வேலம்மாள், “அபி கார் எடுக்க போயிட்டான்.. நீங்க ரெண்டு பேரும் ஆடு திருடின கள்ளனாட்டம் முழிச்சுட்டு இங்க என்ன செஞ்சிட்டு இருக்கிறீங்க?” என்று அதிகார தோரணையில் மிரட்டலாக கேட்டார்.
“அண்ணாவை கூப்பிட தான்மா நான் வந்தேன்.. இப்போ தான்மா அண்ணா வெளிய போனான்” என்றவள், “வாங்கப்பா நாமளும் போய் காரில் ஏறுவோம்” என்றபடி தந்தையை இழுத்துக் கொண்டு சென்றாள்.
“பெரிய மனுஷனா பிள்ளைகளை கிளப்பாம, பிள்ளைங்க இழுக்கும் இழுப்புக்கு போற அப்பா! எனக்குனு வந்து வாயிச்சு இருக்குதே!” என்றபடி வேலம்மாளும் வீட்டை பூட்டிவிட்டு அவர்கள் பின்னால் சென்றார்.
“வரலைனு சொன்ன நம்மளை எதுக்குப்பா அண்ணா கன்வின்ஸ் செஞ்சு கிளப்பி கூட்டிட்டு போறான்? என்ன பிளான் போட்டு இருக்கான்?” என்று தந்தையிடம் கிசுகிசுத்தபடி மைத்ரேயி செல்ல,
“அங்க என்னடி முணுமுணுப்பு!” என்ற வேலம்மாளின் அதட்டலில்,
“ஒன்னுமில்ல ம்மா” என்று கூறி அவசரமாக மகிழுந்தின் முன்பக்கம் ஏறிக்கொள்ள, அபியுதித் அவளைப் பார்த்து சிரித்தான்.
“டேய் அண்ணா! நீ நல்லவனா! கெட்டவனா?” என்று அவள் குரலை தாழ்த்தி வினவ,
விரிந்த புன்னகையுடன், “ரெண்டும் கலந்த கலவை” என்று கூறி கண் சிமிட்டியவன் பெற்றோர் ஏறியதை உறுதி செய்தபடி வண்டியை கிளப்பினான்.
“ஆளவந்தானா நீ!”
“ஆளவந்தான் இல்ல ஆளப்போறேன்”
“யாரை?” என்று அவள் கேட்டபோது,
வேலம்மாள், “அபி, லட்சுமிக்கு போன் போட்டியா? அவங்க கிளம்பிட்டாங்களா?” என்று கேட்டார்.
“சின்ன விசயத்தில் கூட அந்த சீமாட்டிய உன் கூட கோர்த்து விடுறாங்க பார்! அங்க நிக்குறாங்க நம்ம அம்மா” என்று மைத்ரேயி முணுமுணுக்க,
மென்னகையுடன் அவளை நோக்கியவன் அன்னையிடம், “துரைக்கு போன் போட்டு கேட்டுட்டேன்.. அவங்களும் இப்போ கிளம்பி இருப்பாங்க” என்றான்.
மைத்ரேயி மீண்டும் முணுமுணுப்பாக, “நீயும் நாசூக்கா எஸ் ஆகுற பார்த்தியா!” என்றவள், “எப்படி அண்ணா இப்படி ஒரு கூல் பெர்சனா இருக்க?” என்று கேட்டாள்.
“குடும்பத்தில் ஒருத்தராவது கூலா இருக்கனும்ல”
“அது சரி” என்றவள் அடுத்த நொடியே, “ஏய்! இதில் எதுவும் உள் அர்த்தம் இருக்குதா?” என்று கேட்டாள்.
சிரிப்புடன், “என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.
“நீ குடும்பம்னு எந்த அர்த்தத்தில் சொன்ன?”
தோள் குலுக்கலுடன், “எனக்கு தெரிந்து குடும்பத்துக்கு ஒரு அர்த்தம் தான்” என்றான்.
அவள் சந்தேகமாக பார்த்தபடி ஏதோ கேட்க வர,
அதற்குள், “அது என்னடி எப்ப பார்த்தாலும் முணுமுணுத்துட்டே இருக்க! என்ன பழக்கமோ!” என்று வேலம்மாள் அதட்டவும், கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டாள். அதற்கும் அவனிடம் உதட்டோர சிரிப்பு தான்.
அங்கே கல்யாண மண்டபத்தில் தொட்டதிற்கெல்லாம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் அன்னை, “அதான் பொண்ணுக்கு பெரியப்பா பெரியம்மா இருக்காங்களே! பொறவு ஏன் தாய்மாமன் சடங்கு செய்றாப்ல?” என்று அலப்பறையை கூட்ட,
அதை கேட்டு பனிமலர் நெற்றிக்கண்ணை திறக்கப் போக, நெல்லைவடிவு தான் அவசரமாக அவளது கையை பற்றி கெஞ்சும் பார்வையுடன் அடக்கினார்.
அதற்குள் கூட்டதில் ஒரு பெரியவர், “ரெண்டு குடும்பத்துக்கும் ஆவாதுனுட்டு தெரிஞ்சி தான பொண்ண எடுக்குதிய! பொறவென்ன பேச்சு இது?” என்று குரலை உயர்த்தி அவரை அடக்க பார்க்க,
அவரோ அப்பொழுதும் அடங்காமல், “பொண்ண எடுக்குறேனா! அந்த கொடுப்பின எனக்கேது! பையன இல்ல கொடுக்குதேன்” என்று சத்தமாவே முணுமுணுக்க, பனிமலரை அடக்க நெல்லைவடிவு தான் பெரும் பாடுபட்டார்.
அதற்கு ஒரு மூதாட்டி, “ஆமா, கொடுத்துதேன் வெச்சு இருக்க.. நீயி மட்டுமா! யங்கூரு இளைய ராணிய கெட்டிக்கிட ஓ மவெனும்ல கொடுத்து வெச்சு இருக்கியான்” என்றார்.
மாப்பிள்ளையின் அன்னை அடுத்து பேசும் முன், முகூர்த்த புடவையை கட்டுவதற்காக மகளை இழுத்துக் கொண்டு நெல்லைவடிவு சென்றார்.
செல்லும் அவளையே அழுத்தமாக பார்த்தபடி அபியுதித் மண்டபத்தின் உள்ளே நுழைய, ஈர்ப்பு விசை போல அறையினுள் செல்லும் முன் கடைசி வினாடியில் வாயிலை நோக்கி திரும்பியவள் அவனை பார்த்திருக்க, அந்த ஒரு நொடியையும் வீணடிக்காமல் அவன் அவளைப் பார்த்து வசீகர புன்னகையுடன் கண்சிமிட்டி இருக்க, அவனை முறைத்துவிட்டு அறையினுள் சென்றவள் பத்திர காளியாக மாறி இருந்தாள்.
பத்து வருடங்கள் கழித்து பார்த்துக் கொண்டாலும், இருவருக்கும் மற்றவர் முகம் மறக்கும் முகம் இல்லையே!
“இங்கன என்ன நடக்குது? யெல்லாத்துக்கு ஒத்துக்கிட்டு தான கலியாணத்துக்கு சம்மதம் சொன்னாவ! இப்ப என்னவாம் அந்த அம்மாக்கு?”
“வுடுடா”
“அப்புடி யெல்லா வுட முடியாது.. இஷ்டமில்லனாக்க கெளம்பி போய்கிட்டே இருக்க சொல்லுக”
“மலரு!” என்று அதிர்வுடன் அழைத்தார்.
“பொண்ணுனா கண்டிப்பா கலியாணம் கட்டனுமா யென்ன! இந்த கருமம் புடிச்ச கலியாணத்த செய்யிலனாதே இப்ப யன்ன?”
“மலரு!” என்று சற்றே குரலை உயர்த்தியவர் பின் வேதனை கலந்த இறங்கிய குரலில், “நல்ல நாளுமதுவுமா ஏன்டாமா இப்புடி யெல்லாம் பேசுற?” என்று கலங்கிய கண்களுடன் பேச,
“ப்ச்!” என்று சலித்தவள் அடுத்த நொடியே கோபத்துடன், “அந்த ரெண்டு குடும்பத்துக்கு பத்திரிக்க வெச்சீகளா?” என்று கூர்விழிகளுடன் வினவ,
தடுமாற்றத்துடன், “ஆ..ரை கேக்குறடா?” என்று கேட்டார்.
இன்னும் முறைத்தபடி, “அம்மா!” என்று அவள் அழைக்க,
மெல்லிய குரலில், “தாத்தாதேன் அனுப்ப சொன்னாக” என்றார்.
“தாத்தா!” என்று பல்லை கடித்தவள் மூச்சை இழுத்துவிட்டு கோபத்தை தனித்தபடி, “போங்க.. நா கெளம்பிட்டு வாரேன்” என்றாள்.
வெளியே அவளது தாத்தா சுப்பையாவோ அபியுதித்துடன் சிரித்து பேசிக் கொண்டு இருந்தார். அபியுதித் மறுபுரம் மைத்ரேயியும் அன்பரசும் அமர்ந்து இருந்தனர்.
இவர்களை முறைத்தபடி பண்ணையாரின் மகன் ஆளவந்தான் தனது அத்தையான லீலாவதியிடம், “என்ன அயித்த நடக்குது?” என்று கேட்டான்.
லீலாவதி தனது நாத்தனார் வேலம்மாளைப் பார்க்க,
அவரோ, “அபி எது செய்தாலும் ஒரு காரணம் இருக்கும்.. அவன் நம்ம பக்கம் தான்” என்றார்.
அவர் கூற்றில் நம்பிக்கை இல்லாத ஆளவந்தான் தனது அத்தையின் காதில், “எனக்கென்னவோ அவென் மேல சந்தேகமாவே இருக்கு அயித்த” என்று முணுமுணுத்தான்.
அவரும் வேலம்மாள் காதில் விழாதவாறு, “எனக்கும் தான்.. எது எப்படியோ கல்யாணம் நின்னா போதும்” என்றார்.
“எனக்கு அது போதாதே”
“என்னடா சொல்ற?”
“இந்த கலியாணம் நின்னு, நா அவ கழுத்துல தாலி கட்டோனும்”
“என்னடா சொல்ற?” என்று இம்முறை அவர் சற்று சத்தமாக கேட்டுவிட,
வேலம்மாள், “என்ன மதினி?” என்று கேட்டார்.