அவளது மனமோ, ‘என்னை பற்றி தெரிந்தா, ஒருவேளை உன் மனசை மறைக்காம காதலை என்கிட்ட நீ சொல்லலாம் ஆனா நான் அதை விரும்பலை.. என்னை எனக்காக ஏற்று உன் காதலை நீ சொல்லணும்’ என்றது.
கண்ணீருடன் வெளியே வந்தவளை பார்த்து பதறிய விஜய், “திவி என்னாச்சு? ஏன் அழுற? சார் திரும்ப அடிச்சுட்டாரா? என்ன நினைச்சிட்டு இருக்கார்!” எனறபடி அவன் சண்டைப் போட கிளம்ப,
அவனது கையை பிடித்து தடுத்த திவ்யா மறு கையால் நெஞ்சை சுட்டிக்காட்டி, “வார்த்தையால் இங்கே அடிச்சிட்டான்டா” என்றவள் கண்களை துடைத்து, “வா கிளம்பலாம்” என்றாள்.
நந்தகுமார் சிறு தவிப்புடன் அவளை பார்க்க,
அவள் வரவழைத்த புன்னகையுடன், “இது உனக்கு செட்டே ஆகலையே சூம்பிப்போன சிக்கன்”
அவளது முயற்சி புரிந்து அவனும் வரவழைத்த முறைப்புடன் அவளை பார்க்க,
“இது செட் ஆகுது.. பை” என்று கூறி கிளம்பினாள்.
விஜய், “பவி வீட்டுக்கு…….”
“இப்போ வேணாம்டா.. என்னை ஹாஸ்டல்ல விட்டிரு”
“இப்போ தான் பவி வீட்டுக்கு போகணும்.. வா” என்று அவளை இழுத்துக் கொண்டு பவித்ரா வீட்டிற்கு சென்றான்.
சிறிது நேரம் நண்பர்களுக்காக சிரித்தவள் அரை மணி நேரத்திற்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல், “விஜி கிளம்பலாம்” என்றாள்.
பவித்ரா, “திவி மனசை போட்டு குழப்பிக்காத”
புன்னகையை அவளுக்கு பதிலாக தந்தவள் நண்பனுடன் கிளம்பினாள். பவித்ரா கவலையுடன் தன் அறைக்கு சென்றாள்.
திவ்யா விடை பெற்றதும் மேலே சென்ற நந்தகுமார் கண்டது கவலை கலந்த யோசனையுடன் அமர்ந்திருந்த ஹரீஷை தான்.
“ஏன்டா உன் மனசை மறைத்து அவ மனசை நோகடிக்கிற?”
சட்டென்று சிந்தனையில் இருந்து வெளி வந்தவன், “என் மனதில் எதுவும் இல்லை”
“உனக்கு கோபம் அதிகம் வரும் தான்.. ஆனா இதுவரைக்கும் எந்த பெண்ணையும் நீ அடித்தது இல்லை.. இவ தான் விதிவிலக்கு”
“….”
“அவளை நீ காதலிக்கலைனா இதுக்கு என்னடா அர்த்தம்?” என்றபடி தனது கைபேசியை ஹரீஷ் முகத்திற்கு முன் காட்டினான்.
கைபேசியை பிடுங்கியபடி ஹரீஷ் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றான். ஜன்னலில் இருந்து ஹரீஷ் திவ்யாவை இழுத்த வேகத்தில் அவள் அவனை மோதி நின்றபடி பேசிக் கொண்டிருந்ததை புகைப்படம் எடுத்து இருந்தான். அந்த நெருக்கத்தை திவ்யா ஹரீஷ் இருவருமே உணரவில்லை ஆனால் அந்த நொடியில் தான் ஹரீஷின் மனதை முழுமையாக நந்தகுமார் அறிந்துக் கொண்டான்.
“உண்மையை சொல்லுடா.. ஏன் உன் மனசை மறைக்கிற?”
“ச்ச்” என்றபடி அமர்ந்தவன் நந்தகுமார் அறியாமல் அந்த புகைப்படத்தை தன் கைபேசிக்கு அனுப்பிவிட்டு அதை நந்தகுமார் கைபேசியிலிருந்து அழித்துவிட்டு கைபேசியை கொடுத்தான்.
“இதை அழிச்சதை போல உன் மனசை அழிக்க முடியுமா?”
“முடியாது தான்.. இப்போ என்ன செய்யணும்னு சொல்ற?” என்று வெடித்தான்.
“உனக்காக என் பெரன்ட்ஸ்(parents)பொண்ணு கேட்பாங்கடா”
“திவ்யா யார் தெரியுமா? அவ உயரம் தெரியுமா? எனக்கு பரன்ட்ஸ்(parents) இருந்தாலே என்னை ஏற்பது நடக்காத விஷயம், இதில் என்னை போன்ற அனாதையை……..”
“ஹரி” என்று அதட்டினான்.
“உண்மையை தானே சொல்றேன்..”
“உன் மனசை என்கிட்ட கூட ஏன்டா சொல்லலை?”
“…”
“சொல்லுடா”
“முதல்ல அவகிட்ட சொல்லணும்னு நினைச்சேன் ஆனா அதுக்கு வாய்ப்பே இல்லைனு தெரிந்த பிறகு எதுக்கு சொல்லணும்னு விட்டுட்டேன்”
“அன்னைக்கு ஸ்க்ரீன் பின்னாடி இருந்து பார்த்ததும் விழுந்துட்டியா?”
“ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு என் தலையில் பாப்-கார்ன் கொட்டினதா சொன்னேனே ஞாபகம் இருக்கா?”
“ஆமா!” என்று இழுத்தவன் பின் அதிர்ச்சியுடன், “அது இவளா?”
ஹரீஷ் புன்னகையுடன் தலையை ஆட்டவும்,
நந்தகுமார், “இன்னும் எதையெல்லாம் என்கிட்ட மறைச்சு வச்சிருக்கடா?” என்றவன், “சரி சொல்லு எப்போதில் இருந்து லவ்?”
“அவளை காலேஜில் பார்க்கிறதுக்கு முன்னாடியே என் மனசுக்குள்ள நுழைஞ்சிட்டா.. ஆனா அவளோட பின்புலம் தெரிந்ததும் என் மனசை மாத்திக்கிட்டேன்” என்று முடித்த போது அவன் குரல் வேதனையுடன் இறுகியது.
“மாத்திக்கிட்டதா உன்னை நீயே ஏமாத்திக்கிற”
“ஏதோ ஒன்னு.. நான் அவளுக்கு சரி இல்லை”
“அப்படி என்ன பின்புலம் அவளுக்கு?”
“திவ்யா கோடீஸ்வரி.. சொர்ணம் கோல்ட் ஷாப் அண்ட் RR டிரெஸ் ஷாப் ஓனர் பொண்ணு..” என்றான்.
“இருக்கட்டுமே! அவ உன்னை விரும்பும் போது……….”
மறுப்பாக தலையை அசைத்தவன், “அவ ராஜாராம் சாரோட ரிலேடிவ்..”
“இது வேறயா” என்றவன், “என்ன உறவு?”
“அது தெரியாது ஆனா ஏதோ நெருங்கிய சொந்தம் தான்.. நேர்மைக்கு பேர் போன சார் இவளுக்காக திறமையான HOD ஒருத்தரை வேலையை விட்டு போக சொல்லி இருக்கார்.. என்னால் அவங்க குடும்பத்தில் பிரச்சனை வருவதை நான் விரும்பலை.. என் திருமணத்தால் எனக்கு ஒரு குடும்பம் கிடைக்கணும்னு நினைத்தவன் நான்.. ஒரு காலமும் ஒரு குடும்பம் கலைய நான் காரணமா இருக்க மாட்டேன்.. கண்ணில் படாதது கருத்தில் பதியாது என்பது போல அவ படிச்சு முடிச்ச கொஞ்ச நாளில் என்னை மறந்திடுவா”
“நீ”
“…”
“சொல்லுடா”
“தனிமை எனக்கு பழகி போன ஒன்னு தானே!” என்றவன் தன் அறைக்கு சென்று விட்டான்.
வண்டியில் செல்லும் போது விஜய், “சார் உன்னை விரும்புறார் மச்சி.. நூறு சதவிதம் உண்மை”
அவ்வளவு நேரம் சோக கீதம் வாசித்துக் கொண்டிருந்தவள் உற்சாகத்துடன், “எதை வைச்சு சொல்ற?”
“அவர் உன்னை ரசித்து பார்த்ததை நான் பார்த்தேன்.. அது அழகை ரசிக்கும் ரசனை இல்லை.. அவர் உன் சிரிப்பை, அதில் தெரிந்த சந்தோஷத்தை ரசித்து பார்த்தார்.. அப்பறம்…” என்று அவன் சிறிது தயங்க,
“அப்பறம் என்னடா?”
“அது.. நீ ஜன்னலை எட்டி பார்த்தப்ப விழுந்திடுவியோனு அவர் பயந்தார்.. அப்போ தயங்காம உன் கையை பிடிச்சு இழுத்தார்……….”
“இதுக்கு ஏன் தயங்கின?”
“இருடி.. அவர் இழுத்த வேகத்தில் நீ அவர் மேல் மோதி நின்ன.. அவரை டச் பண்ணிட்டு நின்னபடி தான் பேசின.. நீ டச் பண்ணிட்டு நின்னதை நீயும் உணரல அவரும் உணரல.. நிச்சயமா காதல் இல்லாமல் இது சாத்தியமில்லை”
“..”
“என்னடா அமைதியாகிட்ட?”
“நீ சொன்னதை யோசிச்சு பார்த்தேன்.. நீ சொன்னது போல நான் அதை உணரவே இல்லை..” என்றவள், “ச்ச்” என்று உச்சுக் கொட்டினாள்.
“என்ன?”
“ஆனா அந்த பக்கி தான் உண்மையை ஒத்துக்க மாட்டிக்குதே!”
“அது தான் ஏன்னு புரியலை”
“எல்லாம் ஸ்டேடஸ் பிரச்சனை தான்.. விடு நான் பார்த்துக்கிறேன்” என்றவள் மனதை குடும்பம் என்ற சொல் மீண்டும் தாக்கியது.
அறைக்கு சென்ற ஹரீஷின் மனம் முழுவதும் திவ்யா தான் நிறைந்திருந்தாள்.
‘குடும்பம்னு சொல்லி ஏன் விரக்த்தியா சிரிச்சா? அவ கண்ணில் ஏன் அப்படி ஒரு வேதனை? என்ன தான் பிரச்சனை? ஏன் தனியா இருக்கிறா?’ என்ற கேள்விகள் அவனை குடைந்தது.
தன்னால் அவளது துயரை போக்க முடியவில்லையே என்ற இயலாமையுடன் விழிகளை மூடியவன் விழியோரம் கண்ணீர் கசிந்தது.
சிறு வயதில் இருந்து தனது தனிமையை நினைத்து ஒருபோதும் கண்ணீர் வடிக்காதவன் முதல் முறையாக தன்னவளின் துயர் போக்க முடியவில்லையே என்று துயர் கொண்டு கண்ணீர் வடித்தான்.
இணைய காத்திருப்போம்…
குறிப்பு: இந்த எப்பி நேற்றைய(10Sep2025) கணக்கு தான்.. இன்றைய எப்பி மாலையில் பதிவிடப்படும்..