நெஞ்சில் உறைந்த தேடல் – 1 (1)

தேடல் – 1

      கதிரவனின் கோபக்கணைகள் தன் தாக்குதலை நிறுத்தி நிலவுமகளின் வரவுக்கு வழிவிட்டு விலகிய பின்பும் அதன் வெப்பம் மாலை மயங்கினாலும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டுதானிருந்தது.

அடுத்த தெருவில் திருமணத்திற்கென்று கட்டப்பட்ட ஒலிபெருக்கியின்  வழியாக  இசைஞானியின் பாடல்கள் அந்த ஊரையே மயக்கிய போதும் தினகரனின் காதில் மட்டும் தீப்பிழம்பை வாரியிறைத்தது.

தாங்கொண்ணா துயரத்தில் இமைகளை மூடியவனது விழிகளின் ஓரத்தில் சிறிது நீர் கசிந்தது. அதை துடைக்கும் எண்ணம் சிறிதும் இல்லாமல் தனக்குள் உழன்று கொண்டிருந்தான் தினகரன்.

மகன் சோகத்தில் ஆழ்ந்திருப்பான் என்று நன்கு அறிந்திருந்த முத்தையா அவனது மனதை மாற்றுவது இயலாத காரியம் என்று உணர்ந்து பெருமூச்சொன்றை வெளியிட்டாலும் அவருக்குமே தினகரின் நிலை வலியை கொடுத்தது.

திருமணப்பத்திரிக்கையை மார்பில் போட்டுக்கொண்டு அனைத்தையும் இழந்துவிட்டதை போல உடைந்து போய் திவானின் மேல் படுத்திருக்கும் மகனை காண காண பெற்ற மனம் கலங்கியது.

இத்தனை வருடத்தில் எப்போதும் கம்பீரமாகவும் தைரியமாகவும் மட்டுமே பார்த்திருந்த மகனின் இந்த கோலம் அவரை உலுக்கியது. மகன் மனதார ஆசைப்பட்டதை ஏற்படுத்தி தரமுடியாத அளவிற்கு தான் ஒன்றும் குறைந்துபோய் விடவில்லையே.

ஆனால் அதை செய்யும் கால அவகாசம் கூட தனக்கு இல்லாமல் போய்விட்டதே என குமைந்துபோய் சோர்ந்து அமரவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்னும் யோசனைகளில்  தான் இருந்தார் முத்தையா.

பூம்பொழில் ஊரின் சேர்மனான முத்தையாவின் மகன் தினகரன். பிறந்ததிலிருந்து மகனை பெயர் சொல்லிகூட இன்றுவரை கூப்பிடாமல் தம்பி, அய்யா என்றே அழைக்கும் அளவிற்கு மகன் மீது உயிரையே வைத்திருப்பவர்.

ஊர்க்காரர்களுக்கு தெரியாமல் சட்டத்திற்கு புறம்பான அடிமட்ட அளவில் சில தகிடுதத்த வேலைகளை செய்தாலும் யாருக்கும் பாதகம் வராமல் வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு சாணக்கியத்தனம் நிறைந்தவர் இப்போது மகனது விஷயத்தில் செய்வதறியாமல் ஸ்தம்பித்து போய் நிற்கிறார்.

மெல்ல குரலை செருமியபடி, “அய்யா…” என மகனை அழைத்தவர் அவன் இமை திறந்து அவரை பார்த்ததும்,

“நம்ம குணசேகரன் வீட்டு விசேஷத்துக்கு போய்ட்டு வரலாம்னு இருக்கேன். அவரு இந்த ஊர்ல பெரிய ஆளு. அவரோட வீட்டு விசேஷத்திற்கு இந்த ஊர் சேர்மனா இருந்துக்கிட்டு நான் போகாம இருக்கிறது நல்லதில்லைய்யா…” அதையும் பணிவாகவே தான் கேட்டார்.

அவரது முகத்தை வேதனையோடு பார்த்தவன் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு ஒருகணம் ஆழ மூச்செடுத்துவிட்டு,

 “இதையெல்லாமா என்கிட்ட கேட்டுட்டு இருப்பீங்க? போய்ட்டு வாங்கப்பா, அம்மாவையும் கூட அழைச்சிட்டு போங்க…”

தன் வேலை முடிந்தது என்பது போல மீண்டும் பத்திரிக்கையை திறந்து அதில் மணமகள் இடத்தில் பொறிக்கப்பட்டிருந்த பெயரை மென்மையாக மிக மென்மையாக வருடியவன் நெஞ்சார அணைத்துக்கொண்டான்.

என்ன முயன்றும் அவனிடம் அதற்கு மேல் பேசமுடியாமல் திரும்பியவர் மனைவி முத்தழகியை தேடி பின்புறம் சென்றார். அங்கே சோகமே வடிவாக அமர்ந்திருந்தவரை பார்த்து வருந்தியவர் கரகரத்த குரலில்,

“முத்து…” என அழைத்தார். அவரது அழைப்பில் அடித்துபிடித்து எழுந்தவர்,

“என்னங்க எதுவும் வேணுமா? சொல்லுங்க…” அவரது முகத்தையே பார்த்திருக்க, முத்தையாவோ மனைவியை எப்படி அழைக்கவென சிந்தித்துகொண்டிருக்க அவரோ,

“என்னாச்சுங்க எதுவும் சொல்லாம இருக்கீங்க?…”

“ஒண்ணுமில்ல முத்து, நம்ம குணசேகரன் வீட்டு…” அவர் முடிக்ககூட இல்லை அதற்குள் முத்தழகியின் முகத்தில் உஷ்ணத்தை கண்டதும் கப்பென வாயை இறுக மூடிக்கொண்டார் முத்தையா.

“எப்படிங்க வர சொல்றீங்க? என்னோட மகன் படற பாட்டை பாருங்க. புள்ள வெளில சொல்லமுடியாம மனசுக்குள்ளையே வச்சு மருகிட்டு இருக்கான். அவனோட சந்தோஷத்தை வேரோடு பிடிங்கின அந்த குடும்பத்தோட விஷேசத்துக்கு நாம பவிசு காட்டிக்கிட்டு போவோனுமாக்கும்?…”

“அப்டி சொல்லல முத்து. நான் இந்த ஊரோட சேர்மன். முதல் பத்திரிக்கை நமக்கு தான் வந்து வச்சிருக்காங்க. அந்த மரியாதைக்காக நாம ஒண்ணா தானே போகனும். நான் மட்டும் போனா தம்பிக்கிட்ட நான் பேசிட்டேன் முத்து…”

“யாருக்கு வேணும் மருவாதி? நீங்க இந்த ஊருக்கு சேர்மனா இருங்க ராசாவா கூட இருந்துட்டு போங்க. எனக்கு அதை பத்தி கவலை  இல்லை. முதல்ல நான் என் புள்ளைக்கு அம்மா. அதுக்கு பொறவு தான் எனக்கு யாரா இருந்தாலும். நீங்க கூட…”

“அந்த பொம்பளப்புள்ள எங்க இருந்தாலும் நல்லா இருந்துட்டு போகட்டும். அங்க வந்து என்னால மனசால வாழ்த்த முடியாது. என் மனசு அதுக்கு இடம் கொடுக்காது. அந்த புள்ள முகத்தை பார்த்தா கூட என்ற மவன் தொலைச்ச சந்தோஷமும், வாழ்க்கையும் தான் என்ற கண்ணு முன்னால வரும்…”

“அப்படி என்னோட மனசுல பட்டுட்டா ஒண்ணு அங்க பிரச்சனை பண்ணியாச்சும் கைய்யோட அந்த புள்ளை நம்ம வீட்டுக்கு கூட்டியாந்துடுவேன். இல்லைனா அங்கேயே நான் மனசு தாங்காம எதாச்சும் வாய்க்கு வந்தபடி பேசிடுவேன்…”

“இந்த ரெண்டுல எது நடந்தாலும் என் மவனுக்கு அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை அமைஞ்சிடும். அமைச்சு குடுப்பேன் நான். ஆனா அந்த புள்ளைக்கு நல்லதில்லை. அத்தனை பேர் முன்னால அந்த குடும்பம் தான் அவமானப்படும்.”

“என் புள்ள சொன்ன வார்த்தைக்காகதான் நான் எதுவுமே பேசாம அமைதியா இருக்கேன். இப்போ சரின்னு அவன் ஒரு வார்த்தை சொல்லட்டும் அடுத்த நிமிஷம் அந்த இந்த வீட்டு மருமவளா இருப்பா. ஆனா சொல்லமாட்டாம அவன் பிடியிலேயே நிக்கிறானே. அவளுக்காகவே…”

“தாயா புள்ளையா ஒண்ணுமண்ணா பழகிட்டு என்னால அந்த புள்ளைய விட்டுகொடுக்கவும் முடியலை. அதே நேரம் எனக்கு என் மவனும் முக்கியம். இப்போ நான் இருக்கிற நிலைய சொல்லிப்புட்டேன். என்னைய கூட்டிட்டு போறதும் போவாததும் உங்க இஷ்டம்…”

மன்றாடும் குரலில் தன் நிலையை எடுத்து சொன்னாலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற கணக்கில் தன் பிடியிலேயே நின்றார் முத்தழகு. கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தாலும் அதையும் மீறி கொஞ்சமும் சளைக்காமல் படபடவென பொரிந்து தள்ளினார் முத்தழகு.

செய்வதறியாமல் திகைத்து நின்றவர் தோளில் கிடந்த துண்டை உதறிக்கொண்டே முன்னறைக்கு வந்து மகனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்துவிட்டார்.

“செத்தநாளைக்கு முன்னால இப்டின்னு தெரிஞ்சிருந்தா அந்த புண்ணியவதி கைல கால்ல விழுந்தாவது என் மருமவளை என் வீட்டுக்கு விளக்கேத்த வரவழைச்சிருப்பேனே?. இப்டி திடீர்னு கல்யாணம்னு சேதிய காதுல கொண்டாந்து போட்டு என் மவனோட உசிர அறுத்து எறிஞ்சிட்டு போய்ட்டாளே?…”

“இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வர அந்த புள்ளைக்கு குடுத்து வைக்கலையா? இல்லை அந்த மகாலட்சுமி பொண்டாட்டியா வர என் மவனுக்குதான் குடுத்து வைக்கலையா?. அவளை மாதிரி ஒரு பொண்ணு கிடைப்பாளா? என்ற புள்ளையோட வாழ்க்கை இனி என்னவாகும்?…”

“அத்தை அத்தைன்னு வாய்நிறைய கூப்பிடுவாளே? அவ என் மவனோட மனசுல இருக்கிறது தெரிஞ்ச நாள்ல இருந்து என்னோட மருமவளா தானே நெனச்சிட்டு இருந்தேன். அவளை பொக்கிஷத்த பாதுகாக்குறது போல பொத்தி பொத்தி வச்சு பார்த்துப்பேனே? கைக்குள்ள வச்சு தாங்கி இருப்பேனே? இத விதின்னு சொல்லவா? என்னனு சொல்ல?…”

முத்தழகு துக்கம் தாளாமல் தன் போக்கில் புலம்பிக்கொண்டிருக்க அவரது குரலில் அத்தனை துயரம். அதை கேட்டுகொண்டிருந்த தினகரனின் முகமும் வேதனையில் கசங்கியது.

இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த முத்தையா பொறுக்கமுடியாமல் இனி என்னவாகினும் நடக்கட்டும் என்பது போல உடனடி திட்டத்தை தீட்டியவர் அதை செயல்படுத்த ஆவன செய்தும் விட்டார்.

முத்தையா தீட்டிய திட்டம் அறியாமல் தினகரன் உதடுகள் அவளது பெயருக்கு எங்கே வலித்துவிடுமோ என்பது போல மென்மையாக உச்சரித்தன.

“நிலாமுகி…”

பெயரின் உச்சரிப்பிலேயே கூட இத்தனை சந்தோஷத்தை, நிறைவையும் தர முடியுமா? முடிந்தது.

அப்படி ஒரு இன்பத்தையும் களிப்பையும் நிலாமுகியின் பெயர் தினகரனுக்கு ஈடு இணையில்லாமல் வாரி வழங்கியது. இப்போது அவளுக்கு திருமணம்.

விடிந்தால் இன்னொருவனின் மனைவியாக போகிறவளை மனதில் சுமந்துகொண்டிருப்பவன் இப்போதும் ஜெபம் போல அவளது பெயரை உச்சரிக்க உச்சரிக்க அது அவனுக்கு வலியையும் ஆறுதலையும் ஒரே நேரத்தில் கொடுத்தது.

அவளது பெயர் தினகரனின் மனதினுள் பச்சை குத்தியதை போல பதிந்துவிட்டது. அவனது நேசம் இன்று நேற்று உருவானதல்ல.

கிராமத்தில் ஒரு ஊரில் வசிப்பவர்களிடையே ஜாதி பேதமில்லாமல் உறவுமுறையில் அழைப்பதொன்றும் புதிதல்ல.

அப்படித்தான் ஆரம்பித்தது குணசேகரன் முத்தையா குடும்பத்தினரது பழக்கமும். அவர்களின் முன்னோர்களிடமிருந்தே தொடர்ந்து வந்த மாமன் மச்சான் முறை குணசேகரன் முத்தையா தலைமுறையை அடுத்து வந்த தினகரன் நிலாமுகி தலைமுறையினரும் அதையே பின்பற்றினர்.

குணசேகரனும் முத்தையாவும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றாலும் முறை சொல்லியே பழகியவர்களது  குடும்பத்து பெண்களிடத்தில் அந்நியோனியம் கொட்டிக்கிடந்தது.

குணசேகரனின் மனைவி அமுதாவும், முத்தையாவின் மனைவி முத்தழகும் அப்படி ஒரு பிணைப்பில் இருந்தனர். நிலாமுகியும் அவளது தங்கை ஜீவநிலாவும் முத்தழகு என்றால் கொள்ளை பிரியம்.

error: Content is protected !!