அவள் அருகில் இருந்த சிறுவன் தான் சூர்யா என்று புரிந்து கொண்டவன், யோசனையுடன் அவளைப் பார்த்தான்.
“சூர்யா, சித்தி இருக்கிற இடத்திற்குப் போகலாமா?”
“வேணாம் கா… அம்மா உன்னை திட்டுவாங்க.”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்… வா.” என்றவள் ஹரீஷை கண்ணசைவில் ‘வா’ என்று அழைத்துச் சென்றாள்.
மூவரும் ராகவன் மற்றும் பார்வதி இருந்த இடத்திற்குச் சென்றனர்.
அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சற்று தள்ளி இருந்த மரத்தின் அருகே நின்றவள், “சூர்யா அவங்களை இங்கே கூட்டிட்டு வா.” என்றாள்.
சூர்யா ஓடிப் போய் இருவரையும் அழைத்து வந்தான். இவளைப் பார்த்ததும் ராகவன் பாசத்துடனும், தவிப்புடனும் நோக்க, திவ்யாவோ பார்வையை சிறிதும் அவர் பக்கம் திருப்பவில்லை.
பார்வதி வெறுப்புடன் நோக்க, திவ்யா நிமிர்வுடன் அவரை நோக்கினாள்.
பார்வதி, “சனியன் ஒளிஞ்சுதுன்னு நினைத்தால், நிம்மதியா இருக்க விடுறியா? இப்போ எதுக்குடி கூப்பிட்ட? சும்மா விலகுற மாதிரி பாசாங்கு செஞ்சு, எங்க சொத்தை பிடுங்கத் தானே பிளான் செய்ற!”
“நான் சம்மதித்ததால் மட்டுமே, இவர் வாழ்க்கையில் நீங்க நுழைஞ்சீங்க… இப்போ கூட நான் ஒரு வார்த்தை சொன்னால்..” என்று நிறுத்தி அவரை நக்கலாகப் பார்த்தவள், பின் இறுகிய குரலில், “இவரையே வேணாம் சொல்லிட்டேன்… இவர் சொத்து எனக்கு எதுக்கு?”
பார்வதி கோபத்துடன், “ஆனாலும், முறை தவறிப் பிறந்த உனக்கு இவ்வளவு திமிர் கூடாதுடி.”
ராகவன் கோபத்துடன், “வெளி இடம்னு பார்க்காமல் அடிச்சு பல்லை கழட்டிருவேன்… வாயை மூடிட்டு இரு.” என்று கூற,
என்ன தான் தைரியமான பெண் என்றாலும், பார்வதியின் வார்த்தைகள் திவ்யாவின் மனதை குத்திக் கிழித்தது தான். இருப்பினும் வெளியே திடமாக காட்டிக் கொண்டு நின்றாள்.
அவளைப் புரிந்தது போல் ஹரீஷ், பிறர் அறியாமல் அவள் கையை பற்றி தைரியம் அளித்தான்.
அவன் கைகளை அவள் இறுக்கிப் பிடித்ததில் இருந்தே, அவள் மனம் எவ்வளவு காயப்பட்டிருக்கிறது என்று அவனுக்குப் புரிய, அவன் பார்வதியை கடுமையாக முறைத்தான்.
திவ்யா, “அது திமிர் இல்லை… நிமிர்வு..!. பிறப்பிலேயே என்னைப் பெற்ற தாயிடமிருந்து வந்தது.”
பார்வதி இகழ்ச்சிக் குரலில், “நிமிர்வு! உன்னை பெற்றவள் ஒன்றும் குணவதி கிடையாது… நல்ல குடும்பத்தில் பிறந்தவள் யாரும் அவள் செய்..”
திவ்யா கோபத்துடன் விரலை நீட்டி, “ஏய்! என் தாயை பற்றி தப்பா பேசின, முகரையை பேத்திருவேன்… உன் புருஷன் தான் குணம் கெட்டவர்…” என்றவள் கோபத்தை சற்று அடக்கி, “சூர்யா இருப்பதால் சும்மா விடுறேன்.” என்றாள்.
பார்வதி பேச வாயை திறக்க, ராகவன் பல்லை கடித்துக்கொண்டு, “உன்னை வாயை மூடிட்டு இருக்கச் சொன்னேன்” என்றதும், வாயை மூடிக் கொண்டாலும், அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“முக்கியமான விஷயம் சொல்ல தான் கூப்பிட்டேன்” என்று கூறி நிறுத்திய திவ்யா,
சூர்யாவின் தோளை பற்றி புன்னகையுடன் ஹரீஷை காட்டி, “இவர் தான் உன் மாமா.” என்றாள்.
ஹரீஷ் சிறு அதிர்ச்சியுடன் பார்க்க,
சூர்யா, “மாமானா?”
“அக்காவை கல்யாணம் செய்துக்கப் போறவர்.”
“உனக்கு கல்யாணமாக்கா?”
“இப்போ இல்லை… அக்கா படிச்சு முடிச்சதும் கல்யாணம் செய்துப்பார்… மாமா பெயர் ஹரீஷ்.”
ஹரீஷ் பக்கம் திரும்பிய சூர்யா, “ஹாய் மாமா…” என்று புன்னகையுடன் கூறியவன்…
பின், “என் அக்காவை நல்லா பார்த்துக்கோங்க… அக்கா கஷ்டப்பட்டா, நான் வந்து கேட்பேன்.” என்றான்.
ஹரீஷ் சிறுவன் உயரத்திற்கு மண்டியிட்டு மென்னகையுடன், “சரீங்க சார்… உங்க அக்காவை நல்லா பார்த்துக்கிறேன்… உன் அக்கா இனி எப்போதும் சந்தோஷமா இருப்பா.” என்றான்.
“குட்” என்றான் பெரிய மனிதர் தோரணையில்.
திவ்யா புன்னகையுடன் தம்பியின் தலையை கலைத்துவிட்டாள்.
பார்வதி ராகவனைப் பார்த்து, “இப்பவும் உங்க பொண்ணுனு தலை மேல் தூக்கி வச்சு கொண்டாடுறீங்களே! அவ கல்யாணத்தை அவளே முடிவு செஞ்சுக்கிட்டா… அதான்… முறையா பிறந்து ஒழுங்கா வளர்த்து இருந்தால் தானே, பெற்றவரை மதிக்கத் தோணும்.”
ராகவன், “கல்யாணம் அவள் விருப்பம்… அதை அவள் முடிவு செய்ததில் என்ன தப்பு?” என்றவர்
திவ்யாவை பார்த்து, “எனக்கு ரொம்ப சந்தோசம்… நல்லா இரு டா” என்றார்.
திவ்யா பார்வதியை பார்த்து, “என் பிறப்பை பற்றி இனி பேசாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது… நான் ஏன் கூனிக் குறுகனும்? அதில் என் தவறு எதுவும் இல்லை…
அப்புறம்… என் வளர்ப்பு… உங்களை வளர்த்தது போல் இல்லாமல், என்னை என் சாரும்மா நல்லா தான் வளர்த்து இருக்கிறாங்க…” என்றவள் சூர்யாவிடம், “நல்லா படிக்கணும்டா… நான் பின்னாடி போய் உட்காருறேன்.” என்றாள்.
அதே நேரத்தில் மேடையில் பேசத் தொடங்கிய ராஜாராம், “குட் இவனிங் அண்ட் வெல்கம் ஆல்…! என்னடா இவன் ப்ளேட் போடப் போறானானு பயப்படாதீங்க… ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் தான்… முக்கியமான ஒன்றை அறிவிக்க தான் வந்தேன்.
இங்கே பைனல் CSEயில் படிக்கும் திவ்யாவிற்கும், எனக்கும் என்ன உறவென்ற கேள்வி பலர் மனதில் ரொம்ப நாளா ஓடிட்டு இருக்குது… அதைப் பற்றி தான் சொல்லப் போறேன்… திவ்யா மேடைக்கு வா.” என்றார்.
திவ்யா அதிர்ச்சியுடன் ஹரீஷை பார்க்க,
அவன், “எனக்கு எதுவும் தெரியாதுடா” என்றான் அவசரமாய்.
“உனக்கு தெரியுமானு நான் கேட்டேனா?” என்று முறைப்புடன் கூறினாள்.
“சரி… இப்போ மேலே போ.”
“நான் மாட்டேன்.”
அப்பொழுது ராஜாராம், “திவிமா மேடைக்கு வா” என்று கூற,
அவள் தவிப்புடன் மறுப்பாக தலையை அசைக்க…
ஹரீஷ், “போடா… அவர் கூப்பிட்ட பிறகும் நீ போகலன்னா அவருக்கு தான் அவமானம்.”
ராகவன் கோபத்துடன் ஏதோ சொல்லப் போக,
அதற்குள் அங்கே வந்த பவித்ரா, “திவி வா” என்றபடி திவ்யாவை இழுத்துக்கொண்டு சென்றாள்.
மேடை அருகே சென்ற பிறகும் அவள் ஏற மறுக்க, ஜனனி இப்பொழுது அவளை இழுத்துச் சென்றாள்.
திவ்யாவின் தோள் மீது கை போட்டு அணைத்த ராஜாராம் புன்னகையுடன், “திவ்யா, என் மூத்த மகள்… அவ பிறந்த கொஞ்ச நாளில் நாங்க அவளை தொலைச்சிட்டோம்… இவளை கடத்தியவர்களிடம் இருந்து, யாரோ இவளை காப்பற்றி அனாதை ஆசிரமத்தில் சேர்த்துட்டாங்க.
இவளுக்கு மூணு வயசு இருக்கும் போது, மிஸ்டர் ராகவனும் அவரது முதல் மனைவி சாருலதாவும் இவளை தத்தெடுத்து சீரும் சிறப்புமாக வளர்த்திருக்காங்க.
இவளோட பதினைந்தாவது வயதில் தான், இவளை நாங்க கண்டு பிடிச்சோம். அப்போ தான் இவளுக்கு இவளைப் பெத்தவங்க நாங்கனு தெரியும்… ஆனா அதன் பிறகும் எங்களை ஏற்காதவள், இப்போ தான் எங்களை ஏற்றுக் கொண்டாள்.” என்றார்.
திவ்யா கண்களில் கண்ணீர் வடிய அவரைப் பார்த்தாள். அவர் அவளது கண்களை துடைத்துவிட்டார்.
அப்பொழுது கோபத்துடன் மேடை ஏறிய ராகவன், “என்னடா கதை விடுற… என் மகளுக்கு நீ அப்பாவா?” என்றபடி ராஜாராம் சட்டையை பிடிக்கப் போக,
அவர் கையை தட்டி விட்ட திவ்யா, மைக்கை விட்டு அகன்று ராஜாராமைப் பார்த்து, “அப்பா, அவரை கீழே போகச் சொல்லுங்க” என்றாள்.
ராகவன் பெரும் அதிர்ச்சியுடனும் வேதனையுடனும் அவளைப் பார்க்க, ராஜாராமோ ஆனந்தக் கண்ணீருடன் அவளைப் பார்த்தார். கீழே அமர்ந்திருந்த சுபாஷினியின் கண்களிலும், மேடையில் நின்று கொண்டிருந்த ஜனனியின் கண்களிலும், ஆனந்தக் கண்ணீர் நிறைந்திருந்தது.