ஆசிரியர் அறைக்கு சென்ற அரவிந்த், “நீ இன்னும் கிளம்பலையா?” என்றான் அறியாதவன் போல்.
கைபேசியில் இருந்த திவ்யாவின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென்று அதை அணைத்து, “ஹன்.. என்ன கேட்ட?”
“கிளம்பலையானு கேட்டேன்”
“நீ இன்னும் கிளம்பலையா?”
“என் பேக் இங்க தானே இருக்குது! பார்க்கலையா?”
“ஓ! நான் கவனிக்கலை”
“ஹரி என்னாச்சு?”
“ஏன்?”
“நீ கவனிக்காம இருக்கும் அளவுக்கு என்ன நடந்தது? திவ்யா எதுவும் சொன்னாளா?”
“..”
“ஹரி”
“..”
“யார் கிட்டயாவது மனசு விட்டு பேசுடா.. என்ன தான் உன் பிரச்சனை? நீ சொன்னா தானே தெரியும்”
“என்னால் அவளை நெருங்கவும் முடியலை விலகவும் முடியலை”
“ஏன் விலகனும்?”
“ச்ச்”
“நீயா போட்டு குழப்பிக்கிறடா..”
“..”
“சரி இப்படி யோசித்துப் பார்.. நீ ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்திருக்கிற.. அதை போல் திவ்யாவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து இருக்கிறா.. ரெண்டு பேரும் விரும்புறீங்க.. அப்போ மட்டும் பிரச்சனை வராதா? உங்க ரெண்டு பேர் பரென்ட்ஸ் காதலை சந்தோஷமா ஏத்துப்பாங்கனு உன்னால் நூறு சதவிதம் உறுதியா சொல்ல முடியுமா? காதல்னா எதிர்ப்புகள் வருவது சகஜம் தான் ஆனா காதலுக்கு காதலனே எதிரா இருப்பது உன் விஷயத்தில் தான்டா”
“..”
“இப்போ என்ன திடீர்னு இவ்ளோ அப்சட்?”
ஹரீஷ் நடந்ததை சுருக்கமாக கூறவும், அரவிந்த் சிறு கோபத்துடன், “உள்ளுக்குள் உருகி உருகி காதலிச்சிட்டு வெளியே ஏன்டா அந்த பொண்ணயும் படுத்தி உன்னையும் வருத்திக்கிற!”
ஹரீஷ் கண்ணில் வலியுடன் பார்க்கவும்,
அரவிந்த், “இந்த லுக்குக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. எல்லாம் நீயா இழுத்து விட்டுக்கிறது தான்.. முதல்ல உன் லவ்வை சொல்லு.. அப்பறம் அந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிச்சி அவளுக்கு துணையா நில்லு.. அப்பறம் எல்லாம் சரியாகும்” என்ற அறிவுரையை ஒழுங்காக கேட்டு அப்படியே அச்சு பிசங்காமல் செய்திருந்தால் பின்னாளில் அவன் வருந்தும் படி நேர்ந்திருக்காது.
ஹரீஷ் அமைதியாக இருக்கவும் அரவிந்த், “என்னடா?”
“கொஞ்சம் யோசிக்கணும்”
அரவிந்த் முறைக்கவும், “ரெண்டு நாள் டைம் கொடுடா”
“இவ்ளோ நாள் யோசித்த மாதிரி இல்லாம உருப்படியா யோசிச்சு நல்ல பதிலைச் சொல்லு”
“எல்லாம் என் நேரம்!”
“ஏன்?”
“நீ மிரட்டுறியே!”
“இப்படியே இருந்த, நந்துவே மிரட்டுவான்”
ஹரீஷ் மெலிதாக புன்னகைக்கவும், அரவிந்த், “சரி வா கிளம்பலாம்” என்றான்.
“ஹ்ம்ம்” என்று கிளம்பியவன் வண்டியை கிளப்பும் போது தான் நந்தகுமாரின் நினைவு வந்து அவனை அழைத்தான்.
அழைப்பை எடுத்த நந்தகுமார், “இன்னும் பிப்டீன் மினிட்ஸ் தான்டா”
“இல்லடா.. நானே வந்திருவேன்.. நீ வீட்டுக்கே வந்திரு”
அரவிந்த் பேசியிருப்பது புரிந்தாலும், அதை காட்டிக் கொள்ளாமல் வரவழைத்த கோபத்துடன், “என்னை பார்த்தா எப்படி தெரியுது?”
“அதில் என்னடா சந்தேகம்! நீ ஒரு காமடி பீஸ் தான்”
“டேய்”
“சும்மா சொன்னேன்டா மச்சி னு சொல்வேன்னு நினைச்சியா!”
“ரொம்ப தெளிவா தான்டா இருக்கிற.. வீடு வந்து சேரு” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
ஹரீஷ் புன்னகையுடன் வண்டியை கிளப்பினான்.
அரவிந்தும் புன்னகையுடன் கிளம்பினான்.
அன்று இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் திவ்யாவிற்கு பழ முறை அழைத்த ஹரீஷ் அழைப்பு போகும் முன் அழைப்பை துண்டித்தான். அவள் எப்படி இருக்கிறாள் என்பதை அறிய துடித்தான் தான் ஆனால் அதே நேரத்தில் தன் மனம் தெளியாத நிலையில் தனது அழைப்பு அவளிற்கு பொய்யான நம்பிக்கையை கொடுத்துவிடக் கூடாதே என்று நினைத்தான்.
ஒரு முறை அழைப்பு சென்றுவிட பதற்றத்துடன் அழைப்பை துண்டித்தான்.
அவன் துண்டித்ததும் அடுத்த நிமிடத்திற்குள் அவளிடமிருந்து அழைப்பு வந்தது.
அழைப்பு நிற்கும் தருவாயில் எடுத்தவன், “ஹலோ” என்றான்.
“என்ன தெரியாம காள் வந்திருச்சா!!!” என்றவளின் குரலே உன்னை நான் அறிவேன் என்று சொல்லாமல் சொன்னது. பாடல்களின் உதவியுடன் தன்னை தேற்ற முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தவளின் மனம் ஹரீஷின் அழைப்பில் சட்டென்று அமைதி கொண்டது.
“ஆ..மா”
“ஆனா நான் தெரிந்தே தான் போன் செஞ்சேன்”
“..”
“என்ன பதிலை காணும்?”
“என்ன சொல்லணும்?”
“கெத்துடா! இருந்தாலும் இந்த கெத்து தான் எனக்கு ரொம்ப பிடிச்சும் இருக்குது.. சில நேரம் இம்சையாகவும் இருக்குது”
அவனது உதட்டோரம் அரும்பிய புன்னகையை உணர்ந்தது போல் அவள், “உன்னோட இந்த உதட்டோர புன்னகை எனக்கு ரொம்ப பிடிக்கும்”
“..”
“உடனே ஆஃப் ஆகிடுவியே” என்றவள், “நான் உனக்கு தேங்க்ஸ் அண்ட் சாரி ரெண்டும் சொல்ல மாட்டேன்”
மெல்லிய புன்னகையுடன், “நான் கேட்கலையே!”
“நீ கேட்டாலும் கிடையாதுனு தான் சொல்றேன்”
“சரி”
“என்ன சரி?”
“நீ சொன்னதிற்கு சரினு சொன்னேன்”
“ஏன்னு கேட்க மாட்டியா?”
“கேட்கலைனா சொல்லாமல் விட போறியா!”
“இல்லை தான்”
“அதான் கேட்கலை”
“ரொம்ப தான்.. என்னை ரிலாக்ஸ் பண்ணதுக்கு தேங்க்ஸ் சொல்ல மாட்டேன் ஏன்னா அது உன்னோட கடமை.. அப்புறம் சாரி சொல்ல மாட்டேன்.. ஏன்னா நான் உன்னை திட்டினது தப்பே இல்லை.. அதுவும் நான் கொஞ்சமா தான் திட்டினேன்”
‘பிற்காலத்தில் உன் நிலைமை திண்டாட்டம் தான்டா’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டவன் புன்னகைத்தான்.
ஹரீஷ், “சரி நான் வைக்கிறேன்”
“அதுக்குள்ளேயா!!!”
“பை.. டேக் கேர்” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
இருவரும் ஒருவித நிம்மதியுடன் உறங்கினாலும் அடுத்து வந்த இரண்டு நாட்கள் திவ்யா ஏதோ யோசனையில் அமைதியாவே இருந்தாள்.