“நீங்க புள்ளையா பெத்து வச்சிருக்கீங்க? அது ஒரு தலையாட்டி பொம்மை. நான் விரும்பறது சுயமா முடிவெடுக்க தெரிஞ்ச முதுகெலும்புள்ள ஒரு மனுஷனை. அப்படிப்பட்டவரை தான் என் மாமா எனக்கு தேர்ந்தெடுத்து இருக்கார். தேவையில்லாம இப்போ வந்து பிரச்சனை செய்யாதீங்க…”
பேசிவிட்டு விலக சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக்கொள்ளாது என்பதை போல ஜீவாவிற்கும் அவள் குடும்பத்திற்கும் சாபங்களை அள்ளிவழங்கினார் வள்ளியம்மை. மகனின் பிரிவு வருத்தினாலும் அதற்கு காரணம் தான் என்பதை மறந்து அனைவரிடமும் குறை கண்டு குதறினார்.
தான் திருந்தாமல் தன் மகன் தன்னிடம் திருந்த மாட்டான் என்பதை புரியாமல் மற்றவர்களை பேசி பேசி ஒடுங்கி போனார்.
ஜீவாவின் திருமணத்தை பூம்பொழிலே மெச்சும் விதமாக ஆரவ்வும் அர்ஜூனும் ஜமாய்த்துவிட்டனர். முதல் பெண்ணின் திருமணம் தன் ஊரில் நடத்தமுடியாத ஒரு சிறு குறை மனதில் அமுதாவிற்கு ஒட்டிக்கொண்டு தான் இருந்தது. அது ஜீவாவின் விஷயத்தில் அகன்றது.
கார்த்திக் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முடித்து நல்லவேலையில் நிறைந்த சம்பளத்தில் இருந்தது அவர்களுக்கு அப்படி ஒரு பெருமிதம். இரண்டு பெண்களையும் நல்லவிதமாக கரைசேர்த்துவிட்டதில் மனதில் சொல்லொண்ணா அமைதி.
வண்ணமதியும் தினகரனும் தங்களுடைய குழந்தை மதுராவுடன் குடும்பம் சகிதமாக வந்து விழாவில் கலந்தனர். முத்தழகியும் முத்தையாவும் வழக்கம் போல திருமண வேலைகளை முன்வந்து ஓடியாடி வேலை பார்த்து சிறப்பித்தனர்.
முதல் குழந்தையான பூஜாவை வயிற்றில் சுமக்கும் போதே எடுத்த முடிவை அவள் பிறந்த நொடியே செயலாற்றிவிட்டாள் ஜீவா. குழந்தையை முதலில் ஸ்டெபியின் கைகளில் தான் தரவேண்டும் என்று கூறியவள் பூஜாவின் பெர்த் சர்டிபிகேட்டில் கூட அர்ஜூன் ஸ்டெபியை தான் தாய் தந்தை இடத்தில் நிரப்பவேண்டும் என்னும் முடிவாக கூறினாள்.
இதை அர்ஜூனும், ஸ்டெபியுமே எதிர்பார்க்கவில்லை. முதலில் மறுத்தாலும் ஸ்டெபியின் ஏக்க முகம் அர்ஜூனை ஏற்கவைத்தது.
பூஜாவின் வரவு அப்படி ஒரு ஆனந்தத்தை அள்ளி வழங்கியது. நாளும் பொழுதும் பூஜாவுடனே கழிய ஸ்டெபியின் எந்த கண்டிப்பிலும் தலை குடுக்காமல் ஒதுங்கியே நிற்பாள் ஜீவா.
“என்னோட பேப்க்கு ஒரு பேபி…” கொண்டாடிவிட்டான் ஆரவ்.
அனைத்தும் நிலாவால். தன் நிலவால் என்பதை இப்போது நினைத்து அவன் உதடுகளில் ஒரு மந்தகாச முறுவல்.
“அண்ணா நான் பேசறதை கேட்கறீங்களா இல்லையா? நீங்க வேற ஏதோ ஒரு உலகத்துல இருக்கிறதை போல இருக்கே?…” என்ற கார்த்திக்கின் கேலியில் சிரித்தவன் வேறு பேச ஆரம்பித்தான்.
ஜீவாவிற்கு நினைவு திரும்பியதும் அவளை காண கார்த்திக் சென்றான். அவனை முதலில் அனுப்பிவிட்டு மற்றவர்கள் தாமதித்து செல்ல தீர்மானித்தான் ஆரவ்.
“ஜீவா, மிஸ் யூ டா…” என காதலாய் வழிய அவனின் பேச்சில்,
“ரொம்பத்தான், நீங்களாச்சும் என்னை மிஸ் பன்றதாச்சும். நம்பிட்டேன்…” சோர்வாக இருந்தாலும் கண்கள் சிரிக்க கூறிய மனைவியின் முகத்தில் உன்னை எனக்கு தெரியும் என்பது அவளின் பேச்சில் தெறித்தது.
மெல்ல அவளின் நெற்றியில் முட்டியவன், “பையன் உன்னை போலவே இருக்கான். பிள்ளையை கூட உன்னை மாதிரியே பெத்து வச்சிருக்க ஜீவா. சத்தியமா என்னை ஆட்டிப்படைக்கபோறீங்க ரெண்டுபேரும்…” என்றவனை காதலாக பார்த்தவள்,
“ரெண்டா? ம்ஹூம் எனக்கு இன்னொரு குழந்தையும் வேணும். உங்களை போலவே ஒண்ணு. ஒரு குழந்தையோட என்னால முடியாதுப்பா. இன்னும் ஒரே வருஷம் தான் கேப். அடுத்த குழந்தைக்கு…” என கூறி கண் சிமிட்டி புன்னகைக்க அவளின் அதிரடி பேச்சில் வழக்கம் போல் மொத்தமாக கவிழ்ந்து போனான் கார்த்திக்.
அதன் பின் அனைவரும் மாறி மாறி ஜீவாவை பார்த்துக்கொண்டே இருக்க அமுதா அவளுடன் இருந்துகொள்வதாக கூறிவிட அவருக்கும் துணையாக கல்பனா தானே உடனிருந்தார். அமுதாவினோடு கார்த்திக் திருமணம் முதல் நட்புபாராட்டியவர் இன்று அமுதாவின் நெருங்கிய தோழியும் ஆகிவிட்டார் கல்பனா.
அனைவரும் கிளம்ப ஆரவ்வும் நிலாவை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். ஹாஸ்பிட்டல் சென்று வந்த அலுப்பு தீர குளித்து வெளியில் வர அதற்குள் நிலா தர்ஷினியிடம் படித்துக்கொண்டிருந்த நிரல்யாவை அழைத்துவந்து உறங்க வைத்திருந்தாள்.
மனைவியை பார்த்துக்கொண்டே உடைமாற்றி வந்தவன் மாடியிறங்கி கீழே வந்து அமர்ந்துவிட்டான் விழிகளை மூடி. பத்துநிமிடம் கடந்திருக்கும் நிலாவின் வருகையை உணர்ந்து பார்க்க அவள் அவனுக்கான உணவு தட்டோடு அவனை நெருங்கி இருந்தாள்.
அவளையே கண்ணெடுக்காமல் பார்க்க, “என்னாச்சு இன்னைக்கு பார்வைலாம் பலமா இருக்கே?…” என அவனை சீண்டியபடி அருகில் அமர்ந்தாள்.
அவளின் கன்னங்களை பூவாய் வருடி, “யூ ஆர் சோ ப்யூட்டிஃபுல் நிலா…” என்றான் அவளிடத்தில்.
“அப்போ இவ்வளோ நாளா இது உங்களுக்கு தெரியலை போல. இன்னைக்குதான் நான் அழகா இருக்கேனா?…” என அவனின் தோள்களை இடிக்க குறும்பில் துடித்திருந்த அவள் இதழ்களை தனதாக்கியவன் சிலநிமிட பயணத்தின் பின் அவளை விடுவித்தான்.
மீண்டும் அவள் விழிகளை பார்க்க அதில் தெரிந்த அதீத காதலில், ஜில்லென்று சிந்தும் நேச ஜுவாலையில் சுகமாய் திளைத்தாலும் அவனுக்கு தனக்கு முதலில் மனைவியான அந்த நிலாவின் பார்வையும் காதலும் வேண்டும் என இதயம் பிடிவாதமாய் உரைத்தது.
இந்த நிலாவின் காதலில் கட்டுண்டு கரைந்தாலும் அவனை கவர்ந்த, சில மாதமே அவன் சுகித்த அந்த நிலாவின் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று இன்றைய நிலாவின் விழிகளில் அதிகமாக தெரிந்தாலும் மனம் குரங்கு போல மீண்டும் பழையதை எண்ணியே வட்டமிட்டது.
தன்னுடைய உள்ளக்கிடங்கை நிலா அறிய நேரிட்டால் நிச்சயம் தாங்கமாட்டாள் என நன்றாக தெரிந்தும், தன்னுடைய எண்ணங்களை அவள் புரிந்துகொள்ளாத அளவிற்கு தன் மீதான காதலும், உரிமையுணர்வும் அவளை ஆட்டிப்படைப்பதை அறிந்ததாலும் இதை வெளிப்படுத்தாமல் தனக்குள்ளே புதைத்துக்கொண்டான்.
என்றாவது ஒருநாள் நிலாவிற்கு அந்த சிலமாத வாழ்க்கை ஞாபகத்தில் வந்துவிடாதா என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை அதன் போக்கில் பயணித்தான் அதுவும் நிறைவோடு.
“என்ன எதுவும் பேசலையே நீங்க?…” என்ற குரலில் கலைந்தவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.
கண்ணை உறுத்தாத நிறத்தில் காட்டன் நைட்டியில் அமரிக்கையான அழகோடு, சாத்வீக விழிகளோடு அமர்ந்திருந்தவளை பார்வையால் பருகியவன் நொடிகள் கடக்க,
“ம்ஹூம் இதுக்கும் மேல தாங்காது. நிலா கம் லெட்ஸ் கோ…” என அவளை பிடித்துக்கொண்டு எழும்ப,
“இன்னும் நீங்க சாப்பிடவே இல்லையே?…” என்றவளை விடாமல் அணைத்துக்கொண்டு மாடியேறினான்.
கணவனின் பிடிவாதம் அறிந்தவளாக தானும் அவனுடன் ஒன்றியவள் அவனை விட வேறேதும் பெரிதில்லை என்று அவனோடு இசைந்தே போனாள்.
அறைக்குள் நுழைந்ததும் அவளை அணைத்தவன், “ஹக் மீ மோர் நிலா…” என ஹஸ்கி வாய்ஸில் கூறிக்கொண்டே அவளுள் புதைய ஆரம்பித்தான்.
“யூ கில்லிங் மீ நிலா. லவ் யூ சோ மச்…” உணர்வு மேலீட்டால் குரலே கிசுகிசுப்பாக வந்தது. அவனின் பேச்சுக்களாலும், செய்கையாலும் நிலாவின் வார்த்தைகள் சிறைபிடிக்கப்பட்டு மௌனமேகத்தில் ஒளிந்துகொள்ள அவளை வேறுகலத்தில் சஞ்சரிக்க செய்ய அவனுள் கரைந்து போனாள் பெண்ணவள்.
நிலாவினுள் தன் தேடலை தொடங்கினான் ஆரவ். இருவேறு பரிமாணங்களை கொண்ட காதல். முதல் காதல் நெஞ்சோடு உறைந்தாலும் இன்றுவரை உயிர்ப்போடு இருப்பதை உணர்ந்தே இருந்தான். அவனின் நிலா தேடல் அவளின் ஞாபங்கள் திரும்புவதால் மட்டுமே முற்றுபெறும்.
அருகில் துயில் கொண்டிருப்பவளையும் மகளையும் பார்த்தவன் இருவரையும் தன் கைவளைவிற்குள் கொண்டுவந்தான். தன் வானில் நிலவென வலம் வரும் மனைவியை வருடியவன் அவள் நெற்றியில் இதமாய் இதழ் பதித்தான்.
செல்ல சிணுங்கலோடு தன்னுள் ஒன்றியவளை உறக்கம் கலைக்காமல் விழிகளுக்குள் நிறைத்தான்.
என்றாவது ஒருநாள் அவளின் ஞாபகங்கள் திரும்பி, “தன் நினைவு திரும்பியதும் தனக்கு ஏன் என்னை உன் மனைவி என புரியவைக்கவில்லை?” என கேட்டு வம்புச்சண்டையிடும் நிலாவின் வருகையை எதிர்பார்த்திருந்தான்.
அவனின் தேடல் வெறும் தேடலாகவே நெஞ்சில் உறைந்துவிட்டிருந்தது.
ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிட்ட பெருமிதமும் கர்வமும் முகத்தில் ஒளிர நெஞ்சம் நிறைந்த சந்தோஷத்தோடு விடியலை நோக்கி தன் உறக்க பயணத்தை தொடர்ந்தான் ஆரவ்.
நாளைய விடியல் அனைவருக்கும் மகிழ்வானதாகவும் சுவாரசியமானதாகவும் அமையட்டும் என்னும் பிராத்தனையோடு.
என்றாவது தேடல் நிறைவடையும் என்ற நம்பிக்கையில் அவனும் அவனின் நம்பிக்கை வெற்றிபெற வாழ்த்தும் நாமும்.
சுபம்