விடுதி அறையில் கதவின் மீது சாய்ந்திருந்த திவ்யாவின் உதடுகள், “சாரும்மா, என்னை ஏன் விட்டுட்டு போனீங்க? நீங்க இருந்திருந்தா, எனக்கு இந்த நிலையே வந்திருக்காதே! கடைசி வரை உங்க மகளாவே இருந்து இருப்பேனே! இந்த கொடிய உண்மைகள் எனக்கு தெரியாமலேயே போயிருக்குமே!” என்று வேதனையுடன் முணுமுணுத்தது.
அதன் பிறகு ராகவன் பற்றிய சிந்தனை வரவும், வேதனையுடன், “ஏன் பா இன்னொரு கல்யாணம் செய்தீங்க! எனக்கு உங்களை எவ்ளோ பிடிக்கும் தெரியுமா! உங்களுக்காக தானே சித்தியை ஏத்துக்கிட்டேன்… ஆனா நீங்க… நீங்க என்னை பத்தி யோசிச்சீங்களா!” என்றவள் கோபத்துடனும், வெறுப்புடனும்,
“ஒரு பெண் துணை இல்லாமல் இருக்க முடியலையா? என்னோட இந்த நிலைக்கு முழுக்க முழுக்க நீங்க தான் காரணம்… ஐ ஹெட் யூ… ஐ ஹெட் யூ!” என்றாள்.
சிறிது நேரம் பழைய நினைவுகளில் சுழன்றவள், எப்பொழுதும் போல் இசையின் உதவியுடன் தன்னை மீட்டுக் கொள்ள முயற்சித்தவள், அது முடியாமல் போகவும், சோர்வுடன் கட்டிலில் அமர்ந்திருந்தாள். அவளின் மனம் ஹரீஷை தேடியது.
விஜய்யை கைபேசியில் அழைத்தவள், அவன் அழைப்பை எடுத்ததும், “விஜி, எனக்கு ஒரு ஹெல்ப்”
“என்னாச்சு திவி? ஏதும் பிரச்சனையா?”
“இல்லை டா”
“திவி”
“நிஜமா எந்த பிரச்சனையும் இல்லை டா”
“உன் குரலே சரி இல்லை… உண்மையை சொல்லு”
“அது… பழைய நினைவுகள்… அதை விடு… சரியாகிடுவேன்.”
“என்னனு சொல்லேன்டி… என்கிட்ட சொல்வதால் உன் மன பாரம் இறங்கும்.”
“உன் மனசு பாரமாகிடுமே”
“அதெல்லாம்…..”
“விஜி ப்ளீஸ்… இப்போ எனக்கு ரிஷி நம்பர் வேணும்… கருத்து கிட்ட பேசி வாங்கித் தா.”
“அஞ்சு நிமிசத்தில் வாங்கித் தரேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தவன், சொன்ன நேரத்திற்கு முன்பாகவே அவளை அழைத்து ஹரீஷின் எண்களைக் கொடுத்தான்.
ஹரீஷை அழைக்கலாமா வேண்டாமா என்று மனதினுள் சிறு பட்டிமன்றம் நடத்தியவள், ஒருவழியாக அவனை அழைத்தாள்.
அவன் அழைப்பை எடுத்து, “ஹலோ” என்றான்.
முதல் முறையாக ஏதோ ஒரு தயக்கம் வர, இவள் அமைதியாக இருந்தாள்.
அவன், “ஹலோ… யாருங்க?”
“….”
கைபேசியை காதில் இருந்து எடுத்துப் பார்த்தவன், அழைப்பு துண்டிக்கப் படவில்லை என்றதும், “ஹலோ… யாருங்க?” என்றான்.
இவள் மெல்லிய குரலில், “ஹலோ” என்றாள்.
ஹரீஷ் மனதினுள் திவ்யாவாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “யாருங்க?” என்றான்.
“நான் திவ்யா பேசுறேன்”
“….”
இப்பொழுது அமைதியாக இருப்பது இவன் முறையாயிற்று.
அவள், “ஹலோ ரிஷி… லைனில் இருக்கியா?”
“…”
“ரிஷி” என்று அவள் குரல், சிறு தவிப்பு கலந்து ஆழ்ந்து ஒலிக்கவும்,
அழைப்பை துண்டிக்க நினைத்தவன், மனதை மாற்றி, “ஹ்ம்ம்” என்றான்.
“பேச மாட்டியா?”
‘எதுக்கு போன் செய்த?’ என்று கேட்க நினைத்தாலும், மனதை அடக்கி மெளனமாக இருந்தான்.
ஒரு பெருமூச்சை வெளியிட்ட திவ்யா, “சரி பை… டேக் கேர்.” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
‘என்னாச்சு இவளுக்கு? குரலே சரி இல்லையே!’ என்று அவன் மனதில் சிறு தவிப்பு எழுந்தாலும், அவன் அவளை அழைக்கவில்லை.
அப்பொழுது நந்தகுமார், “யாருடா போனில்?”
ஏதோ யோசனையில் இருந்த ஹரீஷ், “சொர்ணாக்கா” என்று கூற,
நந்தகுமார், “என்னது!” என்று அலறினான்.
அவனது அலறலில் சிந்தனையில் இருந்து வெளி வந்த ஹரீஷ், “என்னடா?”
“சொர்ணாக்கா எதுக்கு உனக்கு போன் செய்தா?”
“என் ஸ்டுடென்ட் எனக்கு போன் செய்தா.”
“என்னது, அவ உன் ஸ்டுடென்ட்டா….!”
‘லூசா நீ!’ என்பது போல் ஹரீஷ் பார்க்க,
நந்தகுமார், “இத்தனை நாள் நீ இதை சொல்லவே இல்லை.”
“பவித்ரா படிக்கிற காலேஜில் நான் வேலை பார்ப்பது தெரியும் தானே!”
“அது தெரியும். ஆனா, அவ கிளாஸ்க்கு நீ போறதை எப்போ சொன்ன?”
ஹரீஷ் சிறு தோள் குலுக்களை பதிலாகத் தர… நந்தகுமார் முறைத்தான்.
ஹரீஷ், “போடா… போய் வேலையை பாரு.”
“எப்படிடா தினமும் எந்தவித சேதாரமும் இல்லாமல் வர!”
ஹரீஷ் நக்கல் குரலில், “நீயும், நானும் ஒன்னா!”
நந்தகுமார் அவனை முறைத்துவிட்டு, தனது அறைக்குச் சென்றான்.
அவன் சென்றதும், ஹரீஷ் அரவிந்தை அழைத்தான்.
அரவிந்த் அழைப்பை எடுத்ததும் ஹரீஷ், “நீ தான் திவ்யா கிட்ட என் நம்பரை கொடுத்தியா?”
“விஜய் கேட்டான், கொடுத்தேன்”
“அவளை பற்றி தெரிந்தும் ஏன்டா கொடுத்த?” என்று இவன் கோபத்துடன் வினவ,
அரவிந்த், “ஒரு சந்தேகம் கேட்கணும்னு உன் நம்பர் கேட்கும் போது, எப்படி தர மாட்டேன்னு சொல்ல முடியும்?”
“உன்கிட்ட இல்லைனு சொல்ல வேண்டியது தானே!”
“நீயும் நானும் பிரெண்ட்ஸ்னு அவனுக்கு தெரியாது பாரு!”
“அப்போ என்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கணும்.”
“திவ்யா உன்னை கூபிட்டாளா?”
“ஆமா”
“என்ன சொன்னா?”
“ஒன்னும் சொல்லலை”
“சரி, வேற ஒன்னுமில்லையே! நான் வைக்கிறேன்”
“டேய் நிஜமாவே அவ ஒன்னும் சொல்லல..”
“நான் உன்கிட்ட எதுவும் கேட்கலயே!”
“டேய் சத்தியமா அவ எதுவும் சொல்லல… எதுக்கு போன் செய்தானு கூட தெரியல… ஆனா அவ குரல் சரி இல்லை”
“ஸோ உன்னோட இந்த கோபம் அவ எதுவும் சொல்லாததும், அவளோட குரல் ஏன் அப்படி இருந்ததுனு காரணம் தெரியாததாலும் தான்.”
“ஆமா, இவரு பெரிய சைக்காட்ரிஸ்ட்”
“உண்மையான நண்பன் ஒவ்வொருத்தனும் அவனது நண்பனை பொறுத்தவரை சைக்காட்ரிஸ்ட் தான்.”
“எனக்குன்னு எங்கிருந்து தான் இப்படி புத்திசாலியான இம்சைகள் வரீங்களோ!”
“ஹா…ஹா…ஹா” என்று அரவிந்த் வாய்விட்டு சிரித்தான்.
“கடுப்பை கிளப்பாத டா”
“ஒன்று நான், இன்னொன்னு யாரு?”
“உனக்கு தெரியாது… அதை நான் நம்பனும்.”
“இன்னொன்னு யாரு! நந்துவா!”
“நந்துவா! அவன் ஒரு அரைவேக்காடு” என்ற போது, ஒரு தலையணை அவன் மேல் வந்து விழுந்தது. அறை வாயிலில் நின்று கொண்டிருந்த நந்தகுமாரை, இவன் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
கீழே விழுந்த தலையணையை எடுத்து மடியில் வைத்துக் கொண்ட ஹரீஷ் மெல்லிய புன்னகையுடன், “சரிடா, பை” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
இணைய காத்திருப்போம்…