
விலகல் – 18
அரவிந்தின் கேள்வியில் அதிர்ந்த ஹரீஷ், “வாட்?” என்று வினவினான்.
அரவிந்த் நிதானமான குரலில், “உன் மனசுல காதல் இல்லைனா, அதை நேரிடையா அவகிட்ட சொல்ல வேண்டியது தானே?”
“அவ நேரிடையா விருப்பத்தை சொல்லலை… ஒரு கோட் கொடுத்து என்னை டிகிரிப்ட் செய்யச் சொன்னா… சரி அப்படியே தெரியாத மாதிரி இருந்து, அவளை விலக்கிடலாம்னு நினைச்சேன்.”
“ஆனா, அவகிட்ட அது பலிக்கலை”
“…”
“நிஜமாவே, உன் மனசுல அவ மேல விருப்பம் இல்லையா?”
“இல்லவே இல்லை.”
“உனக்கு அவ மேல சாப்ட் கார்னர் இல்லை?”
“அதுவும் இதுவும் ஒன்னா?”
“உன் மனசை நீயே…”
“அவ சேர்மன் சார் ரிலேடிவ். அதனால அவ மேல சாப்ட் கார்னர் இருக்குது… அவ்ளோ தான்.”
“ஓ! இங்கே வரதுக்கு முன்னாடியே, அவ சேர்மன் சார் ரிலேடிவ்னு தெரியுமா?”
“தங்ககுமார் சார் சொல்லி தானே தெரியும்.”
“இங்க வந்த அப்புறம் தான், அவள் மேல உனக்கு சாப்ட் கார்னர் வந்ததா?”
“ஆ…மாம்…”
அரவிந்த் மெல்லிய புன்னகையுடன், “ஆல் தி பெஸ்ட்!” என்றான்.
“எதுக்கு?”
“திவ்யாவை சமாளிக்க.”
ஹரீஷ் முறைக்க,
“சும்மாவே புத்திசாலியான அவளை சமாளிக்கிறது கஷ்டம்…! இதுல நீ உன் மனதுடன் வேற போராடனும். உன் மனசுக்கு எதிரா செயல் பட்டு, அவளை விலக்க முயற்சிக்கணும்.”
ஹரீஷ் சிறு கோபத்துடன், “லூசு மாதிரி உளறாத…! நான் தான் என் மனசில் எதுவும் இல்லைனு சொல்றேனே!”
“என்ன தான் நீ இல்லைனு சொன்னாலும், என்னால் அதை ஒத்துக்க முடியலை. அதுக்குக் காரணம் உன் நடவடிக்கை தான்… நிறைய சொல்லலாம், எதையும் நீ ஏற்றுக்கொள்ளப் போறது இல்லை. ஸோ அதை விடு. என் யூகம் என்னனா, அவ சேர்மன் சார் ரிலேடிவ்னு தெரிவதுக்கு முன்னாடியே, அவ உன் மனதினுள் நுழைந்து இருக்கணும்.
இப்போ… அவ சேர்மன் சார் ரிலேடிவ் என்றது மட்டுமில்லாம, ஒரு கோடீஸ்வரினு நான் சொன்னதும் சேர்ந்து, உன்னை ஆஃப் செய்து இருக்கணும்…! ஆல் ரைட், எப்போ உன் கூட்டை விட்டு நீ வெளியே வரனு பார்க்கிறேன்.” என்றவன் மெல்லிய புன்னகையுடன்,
“நீயா வெளியே வந்துட்டா சேதாரம் கம்மியா இருக்கும்… திவ்யா உன்னை வெளியே கொண்டு வந்தா…!” என்று நிறுத்திச் சிரித்தான்.
ஹரீஷ் ஏதோ சொல்லப் போக…
“நீ எதுவும் சொல்ல வேண்டாம்… நான் உன் பதிலை கேட்கல… என் மனதில் உள்ளதை சொன்னேன். அவ்ளோ தான். நாலு நாள் தான் என்றாலும், உன்னை நான் சரியா தான் புரிந்து கொண்டிருக்கிறேன்னு நினைக்கிறேன்.”
ஹரீஷ் அமைதியாக இருக்கவும்,
“இதை பற்றி திவ்யாகிட்ட நான் எதுவும் சொல்ல மாட்டேன்… இனி நான் ஒரு பார்வையாளன் மட்டுமே…! வா போகலாம்.” என்று கூறி அவனை அழைத்துச் சென்றான்.
அன்று ஹரீஷிற்கு, திவ்யாவின் வகுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், இருவரும் பேசிக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போனது. அவள் இரண்டு முறை அவனைப் பார்த்தபடியே ஆசிரியர் அறையை கடந்து சென்றாள் தான். ஆனால், இவன் அவளை கண்டு கொள்ளவில்லை.
மாலை அவள் கிளம்பிய போது, ஆசிரியர் அறையில் வேறு சில ஆசிரியர்கள் இருக்கவும், அவள் அமைதியாக கிளம்பிவிட்டாள்.
அடுத்த நாள் அவள் சீக்கிரம் வர, அவனோ வேண்டுமென்றே தாமதமாக வர, அவள் அவனை முறைத்துவிட்டு வகுப்பை நோக்கிச் சென்றாள்.
அன்று வகுப்பிற்கு சென்றவன் வருகை பதிவேடை முடித்துவிட்டு திவ்யாவை பார்த்து, “இம்போசிஷன் எங்க?”
அவள் எழுந்து நின்று, “டென் டைம்ஸ் எழுதச் சொன்ன நீங்க என்னைக்கு கொண்டு வரணும்னு சொல்லலையே சார்.” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள்.
அவன் அவளை முறைத்தபடி, “நாளைக்கு கொண்டு வந்திருக்கணும்.”
அவள் புன்னகையுடன், “ஓகே சார்” என்று கூறி அமர்ந்தாள்.
அதன் பிறகு அவன் வகுப்பை தொடங்க, அவள் அவனை ரசிக்கத் தொடங்கினாள்.
ஹரீஷ், “திவ்யா” என்று அழைத்து நடத்தியதில் இருந்து பல கேள்விகளை கேட்க…
அவளோ அசராமல் சரியான பதில்களை கூறினாள்.
அவன் சிறு யோசனையுடன் பார்க்க, அவளோ புன்னகையுடன் அவனைப் பார்த்து புருவம் உயர்த்தினாள்.
அவன் கடுப்புடனும் சிறு கோபத்துடனும், “சிட் டௌன்” என்றான்.
அதன் பிறகு அவளது செய்கையை (அதாங்க சைட் அடிப்பதை) பல்லை கடித்து பொறுத்துக்கொண்டு பாடத்தை நடத்தினான்.
அவன் வகுப்பு முடிந்து சென்றதும் பவித்ரா, “எப்படி…டி?”
தனது சல்வாரில் இருந்த காலரை தூக்கிவிட்டபடி, “திவ்யா யாரு!” என்றவள், “இன்னைக்கு எடுக்கப் போறதை நேத்தே படிச்சிட்டேன்.” என்று கூறி கண்சிமிட்டினாள்.
“அடப்பாவி”
அடுத்து வந்த சில தினங்கள் இப்படியே கழிந்தது. அதாவது ஹரீஷ் காலையில் சற்று தாமதமாக வந்து, தனிமையில் அவளிடம் சிக்கவில்லை. அதை போல் இவளும் அவனது கேள்விகளில் சிக்கவில்லை.
ஆனால், அவளை கண்டுக்கொண்ட ஹரீஷ்… ஒரு நாள் இரண்டு தலைப்புகளை விட்டுவிட்டு, வேறு தலைப்பை நடத்தினான். அதை கவனிக்காமல் அவனை கவனித்துக் கொண்டிருந்தவள், அவனது கேள்வியில் திருதிருவென்று முழிக்க,
உதட்டோர புன்னகையுடன், “கெட் அவுட்” என்றான்.
அவளோ, அவனை கடக்கும் பொழுது சன்ன குரலில், “வெளியனா சைட் அடிக்க இன்னும் வசதி.” என்று கூறிவிட்டுச் சென்றாள்.
அவன் அவளை முறைத்துவிட்டு பாடத்தை தொடர்ந்தான்.
வகுப்பு முடிந்து வெளியே செல்லும் போது, அவன் வாய் திறக்க போக… அவள் புன்னகையுடன், ”நாளைக்கு இதை டென் டைம்ஸ் எழுதிட்டு வரணும்… அதானே!”
“இல்லை… நாளைக்கு டுவென்டி டைம்ஸ் எழுதிட்டு வா.” என்று கூறிவிட்டு வெளியேறினான்.
இப்படியே இருவருக்கும் இடையே சின்ன சின்ன சீண்டல்களுடன் நாட்கள் நகர்ந்தது. இதற்கிடையில், இரண்டு முறை ஜனனி இவளைப் பார்த்து பேச முயற்சித்து தோல்வியை தழுவியிருந்தாள்.