ராகவன், “நீ யார்?”
“சுபாவோட கணவன்.”
ராகவன் இகழ்ச்சியான குரலில், “கல்யாணம் செய்ய, உனக்கு இவள் தான் கிடைத்தாளா?”
“இவளுக்கு என்ன குறை? இரண்டு கல்யாணம் செய்த உனக்கு இவளைப் பற்றி பேசும் அருகதை இல்லை.”
“ஏய்” என்று ராகவன் விரலை நீட்டிக் கத்தினார்.
சுபாஷினி, “இவனுடன் பேசி உங்களை தாழ்த்திக்காதீங்க.”
ராகவன், “அதே திமிர்… நீ மாறவே இல்லை.”
“நான் ஏன் மாறனும்? அது திமிர் இல்ல, நிமிர்வு… அது உனகெல்லாம் புரியாது.”
ராகவன் எரிச்சலுடனும் கோபத்துடனும், “இப்போ எதுக்கு வந்த? உன்னையும் ஒருத்தன் கல்யாணம் செய்துக்கிட்டான்னு சொல்லிக் காட்டவா?”
“அது என்ன தேவைக்கு?”
“அப்புறம் எதுக்கு வந்த?”
“என் மகளை கூட்டிட்டுப் போக”
“என்ன! என்ன சொன்ன?”
“என் மகளை கூட்டிட்டுப் போக வந்தேன்.” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
ராகவன் நக்கல் குரலில் ராஜாராமை பார்த்து, “இவளுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா?”
ராஜாராம், “ராகவன் வார்த்தையை அளந்து பேசு.”
“இல்லைனா என்ன செய்வ?”
“நானும் இந்த ஊரில் அந்தஸ்து உள்ள ஆள் தான்… மேலும், உன்னை விட சில இடங்களில் செல்வாக்கு அதிகம் உடையவன்.”
“அப்படி என்ன செல்வாக்கு?”
“இப்போ அது தேவை இல்லாதது… நாங்க எங்க மகள் திவ்யாவை கூட்டிட்டுப் போக வந்தோம்.”
“என்ன சொன்ன?”
“திவ்யா, எங்க பொண்ணு.”
ஒரு நொடி அதிர்ந்த ராகவன்.. அடுத்த நொடியே சுதாரித்து, “திவ்யா உங்க மகளா? என்ன உளறல்?”
“ஒரு DNA டெஸ்ட் போதும், அதை நிரூபிக்க.”
திவ்யா, அதிர்ச்சியுடன் வந்தவர்களைப் பார்த்தாள். ராஜாராமை அப்பொழுது அவள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. தாயின் பாசத்திற்கு ஏங்கியவளின் கண்கள், சுபாஷினியைத் தான் பார்த்தது. சுபாஷினி தன்னைப் பெற்றவள் என்றதை கேட்டு, அவள் எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை.
ராகவனோ அலட்டிக் கொள்ளாமல், “இருக்கட்டுமே! நான் சட்டப்படி அவளை தத்தெடுத்து இருக்கிறேன். பெத்தவங்களாவே இருந்தாலும், நீங்க அவளை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது.”
“நீ அவளை பார்த்துக்கிட்ட லட்சணத்தை சொல்லி, அவளை உன்னிடமிருந்து எங்களால் வாங்க முடியும்.”
“ஏன்! என் வளர்ப்பிற்கு என்ன குறை?”
ராஜாராம், “வளர்ப்பில் குறை இல்லை. ஏன்னா, அவளை வளர்த்தது உன் முதல் மனைவி. குணத்தில், திறமையில் அவ அவளைப் பெற்ற அம்மாவைப் போல் தான் இருக்கிறா.”
“திவ்யா என் மகள்… அவளை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.” என்று சிறு பதற்றத்துடனும், கோபத்துடனும் ராகவன் கத்தினார்.
ராஜாராம், “நீ அவளை சரியாக கவனிக்கலை என்றதுக்கு சாட்சி, ரெண்டு நாட்கள் அவ அனாதை ஆசிரமத்தில் இருந்தது.”
சுபாஷினி, “இவனுடன் என்ன பேச்சு? திவ்யாவை கூட்டிட்டு போகலாம்.”
பார்வதி, “தாராளமா கூட்டிட்டு போங்க.”
“நீ வாயை மூடு… திவ்யா என் மகள்.” என்று பார்வதியிடம் கர்ஜித்த ராகவன், சுபாஷினி பக்கம் திரும்பி, “என் நிம்மதியை கெடுக்கனே வந்தியா… வெளியே போ.”
“உன்னைப் போல் கெட்ட எண்ணம் எனக்குக் கிடையாது.”
“அப்புறம் எதுக்கு வந்த? அதுவும் திடீர்னு இத்தனை வருஷம் கழிச்சு.”
“முதல்ல திவ்யா எங்கே இருக்கிறானு தெரியாம இருந்தோம்… அவளைக் கண்டு பிடிச்சு வந்தப்ப தான், நீயும் உன் முதல் மனைவியும், அவளை தத்தெடுத்துட்டு இருந்தீங்க…”
“அப்போவே உண்மையை சொல்லியிருக்க வேண்டியது தானே! இப்போ, ஏன் திடீர்னு வந்து என் உயிரை வாங்குற…”
“இத்தனை வருஷம் நான் பொறுத்துப் போனது, என் மகளுக்காகவும் உன் முதல் மனைவிக்காகவும் தான். ஆனா, இப்போ என் பொண்ணு எவ்வளவு மனம் ஒடிந்திருந்தால், அனாதை ஆசிரமம் போயிருப்பா!”
“பொய்”
“எது பொய்? திவ்யா, என் மகள் என்றதா?”
“திவ்யா, உன் மகளாக இருக்கலாம்… நான் சொன்னது வேறு.”
“என்ன?”
“அவளை என்னிடம் விட்டதுக்கான காரணம் தான் வேறு… அவளை இங்கே வளர விட்டு சொத்தை ஆட்டையை போடலாம்… என்னையும் பழி வாங்கலாம்னு நினைத்து இருப்ப…”
“சீ… உன் புத்தி இப்படித் தானே போகும்.”
“ஓ! சரி உனக்கு வேறு பிள்ளைகள் இருக்காங்களா?”
“ஏன் கேட்கிற?”
“இல்லை… பிள்ளையே இல்லாம இவளை கூப்பிடுறியோனு கேட்டேன்.” என்றார் இகழ்ச்சி நிறைந்த குரலில்.
சுபாஷினி வெறுப்புடன், “எனக்கு இன்னொரு பொண்ணு இருக்கிறா.”
“அப்போ, நான் சொன்னதில் என்ன தப்பு! அது தான் உண்மை… சொத்துக்காக…”
“வாயை மூடு!” என்று கோபமாக கத்திய சுபாஷினி, “நான் ஏன் உன் சொத்தை புடுங்கனும்? இந்த சொத்து திவ்யாவோடது தான்… ஆனா, இது எங்களுக்கு தேவை இல்லை… எங்களுக்கு எங்க பொண்ணு போதும்.”
ராஜாராம் சிறு பதற்றத்துடன், “சுபா, அமைதியா இரு.” என்று குரலை உயர்த்திப் பேசினார்.
ராஜாராமின் பதற்றத்தையும், சுபாஷினியின் பேச்சையும் இணைத்த ராகவன், யோசனையுடன் இருவரையும் பார்த்தார்.
ராஜாராம் முகத்தில் ஒரு நொடி பதற்றம் கூடியது போல் இருந்தது. சில நொடிகள் சுபாஷினியின் ‘இந்த சொத்து திவ்யாவோடது தான்’ என்ற வார்த்தைகளையும், வேறு சிலதையும் யோசித்த ராகவன் முகத்தில் சிறு மின்னல் வந்தது. அவர் மனம் ‘அப்படியும் இருக்குமோ?’ என்று யோசித்தது.
சட்டென்று சுபாஷினி அருகே சென்ற ராகவன், “ஏய், உண்மையை சொல்லு… திவ்யா, யாரோட பொண்ணு?”
சுபாஷினியோ ‘நீ என்ன லூசா!’ என்பது போல் பார்க்க,
ராகவன் ஆர்வம் கலந்த கோபத்துடன், “சொல்லுடி, திவ்யா யாரு பொண்ணு?”
ராஜாராம், “ராகவன் மரியாதையுடன் பேசு.” என்று கடுமையுடன் கூறினார்.
அதை கண்டுக்கொள்ளும் நிலையில் ராகவன் இல்லை. அவர் கவனமோ சுபாஷினியிடம் தான் இருந்தது.
சுபாஷினி, “அதான் சொன்னேனே, திவ்யா எங்க…”
ராகவன், “திவ்யா அம்மா நீ சரி… அவளோட அப்பா யாரு?” என்று கேட்டதும், சுபாஷினி அதிர்ச்சியுடன் பார்க்க,
சுபாஷினியை தன் பக்கம் இழுத்த ராஜாராம், வரவழைத்த கோபத்துடன், “இது என்ன கேள்வி ராகவன்? திவ்யா எங்க பொண்ணுனு சொன்னேனே.”
ராகவன், “பொய்”
பார்வதி, “உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்குது! அதான் அந்தச் சிறுக்கி அவங்க பொண்ணு….” என்று அவர் முடிக்கும் முன், ராகவன் ருத்ர மூர்த்தியாக மாறியிருந்தார்.