
குறிப்பு: நேத்து ud போட மறந்துட்டேன் தோழமைகளே! மன்னிக்கவும்.. கொஞ்சம் assignments வேலைகள் இருக்குது.. ஸோ உங்க commentsகு ஞாயிறு இரவு reply போடுறேன்.. ஆனா உங்க comments எல்லாம் படிச்சுட்டு தான் இருக்கிறேன், ஸோ reply போடாம விடாதீங்க..
இன்று ‘சுடும் பனித்துளியே!’ அப்டேட் இல்லை.. சனியன்று போடுறேன்.. என் நிலை புரிந்து, ongoing storyக்கு நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க மிக்க நன்றி தோழமைகளே! 🙂 🙂
தழல் ~ 15
நீதிமன்றத்தின் வாயிலில் நக்கலுடன் கூடிய வெற்றிப் புன்னகையை பைரவியைப் பார்த்து புரிந்த கிருஷ்ணா, காவல்துறை வையத்தில்(van) ஏற, பைரவியோ அவனைப் பார்த்து அலட்சியமாக உதட்டை வளைத்தாள்.
சற்று முன்பு கலைச்செல்வியின் வழக்கை விசாரித்த போது, காத்தவராயன் காவல் துறையினரின் அடியை தாங்க முடியாமல் தான், தான் பைரவி கூறியது போல் கிருஷ்ணா கொலை செய்யச் சொன்னதாக பொய் கூறியதாகவும், உண்மையில் கலைசெல்வியை தான் மிரட்டிய போது அவள் பின்னால் நகர்ந்தபடி கால் தவறி கீழே விழுந்து இறந்ததாகக் கூறி விட,
பிரேத பரிசோதனை செய்த மருத்துவரும் தனது அறிக்கையில் கூறி இருந்ததையே வார்த்தை மாறாமல் கூறி விட,
கிருஷ்ணாவோ தான் கலைச்செல்வியை காணொளி வைத்து மிரட்டியது உண்மை. ஆனால் கொலை செய்யக் கூறவில்லை என்று கூறி விட,
நீதிபதி வழக்கை ஒரு வாரம் தள்ளி வைத்து இருந்தார். அதனாலேயே கிருஷ்ணா மமதையுடன் கூடிய வெற்றிப் புன்னகையை பைரவியை நோக்கிப் புரிந்தான்.
பைரவியைச் சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள்,
“இந்த வழக்கில் தீர்ப்பு என்னவா இருக்கும்னு நினைக்கிறீங்க?”
“உண்மையில் மிஸ்டர் கிருஷ்ணா கொலை செய்யலையா?”
“மிஸ்டர் கிருஷ்ணா மேல் உங்களுக்கு ஏதோ முன் விரோதம் இருப்பதாவும், அதனால் தான் அவர் மேல் பழி போடுறீங்கனு ஒரு பேச்சு இருக்குது.. அது உண்மையா?” என்று பல கேள்விகளை அடுக்கினர்.
அவளோ, “நோ கமெண்ட்ஸ்” என்று விட்டு நகர,
மனோகர், “மிஸ்டர் கிருஷ்ணா அண்ட் மிஸ்டர் ருத்ரேஷ்வர் இடையே சொத்து தகராறு இருப்பதாகவும், உங்கள் வருங்கால கணவருக்கு உதவி செய்யத் தான், கிருஷ்ணா மேல் பழி போட்டு இருக்கிறீங்கனு பேச்சு இருக்குது” என்றான்.
அவனை தீர்க்கமாகப் பார்த்தவள், “ப்ரூவ் இட்” என்று விட்டு தனது வழக்கமான கம்பீர நடையுடன் சென்று வண்டியில் ஏற, மறுபக்கம் கபிலன் ஏறினான்.
அப்பொழுது மாணவர்கள் கூட்டத்தில் இருந்த அஜய் அவளை நோக்கி வரப் பார்க்க, அவள் மறுப்பாகத் தலை அசைத்ததும், அவன் அங்கேயே நின்று கொண்டான்.
அப்பொழுது சரியாக பத்திரிக்கையாளர்கள் மாணவர்கள் முன் குழுமி, ஒலிவாங்கியை நீட்டி அவர்கள் கருத்தை கேட்க,
அவர்களோ ஒன்றாக, “நீதி வேண்டும்.. நீதி வேண்டும்.. எங்கள் தோழி கலைச்செல்விக்கு நீதி வேண்டும்.. கிருஷ்ணாவை தூக்கில் போட வேண்டும்.” என்று கத்தினர்.
அதை கவனித்தபடி பைரவி வண்டியை கிளப்ப, அவர்கள் பின்னால் காவல்துறை வையமும் கிளம்பியது. பின்னால் வந்த வையத்தில் கிருஷ்ணா மற்றும் காத்தவராயனுடன் ஒரு கைத்திருட்டு(Pick-pocket) கைதியும் இருக்க, அவர்களுக்கு காவலுக்காக ஏட்டு இருந்தார்.
வண்டியில் செல்லும் பொழுது, “என்ன மேடம் இப்படி ஆகிருச்சு!” என்று கபிலன் கோபமும் ஆதங்கமுமாகக் கூற,
“வேற என்ன நடக்கும்னு நினைச்சீங்க? இன்னைக்கே அந்தப் பதரை தூக்கில் போடுவாங்கனா!” என்று அவள் அலட்டிக் கொள்ளாமல் வினவ,
“அப்படி இல்ல மேடம்” என்று சற்றே குரலை தாழ்த்திக் கூறியவன் முகம் பிரகாசிக்க, “அந்த நர்ஸ் சங்கவி சாட்சி சொல்ல தயாரா இருக்கிறதா சொன்னீங்களே மேடம்!” என்று கூறினான்.
“உங்க தங்கச்சி கல்யாணத்துக்கு லீவ் எடுக்கணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே! எத்தனை நாள்?” என்று அவள் வினவ,
அவனோ, “மேடம்!” என்று குழப்பமும் அதிர்வுமாக அழைத்தான்.
அதைக் கண்டு கொள்ளதவளாக, “நானும் என்னோட கல்யாணத்துக்கு லீவ் எடுக்கணும்.” என்றாள்.
கபிலன் ‘ஞை’ என்று விழிக்க,
அவனை திரும்பிப் பார்த்து, “இது வரை யாரையும் சுட்டு இருக்கிறீங்களா கபிலன்?” என்று கேட்டாள்.
இப்பொழுது அவனுக்கு ஏதோ புரிவது போல் இருக்க, சிறு அதிர்வுடன், “மேடம்!” என்று அழைக்க,
அவள் வண்டியை அந்த ஆள் அரவமற்ற சாலையில் நிறுத்தி விட்டு, பின் இருக்கையில் இருந்து எதையோ எடுத்தபடி இறங்கினாள்.
வையத்தின் ஓட்டுநரிடம் சென்றவள் கையில் இருந்த இரு ஆணிகள் இருந்த மரத்துண்டை காட்டியபடி, “இதை கீழே வைப்பேன்.. பின்னாடி கொஞ்சம் போயிட்டு வந்து இதில் ஏத்துறீங்க” என்றாள்.
அவனும் அவ்வாறே செய்ய, வையத்தின் முன் பக்க இடது வட்டை(tyre) பழுதானது.
“ஸ்டெப்னி மாத்துங்க” என்று ஓட்டுநரிடம் கூறியதும், அவர் வையத்தின் பின் பக்க கதவை திறந்து மாற்றுச் சக்கரத்தையும் தேவையான பொருட்களையும் எடுத்துக் கொண்டு வேலையை ஆரம்பித்தார்.
வையத்தின் உள்ளே ஏறியவள் கிருஷ்ணா எதிரே கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி நிதானமான குரலில்,
“அப்புறம் கிருஷ்ணா! எதுக்கு சிரிச்ச?” என்று கேட்டாள்.
அவனோ நக்கல் புன்னகையுடன், “உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது” என்றான்.
புருவம் உயர்த்தியபடி, “அ..ஹான்” என்றவள் கைகளை மேலே தூக்கி நெட்டி முறித்தாள்.
அவன் அவளை காம பார்வை பார்த்த படி, “வெளியே வந்ததும் உன்னை செ.ம்மையா கவனிக்கிறேன்” என்றான்.
(உடலளவிலும் மனதளவிலும் நொடிந்து போன பாலாஜி, கிருஷ்ணாவிற்கு வக்கீலை ஏற்பாடு செய்தாரே தவிர, அவனை நேரில் சந்தித்து பேசவில்லை. அதனால் பைரவி தான் மஞ்சரி என்ற உண்மை அவனுக்குத் தெரியவில்லை. அவள் தனக்கு தங்கை முறையில் இருப்பவள் என்று தெரிந்து இருந்தால், பார்வை மாறி இருக்குமோ என்னவோ!)
“ஏய்!” என்று கத்தியபடி வண்டியினுள் ஏறிய கபிலன் அவனை அடிக்கப் போக,
அடிக்கும் முன் கபிலனின் கையை பிடித்து தடுத்த பைரவி, “எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க கபிலன்! விடுங்க.. கடைசியா ஏதாவது பினாத்திட்டு போகட்டும்.” என்றாள்.
பின் கிருஷ்ணாவைப் பார்த்து, “இந்த பைரவியைப் பத்தி உனக்கு இன்னும் தெரியலை” என்றபடி அவனது இடது கையில் விலங்கை மாட்டியவள், “இறங்கு” என்றாள்.
அப்பொழுது தான், தான் இருக்கும் சூழ்நிலை சற்றே புரிவது போல் இருக்க கிருஷ்ணா பயத்துடன், “ஏய்! என்ன செய்யப் போற!” என் றபடி இறங்க மறுத்தான்.
“வா டா” என்றபடி அவனை இழுத்துக் கொண்டு இறங்கியவள், கபிலனிடம் ஒரு விலங்கை தூக்கிப் போட்ட படி காத்தவராயனை சுட்டிக் காட்டி விட்டு, ஏட்டிடம் அந்த கைத் திருட்டு கைதியை சுட்டிக் காட்டி, “அவனை கூட்டிட்டு வாங்க.” என்றாள்.
அந்த கைதி, “மேடம்.. சின்ன சின்ன பிக்-பாக்கெட் திருட்டு தான் மேடம் செய்துட்டு இருக்கிறேன்.. இனி அது கூட செய்ய மாட்டேன் மேடம்.. என்னை போட்டுடாதீங்க மேடம்.” என்று அலறினான்.
“மூச்” என்று அவன் பக்கம் திரும்பி அவள் சொல்லவும், வாயை கப்-சிப் என்று மூடிக் கொண்டவனின் நெஞ்சம் உயிர் பயத்தில் சத்தமின்றி கதறத் தொடங்கியது.
பைரவியின் இரும்புப் பிடியில் இருந்து திமிறிய படி,
“ஏய்! என்ன செய்யப் போற?”,
“என்கவுண்டரா?”
“முடிஞ்சா கோர்ட்டில் தண்டனை வாங்கித்தா!
“இந்த என்கவுண்டர்லாம் போலீஸ்ஸோட கோழைத்தனம்.. ஆமா எங்க கிட்ட ஜெயிக்க முடியாம இப்படி செய்ற கோழைத்தனம்!
என்னை கொன்னுட்டு நீ தப்பிச்சுடுவியா?” என்று வித விதமாக கிருஷ்ணா கத்திக் கொண்டே வர,
அவற்றை சிறிதும் பொருட் படுத்தாமல் அவனை இழுத்துச் சென்றவள், அவனது கையில் மாட்டி இருந்த விலங்கின் மறு முனையை அங்கிருந்த மரத்தின் கிளை ஒன்றில் மாட்டி விட்டு, நூறடி தொலைவில் இருந்த வையத்தை நோக்கித் திரும்பினாள்.
கபிலன் காத்தவராயன் கையை வையத்தின் முன் கதவுடன் சேர்த்து விலங்கிட்டு இருந்தான்.