நின்மொழி மார்கழி – 1 (1)

மொழி – 1

           சுடர் கல்வி குழுமத்தின் பொறியியல் கல்லூரியின் முதல்வர் அறையில் அமல்ராஜ் தொலைபேசியில் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார்.

அன்று கல்லூரி விடுமுறை என்பதால் வெளியே மாணவர்களின் நடமாட்டம் என்பது மிக மிக குறைவே.

கல்லூரியின் உள்ளே ஒரு பகுதியில் மாணவிகளுக்கு விடுதியும், வெளியே சற்றே தள்ளி மாணவர்களுக்கு விடுதியும் சேர்ந்தே இருந்தது.

ஈரோட்டின் பிரதான இடத்தில் மிக பிரமாண்டமாய் கல்லூரிக்கென்ற இடம் மிகவும் விஸ்தாரமானது.

கல்லூரியின் நடுமத்தியில் இருந்த கல்லூரி அறக்கட்டளையின் அருகில் ஒரு பகுதியில் முதல்வர் அறை இருக்க அமல்ராஜ் முக்கிய பேச்சுவார்த்தையில் இருந்தார்.

“நாளைக்கு முடிஞ்சிருமா ஸார்?…” என பவ்யமாக கேட்க மறுபக்கம் என்ன சொல்லப்பட்டதோ நெற்றியில் லேசாய் வியர்வை அரும்பியது.  

“அட்மிஷன் டைம் நெருங்கறதுக்கு முன்னாடி நாங்க விளம்பரப்படுத்தனும். பக்கத்து ஊர்களுக்கு கேன்வாஸ் பண்ண எங்க ஸ்டாஃப்ஸ் எல்லாம் அலாட் பண்ணனும். நிறைய இருக்கே ஸார்…” என்றார் தொலைபேசியில்.

அமல்ராஜ் பேசிக்கொண்டிருக்க அவரின் அறை கதவை தட்டிவிட்டு அதனை திறந்து உள்ளே நுழைந்தான் திருமொழிவர்ணன்.

அவன் வந்ததுமே எழுந்து நின்றுவிட்டவருக்கு தலையசைத்து அமர சொல்லியவன் தானும் அவரின் எதிர் இருக்கையில் அமர்ந்தான்.  

“மினிஸ்டர் பிஏ…” என வந்தவனுக்கு வாயசைத்து அவர் சொல்ல,

“பேசுங்க…” என்று மெல்லிய குரலில் திருமொழியும் கையசைத்தான்.

மேலும் சில நொடிகள் பேசி முடித்துவிட்டு நிமிர்ந்தவருக்கு கொஞ்சம் நிம்மதியானது இப்போது.

“அப்ரூவல் கிடைச்சிரும்ன்னு தான் சொல்றாங்க ஸார்…” என்றார் அமல்ராஜ் திருமொழியிடம்.

“மினிஸ்டரை மீட் பண்ணியாச்சா? அமௌண்ட் அவங்க கைக்கு மாறிடுச்சா?…” என நேரடியாக கேட்டான் திருமொழி.

“இல்ல இன்னும் மீட் பண்ணலை ஸார்…” அமல்ராஜ் மெல்லிய குரலில் சொல்ல,

“பின்ன அதுக்குள்ள அப்ரூவல் கிடைச்சிடும்ன்னு எப்படி சொல்றீங்க?…” என்றவன் கேள்வியில் அவர் முகம் தொங்கி போனது.

“அப்ரூவல் பண்ணி சைன் பண்ணினதும் முழு பணத்தையும் கண்ணுல காமிச்சா போதும். அதுக்கு முன்னாடி பணத்தை குடுத்திடவேண்டாம்…” என்றான் திருமொழி கறாராக.

“ஓகே ஸார்…” என்றவருக்கு அந்த கல்வி குழுமத்தின் சேர்மனின் பேச்சை மறுத்து எதிர்ச்சொல் சொல்லிவிட முடியுமா?

“சரி, அப்பா பேசினா எனக்கு கனெக்ட் பண்ணுங்க. அவங்களே கூப்பிடட்டும். நீங்க டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்….” என்றவன் தனது வாட்சை பார்த்து எழுந்துகொண்டான்.

“லன்ச் டைமாச்சே? நீங்க சாப்பிடுங்க. நானும் ஒரு மூணு மணி போல வீட்டுக்கு கிளம்பிடுவேன். நீங்களும் கிளம்பிடுங்க…” என சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறியதும் தான் அமல்ராஜிற்கு மூச்சே வந்தது.

“ஹப்பா…” என நிம்மதியாக அவர் இருக்கையின் பின்னால் சாய மீண்டும் அறை கதவு திறக்கப்பட்டது.

திருமொழி தான் வந்துவிட்டானோ என நிமிர்ந்து அமர்ந்தவர் உள்ளே வந்த ஆனந்தனை கண்டதும் தான் ஆசுவாசமானார்.

“என்ன ஸார், ரொம்ப டென்ஷனா இருக்கீங்க? நம்ம சேர்மன் இப்ப தான் உங்க ரூம்ல இருந்து வெளில போறார்….” என்றவர்,

“பாலிடெக்னிக் காலேஜ் அப்ரூவல் என்னாச்சாம்?…” என்றார் அமல்ராஜிடம்.

“அதை தான் கேட்டுட்டு போறார்…” என சலித்தவரிடம்,

“உங்க வயசென்ன? அவர் வயசென்ன? ரொம்பத்தான் அதட்டலா பேசறார் எல்லார்கிட்டயும்…” என ஆனந்தன் குறைபட்டுக்கொண்டார்.

“அப்படின்னு சொல்ல முடியாது ஆனந்தன். சின்ன வயசுனாலும் ரொம்ப தெளிவு. அவரோட அப்பாவை விட சாதுர்யம். இந்த காலேஜோட பொறுப்பெடுத்து அதை சிறப்பாவும் நடத்திட்டு தானே இருக்கார்? சில நேரம் அப்படி இருக்கறதும் நல்லது தான்…” அமல்ராஜ் திருமொழியை விட்டுத்தராமல் பேசினார்.

“வெளில இருந்து பாலிடெக்னிக் படிச்சிட்டு நம்ம காலேஜ்க்கு லேட்ரல் என்ட்ரில இஞ்சினியரிங் படிக்க வராங்கன்னு நம்ம அதை துவங்கனும்ன்னு இப்ப எவ்வளோ பண்ணிட்டிருக்கார்? சாமர்த்தியமானவர்…” என்றும் பெருமையாக கூறினார்.

“ஆனாலும் உங்களுக்கு பெருந்தன்மை ரொம்ப அதிகம் தான்….” ஆனந்தன் சற்றே கிண்டலாக கூற,

“இதுல பெருந்தன்மை எங்க இருந்து வந்தது? நம்மோட மரியாதைக்கு எந்த குறையும் இல்லை. நாம சரியா இருக்கறவரை எல்லாமே சரியா இருக்கும் ஆனந்தன்….” என்ற அமல்ராஜ்,

“நீங்க வீட்டுக்கு புறப்படலையா?…” என்று பேச்சை மாற்றினார்.

“ஹ்ம்ம், புறப்பட்டாச்சு. உங்ககிட்ட சொல்லிட்டு போக தான் வந்தேன். தலையெழுத்து வேலை மிச்சமிருந்தா லீவ் அன்னைக்கும் காலேஜ் வரவேண்டியதா இருக்குது….” என்றபடி ஆனந்தன் எழுந்து கிளம்பினார்.

சிறந்த பேராசிரியராக இருந்தாலும் வம்புக்கென்று பேசி வார்த்தைகளை கறந்து அதில் ஒருவகை ஆனந்தம் அடையக்கூடிய மனிதர் ஆனந்தன்.

அதனாலேயே ஆனந்தனிடம் பெரிதாய் வாய் கொடுத்துக்கொள்ளமாட்டார் அமல்ராஜ்.

இப்போதும் திருமொழி பற்றியும், புதிதாய் வரவிருக்கும் துறை பற்றிய செய்தி ஏதேனும் கிட்டுமா என்றும் வந்து பார்த்துவிட்டு சென்றிருக்க புன்னகைத்துக்கொண்டார் அமல்ராஜ்.

சில கொடுக்கல், வாங்கல்கள் எல்லாம் அத்தனை ரகசியமாக தான் இருக்கும். அமல்ராஜ் அந்த குடும்பத்தின், குழுமத்தின் விசுவாசி என்றும் சொல்லும் அளவிற்கு.

திருமொழியின் இந்த கடுமையான கண்டிப்பு பேச்சின் பின்னிருக்கும் காரணத்தை அறியாதவரா அமல்ராஜ்?

இப்போது பாலிடெக்னிக் காலேஜ் துவங்குவதற்கு கொடுக்கவிருக்கும் பணப்பரிவர்த்தனையும் அப்படியே.

ஒவ்வொரு துறைக்கும் அத்தனை செலவுகள் செய்து கல்லூரியை நடத்தினாலும் தரத்திலும், சொல்லித்தரும் ஆசிரியர்களிலும், அவர்களை தேர்வு செய்வதிலும் துளியளவும் குறை இருந்ததில்லை.

அந்த மாவட்டத்தின் சிறந்த கல்லூரியில் முதன்மையான கல்லூரி சுடர் கல்வி குழுமத்தினது தான்.

சுடர் கல்விகுழுமம் ஈரோட்டில் முக்கியமான கல்வி நிறுவனமாகும். மருத்துவம், கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரி என கல்வி நிறுவனங்களை கொண்டது.

தற்போது புதிதாய் பாலிடெக்னிக் காலேஜையும் துவங்குவதற்கான முயற்சியில் இருக்கிறது.  

அதற்கு ஆவன வேலைகளையும் முடித்து வைத்துவிட்டு அதற்கான ஒப்புதலை வாங்குவதற்கு திருமொழிவர்ணனின் தந்தையும், அந்த கல்லூரியின் முன்னாள் சேர்மனுமாகிய இளங்கோவன் அமைச்சரை சந்திக்க சென்றிருக்கிறார்.

அதனைக்கொண்டு சிலபல பரபரப்புகள் அங்கே. கல்வி அமைச்சரின் கையெழுத்து கிடைத்துவிட்டால் மடமடவென மற்றவற்றை எல்லாம் ஆரம்பிக்கவேண்டும்.

திருமொழி முன்னேற்பாடுகள் எல்லாம் செய்திருந்தாலும் ஒப்புதல் கிடைக்காதபட்சத்தில் சிறு பின்னடைவு என்றாலும் நஷ்டத்தோடு சிலபல கஷ்டங்களும் உண்டு.

தன்னறைக்கு வந்த திருமொழி மற்ற வேலைகளை எல்லாம் பார்த்துவிட்டு கிளம்பும் முன் மீண்டும் அமல்ராஜை பார்த்துவிட்டு தான் கிளம்பினான்.

சரியாய் மூன்றரை போல அவனின் கார் மாளிகை முன்பு வந்துவிட அவனின் வருகையை அறிந்து மதிய உணவை எடுத்து வைத்தார் பணியாள்.

அந்த நேரத்தில் வந்திருந்த மகனின் வேக நடையிலும், சற்றே சோர்ந்திருந்த முகத்திலும் சங்கவையின் திடுக்கிடல் கொஞ்சம் குறைந்து கவலையுடன் பார்த்தார்.

“சாப்பிட்டீங்களா ம்மா?…” என தாயிடம் கேட்டவன் கையை கழுவிவிட்டு வந்து உண்ண அமர்ந்தான்.

“லன்ச் முடிச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல நான் காபியே குடிச்சிடுவேன்…” என்று மகனின் தாமதமான உணவு நேரத்தை சுட்டி காண்பிக்க அதற்கு மெல்லிய சிரிப்பை உதிர்த்தவன்,

“சுகர் இல்லாம…” என சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பிக்க அதன் பின்னர் அவர் பேசிய எதற்கும் பதில் சொல்லாமல் உண்டு முடித்தான்.

“பேசிட்டே இருக்கேன் நான்…” சங்கவை கேட்கவும் தலையை மட்டும் அசைத்த பின்னர் தான் அவருக்கு புரிந்தது.

உண்ணும் நேரம் அவனின் வாயிலிருந்து வார்த்தைகள் எதுவும் வராது. உண்டு முடிக்கும் வரை அமைதியாகவே இருப்பான் யார் என்ன பேசினாலும்.

என்றாவது இப்படி சங்கவை ஆற்றமாட்டாமல் பேசினாலும் கூட கவனித்தாலும் பதில் வராது.

இன்றுமே அப்படி கவலையில் தான் பேசிவிட மகனும் சாப்பிட்டு முடித்து கையை கழுவிட்டு வந்து அவரின் சக்கர நாற்காலியை நகர்த்தினான்.

இரண்டு மாதங்களுக்கு முன் சங்கவை கால் வழுக்கி கீழே விழுந்திருக்க மாவுக்கட்டு போடப்பட்டு இப்போது நடமாட்டம் எல்லாம் அதில் தான்.

இன்னொரு காலில் வயதின் முதுமையால் லேசாய் நீர் கோர்த்து வீக்கம் கொண்டிருந்தது.

“ஆமா, இந்த நேரம் தூங்குவீங்களே? தூங்காம ஹால்ல என்ன பன்றீங்க?…” என கேட்டபடி அவரை கட்டிலில் அமர வைத்தவன்,

“காலுக்கு மருந்து தேய்க்கலையா இன்னைக்கு?…” என்றான் காலை தொட்டு பார்த்து.

“நீ கூட தான் இன்னைக்கு வர நேரமாகும்ன்னு சொல்லிட்டு இப்பவே வந்துட்ட. நான் கேட்டேனா?…” என்ற சங்கவை அறையின் வாசலை பார்த்தார்.

“யாரையோ எதிர்பார்க்கறீங்க போல?…” என கேட்டுக்கொண்டே கட்டு போடாத காலில் மருந்தை பூசி லேசாய் நீவிவிட்டான்.

சங்கவை வாயே திறக்கவில்லை. அமைதியாக இருக்க அதற்கு மேலும் திருமொழி எதையும் கேட்கவில்லை.

“நானும் போய் ரெஸ்ட் எடுக்கறேன். தூங்குங்க…” என்று சொல்லிவிட்டு அவரின் அறையிலிருந்து வெளியேற அப்போது தான் சங்கவைக்கு நிம்மதியானது.

லேசாய் கண்ணயரும் நேரம் அறையின் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் கோமகள். சங்கவையின் நெருங்கிய தோழி.

error: Content is protected !!