
தழல் ~ 14
“அம்மா வா!” என்று சத்தமாக வாய்விட்டு சிரித்த பைரவி, இகழ்ச்சியும் வெறுப்பும் கோபமுமாக ராதிகாவைப் பார்த்து,
“என்னைக் கேட்டால், நான் உதிக்க காரணமான அந்தப் பொறுக்கி உன்னை விட பெட்டர்” என்றாள்.
பின் வேலையாட்கள் நடுவில் தன்னை ஆர்வமும் சிறிது நெகிழ்ச்சியுமாக பார்த்துக் கொண்டிருந்த வயதான பெண்மணியை கண்ணசைவில் அழைத்தாள்.
அவள் அருகே வந்தவர், “பாப்பா.. நீ.. நீங்க..” என்று திணற,
அவள் மென்னகையுடன், “உங்க மஞ்சு பாப்பா தான்.. நீனே சொல்லுங்க.. உங்க பேத்தி எப்படி இருக்கா?” என்று கேட்டாள்.
ஆம்.. அந்த பெண்மணி வேறுயாருமில்லை, சமையல்காரர் கமலாமா தான்.
அவர் சற்றே கலங்கிய கண்களுடன், “நல்லா இருக்கிறா.. நீ எப்படி இருக்கிற பாப்பா?” என்று கேட்டார்.
ராதிகா கடும் கோபத்துடன், “கமலாமா! இவளுடன் உங்களுக்கு என்ன பேச்சு?” என்று கத்த,
ராதிகா பக்கம் திரும்பாமல் துப்பாக்கியை மட்டும் அவரை நோக்கி நீட்டியவள் கமலாவிடம், “பார்த்தா எப்படி தெரியுது?” என்று கேட்டாள்.
ராதிகா அதிர்ச்சி கலந்த பயத்துடன் கப்-சிப் என்று வாயை மூடிக் கொண்டார்.
“அம்சமா இருக்க பாப்பா.. ஆனா கண்ணு?” என்று கமலா இழுத்து நிறுத்த,
“லென்ஸ் போட்டு இருக்கிறேன்” என்றவள்,
“நான் போனதுக்கு அப்புறம் என்ன நடந்தது? என்னை பற்றி என்ன கதை புனையப்பட்டது?” என்று கேட்டாள்.
அவர் கலங்கிய கண்களுடனே, “அடுத்த நாள் நான் வந்தப்ப.. தம்பியை கண் கொண்டு பார்க்க முடியலை.. நீ இல்லாம அவ்ளோ தவிச்சு போய் இருந்தார்.. நீ பணத்தை திருடினத்தைப் பார்த்து பாலாஜி ஐயா உன்னை கண்டிச்சு அடிச்சதாவும், கோபத்தில் நீ வீட்டை விட்டு போய்ட்டதாவும் சொன்னாங்க.. அது உண்மை இல்லைனு தெரிந்தாலும், இந்த வேலைகாரியால எதுவும் செய்ய முடியாதே!” என்று அழுதவர்,
“இன்னைய வரை உனக்காக தினமும் ஆண்டவன் கிட்ட வேண்டிகிட்டு தான் இருக்கிறேன்.. உனக்கு என்னாச்சுனு யார் கிட்டயும் கேட்க கூட முடியலை.. தம்பியும் அவ்ளோ இறுகி போய் இருந்தார்.. யாராலும் அவர் பக்கத்தில் கூட போக முடியலை” என்றார்.
துப்பாக்கி ஏந்திய கையை இறக்காமல் மறு கையால் அவரை தோளோடு அணைத்து, “தேங்க்ஸ் கமலாமா.” என்றாள்.
அன்று பாலாஜியைத் தான் நம்பி இருக்கக் கூடாது என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த கஜேந்திரனுக்கு, கமலாவின் பேச்சைக் கேட்டு குற்ற உணர்ச்சி அதிகரித்தது.
சமையல்காரருக்கு இருக்கும் பாசமும் நம்பிக்கையும் கூட தனக்கு இல்லாமல் போனதே என்று நினைத்து பெரிதும் வருந்தித் தவித்தார்.
மஞ்சரி விஷயத்தில் சில நாட்கள் முன்பு வரை பாலாஜியை நம்பிக் கொண்டு இருந்தவர் தான், ஆனால் என்று பைரவி தான் மஞ்சரி என்று தெரிந்ததோ, அன்றே பாலாஜி மீது தான் தவறு என்று அவருக்கு தெளிவாகப் புரிந்து போனது.
ஆம், கயவர்களை களை எடுக்கும் ஏசிபி பைரவி மீது குற்றம் இருக்கும் என்று அவரால் சிறிதும் யோசிக்கக் கூட முடியவில்லை. அப்பொழுது தான் பாலாஜியை நம்பிய தனது ஹிமாலய தவறை உணர்ந்தார்.
கமலா, “என்ன பாப்பா எனக்கு போய் தேங்க்ஸ் சொல்லிட்டு” என்று கூற,
“இந்த வீட்டில், ருது மாமாக்கு அப்புறம் என்னை நம்பிய ஒரே ஜீவன் நீங்க தான்…” என்றாள்.
நீண்ட பதினாறு வருடங்களுக்கு பிறகான அவளது ‘ருது மாமா’ என்ற அழைப்பு, ருத்ரேஷ்வர் மனதினுள் தித்திப்பாய் இறங்க, உணர்ச்சிகளின் பிடியில் நின்றவன், பேச்சற்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கஜேந்திரன் குற்ற உணர்ச்சி கலந்த வருத்தத்துடன், “என்னை மன்னிச்சிடு மஞ்சரி” என்று கெஞ்சலான குரலில் கூற,
இவ்வளவு நேரம் இருந்த இலகு தன்மை அவளை விட்டு சட்டென்று விலகிட, இறுகிய முகத்துடன் அவரை அழுத்தமாகப் பார்த்தாளே தவிர பதில் கூறவில்லை.
பின் பாலாஜி அருகே சென்று அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தவள், “அன்னைக்கு என்ன நடந்தது?” என்று கோபத்தை அடக்கிய குரலில் கேட்டாள்.
பாலாஜி, “அதான் கமலாமா சொன்…” என்று முடிக்கும் முன் இன்னொரு அடி விழுந்தது.
பாலாஜியின் உதடு கிழிந்து இரத்தம் கசிய,
கோபத்துடன், “செய்றதெல்லாம் நீ செய்துட்டு அவரை எதுக்குடி அடிக்கிற” என்று கத்திய ராதிகா பாலாஜியைப் பார்த்து,
“இன்னும் ஏன் இவளுக்காக பார்க்கிறீங்க! இவளோட கேடு கெட்ட புத்தியைப் பத்தி சொல்லுங்க.. எல்லோருக்கும் இவளோட குணம் வெட்ட வெளிச்சம் ஆகட்டும்” என்றார்.
‘இவ வேற நேரம் காலம் தெரியாம கோர்த்து விடுறாளே!’ என்று பாலாஜி மனதினுள் அலற,
புருவத்தை லேசாகச் சுருக்கிய படி ராதிகாவைப் பார்த்த பைரவி பின் பாலாஜியைப் பார்த்து, “ஸோ இன்னொரு கதையை வேற சொல்லி இருக்க!” என்றாள்.
அவளது குரலும் பார்வையும் அவருள் பீதியை கொடுத்தது.
ருத்ரேஷ்வர் அழுத்தத்துடன் பாலாஜியைப் பார்க்க, பாலாஜி திண்டாடித் தான் போனார்.
கஜேந்திரன், “நிஜமான உண்மையை சொல்லு பாலாஜி” என்று அழுத்தத்துடன் கூறினார்.
மூவரின் தாக்குதலில் எச்சில் முழுங்கக் கூட பயந்தவராக பாலாஜி நின்றிருக்க,
ராதிகா தான் கோபத்துடன், “உன்னோட பொறுக்கி அப்பனோட புத்தி தானே உனக்கு இருக்கும்!” என்றார்.
‘பேசாம இரு ராதி’ என்று மனதினுள் கதறிய பாலாஜி, பரிதபாமாக மனைவியை பார்த்துக் கொண்டு நின்றார்.
பாலாஜி வாய் திறக்க மாட்டார் என்பதை அறிந்த பைரவி ராதிகாவை சீண்டும் பொருட்டு, “ஓ! அப்புறம்!” என்று அதீத நக்கலுடன் கூறினாள்.
“இவளுக்காக நீங்க ஏன் பார்க்கிறீங்க” என்று கணவரிடம் கேட்ட ராதிகா ருத்ரேஷ்வரைப் பார்த்து,
“அம்மு.. அம்முனு தலை மேல தூக்கி வச்சு கொண்டாடுறியே! இவளோட சுயரூபம் என்னனு தெரியுமா? இவளாம் குடும்பம் நடத்தத் தகுதியே இல்லாதவ” என்றார்.
“அத்தை!” என்று ருத்ரேஷ்வர் கோபத்துடன் எச்சரிக்கும் குரலில் அழைக்க,
பைரவியோ ராதிகாவைப் பார்த்து அலட்சியமாக உதட்டை பிதுக்கினாள்.
அதில் இன்னும் கோபமடைந்த ராதிகா, “நானே உண்மையை சொல்றேன்.. நல்ல கேட்டுக்கோ ருத்ரா.. இவ வீட்டை விட்டு ஓடினாலும், சின்ன பொண்ணுனும்.. என்ன தான் எனக்கு பிடிக்காதவனாலும் என்னோட பொண்ணாச்சேனு எனக்காக யோசித்து, இவளோட பெயர் கெடக் கூடாதுனு நினைத்த உன் மாமா, இவ உன்னோட கம்ப்யூட்டர்ல பிட்டு படம் பார்த்ததை மறைச்சு வெறுமென திருடியதா சொன்னார்.. அதுக்கு நீ நல்லாச் செய்றடா!” என்றார்.
ருத்ரேஷ்வர் அதிர்ச்சியுடன், “என்னது!” என்று கூற,
பைரவி உதடுகளோ இன்னும் அலட்சியமாக வளைந்தது.
ராதிகா, “இவ்வளவு நல்லவரான உன் மாமாவை தான் நீ..” என்று பேசிக் கொண்டிருக்க,
அவனோ கோபத்துடன் பாலாஜியின் கழுத்தை நெரித்த படி, “உண்மையைச் சொல்லு.. அன்னைக்கு என்ன நடந்தது?” என்று கர்ஜித்தான்.
ராதிகா அதிர்ச்சியுடன் ருத்ரேஷ்வரின் கையை பிடித்து இழுக்க முயற்சித்த படி, “ருத்ரா.. என்ன செய்ற! அவரை விடு.” என்றார்.
அவனோ பாலாஜியிடம், “நீ பார்த்ததை அம்மு பார்த்துட்டானு தான் அவளை அடிச்சு துரத்திட்டியா? ஆனா… இதுக்கா துரத்தின! வேற என்னமோ நடந்து இருக்குது.. என்ன தப்பு செய்த? உண்மையைச் சொல்லு.” என்றபடி பிடியில் இன்னும் அழுத்தம் கொடுத்தான்.
ருத்ரேஷ்வர் கையை சிறிதும் அசைக்க முடியாமல் திணறிய ராதிகா, “டேய் நரேன்! என்னடா மரம் மாதிரி நின்னுட்டு இருக்க! வந்து இவன் கையை பிரித்து விடு.” என்று கத்தினார்.