே சந்திப்பும், பேச்சும் இதோ இந்த நான்கு வருடமும் அந்த நினைவினை சுமக்க செய்துகொண்டிருந்தது.

ஒற்றை பார்வையில் யார் நீ என்று தன்னை விலக்கி நிறுத்தி விலகி சென்றவளின் மீதான நேசம் நீறு பூத்த நெருப்பென அவனுள் எரிந்துகொண்டே தான் இருந்தது இப்போதுவரை.

விருப்பம் தெரிவித்து அதனை உள்வாங்கி எதிர்வினையாற்றும் முன் ஏக ரகளையும், விரும்பத்தகாத ரசபாசங்களும்.

இதோ மீண்டும் அப்படி ஒன்று தான் துவங்க இருக்க கௌதம், இளங்கோவை நினைத்தவன் மனம் அவர்கள் பேசிய பேச்சினால் இறுக கை முஷ்டி முறுக்கியது.

தன்னை போல் அங்கிருந்த பாக்ஸிங் பேக்கில் ஒரு குத்து விட தள்ளி சென்று அவனை நோக்கி வந்தது.

“இங்கிதமில்லாத இடியட்ஸ்…” என்றான் அலெக்ஸ் மயூரன் அவ்விருவரையும் நினைத்து.

மறுநாள் தன் மனநிலையை சமநிலையில் வைத்துக்கொள்ள அப்போதிருந்தே மெனக்கெட ஆரம்பித்தான் அலெக்ஸ் மயூரன்.

—————————————–

திருமணம் நடைபெறும் இடம் அழகாய் ஜோடிக்கப்பட்டிருந்தது. இருபக்கத்து உறவினர்களும், அந்த ஊர் மக்களும், நண்பர்களும் என்று வந்தவண்ணம் தான் இருந்தனர்.

இரவெல்லாம் பெய்து தீர்த்த மழை விடிந்த பின் தூறலாய் மாறி இருந்தது.

“ப்ச், நான் கேட்டேனா? அதான் டேப்லெட் போட்டுட்டேனே?…” என சினந்துவிட்ட முகத்துடன் உன்னதி எரிச்சலாய் கூறிக்கொண்டிருந்தாள்.

“டெம்பரேச்சர் ஹைல இருக்கு. நீ என்னடான்னா சாதாரணமா சொல்ற? இந்த குளிர் வேற உனக்கு சேரலை…” என அஞ்சுகா புலம்பிக்கொண்டிருந்தார்.

இன்னும் சற்று நேரத்தில் முகூர்த்தம். இரவெல்லாம் குளிரில் காய்ச்சல் கண்டிருந்தது உன்னதிக்கு.

ஆனாலும் காண்பித்துக்கொள்ளவே இல்லை. அஞ்சுகா தான் மகளின் விழிகளை, முகத்தை வைத்தே கண்டுகொண்டார்.

தெரிந்த மருத்துவர் வந்து அவளுக்கு ஊசி போட்டு மருந்துகள் தந்து செல்ல அதற்குள் மணப்பெண்ணின் தாயும், தகப்பனும் வந்துவிட்டனர் உன்னதியை பார்க்க.

“இப்ப எப்படிம்மா இருக்கு?…” என்று அவர் கேட்க,

“நான் நல்லா தான் இருக்கேன். ஏன் எல்லாரும் இங்க?…” என்று அவளுக்கு சங்கடமாகிப்போக,

“அப்பா, ப்ளீஸ் நீங்க போய் பாருங்க. டைம் ஆகுதே?…” என்றாள் சிதம்பரத்திடம்.

மெய் சிலிர்க்கும் வண்ணம் – 4 (2)

“அப்பறம் ஏன் இவ போய் பார்த்து பேசனும்? அதுவும் தேவ்கிட்ட பாய் ப்ரென்ட், வெய்ட்டிங் லிஸ்ட் அது இதுன்னு பேசிருக்கா…” என்றதுமே உன்னதியின் முகம் மாறியது.

சிதம்பரம் முகம் சிறுத்து போய்விட்டது இப்படி பேசி வைத்திருக்கிறாளே என்று.

“அடுத்தவன்கிட்ட அப்படி சொல்லலாமா? அதுக்கு என்ன அர்த்தம்? இதுல இவளை நம்பறீங்களா நீங்க?…” என்றான் எள்ளலுடன்.

“பொய் சொல்லலையே. உண்மையை தானே சொன்னேன்….” என்று அப்போதும் உன்னதி அசராமல் பேச,

“உன்னை அடிச்சே கொன்னாத்தான் என்ன?…” என கையை ஓங்கிக்கொண்டு வந்தான் இளங்கோ.

“போதும் இளங்கோ. இப்ப நீ கிளம்ப போறியா இல்லையா?…” என்று கேட்க,

“போய்த்தான ஆகனும். இப்படி இவளை காவல் காத்துக்கிட்டே இருக்கறதே என் வேலையா போச்சு…” என்று சொல்லி செல்ல,

“நீயும் போ கௌதம். எல்லாரும் தேடுவாங்க….” என்றார் மகனிடம் அஞ்சு.

“ஹ்ம்ம், பார்த்துக்கோங்க…” என அவனும் அந்த அறையை விட்டு சென்றுவிட,

“உன்னதி…” என்று வருத்தமாய் பார்த்தார் மகளை.

“ப்ச், இதுக்கெல்லாம் நான் அழுது வடியவா முடியும்? உங்க பிள்ளைக்கு அவன் காமிக்கிறவன் என்கிட்ட என்னவேணா பேசி வழியலாம். அதுக்கு பேர்…” என்றவள் சட்டென்று வார்த்தையை நிறுத்தி இதழ்களை கடித்து, உணர்வுகளை அடக்கினாள்.

சிதம்பரத்திற்கு மனம் தாங்கவில்லை. யாருக்கென்று பேசுவது என்று கிடந்து தவித்தார்.

மகளின் பரிதவிப்பும் அவரை அலைகழித்தது. எத்தனை இருப்பினும் அவள் எண்ணங்களுக்கு அவரால் உடன்பட முடியாதே.

பெருமூச்சுடன் அங்கிருந்து அவர் செல்லும் முன் மகளை அழுத்தமாய் பார்க்க பளிச்சென்று புன்னகைத்து அவரை தடுமாற செய்தாள் உன்னதி.

“பயப்படாதீங்க ப்பா. அப்படியெல்லாம் போயிடமாட்டேன். நம்பிக்கை…” என்று அதே புன்னகையுடன் அவள் கூறிய வார்த்தை சுளீரென்று தாக்கியது அவரை.

நெஞ்சம் விம்மிவிட அதற்குமேல் அங்கே நிற்க முடியவில்லை அவரால்.

“உதிம்மா…” அஞ்சுகா அழைக்க,

“என்னம்மா?…” என அவரின் கன்னம் கிள்ளி கொஞ்சியவள்,

“இப்பவும் சொல்றேன் நான் தேவ்கிட்ட சொன்னதும் உண்மை. இங்க சொன்னதும் உண்மை. எங்கயும் நான் ஒளிச்சு மறைச்சு, பொய்யா பேசலையே. நான் அவங்களை விரும்பினேன் தானே? அதான் அந்த தேவாங்குக்கு சொன்னேன்…”

“அதுக்குன்னு உதி…”

“எதுக்கா இருந்தாலும் அதுதானே நிஜம்? நான் விரும்பினதும் நிஜம். அவங்க என்னை விரும்பலைன்றதும் நிஜம். உன் சின்னவன் என்னடான்னா வெட்டுவேன் குத்துவேன்னு நிக்கறானே? அவங்களோட ஒரு அடிக்கு முன்னாடி நிப்பானா?…” என்று கிண்டலாய் கூறி சிரித்துவிட,

“அவன் உன் அண்ணன் டா…”

“உண்மைன்னு ஒன்னு இருக்குடா அஞ்சும்மா. கசக்கத்தானே செய்யும்…” என்று கூறியவள்,

“போய் வாங்கிட்டு வந்துட்டு அதுக்கும் என்னை காரணம் சொன்னான்னு வை, அப்பறம் நான் பாட்டுக்கு கோவத்துல தேவாங்கை வெளுத்து விட்ருவேன்….” என்று சொல்ல அஞ்சுகாவிற்கு இன்னும் கலவரமானது.

“எனக்கு புரியவே இல்லை. கொஞ்சமும் இங்கிதம் இல்லாம நடந்துக்கற அந்த தேவாங்கு என்னன்னு நம்ம வீட்டு வானரத்தை இம்ப்ரெஸ் பண்ணுச்சு?…” என்று கேட்க,

“டேய்…” என்று அஞ்சுகா சிரித்துவிட்டார்.

“பீ சீரியஸ் பேபி. பார்த்துக்கிட்டே இரு, ஒருநாள் ரெண்டும் இழுத்துக்கிட்டு ஓடி போய்ட்டு கொஞ்சநாள் கழிச்சு வந்து தரையில கோலம் போட்டு வாட்டர் பைப்பை வெக்கப்பட்டே உடைக்க போகுதுங்க. சிதம்பரம் மகனுக்கு தேவாங்குல தான் கண்டம்…” என்று சொல்ல அஞ்சுகா இன்னுமே சிரித்தார்.

“சோ ஸ்வீட் ம்மா நீ. இப்படியே இரு. போய் கிளம்பறேன். சுத்தி பார்த்துட்டு வந்ததும் எங்க அந்த ஆலமரம், எங்க அந்த சொம்புன்னு, நாட்டாமை தீர்ப்ப மாத்தி அப்பப்பப்பா இந்த குடும்பத்தோட…” என்று தன் பெட்டியை திறந்து ஒரு உடையை எடுத்தாள்.

“இது கௌதம் செலெக்ட் பண்ணின ட்ரெஸ் இல்லையே உதி?…” அஞ்சு சிரிப்பு மறைந்து கவலையுடன் கேட்க,

“நம்பிக்கை இல்லாதவங்க குடுக்கற எதுவும் எனக்கு வேண்டாம். இந்த கல்யாணத்துக்கு நான் வந்திருக்கறது என் கடமை. என்ன ட்ரெஸ் போடனும்ன்றது என்னோட உரிமை….”

“உதிம்மா, அவன் ஃபீல் பண்ணுவான்…”

“முட்டுச்சந்துக்குள்ள போய் முட்டிக்கிட்டு நின்னு கதறினாலும் ஐ டோன்ட் கேர்…” என்றவள்,

“எனக்கு ராஜாவா நா வாழுறேன்….” என்று பாடலை முணுமுணுத்துக்கொண்டே விசிலடித்தபடி கிளம்பி வந்தாள் உன்னதி.

வந்தவள் மீது அத்தனை அழுத்தமாய் கோபமாய் இளங்கோவின் கண்கள் பின் தொடர,

“ஓஹ் நீ இப்படி வர்றியா?…” என பார்த்த உன்னதி அதன்பின் அவனை பம்பரமாய் சுழலவிட்டாள்.

விசேஷம் தான். ஆனால் அவ்வப்போது அவன் கண்களில் படுவதும், கண்ணில் படாமல் அவளை தேட வைப்பதுமாக இருக்க இளங்கோவிற்கு தான் அத்தனை டென்ஷன்.

அதுவும் அலெக்ஸ் மயூரன் என்றொருவன் அந்த ஊரிலேயே இதோ அருகிலேயே இருக்க இளங்கோவிற்கு கண்கள் எல்லாம் தங்கையின் மீது தான்.

இதோ மீண்டும் எங்கே சென்றாளோ, பதட்டத்தில் தேடி தவித்து தொண்டையில் நீர் வற்றி போய் திரும்ப, தூரத்தில் ஒரு மரக்கிளையின் அருகில் சாய்ந்தபடி நின்றிருந்தாள் உன்னதி.

“எங்க போய் தொலைஞ்ச நீ? அதுவும் இவ்வளோ தூரம் வந்து நின்னுட்டு. தெரியாத ஊர்ல. எனக்கு வேற வேலையே இல்லையா? அம்மாவோட இருக்கறது தானே உன்னதி….” என்று இறைந்தான் அவளிடம்.

“காவல் காத்துக்கிட்டே இருக்கறது தான் உன் வேலையே. செய்யிறத திருந்த செய் தம்பி. நீ உஷாரா இருக்கியா இல்லையான்னு நானும் கவனிக்கனும்ல….” என அலட்சியமாய் அவனிடம் கூறியவள்,

“எனக்கு வேற நான் அவங்களோட போயிடுவேன்னு நீ சொன்னதுல இருந்து எப்போடா டீ பேக்டரிக்கு போவோம்ன்னு தோணிட்டே இருக்கு. மனசு மாறினா போனாலும் போயிடுவேன். நீ தேடி அலைய வேண்டாம் பாரு. அங்கயே வந்திடு. சரியா…” என்று சொல்லிவிட்டு நகர,

“சனியனே, உயிரை எடுக்கறா தங்கச்சின்னு கூட பிறந்துட்டு…”

“டேய் அண்ணா சனியனே, நான் லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல திரும்புவேன்டா. மனசிலாயோ…” என்றவள்,

“இந்த ஊருக்கு வந்து கொஞ்சம் மலையாளமும் அறிஞ்சுக்கனும். ப்யூச்சர்ல யூஸ் ஆகும். உன்னதிக்கு தலைக்கு மேல எவ்வளோ வேலைகள்…” என இளங்கோவின் பிபியை ஏற்றும் விதமாய் சொல்லிக்கொண்டே நடந்தாள் உன்னதி.

“வாரான் வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே…” என்று பாட்டு வேறு பாடியபடி சென்றாள் அவள்.

———————————

எஸ்டேட்டில் மரக்குடில்கள் அமைக்கப்படும் வேலைகள் சிரத்தையாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ரெசார்ட் திறப்பிற்கு இன்னும் நாட்கள் குறைவாகவே இருக்க அதற்குள் அந்த பணியினை எல்லாம் முடிக்க வேண்டும்.

அலெக்ஸ் மயூரன் அத்தனை தீவிரமாய் ஒவ்வொன்றையும் கவனித்துக்கொண்டிருந்தான்.

முதல்நாள் உன்னதி வந்துவிட்டு சென்றதில் இருந்து அவன் மனம் ஒரு நிலையில் இல்லை.

ஜார்ஜிடம் அன்று இரவே பேசியிருக்க, இதோ ஜார்ஜ் தன் தம்பியை தேடி வந்துவிட்டான் ரெசார்ட்டிற்கு.

“வாங்க ண்ணா…” என்று அவனை அலுவலக அறையில் அமர வைத்தவன்,

“திடீர்ன்னு கிளம்பி வந்திருக்கீங்களே?…” என்று கேட்டான்.

“நீயும் திடீர்ன்னு தான சொன்ன அலெக்ஸ்?…” என ஜார்ஜ் கூற அலெக்ஸ் மயூரனின் முகத்தில் சிறு புன்னகை.

“ஹ்ம்ம்…” என தலையசைக்க,

“லிங்கேஸ்வரன் வீட்டு கல்யாணத்துக்கு நீயும் வர்றேன்னு சொல்லவும் எனக்கு யோசனையா இருந்தது. போன்ல எதுவும் பேச வேண்டாமேன்னு தான் நேர்ல வந்தேன்…” என்றவன் தன் தம்பி முகத்தையே பார்த்திருந்தான்.

“நேத்து உன்னதி டீ பேக்டரிக்கு வந்திருந்தா ண்ணா…” என்றதும் ஜார்ஜ் மௌனமாய் பார்த்திருக்க, ஆழ்ந்த மூச்செடுப்புடன் அவனும் தன் அண்ணனை பார்த்தபடி மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

“ஸோ டிஸைட் பண்ணிட்டியா நீ?…” ஜார்ஜ் கேட்க,

“என் முடிவுன்னா அதுல நீங்களும் உண்டு அண்ணா. எப்படியும் நைட் நானே வீட்டுக்கு வந்திருப்பேன் பேசறதுக்கு. நீங்களே வந்துட்டீங்க…” என்றவனுக்கு உள்ளுக்குள் நெறிஞ்சி முள்ளாய் அந்நினைவு.

கௌதம் கொஞ்சமும் யோசனையின்றி நிதானமின்றி ஜார்ஜின் மீது கை வைத்திருந்தானே?

“குடும்பத்துக்குள்ள பிரச்சனைகள் வரும்போது கோபத்துல கை நீட்டறதெல்லாம் இயல்பு தான். பார்த்துக்கலாம் அலெக்ஸ்….” என்றான் ஜார்ஜ் தன் தம்பி எதை நினைத்து வருந்துகிறான் என்று.

“ஆனா ஒரு விஷயம் உள்ளருந்து சொல்றேன். அந்த பொண்ணு தான் உன் விருப்பம்ன்னா நிச்சயம் நீ லக்கி அலெக்ஸ்…” என்றதும் மயூரன் விழிகளில் அத்தனை பரவசம்.

“நீ விரும்பாதப்பவே உன்னை அவ பாதுகாத்திருக்கா. கோபத்துல நானுமே தான் உன்னை கொஞ்சம் பேசிட்டேன். இப்போ காலம் கடந்து யோசிக்கும் போது இன்னும் பொறுமையா இருந்திருக்கலாமோன்னு தோணுது…” என்றவன்,

“நாளைக்கு அந்த கல்யாணத்துக்கு போவோம்…” என்று சொல்லிவிட்டு கிளம்பினான் ஜார்ஜ்.

அவன் கிளம்பியதும் மனதின் கனமெல்லாம் கலைந்துவிட்ட சந்தோஷம் அலெக்ஸ் மயூரனிடத்தில்.

“பிராப்பரா ப்ரப்போஸ், பண்ணலாமா உன்னதி…” என்று சிறுக சிறுக தூறிக்கொண்டிருந்த மழை தூறலை ரசித்தபடி கேட்டான் உன்னதத்தின் மயூரன்.  

மெய் சிலிர்க்கும் வண்ணம் – 4 (1)

வண்ணம் – 4

         அஞ்சுகா மகளின் அருகிலேயே அமர்ந்திருந்தார் அவளுக்கு பாதுகாப்பு தருவதை போல.

எங்கே இங்கே வைத்து மகன்கள் இருவரும் அவளை மீண்டும் அன்றைக்கு போல் பேசி, அடித்துவிட கூடுமோ என்று அவ்வளவு பயம்.

அத்தனை கோபத்தில் முகமெல்லாம் சினந்திருந்தது கௌதம், இளங்கோவிற்கு.

கொஞ்சமும் அச்சமின்றி தங்களை மீறி சென்று அவனிடம் பேசி வந்திருக்கிறாளே என்று.

இவர்களின் கோபமோ, ஆத்திரமோ எதுவுமே உன்னதியை பாதிக்கவில்லை.

அப்படித்தான் அவள் அமர்ந்திருந்தாள். அதிலும் வெகு சாதாரண பார்வை.

என்ன செய்துவிட்டேன் தான் என்பதை போல் தான் அவளின் அசைவுகளிருந்தது.

சிதம்பரம் நெற்றியில் கை வைத்தபடி நொந்துபோய் பார்த்திருந்தார். என்ன செய்வதென்ற இயலாமை நிலை அவருடையது.

“என்னப்பா பேசாம இருக்கீங்க? தேவ் வந்து சொல்லும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும். இன்னும் எவ்வளவு அவமானம் இவளால?…” என்றான் இளங்கோ.

“இப்ப இதை பேசனுமா? ஊருக்கு போய் பேசிக்கலாம் இளங்கோ. இன்னும் கொஞ்சம் நேரத்துல விசேஷம். நாளைக்கு நிச்சயம் வேற இருக்கு. கல்யாணம் முடிஞ்சு ஊருக்கு போய் பேசிப்போம்…” என்று அஞ்சுகா மகன்களை அமைதிப்படுத்த முயன்றார்.

“இப்படியே சொல்லி சொல்லியே அடக்கி வைங்க. உங்க முன்னாடி தானே பார்த்துட்டு வந்தா? நான் தான் பார்த்தேனே என் பேட்ச் முடிஞ்சு வரும்போது. நீங்க என்ன அம்மா?…” என்று இன்னும் குரலை உயர்த்த,

“இளங்கோ…” என்றார் சிதம்பரம் கண்டனத்துடன் மகனிடம்.

“ஸாரி ப்பா. ஆனா என்னால கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியலை. அங்கயே அவனை உண்டில்லைன்னு பண்ணிருப்பேன். எல்லார் முன்னாடியும் திரும்பவும் பிரச்சனை ஆக வேண்டாமேன்னு வந்துட்டேன்…” என இளங்கோ சொல்லவும்,

“ஹச்…” என்று வேண்டுமென்றே தும்மினாள் உன்னதி.

“ப்ச், இந்த ஜலதோஷம் வேற. ம்மா தலையும் வலிக்குது. டேப்லெட் இருந்தா தாயேன்…” என்று சாவகாசமாக கேட்க, அதுவே இளங்கோவின் அதிகபட்ச கோபத்தை தூண்டியது.

“உன்னதி…” என்றார் அஞ்சுகா இறைஞ்சுதலுடன்.

“பார்த்தீங்களா ப்பா, எவ்வளோ நக்கல் இவளுக்கு? இப்ப சொல்லுங்க. அவனை இங்க இல்லாம பண்ணிடறேன். அண்ணன் கல்யாணமேன்னு தான் பேசாம இருக்கேன். பொண்ணு வீட்டுல வச்சுட்டு அவமானப்பட வேண்டாமேன்னு…” என்றவன்,

“தேவ் எவ்வளோ ஜென்யூன். புரிதலுள்ள மனுஷன் தெரியுமா? இவ என்னடான்னா அந்த வெறும்பய முன்னாடியே இன்செல்ட் பண்ணி பேசி இருக்கா. தேவ் எல்லாம் என்கிட்ட சொன்னாலும், இட்ஸ் ஓகே, சின்ன பொண்ணு தானே. நான் புரிஞ்சுக்கிட்டேன்னு பேசறார்…” என்றதுடன் நில்லாமல்,

“உன்னதிக்கு புரியலை. நான் பார்த்துக்கறேன். எல்லாம் வயசு அப்படின்னு சொல்லி ஜென்டிலா பேசினார் தெரியுமா?…” என்று அவன் பேச அதுவரை என்னவும் பேசிக்கொள் என்றிருந்தவள் சட்டென்று எழுந்து நின்றுவிட்டாள்.

“என்ன வயசு? வயசுக்கோளாறு என்ன பேச்சு இதெல்லாம்? பதிலுக்கு நானும் கேட்பேன். ஆனா அவ்வளவுக்கு இறங்க வேண்டாமேன்னு பார்க்கறேன்…” என்றவள் கொஞ்சம் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு தன் தகப்பனை பார்த்தாள்.

“இப்பவும் நான் உன்னதியா மட்டும் தான் இருக்கேன். உன்னதியா மட்டும் தான் எப்பவும் இருப்பேன். இவங்க பேசறதுக்கு எல்லாம் பதில் சொல்ல எனக்கு முடியாது. நம்பிக்கை இல்லாதவங்ககிட்ட எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை…” என்றவள்,

“ப்பா நான் அவங்களை பார்த்தேன். ஜஸ்ட் விசாரிச்சேன். அந்த தேவாங்கு எனக்கு பிடிக்கலைன்னு சொல்லியும் அவங்ககிட்ட என்னோட மேரேஜ் அது இதுன்னு அனாவசியமா பேசினாங்க. அது இல்லைன்றப்போ இல்லைன்னு தானே சொல்லனும். அதான் சொன்னேன்…” என்றவள்,

“வேற எதுவும் தெரிஞ்சுக்கனுமா? எதுவானாலும் நீங்க கேளுங்க ப்பா. நான் பதில் சொல்றேன். இங்க மத்த யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை எனக்கு…” என்றாள் திமிருடன்.

“கொஞ்சமாவது யோசிக்கிறாளா நாங்க ஏன் பேசறோம்ன்னு. எவ்வளோ நெஞ்சழுத்தம் இவளுக்கு? விட்டா அவனோட இவ…” என்று இளங்கோ பேச,

“விட்டா? என்ன விட்டா? நான் ஒன்னும் ஓடி ஒளிஞ்சு யாருக்கும் தெரியாம பேசலை. முதல் தடவை பேசும் போது உன் தேவாங்கு இருந்துச்சு. ரெண்டாவது தடவை அம்மாக்கிட்ட காமிச்சிட்டு சொல்லிட்டு போய் தான் பை சொல்லிட்டு வந்தேன்…” என்றாள்.

“ம்மா உங்களை சொல்லனும். உங்க முன்னாடியே போய் பயமில்லாம பேசிருக்கான்னா நாளைக்கு என்ன வேணா செய்வா….” இன்னும் இளங்கோ துள்ளினான்.

“ம்மா உன் பசங்களை வாயை மூடிட்டு இருக்க சொல்லு. நான் அவங்களோட போயிருவேன்ற மாதிரி பேசறதெல்லாம் வேண்டாம். அப்பறம் எனக்கு இதெல்லாம் செஞ்சிட்டா என்னன்னு தோணிட போகுது. அந்த கௌரவம், அதை தேடிட்டு திரியவேண்டியதிருக்கும்….” என்றவள்,

“முதல்ல அந்த மரியாதையை, கௌரவத்தை குறைஞ்சபட்சம் அவங்க எண்ணத்துல, பார்வையில, பேச்சுல ஃபாலோ பண்ண சொல்லு. வந்துட்டானுங்க புத்தி சொல்றேன்னுட்டு புத்தி இல்லாம…” என்று கூற இளங்கோ, கௌதம் இருவரும் மௌனமாக நின்றனர்.

“அப்பறம் என்ன? இல்லாம பண்ணிடுவானா? முடிஞ்சா பண்ணி பார்க்க சொல்லேன். பெரிய இவரு பாருங்க இவரு…” என்றதும்,

“உன்னதி…” இளங்கோ கத்தினான்.

“உனக்கு அந்த தேவ்வ அவ்வளோ புடிச்சதுன்னா நீயே கட்டிக்க. என்கிட்ட இது பத்தி பேசின அவ்வளோ தான். திரும்ப அவன் அப்படி பேசிட்டு வந்தா அவ்வளோவே தான்…” என்று சொல்லியவள்,

“பங்க்ஷனுக்கு நான் கிளம்பனுமா வேண்டாமா?…” என்று கேட்க,

“போய் கிளம்பு இளங்கோ. கௌதம் நீயும் போ…”என சிதம்பரம் ஓய்ந்த குரலில் கூற, உன்னதியின் உள்ளம் இறுகியது.

“ஹ்ம்ம் சரிங்கப்பா…” என்று கௌதம் அமைதியாய் கிளம்பினான்.

இங்கே வைத்து எந்தவித பிரச்சனையும் நடப்பதில் அவனுக்கு விருப்பமில்லை.

ஏற்கனவே சென்னையில் நடந்ததே இன்னும் காலத்திற்கும் மறக்க முடியவில்லை.

இதில் இங்கே, பெண்ணெடுக்கும் இடத்தில் என நினைக்கையில் தேவ்வின் எண்ணமும் தலை தூக்கியது.  

முதலில் உன்னதியை பிடித்துள்ளது என்று கேட்டதே அவன் தான். இந்த திருமணம் முடியட்டும் என்றிருந்தான் கௌதம்.

ஆனால் இளங்கோ திருமணம் முடிந்த கையோடு அவனுடன் தன் தங்கையின் நிச்சயமும் நிகழவேண்டும் என்று பிடிவாதமாய் வந்திருக்க, நிலைமை இன்னும் மோசமடைந்தது.

“கௌதம்…” அஞ்சுகா அழைக்கவும் தன்னுணர்வு பெற்றவன்,

“இதோ கிளம்பறேன் ம்மா…” என்று கூறி இளங்கோவை அழைத்துக்கொண்டு நகர முயன்றான்.

“இருங்கண்ணா…” என்ற இளங்கோ,

“ப்பா, திரும்பவும் சொல்றேன். இவ இன்னொருதடவை அந்த வெறும்பயல பார்க்க நினைச்சா?…”

“போனா என்ன செய்வ? எங்க சொல்லு…” என்று உன்னதி மல்லுக்கு நிற்க, சிதம்பரம் பயந்தே போனார்.

மகள் தன் வார்த்தைக்கு மதிப்பளித்து இன்றுவரை அவனின் பெயரை கூட உச்சரிக்காமல் இருப்பதையும் அவர் கவனித்து இருக்க, அதுதான் அவரை அமைதியாகவும் இருக்க செய்தது.

இப்போது மகனே பேசி பிரச்சனையை தூண்டிவிட்டு அவளை அந்நிலைக்கு தள்ளிவிடுவானோ என நொந்துபோனார்.

“இளங்கோ சொன்னா கேட்க மாட்டியா நீ? போன்றேன்ல. எதுவானாலும் ஊர்ல போய் பேசிக்கலாம்…” என்று சொல்லியவர்,

“என் பொண்ணை பத்தி எனக்கு தெரியும். அவ மேல எனக்கு நம்பிக்கை இருக்கு…” என்று சொல்ல உன்னதியின் இதழ்கள் லேசாய் வளைந்தது.

இதனை சொல்லித்தானே அவளுக்கு வேலியிட்டு வைத்திருக்கின்றனர் என்று.

மெய் சிலிர்க்கும் வண்ணம் – 3 (3)

“யூ உன்னை கவனிச்சிக்கறேன்…” என்றுவிட்டு உன்னதியை தேடி செல்ல அதற்குள் அவள் கட்டிடத்தை விட்டு வெளியேறி அங்கிருந்த வியூ பாயிண்டில் போய் நின்றிருந்தாள்.

கையில் சூடான டீ இருக்க அந்த சூழலுக்கு தனக்கு தேவையிருக்கும் சூட்டினை பெற முயல, உள்ளம் அதற்கு நிகராய் குளிர்ந்து கிடந்தது.

“உன்னதி…” என கோபமாய் தேவ் வந்ததுடன்,

“அவன் முன்னாடி என்னை இன்செல்ட் பன்ற மாதிரி பேசிருக்க வேண்டாம். அதும் என்னை நீ நக்கல் பன்ற. யார் அவன்?…” என்று கேட்க அலட்டிக்கொள்ளாமல் திரும்பி பார்த்தாள் அவள்.

“யார் அவன்னு கேட்டவங்ககிட்ட தான் நீங்களும் என் சம்மதமில்லாம நான் சம்மதிக்காத, என் சம்பந்தப்பட்ட விஷயத்தை பேசிருக்கீங்க. நீங்க என்ன பேசினீங்களோ அதுக்கு என் பதில் அது…”

“நான் உண்மையை சொன்னேன்….”

“நான் உள்ளதை சொன்னேன்…”

“ஓஹ் நோ உன்னதி, உனக்கு புரியலை. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு…”

“ஸோ வாட்? எனக்கு இது தேவை இல்லாத விஷயம். யாருக்கும் யாரையும் பிடிக்கலாம். ஆனா என்னை பிடிச்சவங்க எல்லாம் எனக்கு பிடிக்கனும்ன்னு எந்த கட்டாயமும் இல்லை. நான் ஓபனா சொல்லிட்டேன்…”

“அவன் ஒரு சாதாரண…”

“ஜஸ்ட் ஷட்அப். ஓகே. அவங்க யாரா இருந்தா உங்களுக்கு என்ன ஸார்? அவர் வேலை பார்த்தா அதுல உங்களுக்கு என்ன? யாரும் யாரோட வாழ்க்கையையும் வாழ்ந்துட முடியாது. உங்களோட வாழ்க்கையை மட்டும் நீங்க பாருங்க…” என்றவள்,

“அன்ட் அந்த லேபர்ஸ் இல்லைன்னா நீங்க எல்லாம் லேபர் ஆகவேண்டியது தான். மைன்ட் இட். ஓகே…” என்று அதையும் முகம் மாறாமல் புன்னகையுடன் கூறியதில் தேவ் தான் இன்னும் வெகுண்டான்.

“உங்க வீட்டுல?…”

“என் வீட்டை நான் பார்த்துக்கறேன். இதுக்கு மேல நீங்க என் விஷயத்துல இன்ட்ரஸ்ட் காமிச்சீங்கன்னா?…” என்றவள் பேச்சை நிறுத்தவும் அவள் என்ன கூற வருகிறாளோ என அவன் காத்திருக்க,

“காமிச்சுக்கோங்க. எனக்கொண்ணும் இல்லை. எல்லாம் வேஸ்ட். நான் சொல்றதை சொல்லிட்டேன்…” என்றுவிட்டு அலட்சியமாய் அவள் கடந்து செல்ல தேவ் கோபம் கட்டுக்கடங்காமல் கூடியது.

“உன்னதி இங்க என்ன பன்ற?…” என்றபடி அஞ்சுகா வந்துவிட்டார்.

“சும்மா பேசிட்டிருந்தேன் ம்மா…” என்றவள், இளங்கோவை தேட,

“அவன் லாஸ்ட் பேட்ச்ல வர்றான். நாங்க இப்ப தான் முடிச்சோம்…” என்று சொல்லியவர் தேவ்வை பார்த்தார்.

“நீங்க போய் வந்தவங்களை கவனிங்க. நான் என் அம்மாவோட தனியா இருக்கனும்…” என அங்கேயே நின்றுகொண்டிருந்தவனை பட்டென்று பேசி அனுப்ப பார்க்க,

“உன்னதி…” என்றார் அவர் திகைத்து.

“இட்ஸ் ஓகே…” என அஞ்சுவிடம் சொல்லிய தேவ் தலையசைத்துவிட்டு பல்லை கடித்துக்கொண்டு கிளம்ப,

“என்ன இப்படி பேசற?…” என்றார் மகளிடம் தாளமாட்டாமல்.

“இதுக்கும் மேல பேசினேன்…” என்று நடந்ததை கூற அஞ்சுகாவிற்கு தட்டாமாலை சுற்றியது.

மகள் பேசியது ஒருபுறம் என்றால் அலெக்ஸ் மயூரன் அங்கே இருக்கிறான் என்பது இன்னும் பேரதிர்ச்சி.

“என்ன பண்ணிருக்க நீ?…” என அவர் அழுவதை போலாகிவிட்டார்.

“பிடிக்கலைன்னு தெரிஞ்சிருந்தும் கட்டாயப்படுத்தறது மாதிரி நடந்துக்கறது மட்டும் சரியா? அதான் குடுத்துவிட்டேன்….” என்றவள் இதயத்தினுள் மயூரனிடம் அவள் பேசிய அந்த வார்த்தைகள் தான் எழுந்தமர்ந்தது.

அவன் விருப்பமின்மையை வாயால் கூறும் முன்பே புரிந்துகொண்டு விலகி நின்றுவிட்டவள், இதுவரை அதன் மதிப்பினை குறையாமல் காப்பாற்றி வருகிறாள்.

என் விருப்பம் என்னோடு, பிடிக்கவில்லையா விலக்கிக்கொள் என்பதை போன்று அவள் கொஞ்சமும் அதனால் பாதிப்பில்லாததை போல் நிமிர்வுடனே கடந்து வந்து வாழ்ந்துகொண்டிருக்க, அதையே தனக்கு ஒருவன் செய்வதில் துளியும் உடன்பாடில்லை.

இப்போது தாயிடம் பேசிக்கொண்டே திரும்பி பார்க்க, தாங்கள் வந்ததில் ஒரு பேருந்து அடுத்த இடம் பார்க்க புறப்பட்டிருந்தது.

“இளங்கோ தான் முன்னாடி போங்கன்னு சொல்லிருந்தான்…” என்றார் மகளின் பார்வையை கண்டு.

“பஸ் மட்டுமா? அங்க பாருங்க…” என உன்னதி காண்பிக்க, அங்கே அலெக்ஸ் மயூரன் நின்றிருந்தான்.

தனியாய் அருகில் எவருமின்றி என்னவோ சிந்தனையில் இருப்பதை போலிருக்க அஞ்சுகாவிற்கு எங்கே இளைய மகன் வந்துவிடுவானோ என்னும் அச்சம்.

“ஒரு நிமிஷம் ம்மா…” என்றவள் விறுவிறுவென்று அவனை நோக்கி நடந்தாள்.

அவனை நெருங்க நெருங்க எப்போதும் அமைதி தவழும் அவனின் அந்த முகத்தில் அவ்வளவு அலைப்புருதல்கள்.

மனம் கேட்கவில்லை. அவள் நெருங்கி செல்ல, அவளின் வருகையை மயூரனும் கண்டுவிட்டான்.

தானாய் ஒரு புன்னகை சட்டென அவன் முகத்தினை நிறைத்தது. அருகில் அவள் வந்ததும்,

“டீ…” என்று கேட்டான் உபசரணையாய்.

“நோ தேங்க்ஸ்…” என்றவள்,

“இப்பவும் க்ளீன்ஷேவ் பண்ணலை…” என்று கேட்க, லேசாய் தலை திருப்பி புன்னகைத்துக்கொண்டவன்,

“என்ன பன்ற நீ?…” என்றான் மீண்டும் அவளை பார்த்து அதே புன்னகையுடன்.

அவனின் கண்களை அந்த குறுஞ்சிரிப்பும் களவாடிக்கொள்ள உன்னதியின் முகத்தில் சிறு அமைதி.

“இப்ப வரை எதுவும் செய்யலை. நான் கிளம்ப போறேன். அதான் இங்க நீங்க நின்னதும் பார்க்க வந்தேன்…” என்றவளை தாண்டி அங்கே நின்றிருந்த அஞ்சுகாவை பார்த்தான்.

“உன் அம்மா டென்ஷனா இருக்காங்க உன்னதி…” என இப்போதும் அவளின் துணிவில் அதிசயத்துக்கொண்டே பேச,

“அவங்க புரிஞ்சுப்பாங்க. நான் சொன்ன வார்த்தை மாற மாட்டேன்னு. மீறவும் மாட்டேன்னு…” என்றவள்,

“நான் நல்லா இருக்கேன். எதை பத்தியும் நினைக்காம, சந்தோஷமா இருக்கேன். வேற எதாச்சும் தெரிஞ்சுக்கனுமா?…” என்று கேட்க,

“நாம ஒன்னும் நாலு நாள் பார்க்காம இல்லையே. அதை பத்தி சட்டுன்னு தெரிஞ்சுக்க. நாலு வருஷம். இந்த ரெண்டுநிமிஷத்துல தெரிஞ்சிடாது. அது நாட்களுக்குள்ள அடங்காது உன்னதி…” என்று மயூரன் கூற, உன்னதியின் பார்வை அவனை துளைத்தது.

“நீங்க உங்க மெடிடேஷனை ஸ்டாப் பண்ணிட்டீங்களா?…”

“ஏன் திடீர்ன்னு கேட்கற?…” என்றவன் இவள் தன்னை பற்றி இன்னும் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாளோ என்று தான் அயர்ந்து பார்த்தான்.

“இல்ல, எப்பவும் இவ்வளோ ரெஸ்ட்லெஸா உங்களை பார்த்ததில்லையா? அதான் கேட்டேன். அதை கேட்க தான் வந்தேன்…” என்றவள்,

“ஓகே, அதை கண்டினியூ பண்ணுங்க. பை…” என்று சொல்லிவிட்டு கிளம்ப இன்னுமின்னும் அவளை தன்னுடன் இழுத்து பிடித்து நிறுத்தும் வேகம்.

அவனின் இதயம் கூக்குரலிட்டு அவளை அழைக்க முயல, சட்டென உன்னதி நடை தடைபெற்று பார்வை அவனிடத்தில் பதிய, என்னவென்று புருவம் உயர்த்தினான் அலெக்ஸ் மயூரன்.

அவனின் கேள்வியான பார்வையில் ஒன்றுமில்லை என்பதை போல உன்னதியும் தோளை குலுக்கிக்கொண்டு,

“இப்பவும் தோணுது நீங்க பிறக்காமலே இருந்திருக்கலாம்ன்னு…” என்று சொல்லி செல்ல இன்னுமாய் அழகாய் ஒரு விரிந்த புன்னகை மயூரனின் முகத்தில்.

“மிஸ் பண்ண வேண்டாமேன்னோ தோணுதே உன்னதி…” அழகாய் பூத்துவிட்ட புன்னகையுடன் அவனின் விழிகள் அவள் அங்கிருந்து கலைந்து கடப்பது வரை கவனத்தில் வைத்துக்கொண்டிருந்தது.            

மெய் சிலிர்க்கும் வண்ணம் – 3 (2)

‘அடேய் உனக்கு அவளை தெரியலையே’ என்று ஒரு மனம் எடுத்துரைக்க, ‘உனக்கு மட்டும்?’ என தன்னுள்ளம் எள்ளியது.

“தெரியுமே…” என மனக்குரலாய் இன்றி வார்த்தைகளாய் சத்தமாகவே வந்துவிட்டது அலெக்ஸ் மயூரனுக்கு.

“என்ன தெரியும்? நெக்ஸ்ட் பேட்ச் வர போகுது அலெக்ஸ்…” என்றான் உடனிருந்தவன்.

“நீ ஸ்பீச் குடு ப்ரோ. ஒரு பைவ் மினிட்ஸ். நான் ப்ரேக் எடுத்துக்கறேன்…” என்று உடனிருந்தவன் தோளில் தட்டிவிட்டு அலெக்ஸ் மயூரன் உன்னதி சென்ற திசையில் செல்ல அங்கே கேமராவினால் அங்கிருந்தவற்றை புகைப்படம் எடுத்துக்கொண்டு நின்றாள்.

தேவ் சற்று தள்ளி நின்று போனில் பேசிக்கொண்டிருக்க அலெக்ஸ் மயூரன் வந்துவிட்டான் அவளிடம்.

“ஹாய்…” என்ற சத்தத்தில் அவனின் வருகையை உணர்ந்தாலும் திரும்பவில்லை அவள்.

“ஹாய் உன்னதி…” என்று இப்போது பெயரையும் சேர்த்து சொல்ல, மெதுவாய் திரும்பியவள்,

“வெய்ட் எ மினிட். ஒரு கேப்சர்…” என்று கண்கள் சுருங்க கெஞ்சலாய் சொல்லியவள் தான் தேர்ந்தெடுத்த அந்த இடத்தினை புகைப்படமாய் எடுத்துக்கொண்டாள்.

“ஹ்ம்ம், சொல்லுங்க…” என்று சாவகாசமாய் அவனின் பக்கம் திரும்பி பார்த்தவளின் பார்வையில் ஒருகணம் அசந்தவன்,

“என்னை தெரியுதா?…” என்றான் அலெக்ஸ் மயூரன்.

“மறக்கலை…” என்றவளின் இந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.

“உன்னதி…”

“எஸ், ஐம்…” என்று அவள் தலையசைக்க திணறி பார்த்தான் அவளை.

அவன் அசைவுகள் ஒவ்வொன்றையும் ரசித்து மனப்பெட்டகத்தினுள் அடைத்துக்கொண்டே அவளிருக்க, பெருமூச்சுடன் தலையை கோதியபடி பாத்தான்,

“எப்படி இருக்க?…” என விசாரித்தான்.

“இன்னும் அப்படியே தான் இருக்கேன். அதான் பார்த்ததும் கண்டுபிடிச்சிருக்கீங்க. குட்…” பாராட்டுதலாய் வந்தது அவள் குரல்.

“காட்…” என்றவன்,

“இங்க இங்க எப்படி நீ?…”

‘நிச்சயமா உங்களை எதிர்பார்த்து இல்லை. நீங்க இருப்பீங்கன்னும் இல்லை’ என்றுதான் அவள் மனம் சொல்ல நினைத்தது.

அந்தநொடி அத்தனையும் உதறினாள் அவனிடம் இத்தனை பேச்சுக்கள் வேண்டாம் என்று எண்ணி.

“கௌதம் அண்ணன் கல்யாணம்…”

உன்னதி உரைத்ததுமே அலெக்ஸ் மயூரனின் முகம் சட்டென்று ரௌத்திரம் கொண்டு, பின் மீண்டும் அமைதியை எடுத்தது.

எத்தனை பெரிய வார்த்தையை தன்னையும் வைத்துக்கொண்டு உன்னதியையும் சேர்த்து அவன் பேசியது.

எந்த காலத்திலும் அதற்கு மன்னிப்பென்று ஒன்று கிடையவே கிடையாது என இப்போதும் அந்த வார்த்தைகள் தீயாய் எரிக்கத்தான் செய்தது மயூரனை.

‘இவனுங்க லவ் பத்தி தெரியாதா? ரூம் போட்டு காரியத்தை முடிச்சிட்டு போவானுங்க. பொண்ணை பெத்த நாம தான் இழவெடுக்கனும். இவளும் அலையிறா’ என கொதிக்கும் அமிலமாய் எங்கே வைத்து யாரை பேசுகிறோம் என்றில்லாமல் பேசியதோடு அதனை அதிர்ந்து பார்த்த உன்னதியையும் அறைந்தானே?

தன்னை தெரியவேண்டாம். தெரிந்திருக்கவும் நியாயமில்லை. தெரியாத தன்னை பேச என்ன உரிமை இவனுக்கு என்று வெகுண்ட பொழுதில், உடன் பிறந்தவளையுமா இப்படி பேசுவது என்று அவனின் மனம் உலைக்கலனாய் கொதித்தது.

“என்ன ப்ளாஷ்பேக்கா?…” உன்னதியின் குரல் இடையிட கண் சிமிட்டி விழித்தவன்,

“ஊஃப்…” என்று பார்த்து நின்றான்.

“ஓகே நான் கிளம்பறேன்….” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவன் பக்கம் திரும்பினாள்.

“மேத்யூ, ஜெஸி எப்டி இருக்காங்க? வளர்ந்திருப்பாங்களே?…” என மறக்காமல் அவள் விசாரிக்க, மயூரனின் விழிகள் கனிவுடன் அவளை பார்த்தது.

“யூ’ர் கிரேட் உன்னதி…” என்று அவன் உளமார கூற,

“தெரியுமே. எனக்கு தெரிஞ்ச விஷயங்களை திரும்ப தெரிஞ்சுக்கறதை நான் விரும்பமாட்டேன்…” என்று சொல்ல,

“நான் உண்மையை எனக்கு தோணினதை சொன்னேன்…” என்றான் அவனும் இப்போது நிதானத்துடன்.

“இந்த நேர்மை, நியாயம், உண்மை. அந்த ஆடரா?…” என்றதும்,

“பசங்க நல்லா இருக்காங்க. உன்னை பார்த்தேன்னு கண்டிப்பா சொல்றேன்…” என்றான் மயூரன்.

“யூர் விஷ்…” என அவளும் தோளை குலுக்க,  

“உன்னதி இங்க என்ன பன்ற?…” என வேகமாய் வந்துவிட்டான் தேவ்.

“பார்த்தா தெரியலை, பேசிட்டிருக்கேன்…” அவளும் கூற,

“லேபரோட என்ன பேச்சு? உனக்கு இங்க எதுவும் தெரிஞ்சுக்கனும்னா ஹையர் அபிஷியல்கிட்டயே நான் உன்னை கூட்டிட்டு போறேன்…” என்று அவன் வேண்டுமென்றே அதிகாரமாய் உரிமையுடன் பேச, மயூரன் பதில் கொடுக்கும் முன் உன்னதியே இருவருக்கும் அதிர்வை கொடுத்தாள்.

“இவங்க இங்க வேணா லேபரா இருக்கலாம். ஆனா இவர் யாருன்னு உங்கட்ட வரும்போதே சொன்னேனே நான்? ஏன் மிஸ்டர் தேவ், மறந்துடுச்சா?…” என்றதும் தேவ் அவள் எங்கே மீண்டும் அதனை கூறிவிடுவாளோ என்று திகைக்கும் முன்,

“என் பாய்ப்ரென்ட் இவர். எப்படி இருக்காங்கன்னு கேட்கனுமே. லேபரா இருந்தாலும் என்னோடவராக்கும்…” என்று சொல்லிவிட்டு பளிச்சென்று புன்னகைக்க, மயூரன் இதனை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை.

“உன்னதி…” என்று அவன் அதிர்ந்து அழைக்க,

“அட ரொம்ப ஷாக் எல்லாம் வேண்டாம். சும்மா ஒரு இன்ட்ரோ. அவ்வளோ தான். மத்தபடி உன்னதி அன்னைக்கு சொன்னது சொன்னது தான்…” என்றவளின் விழிகளில் சட்டென வெட்டிச்சென்ற அந்த வலி மயூரனை கூறு போட்டுவிட்டது.

“அன்ட் இவர் யாருன்னா?…” என்று உன்னதி சொல்லும் முன் முந்திக்கொண்ட தேவ்,

“உன்னதிக்கு வீட்டுல பார்த்திருக்கிற மாப்பிள்ளை நான்…” என்றான் தேவ் மிக வேகமாய் அவசரமாய்.

“அவங்க வீட்டுல இந்த லவ் எல்லாம் அக்ஸப்ட் பண்ண மாட்டாங்க…” என்றும் வேறு கூற, மயூரன் என்ன இது என்பதை போல் தான் பார்த்தான்.

“அட ஏந்திரி அஞ்சலின்னு உங்களை எத்தனை தடவைங்க சொல்றது? அதுவும் இப்பவும். ப்ச், என்னவோ போங்க, உங்க கனவு, உங்க வாழ்க்கை. பட் உன்னதி அதுல எங்கயும் இல்லை. நீங்க எனக்கு வரப்போற என் அண்ணியோட அண்ணன். ஜஸ்ட் ரிலேட்டிவ். அவ்வளோ தான்…” என்றவள்,

“எனிவே உங்களை மீட் பண்ணினதுல ரொம்ப சந்தோஷம். நான் கிளம்பறேன்…” என மயூரனிடம் கூறிவிட்டு உன்னதி நடக்க துவங்க தேவ்வின் பார்வை ஒருகணம் மயூரனை உறுத்து விழித்தது.

மெய் சிலிர்க்கும் வண்ணம் – 3 (1)

வண்ணம் – 3

            தன்னை நோக்கி வந்துகொண்டிருந்தவள் மீதான பார்வையை அகற்ற பெரிதும் சிரமம் மேற்கொள்ளவேண்டியதாக இருந்தது அலெக்ஸ் மயூரனுக்கு.

‘அப்படியே இருக்கா இன்னும்’ என பார்த்ததும் அளவெடுத்துவிட்ட விழிகள் அதனில் தடுமாறி ததும்ப, மனம் படபடவென்று அடித்துக்கொண்டது.

அவளுடன் வந்திருந்த உறவினர்களும் சேர்ந்து நிற்க அங்கிருந்த பெரிய டிவியில் அலெக்ஸ் மயூரன் விளக்கவுரை அளிக்க வேண்டிய காட்சிகள் துவங்க இருந்தது.

பேசுவதை போல் அத்தனை அருகில் வந்து நின்ற உன்னதியின் விழிகள் நிச்சயம் அவனை ஆழமாய் தான் பார்த்து வைத்தது.

தேவ் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டே நிற்க, என்ன பேசுவாளோ என்றும் நினைக்க,

“என் முகத்துல எதுவும் எழுதி ஒட்டிருக்கா?…” என்றாள் தேவ்விடம் உன்னதி.

“ம்ஹூம்…” என்றவனுக்கு அத்தனை கோபம்.

ஆனாலும் அவளிடம் காண்பிக்க முடியவில்லை. பிடித்துவிட்டதே. அதையும் விட இன்னுமின்னும் சில கணக்குகள்.

பெண்ணையும் கொடுக்கவிருக்கிறோம் என்று என்னென்னவோ யோசித்தபடி மௌனமாய் பார்த்தான் அவளை.

அவன் நின்றிருக்க அவனை கடந்து அவள் காண்பித்த அந்த ஒருவனை நோக்கி செல்ல, தேவ்வின் பார்வை அலெக்ஸ் மயூரனை அளவிட்டது அத்தனை அழுத்தமாக.

நிச்சயம் அந்த பார்வையில் ஸ்நேகமில்லை. ஆராயும் பார்வையும் இல்லை. ஆனால் பிடிக்கவில்லை.

“வந்து சேர்றானுங்க பாரு…” என்று பல்லை கடித்துக்கொண்டு எட்டி நடை போட்டு உன்னதியின் அருகில் சென்று நின்றுவிட்டான்.

அதற்குள் உன்னதியும் மயூரனை நெருங்கிவிட உன்னதியை தவிர்த்து அந்தநொடி வேறு சுற்றுப்புறம் மயூரனின் மனதில் பதியவே இல்லை.

இதோ வந்துவிட்டாள். அருகில் நின்றுவிட்டாள் என்றதுடன் அவளின் வாசத்தை சுவாசத்தில் நிறைத்தவன் அழுத்தமாய் விழி மூடி திறக்க,

“ம்க்கும், இன்னும் எவ்வளோ நேரம் ஆகும்?…” என்று சாதாரணம் போல் அவள் கேட்க மயூரனின் விழிகளில் சிறுமின்னல்.

‘ஆக இவள் அப்படியே தான் இன்னும்’ என்று தோன்ற தோன்றிய நொடி இதயம் தவிப்பை கடந்து நிதானத்தை மீட்டுக்கொண்டது.

நிச்சயம் கேள்வி அவனிடம் அல்ல. அவனோடு இன்னொருவரும் நிற்க பொதுவாய் திரையை பார்த்துக்கொண்டு தான் கேள்வியை இயம்பினாள் உன்னதி.

பேச போகிறேன் என்று சொல்லிவிட்டு இவள் என்ன செய்கிறாள் என குழம்பி பார்த்த தேவ்,

“நலம் விசாரிக்கலையா உன்னதி?…” என்றான் அவளிடம்.

“எங்களுக்குள்ள ஆயிரம் பர்ஸனல் இருக்கும் தேவ் ஸார். உங்களை வச்சிட்டு நான் பேசி, அது நல்லாருக்காது. பேஸிக்கலி நான் கொஞ்சம் ஷை டைப்….” என ரகசியம் போல் அல்லாது அலெக்ஸ் மயூரன் காதில் விழும்படியே பேசி வைக்க தூக்கிவாரி போட்டது மயூரனுக்கு.

அந்த பேச்சினால் தேவ்வின் முகம் போன போக்கில் மயூரனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.

ஆனால் இவள் தன்னையா கூறுகிறாள் என்று தலைசுற்றி போய் அவன் பார்த்திருக்க,

“இதெல்லாம் ஊடல் சம்பந்தப்பட்டது. உங்களுக்கு புரியாது. ஸோ கொஞ்சம், ஸ்டே அவே….”

“நானா?…” தேவ் திகைக்க,

“யூ ஒன்லி யூ. மிஸ்டர் தேவ், நீங்க தள்ளி இருங்க. இது நீங்கன்னு இப்போ புரிஞ்சதா?…” என்று இதனை கொஞ்சம் ரகசியம் போல தான் கூறினாள்.

தேவ்வின் முகம் அப்பட்டமாய் கருத்துவிட்டது. அதனை காண்பிக்கவும் முடியவில்லை.

உன்னதியை வெகு சாதாரணமாக அவன் எடை போட்டிருந்தான். அவள் அப்படி அல்ல என்று இதோ இந்த சில உரையாடல்களில் அவனுக்கு புரிந்து போனது.

அதற்குள் அனைவருமே வந்து அந்த இடத்தில் கூடி நின்றுவிட அலெக்ஸ் மயூரனின் கணீர் குரல் அழுத்தமும், தெளிவுமாய் வந்திருந்தவர்களுக்கு கேட்க துவங்கியது.

தமிழிலும், ஆங்கிலத்திலும் அவனின் விளக்கமும், தெளிவுரையும் இருந்தது.

அந்த தேயிலை அருங்காட்சியகம் பற்றிய விஷயங்கள், தேயிலை துளிர்ப்பது முதல், தூள்களாய் உதிர்வது வரை அதன் செய்முறை விளக்கங்களை எல்லாம் எடுத்து கூறிக்கொண்டிருந்தான்.

பேச பேச விழிகள் அவ்வப்போது உன்னதியை தொட்டு மீண்டு தான் சென்றுகொண்டிருந்தது.

அவனை போலவெல்லாம் அவ்வப்போது அவள் காணவில்லை. அவன் மீதான விழிகளை இம்மியளவும் மயூரனிடமிருந்து அகற்றவில்லை.

கண் சிமிட்டும் அவசியத்தினை அனாவசியமாய் விலக்களித்து அவனை உள்வாங்கிக்கொண்டிருந்தது உன்னதியின் விழிகள்.

இறுதியாய் அத்தனையும் விவரித்து முடித்தவன் தன் முன் இருக்கும் தேயிலைகளின் தரம் பற்றி காண்பித்து கூற இன்னும் அருகில் சென்று நின்றனர் அனைவரும்.

அதில் உன்னதி முதன்மையாக இருக்க அலெக்ஸ் மயூரனின் இதயம் சமமற்று துடித்துக்கொண்டிருந்தது.

அதுவரை அவற்றை எல்லாம் எரிச்சலுடன் பார்த்திருந்த தேவ்வின் பார்வை மயூரனை கூறு போட, வாளென சிலநொடி விழிவீச்சினை கத்தரிக்கும் விதமாய் அவன் மீது செலுத்தியவனின் நொடிநேர செயலில் உன்னதியில் இதழோரம் புன்னகை நெளிந்தது.

‘பார்ரா, புள்ளைக்கு உஷாரை?’ என்று கேலியாய் இதழ்கள் வளைய அந்த புன்னகையை மென்றாள் உன்னதி.

அலெக்ஸ் மயூரன் தன் உரையை முடித்துக்கொள்ள வந்தவர்கள் மெதுவாய் அந்த தொழிற்சாலையை பார்த்தபடி நகர்ந்தனர்.

இவர்களுக்கு அடுத்த குழுவில் தான் இளங்கோ இருந்ததனால் இன்னும் அவன் மயூரனை காணவில்லை.

அஞ்சுகாவும் அவனுடனிருக்க தேவ்வுடன் கொஞ்சமேனும் நேரம் செலவளிக்கட்டும் என்றுதான் அனுப்பி இருந்தான் அவன்.

இப்படி ஒரு திருப்பத்தை துளியும் அவன் எதிர்பார்க்கவில்லை. இன்னும் பார்க்கவும் இல்லை.

அனைவரும் கிளம்பவும் அதற்குமேல் அடுத்த குழுவிற்கு பேச அலெக்ஸ் மயூரனுக்கு முடியுமென்று தோன்றவில்லை.

அதையும்விட உன்னதி. அவளிடம் பேசவேண்டும், விசாரிக்கவேண்டும் என்னும் உந்துதல்.

அங்கிருந்தவர்களை பார்க்கையிலேயே என்னவோ விசேஷம், அதற்கு உறவுகளாய் வந்துள்ளனர் என்று மட்டும் புரிந்தது.

இதில் தேவ் வேறு நொடிக்கொருதரம் மயூரனின் மீது கோபப்பார்வையை வீச, ‘இவன் யார்ரா கோமாளி’ என்பதை போல சலிப்பாகிவிட்டது.

முதலில் தன்னை அவன் கோபமாய் பார்க்கையில் என்னவோ என்று யோசித்தவனுக்கு, அதையே அவனிடம் மீண்டும் மீண்டும் காணுகையில், தன்னை பயமுறுத்த முயல்கிறான் என்று புரிந்து சிரிப்பு தான் வந்தது.

அதுவும் உன்னதியோடு அவன் அருகில் நகர்ந்து செல்வதும், அவள் ஒற்றை பார்வையில் அவனை தள்ளி நிறுத்துவதும் கண்டவனுக்கு இன்னுமே சிரிப்பு.

error: Content is protected !!