விலகல் – 16

இரண்டு நாட்கள் கழித்து, திவ்யா உற்சாகத்துடன் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றாள்.
ஆண் ஆசிரியர்கள் அறை வழியாக வகுப்பறைக்குச் சென்றவளின் கால்கள், ஆசிரியர் அறையில் ஹரீஷ் மட்டும் இருப்பதை கண்டு.. ஆசிரியர் அறையை நோக்கிச் சென்றது.
உற்சாகக் குரலில், “குட் மார்னிங் ரிஷி.” என்றாள்.
அவளது குரலில், புத்தகத்தில் இருந்து பார்வையை நிமிர்த்தியவன் அமைதியாக இருக்கவும்,
அவள், “என்ன பார்க்கிற! ஹரீஷ் தான் சுருக்கி ரிஷினு கூப்பிட்டேன்… நல்லா இருக்கா?” என்று கண்கள் மின்ன வினவினாள்.
ஆனால், அதில் சிறிதும் பாதிக்கப் படாதவனாக… முறைப்புடன், “ஒருமையில் பேசாதனு சொன்னேன்.”
“நானும், அப்படி தான் பேசுவேன்னு சொன்னேனே”
“காலையிலேயே என் கோபத்தை கிளறாத!”
“அப்போ வேற எதை கிளறுறது?” என்று அவள் குறும்புடன் வினவ,
அவன் முறைப்புடன், “எதையும் கிளற வேணாம்.”
“ஆணியே பிடுங்க வேணாம்னு சொல்ற!” என்று தலை சரித்து புன்னகையுடன் கேட்டாள்.
அவன் அவளை கண்டு கொள்ளாமல், பார்வையை புத்தகத்தில் பதித்தான்.
‘உனக்கு ரிஷினு பெயர் வச்சிருக்க கூடாதோ! இப்படி முற்றும் துறந்த ரிஷி போல் இருக்கிறியே!’ என்று மனதினுள் கூறிக் கொண்டவள், ‘ஆனா மகனே, என்னிடம் உன் பாட்சா பலிக்காது’ என்ற உறுதியுடன் அவனைப் பார்த்து, “நான் கொடுத்த கோட் கண்டுபிடிச்சியா?” என்று வினவினாள்.
அவன் முறைப்புடன், “எனக்கு வேற வேலை இல்லை பாரு!” என்று பல்லை கடித்துக்கொண்டு கூறவும்,
அவள் மென்னகையுடன், “மிர்ச்சி மிளகாய் செம்ம ஹாட்டா இருப்பதை பார்த்தால், கண்டு பிடிச்சிட்ட போல!” என்று கூறி புருவம் உயர்த்த,
அவன் கடும் கோபத்துடன், “உனக்கெல்லாம் ஒரு முறை சொன்னா புரியாதா? நீயெல்லாம் எதுக்கு காலேஜ் வர? சேர்மன் ரிலேடிவ்னா ரெண்டு கொம்பா முளைச்சு இருக்குது! நான் உன் சார் என்ற மரியாதையை மனதில் வைத்து, பன்மையில் பேசிப் பழகு. இல்ல, கஷ்டப்படுவ…!”
அவள் கோபத்துடன், “நமக்கு நடுவில் அவரைக் கொண்டு வராத!”
அவள் முகத்தை பார்த்தவன்.. உதட்டோர புன்னகையுடன், “நீ என் கோபத்தை கிளறினால், நானும் உன் கோபத்தை கிளறுவேன்.”
“நீ அவரைப் பற்றி பேசி என் கோபத்தை கிளறல… என் மனதின் ரணத்தை தான் கிளறுற…” என்று அவள் வேதனையுடன் கூற, அவன் உதட்டோரப் புன்னகை மறைந்தது.
அவன் பார்வையிலிருந்து அவன் மனதை படிக்க முடியாமல், அவள் சிறு பெருமூச்சை வெளியிட்டு, “சரி, அதை விடு… இப்போ எனக்கு பதில் சொல்லு.”
அவன் தீர்க்கமான குரலில், “என்ன பதில்?”
“நான் கோடில் சொன்னதிற்கு”
“அதில் நீ என்ன சொல்லியிருந்தனு எனக்கு தெரியாது”
அவள், அவனை ஆழ்ந்து நோக்கினாள்.
அவனும் சளைக்காமல் அவள் பார்வையை தீர்க்கமான பார்வையுடன் எதிர் கொண்டான்.
“பொய் சொல்ற”
“….”
“அவ்ளோ தான் உன் திறமையா?”
“என் திறமையை இதில் காட்டனும்னோ, உனக்கு நிரூபிக்கணும்னோ எனக்கு அவசியம் இல்லை!”
அவன் கண்களை தீர்க்கமாகப் பார்த்தவள், “அப்போ, அதில் சொன்னதை நேரிடையா இப்போ சொல்லவா?”
அப்பொழுது அரவிந்த் வருவதை பார்த்தவன், சிறு பதற்றமும் கோபமுமாக, “இப்போ நீ இங்கிருந்து போகல… அடி தான் வாங்குவ…!”
அவனது பதற்றத்தை ரசித்தவள், அரவிந்த் வருவதை பார்த்துவிட்டு புன்னகையுடன், “கருத்து(அரவிந்த்) வந்ததால் தப்பித்த…” என்றவள் குறும்பும் காதலும் நிறைந்த விழிகளுடன், “இனி நீ அடிச்சா, பதிலுக்கு நானும் அடிப்பேன். ஆனா கையால் இல்ல.” என்று கூறி கண் சிமிட்டிவிட்டு ஓடிவிட்டாள்.
ஹரீஷ், சிறு அதிர்வுடன் போகும் அவளைப் பார்த்தான். ‘என்ன சொல்லிட்டு போறா? கையால் இல்லனா, என்ன சொல்றா!’ என்று யோசித்தவனுக்கு கிடைத்த விடையில், அவள் மீது கோபம் வந்தது.
அதே நேரத்தில்… அவனது மனதின் ஒரத்தில்… ‘இவளை எப்படி சமாளிக்கப் போறேனோ!’ என்ற கேள்வியும் எழுந்தது.
உள்ளே வந்த அரவிந்த், “திவ்யா என்ன சொன்னா?”
“ஒன்னும் சொல்லலையே!”
“நீ ஏன் இவ்ளோ விறைப்பா பதில் சொல்ற?”
“அதெல்லாம் இல்ல… நான் எப்பொழுதும் போல் தான் சொன்னேன்.”
அரவிந்த் யோசனையுடன், “என்னவோ சரியில்லயே!”
“ஏன்?”
“திவ்யா முகத்தில் தெரிந்த சந்தோஷம்! அவ எப்போதுமே உற்சாகமா தான் சுத்துவா. ஆனா, இப்போ அவ முகத்தில் இருந்த சந்தோசம் தனியா தெரிஞ்து… அதான், உன்னை ஏதும் வம்பிழுத்திட்டு போனாளானு தான் கேட்டேன். ஆனா, நீ விறைப்பா பதில் சொன்னதுல, ஏதோ இருக்கிற மாதிரி தான் தோனுது.”
“நீ சொன்ன மாதிரி வம்பிழுத்திட்டு தான் போறா.”
“என்ன சொன்னா?”
“அவளை பற்றிய பேச்சு எதுக்கு இப்போ?”
“நீ என்கிட்ட எதையும் மறைக்கிறியா?”
“ஏன் கேட்கிற?”
“முந்தா நாள் அப்பப்போ ஏதோ யோசனையில் இருந்த… இன்னைக்கு ஏதோ வித்யாசம் இருக்கிற மாதிரி தோனுது. ஆனா என்னனு சரியா தெரியல…”
“ஒரு வித்யாசமும் இல்ல.”
அரவிந்த் அப்பொழுதும் விடாமல் ஆராய்ச்சி பார்வை பார்க்கவும்,
ஹரீஷ் கடுப்புடன், “ஏன் டா! காலையில் இம்சை பண்றீங்க!”
“பண்றீங்கன்னா! யாரெல்லாம்?”
“ஹும்ம்… நீயும் உன் அப்பத்தாவும்”
“என் அப்பாத்தா இந்நேரம் மேலோகத்தில் தாத்தா கூட டூயட் பாடிட்டு இருக்கும்… அதை ஏன் இழுக்கிற”
ஹரீஷ் முறைக்கவும்,
“இந்த முறைப்புக்கு பயப்பட நாங்க ஒன்னும் நந்தகுமார் இல்ல… எவ்வளவோ பார்த்துட்டோம்! போடா, போய் வேலையை பாரு.”
ஹரீஷ் இன்னும் முறைக்கவும்,
“பார் டா! திரும்ப முறைக்கிறத!”
ஹரீஷ் இருந்த நிலையில் மாற்றம் இல்லை என்றதும்,
“பார்த்து டா, உன் முறைப்பை தப்பா புரிஞ்சிட்டு… எவனாவது அவனா நீ னு கேட்டுற போறான்… என் கற்பை கேள்விக்குறி ஆக்கிடாதடா”
“அந்த அளவுக்கெல்லாம் நீ வொர்த் இல்ல” என்று அலட்டிக்கொள்ளாமல் கூறியவன், பார்வையை புத்தகத்தில் பதித்தான்.
அரவிந்த் ஆள்காட்டி விரலை தன் முகத்தை நோக்கி நீட்டி, “இந்த அவமானம் உனக்கு தேவையா?” என்றான்.
ஹரீஷ் நக்கல் குரலில், “இப்போ, எது உனக்கு அவமானம்? வொர்த் இல்லைனு… நீ அவன் இல்லைனு சொன்னதில் வருத்தப்படுறியா? அப்போ உண்மையாவே அவனா நீ?” என்றதில்…
அரவிந்த் ‘ஞே’ என்று முழித்தான்.
திவ்யா வகுப்பிற்கு சென்ற ஐந்து நிமிடத்தில் உள்ளே வந்த பவித்ரா… ஆச்சரியத்துடன், “என்ன அதிசயம்!” என்றாள்.
திவ்யா புன்னகையுடன், “இனி இப்படி தான். ஏன்னா என் ஆள் சீக்கிரம் வந்திடுறானே!” என்று கூறி கண் சிமிட்டினாள்.
“இது எங்க போய் முடியப் போகுதோ!” என்று சிறு கலக்கத்துடன் கூறினாள்.
“எல்லாம் எங்க கல்யாணத்தில் தான் முடியும்”
“திவி எதுக்கும்…”
“முன் வைத்த காலை பின் வைக்க மாட்டா இந்த திவ்யா.”
“ஹும்ம்” என்ற பவித்ரா, “உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லவா?”
“என்ன?”
“உனக்கு குட் நியூஸ், ஆனா எனக்கு அது குட் நியூஸ்ஸா பேட் நியூஸ்ஸானு தெரியல..!”
“என்னடி சொல்ற?”
“நம்ம ஹரீஷ் சார்…”
“நம்ம இல்லை, என் ஹரீஷ்.” என்று முறைப்புடன் கூற,
ஒரு நொடி அதிர்ச்சியுடன் பார்த்த பவித்ரா, பின், “இவ்ளோ பொசஸிவ் வேணாம்டி…..”
“ரிஷி விஷயத்தில் நான் இப்படி தான்.” என்று உறுதியுடன் திவ்யா கூறினாள்.
பவித்ரா சிறு கவலையுடன் பார்க்க,
“என்ன?”
“மூனே நாளில் இவ்வளவு அன்பு! எனக்கு பயமா இருக்குதுடி”
“மூன்று நாள் எதுக்கு! மூன்று நொடியே போதும்… என் ரிஷி என் தனிமையை போக்க வந்த ரக்ஷகன்.” என்று காதலுடன் கூறியவள், “உனக்கு என்ன பயம்?”
“அது… வந்து… திவி… உன் காதலை அவர் ஏத்துக்கலனா!” என்று தயக்கத்துடன் கூறினாள்.
புன்னகையுடன், “அதெல்லாம் ஏத்துப்பான்! உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லவா?”
“என்ன?”
“ரெண்டு நாள் முன்னாடி… அதாவது அவன் வந்த அன்னைக்கே நான் ப்ரொபோஸ் செஞ்சுட்டேன்.”
நெஞ்சில் கை வைத்த பவித்ரா, “இது குட் நியூஸ் இல்லைடி, ஷாக்கிங் நியூஸ்”
“உனக்கு எல்லாமே ஷாக்கிங் நியூஸ் தான்”
“அவர் என்ன சொன்னார்? ஏன்டி என்கிட்ட சொல்லல..?”
“அவன் பதிலை தெரிஞ்துட்டு, உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்.”“என்னடி சொன்னார்?” என்று சிறு பதற்றத்துடன் கேட்டாள்.