
விலகல் – 25
படபடத்த இதயத்துடனும் தவிப்புடனும் ஹரீஷ் அந்த உணவகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்திருந்தான்.
நான்கு சக்கர வண்டியை ஓட்டியபடி விஜய் ஏதேதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டே வர, அவன் அருகே அமர்ந்திருந்த திவ்யா அமைதியாகவே இருந்தாள்.
விஜய், “பவிக்கு கூப்பிடவே இல்லை” என்று சிறிது அலறும் குரலில் கூட கூறிப் பார்த்தான் ஆனால் அவளிடம் பதில் இல்லை.
விஜய் சிறு கோபத்துடன், “இது ரொம்ப ஓவர் திவி… ஏன் என்கிட்ட பேசாம வர?”
“…”
“ஏன்டி இப்படி செய்ற?”
“….”
“ச்ச்… இப்போ ஹோட்டலுக்கு வரேன்னு நானா சொன்னேன்!”
அதற்கும் பதில் இல்லை என்றதும் விஜய் ‘இவளை பற்றி தெரிந்தும் போனை எடுப்பியா!’ என்று புலம்பியபடி வீட்டில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.
திவ்யாவுடன் போராடி உணவை அவளை சாப்பிட வைத்து தானும் சாப்பிட்ட பிறகு கைபேசியை எடுத்து பார்த்தவன், அதில் பவித்ரா மற்றும் ஹரீஷிடம் இருந்து பல அழைப்புகள் வந்திருந்ததை பார்த்தான். அதுவும் ஹரீஷ் முப்பது முறை அழைத்திருந்தான்.
அப்பொழுது சரியாக ஹரீஷிடமிருந்து அழைப்பு வரவும் அவன் அதை திவ்யாவிடம் கொடுத்தான். அவள் அழைப்பை எடுக்காமல் கைபேசியை அவனிடமே கொடுத்தாள்.
விஜய், “பேசுடி… நிறைய முறை கூப்பிட்டு இருக்கார்”
“எனக்கு பேச எதுவுமில்லை”
“ஒருமுறை பேசு”
“எதுக்கு?”
“என்ன தான் சொல்றார்னு தெரிந்து……………………”
“தெரிந்து என்ன செய்யணும்? முதல்ல எனக்கு எதுவும் தெரிஞ்சுக்க தேவை இல்லை”
“சரி நான் பேசுறேன்” என்றபோது அழைப்பு நின்றிருந்தது.
திவ்யா சிறு தோள் குலுக்கலுடன் நகரப் போக மீண்டும் அழைப்பு வந்தது.
விஜய், “ஹரி சார் தான்”
“ஃப்ரீயா விடு”
“நாம எங்கே இருக்கோம்னு தெரியாம பயத்தில் கூட கூப்பிடலாம்… இரு நான் பேசுறேன்” என்றவன் அழைப்பை எடுத்து ஒலிபெருக்கியை இயக்கினான்.
திவ்யாவின் தீ பார்வையில் நெஞ்சில் எழுந்த பயத்துடன், “சொல்லுங்க சார்” என்றான்.
ஹரீஷ் படபடப்புடனும் தவிப்புடனும், “தாங்க் காட்… எங்கடா இருக்கீங்க? திவ்யா எப்படி இருக்கா?”
“என் வீட்டில் தான் சார் இருக்கிறோம்”
“திவ்யா எப்படி இருக்கா?” என்றவனது குரல் பெரிதும் தவிப்புடன் ஒலித்தது.
விஜய் அவளை பார்த்தபடியே, “திவி இப்போ பரவாயில்லை சார்”
“…”
“சார்” என்று மெல்லிய குரலில் அழைக்க,
ஹரீஷ் தயக்கத்தை உதறியவனாக, “திவ்யாவை கூட்டிட்டு XXX ஹோட்டல் இப்பவே வா”
“சார்!” என்று சிறு அதிர்ச்சியுடன் ஒலித்தது.
“நான் அவ கிட்ட பேசணும்… கூட்டிட்டு வா”
விஜய் அவளிடம் செய்கையில் ‘என்ன சொல்ல?’ என்று வினவினான். அவள் அமைதியாக இருக்கவும் அவனும் அமைதியாக இருந்தான்.
ஹரீஷ், “விஜய்! லைனில் இருக்கியா?”
“இருக்கிறேன் சார்”
“சரி நான் இன்னும் முக்கால் மணி நேரத்தில் அங்கே இருப்பேன்”
“சார்” என்று விஜய் தயக்கத்துடன் இழுக்கவும்,
ஹரீஷ், “என்ன?”
“நான்… திவி கிட்ட கேட்டுட்டு சொல்றேன்”
“திவ்யா தூங்கிட்டு இருக்காளா?”
“இல்லை”
“அப்போ இப்பவே கிளம்பி வா”
“சார்… நான்……”
“திவ்யா நான் முக்கால் மணி நேரத்தில் அங்கே வந்து காத்துட்டு இருப்பேன்” என்றவன் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தான்.
திவ்யா தூங்கவில்லை என்றதும் தான் பேசுவதை அவள் கேட்டுக் கொண்டு தான் இருப்பாள் என்பதை கணித்தே ஹரீஷ் அவ்வாறு கூறி அழைப்பை துண்டித்தான்.
விஜய் ஆச்சரியத்துடனும் சிறு அதிர்ச்சியுடனும் பார்க்க, திவ்யாவோ அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
விஜய், “இப்போ என்ன செய்றது?”
திவ்யா அவனை முறைத்துவிட்டு வெளியே சென்று விஜய் அன்னையிடம், “ஆன்ட்டி நாங்க கொஞ்சம் வெளியே போயிட்டு வரோம்” என்றாள்.
அவர், “சரிமா” என்றபடி கேள்வியுடன் மகனை பார்க்க அவன், “XXX ஹோட்டல் போயிட்டு வரோம் மா… வந்து சொல்றேன்” என்றான்.
“சரி போயிட்டு வாங்க” என்றதும் இருவரும் கிளம்பினர்.
கிளம்பியதிலிருந்து இப்பவரை அவளை பேச வைக்க முயற்சித்து தோல்வியை தழுவிக் கொண்டிருக்கிறான்.
விஜய், “ஹரி சார் நிறைய முறை கால் பண்ணியிருந்தார்… அதான் அட்டென்ட் செஞ்சேன்”
“உனக்கு அவன் தானே முக்கியமா தெரிறான்! அவனிடமே பேசிக்கோ… இனி…”
“உனக்காக தானே அவர் போனை எடுத்தேன்… எனக்கு நீ தான் முக்கியம்… நீ மட்டும் தான் முக்கியம்… இனி அவருடன் காலேஜ்ஜில் கூட பேசலை போதுமா…” என்றபோது உணவகம் வந்திருக்க அவள் பதில் கூறாமல் இறங்கி உள்ளே சென்றாள்.
‘கடவுளே! என்ன நடக்கப் போகுதோ!’ என்ற திகிலுடன் அவன் அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினான்.
அவன் உள்ளே சென்றபோது திவ்யா ஹரீஷை தேடிக் கொண்டிருக்க, ஹரீஷ், “விஜய்!” என்றபடி கையை தூக்கி காட்டினான். ஹரீஷ் திவ்யா உள்ளே நுழைந்ததும் பார்த்துவிட்டான். ஆனால் பொது இடத்தில் அவள் பெயரை கத்தி அழைக்க விரும்பாமல் விஜய் வந்ததும் அவனை அழைத்தான்.
இருவரும் அவன் அமர்ந்திருந்த மேஜைக்கு சென்று அமர்ந்தனர்.
ஹரீஷ் விஜயிடம், “என்ன சாப்பிடுற?”
விஜய் மனதினுள், ‘இப்போ தானே பேச மாட்டேன்னு சொன்னேன்! இப்போ என்ன செய்ய!’ என்று யோசித்தபடி அமைதியாக தோழியை பார்க்க, அவளோ கண்டு கொள்ளவில்லை.
ஹரீஷ், “இல்ல ஜூஸ் குடிக்கிறியா?”
செய்வதறியாது திணறிய விஜய் திவ்யாவிடம், “திவி நீ பேசிட்டு வா… நான் வெளியே வெயிட் பண்றேன்” என்றவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினான்.
இரண்டு முறை அவனை அழைத்த ஹரீஷ், “என்னாச்சு இவனுக்கு? எதுக்கு இப்படி ஓடுறான்” என்றான்.
திவ்யா, “எதுக்கு என்னை இங்கே வர சொன்னீங்க?”
அவளது பன்மை அழைப்பில் விஜய்யை மறந்தவனாக அவளிடம், “என்ன மரியாதை புதுசா இருக்குது?”
“என்ன விஷயம்?” என்று வினவியவளது உணர்ச்சியற்ற முகத்தில் இருந்து ஹரீஷால் அவளது மனவோட்டத்தை கணிக்க முடியவில்லை.
“என்னாச்சு டா?” என்று கனிவுடன் கேட்டபடி மேஜை மீது இருந்த அவளது கையை பற்ற போக, அவள் சட்டென்று கையை விலக்கிக் கொண்டாள்.
யோசனையுடன் அவளை பார்த்தவன் மனதிற்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது.
அவள், “சீக்கிரம் பேசி முடிச்சிட்டீங்கனா நான் கிளம்புவேன்”
“என் மேல் என்ன கோபம்?”
“எனக்கென்ன கோபம்?”
“அதை தான் நானும் கேட்கிறேன்”
“சார்… பேச எதுவும் இல்லனா நான் கிளம்புவேன்”
“நான் உனக்கு சாரா?”
“என்ன புதுசா கேட்குறீங்க?” என்று வரவழைத்த ஆச்சரிய குரலில் வினவினாள்.