
🙂 அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் 🙂
ஐந்து வருடங்களுக்குப் பிறகு…
ஞாயிற்றுக்கிழமை மதியம் சிறிது நேரம் தூங்கி மாலையில் எழுந்த ஹரீஷ், “தியா” என்று அழைத்தபடியே கூடத்திற்கு வந்தான்.
திவ்யா அங்கே இல்லை என்றதும், வீடு முழுவதும் தேடியவன் மனதினுள் ‘ரியாவையும் காணும்… ரெண்டும் இன்னைக்கு என்ன வம்பை இழுத்து வைக்கப் போகுதுங்களோ!’ என்று நினைக்கவும், வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் சரியாக இருந்தது.
கதவைத் திறந்தவன், வெளியே நின்றிருந்த நடுத்தர வயதில் இருக்கும் ஆளைப் பார்த்து, “வாங்க சார்” என்றான்.
அவரோ கோபத்துடன், “நான் ஒன்றும் உட்கார்ந்து பேச வரல…”
ஹரீஷ் புருவம் உயர்த்தியபடி, “என்னாச்சு சார்?”
“எங்கே உன் மனைவி?”
“வெளியே போயிருக்கா.”
“மனைவியை அடக்க துப்பில்லை…..”
“சார் வார்த்தையை அளந்து பேசுங்க… இப்போ எதுக்கு வந்தீங்களோ, அந்த விஷயத்தை மட்டும் பேசுங்க.” என்று இறுக்கத்துடன் கூறினான்.
“பொண்ணுனா அடக்கம் வேணாம்! கல்யாணம் ஆகியும்..”
“நான் உங்கள் மனைவியை பற்றி விமர்சிக்கிறேனா?”
“ஏய்!”
“நான் விமர்சிக்காமலேயே உங்களுக்கு கோபம் வருதே!”
“என் மனைவியும், உன் மனைவியும் ஒன்றா?”
“நிச்சயம் இல்லை… நேரா வந்த விஷயத்தை மட்டும் சொல்லுங்க.”
“வாலிபப் பசங்க கூட விளையாடுறா! இவ…”
“இதுக்கு மேல என் மனைவி பற்றி ஒரு வார்த்தை பேசினாலும், அடுத்து பேச வாய் இருக்காது… எப்படி வசதி?”
“எல்லாம் நீ கொடுக்கும் இடம்….”
“தேங்க்ஸ்.”
அவர் முறைக்க,
அவனோ அலட்டிக் கொள்ளாமல், “எனக்கு வேலை இருக்கு…”
“அப்போ, நான் வேலை வெட்டி இல்லாதவனா?”
“அது பற்றி எனக்கு தெரியாது.”
“ஏய்!”
“யோவ்….” என்று குரலை சற்று உயர்த்த, அவர் அதிர்ச்சியுடன் பார்க்க,
ஹரீஷ், “என்ன லுக்கு! உனக்கு தான் என்னைப் பற்றி தெரியலை… நீ வந்த பத்து நாளில் உன்னைப் பற்றி எல்லாம் தெரிஞ்சுருச்சு… சும்மா வளவளனு பேசிட்டு இருக்காம விஷயத்தை சொல்லு… இல்லை, இடத்தை காலி பண்ணு.”
“இந்தத் தெருவில் இருக்கும் பசங்களுடன் சேர்ந்து கிரிகெட் விளையாடி, என் உயிரை வாங்குறா… போன வாரம் ஜன்னல் கண்ணாடியை உடைத்தாள். இன்னைக்கு என் கார் கண்ணாடி…”
“அவள் உடைத்ததை நீ பார்த்தியா?”
“எங்கே! அதான் மரக்கிளை விழுந்து உடைந்தது போல செட்-அப் செஞ்சு வச்சிருக்கிறாளே!”
“ஏன் மரக்கிளை விழுந்து கூட அது உடைந்து இருக்கலாமே!”
“அது எப்படி கிளை தானா உடையும்? இது நிச்சயம் உன் மனைவி வேலை தான்… அவளைத் தவிர வேறு யாரு….”
“இந்த பேச்செல்லாம் வேணாம்… நீ கண்ணால் பார்த்தால் மட்டும் வந்து பேசு.”
“எல்லாம் நீ கொடுக்கிற இடம் தான்… பொண்டாட்டியை அடக்க….”
“தேவை இல்லாமல் வார்த்தையை விடாதனு முதலிலேயே சொன்னேன்…” என்றபடி ஒரு அடி முன்னால் வர,
அவர் பயத்துடன் ஒரு அடி பின்னால் நகர்ந்தார்.
ஹரீஷ், “உன்னை போல் என் மனைவியை சந்தேகப்பட்டு அடிமையா நடத்த என்னால் முடியாது… என் மனைவி ஏதும் தப்பு செய்தால், அதை நீ நேரில் பார்த்தால் மட்டும் வந்து பேசு.” என்று கறாரான குரலில் கூறியவனோ, மனதினுள் அவனது ரௌடி பேபியை திட்டிக் கொண்டிருந்தான்.
அவர் பல்லை கடித்துக்கொண்டு கிளம்பினார்.
அவர் சென்றதும் மாடி முகப்பிற்கு(பால்கனி) வந்து நின்ற ஹரீஷின் முகத்தில், கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவர் வீட்டை விட்டு போவதையும், ஹரீஷ் கோபத்துடன் வந்து நின்றதையும், விக்னேஷ் வீட்டின் மொட்டை மாடியின் மறைவில் இருந்து பார்த்த திவ்யா, தன் அருகே இருந்த விக்னேஷிடம், “டேய் குமாரு! அந்த பரதேசி பெருசா பிரச்சனை செய்துட்டான் போலவே!”
“அக்கா, என் பெயரையே மாத்துற”
“இப்போ இது ரொம்ப முக்கியம்!”
“பின்ன இல்லையா! நீ குமாருனு கூப்பிட்டு கூப்பிட்டு, எனக்கே என் பெயர் மறந்துரும் போல…”
“ச்ச்… நானே ரிஷிகேஷை எப்படி சமாளிக்கிறதுனு யோசிச்சிட்டு இருக்கிறேன்.”
விக்னேஷ், “உனக்கு தான் ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாபிடுறது போல தானே!”
“டேய்!”
“மாம்ஸ் அ சமாளிக்கிறது உனக்கு என்ன கஷ்டமா?”
அவள் முறைக்கவும்,
“சரி சரி… நோ கண்ணகி அவதாரம்” என்றவன் பின் புன்னகையுடன், “அதான் கைவசம், ஒரு பலி ஆடு இருக்குதே!” என்று கூறி கண் சிமிட்டினான்.
கண்கள் ஒளியுர திவ்யா விக்னேஷுடன் கை தட்டி, “சூப்பர் டா” என்றாள்.
விக்னேஷ் நந்தகுமாரை அழைத்தான்.
நந்தகுமார் தான் காதலித்த விக்னேஷின் அக்காவை இரு வீட்டாரின் சம்மதத்துடன் கல்யாணம் செய்து, ஆறு மாதம் ஆகிறது.
நந்தகுமார் அழைப்பை எடுத்ததும்,
விக்னேஷ், “மாமா மேல வாங்க… திவ்யா அக்கா சிக்கன் 65 சூப்பரா செஞ்சிருக்கா.”
“வாசனையே வரலையே டா”
“உங்க மூக்கு சரி இல்லை மாமா… சரி விடுங்க. நான் சரவணாவை கூப்பிட்டுக்கிறேன்.” என்றபடி அழைப்பை துண்டிப்பது போல் பாவனை செய்ய,
நந்தகுமார், “டேய்… இரு டா… என்னை கொல்லும் முயற்சில் உன் அக்கா நெட்டில் பார்த்து கிச்சனில் ஏதோ ரிசர்ச் செய்துட்டு இருக்கா… நான் இதோ வரேன்” என்றான்.
விக்னேஷ் புன்னகையுடன், “சீக்கிரம் வாங்க.” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
அடுத்த நிமிஷம் நந்தகுமார் படிகளில் ஏறுவதை பார்த்த திவ்யாவும், விக்னேஷும், வாய்விட்டு சிரித்தபடி, கை தட்டிக் கொண்டனர்.
பின் திவ்யா, “சரி டா, நான் வைஷு(பவித்ராவின் அன்னை) மாதா கிட்ட இருந்து ரீ குட்டிய கூட்டிட்டு போறேன்.”
“பாப்பா பெயரே ரியானு ரெண்டு எழுத்து தான்… அதையும் சுருக்கி ரீ னு சொல்றியே!”
திவ்யா தனது டீ-ஷர்ட் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு கிளம்பினாள்.
மேலே சென்ற நந்தகுமார், ஹரீஷ் கோபமாக இருப்பதை அறியாமல், “என்னடா! அதுக்குள்ள காலி செஞ்சிட்டியா?”
“என்னடா சொல்ற?”
“அடப்பாவி! எத்தனை நாள் உனக்கு ருசியா சமைச்சு போட்டிருப்பேன்.”
“சமைச்சேன்னு மட்டும் சொல்லு… ருசியா சமைச்சேன்னு சொல்லாதே!”
“ஏன் டா பேச மாட்ட! நல்லா சமைக்கிற பொண்டாட்டி அமைந்து இருக்கிற கொழுப்பு.”
“இப்போ, உனக்கு என்ன வேணும்?”
“வேற என்ன, சிக்கன் 65 தான்,”
ஹரீஷ் கடுப்புடனும், கோபத்துடனும் முறைக்க,
நந்தகுமார், “முறைச்சா பயந்துருவோமா! எங்கே என் பங்கு? கீழே வீடு காலியானதும் வந்தது எதுக்கு? இப்படி ஆத்திர அவசரத்துக்கு நீ உதவுவனு தானே!”
“எதுடா ஆத்திர அவசரம்?”
“இது தான்! சோறு ரொம்ப முக்கியம் மாப்பி”
“டேய்! நீயெல்லாம் திருந்தவே மாட்டியா? இம்சை… கல்யாணம் ஆகியும் கொஞ்சமாவது பொறுப்பு வந்திருக்கா! உன்னை நம்பி பொண்ணு கொடுத்தார் பாரு, அந்த மனுஷனை சொல்லணும்…” என்று ஆரம்பித்து எதெதுக்கோ சேர்த்துத் திட்டினான்.
நந்தகுமார் மனதினுள், ‘எப்போ நடந்ததுக்கு இப்போ திட்டுறான்! என் பொண்டாட்டி கூட இப்படி ஞாபகம் வைத்து திட்டியது இல்லை… இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி திட்டுறான்!’ என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
ஒருவாறு ஹரீஷ் திட்டி ஓய்ந்ததும்,
நந்தகுமார், “சிக்கன் தர மாட்டேன் சொன்னா போய்டப் போறேன்… அதுக்கு ஏன்டா இப்படி பக்கம் பக்கமா திட்டுற!”
“டேய்” என்று ஹரீஷ் அடிக்க வர,
நந்தகுமார், “ஸ்வேதா காப்பாத்து” என்று கத்தியபடி வெளியே ஓடினான்.
படிகளில் தனது மூன்று வயது மகள் ரியாவை தூக்கியபடி வந்து கொண்டிருந்த திவ்யா, நந்தகுமாரைப் பார்த்து, “காரம் கொஞ்சம் அதிகமோ!” என்றாள்.
அவன் அவளை முறைக்க,
ரியா, “ஏ! சும்பி சிக்கன்… பிச்சி பிச்சி” என்று ஆள்காட்டி விரலை ஆட்டி மிரட்டியது.
“உருவத்தில் மட்டும் ஹரியை போல் இருக்குது. ஆனா குணம் அப்படியே உன்னை மாதிரி… குட்டி சொர்ணாக்கா.”
ரியா அவனை முறைக்க,
திவ்யா இடுப்பில் கை வைத்தபடி, “என்ன வாய் நீளுது? ஆபீஸ்ஸில் அந்த ஷீத்தல் கூட கடலை போட்டதை ஸ்வேதா கிட்ட சொல்லவா?”
இரு கரங்களை தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டு, “ஆத்தா மகமாயி, குடும்பத்தில் கும்மி அடிச்சிறாத…” என்றவன், ‘வீட்டில் கொடுக்கும் டார்ச்சர் பத்தாதுன்னு என் ஆபீஸ்ஸில் வேலைக்கு சேர்ந்து உயிரை வாங்குறா! ஆண்டவா, என் மேல் உனக்கு கருணையே இல்லையா!’ என்று முணுமுணுத்தபடி வீட்டின் உள்ளே செல்ல,
ரியா ‘கிளுக்’ என்று சிரித்து அன்னையின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.
நந்தகுமாரின் மனைவி, காளி அவதாரத்துடன் அவனை வரவேற்றாள்.