
துளி 3
அய்யர், “கெட்டிமேளம்! கெட்டிமேளம்” என்று குரல் கொடுக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, அபியுதித் பனிமலரின் கழுத்தில், தான் கொண்டு வந்திருந்த பொன் தாலியை அணிவித்து, அதனுடன் கோர்த்திருந்த மஞ்சள் நாணில் மூன்று மூடிச்சிட்டான். நாத்தனார் முடிச்சு போட வந்த மைத்ரேயியை பார்வையாலேயே தடுத்து அவனே மூன்றாவது முடிச்சையும் போட்டு இருந்தான்.
அவன் தாலி கட்டியதும், பனிமலர் அழுத்தமான கோபப் பார்வையுடன், “நெனச்சத சாதிச்சிட்டீகல?” என்றாள்.
ஒரு நொடி அதிர்ந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவன் அமைதியாக தோளைக் குலுக்க,
அவளோ கோப விழிகளுடன், “ஆனா இனி, நீக நெனக்காததுதே நடக்கும்” என்றாள்.
அதற்கும் அவன் தோளைத் தான் குலுக்கினான் ஆனால் இம்முறை அவனது உதட்டோரம் சிறுநகை பூத்திருந்தது.
அய்யர் இருவரையும் அக்னியை வலம் வரக் கூற, அவளோ எழுந்து நின்று தன்னை வெறுப்பு கலந்த வன்மத்துடன் முறைத்துக் கொண்டு இருந்த வேலம்மாளைப் பார்த்து நக்கலும் கோபமும் நிறைந்த குரலில், “உங்க மகன கூட்டிட்டு நீங்க கெளம்பலாம்” என்றாள்.
நெல்லைவடிவு அதிர்வுடன் ஏதோ பேச வர,
அதற்கு முன் கோபத்துடன், “இவுரோட வாழுவேனுட்டு எப்புடி நெனச்சீகமா? அப்பா சாவுக்கு காரணமானவகள எப்புடி ஒறவா ஏத்துக்கிடுறீக! ஒங்களால முடிஞ்சாலும் என்னியால முடியாது” என்றவள் சுப்பையாவை சிறு வலியுடன் பார்த்தபடி மெல்லிய குரலில், “கமுக்கமா ஒங்க பேரன் கூட கூட்டு சேர்ந்துபுட்டீகல!” என்றாள்.
அவளது வலியில் அபியுதித்தின் உள்ளம் துடித்தாலும், தற்போது தன்னால் எதுவும் செய்ய முடியாதென்பதை உணர்ந்து அமைதி காத்தான்.
சுப்பையா பேத்தியின் தலையை ஆதூரமாக வருடியபடி, “நா ஒனக்கு நல்லதுதே செஞ்சிருக்கேனுட்டு ஓ ஆழ்மனசுக்கு புரியும்த்தா” என்றார்.
நெல்லைவடிவு, “நம்ம அபி..” என்று ஆரம்பிக்க,
அதற்குள் வேலம்மாள் ஆவேசத்துடன், “அப்புறம் எதுக்குடி என் பையனை கல்யாணம் செய்த?” என்று கத்தினார்.
அவள் அலட்சியத்துடன், “உங்க மகன் தான் நடக்க இருந்த கல்யாணத்தை கட்டம் கட்டி நிறுத்தி, என்னை கல்யாணம் செய்து இருக்கார்” என்றாள்.
மகனைப் பார்த்தவர், அவனது முகபாவனையில் இருந்து அது தான் உண்மை என்பதை அதிர்வுடன் கண்டு கொண்டார். தனது ஏமாற்றத்தையும், இயலாமையையும், மகனைத் திட்ட முடியாத கோபத்தையும் சேர்த்து அவளிடமே காட்ட நினைத்து இன்னும் கோபத்துடன் பேச வர,
அவளோ நக்கலும் சிறு வன்மமும் கலந்த பார்வையுடன், “அது என்ன பொண்ணு மட்டும் தான் வாழாவெட்டியா!! கல்யாணம் ஆகி தனியா இருக்கும் பையனும் அதே வாழாவெட்டி தான்..
இங்க யாரும் உங்க மகனை மயக்கவும் இல்லை, ஆசைப்பட்டு வாழ ஏங்கியும் நிக்கல.. உங்க மகனை வாழாவெட்டியா உங்க கூடவே கூட்டிட்டு போங்க” என்று கூறியிருந்தாள்.
சுப்பையா அவளிடம் மறுத்து பேச வாயைத் திறக்கும் முன், “நா ஒங்க பேத்திங்கறது நெசமுனாக்க, இனி யந்த விசயத்திலும்.. முக்கியமா ஒங்க பேரன் விசயத்துல என்னிய நீக இழுத்துக்கட்டவோ, மறிச்சி நின்னு யெ சார்பா வாக்கு கொடுக்கவோ கூடாது” என்று அழுத்தத்துடன் கூறி அவரது வாயை அடைத்து விட, அவர் பார்வையாளராக மாறிப் போனார்.
“அவன் ஆம்பளை சிங்கம்டி! அவனுக்கு இன்னொரு கல்யாணத்தைச் செய்து வைப்பேன்” என்று வேலம்மாள் கூற,
அவள் அதீத நக்கலுடன், “நான் கம்ப்ளைண்ட் கொடுத்தா, ஜெயில்ல உங்க சிங்கம் சிங்கி அடிக்கும்” என்றாள்.
மைத்ரேயி மெல்லிய குரலில், “இந்த பெட்ரோமாஸ் லைட்டை எப்படி அண்ணா கரெக்ட் பண்ணப் போற?” என்று அபியுதித்தின் காதில் முணுமுணுக்க,
பனிமலர் சட்டென்று திரும்பி அவளை முறைக்கவும்,
“அய்யோ நானில்ல.. நான் எதுவும் சொல்லல” என்று அலறியபடி இரண்டடி பின்னால் நகர்ந்து நின்று கொண்டாள்.
அபியுதித் சிரிக்க, பனிமலரோ கோபத்துடன், “உன்னோட அண்ணன ஊருக்கு கூட்டிட்டு போய்டு.. இல்ல இந்த பெட்ரோமாஸ் லைட் அவரை எரிச்சு சாம்பலாக்கிடும்” என்றாள்.
அவனோ புன்முறுவலுடன், “நான் சாம்பலில் இருந்து எழுந்து வர ஃபீனிக்ஸ் பறவை மாதிரி, இந்த பெட்ரோமாஸ் லைட் எத்தனை முறை எரிச்சாலும் எழுந்து வருவேன்.. அதுவும் இந்த பெட்ரோமாஸ் லைட்டைத் தான் சுத்தி வருவேன்” என்றான்.
வேலம்மாள், “இந்த கல்யாணத்தை ரெஜிஸ்டர் செய்யலை.. இது சட்டபடி கல்யாணமே இல்லை” என்று எகத்தாளத்துடன் கூற,
‘இந்தம்மா வேற குறுக்கா மறுக்கா வந்து காமிடி பண்ணிக்கிட்டு கெடக்குது’ என்று செந்தூரன் மனதினுள் நினைக்க,
“ஹஹான்” என்றபடி நக்கலுடன் அவரை மேலும் கீழுமாக பார்த்த பனிமலர், “முடிஞ்சா இன்னொரு கல்யாணத்துக்கு உங்க மகனோட சம்மதத்தை வாங்குகளேன்!” என்று சவாலிடும் குரலில் கூறினாள்.
அவர் தனது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் வெறியுடன் அவளை முறைக்க, அவளோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அலட்சியப் படுத்தினாள்.
அபியுதித் புன்சிரிப்புடன் பனிமலரிடம், “பொண்ணு தான் புகுந்த வீட்டுக்கு வரணும்னு இல்லை.. நான் வீட்டோட மாப்பிள்ளையா வந்துட்டுப் போறேன்.. கல்யாணத்துக்கு நீ போட்ட கண்டிஷன் அதானே!” என்றான்.
சட்டென்று அகமும் முகமும் இறுகிய நிலையில், “உங்களுக்கு என் வீட்டிலும், மனசிலும் இடம் இல்லை” என்றாள்.
மாயக்கண்ணனின் புன்னகையுடன் அவளை நோக்கியவன், “அன்னைக்கும், இன்னைக்கும், என்னைக்குமே உன் இதயத்தில் எனக்கு மட்டும் தான் இடம் உண்டு” என்றான்.
“உங்க பகடிக்கு சிரிப்பே வரல”
“சிரிப்பு வரதுக்கு நான் ஜோக் சொல்லலையே!” என்றவன் நெல்லைவடிவிடம், “என்ன அத்தை! உங்க வீட்டில் எனக்கு இடம் இல்லையா?” என்றான் புன்முறுவலுடன். அவரோ, “இனி அது ஓ வூடும் தான்பா” என்று கூறினார்.