ராஜாராம், “உங்க பக்கத்தில் வார்டன் இருக்காங்களா?”
“இல்லை சார்.”
“அப்போ ஸ்பீக்கரில் போடுங்க”
அவன் ஒலிபெருக்கியை இயக்கி, “ஸ்பீக்கர் ஆன் செய்துட்டேன் சார்”
“சைமன் என்ன செய்தான்? நீ எதுக்கு அவனை அடித்த?”
அவள் அமைதியாக இருக்கவும்,
“திவ்யா, நான் சைமன் அப்பா கிட்ட பேசப் போறேன்… எனக்கு உண்மை தெரிந்தாகனும்.” என்றவரின் குரலில், ‘இப்போ நீ சொல்லியே ஆகணும்’ என்ற கட்டளை இருந்தது.
ஹரீஷ் கையிலிருந்து கைபேசியை பிடுங்கியவள், “அவன் தப்பா பேசினான்.” என்றாள் இறுகிய குரலில்.
ராஜாராம், “என்ன பேசினான்?”
“தப்பா பேசினான் அவ்ளோ தான்… திரும்ப கூப்பிட்டீங்க, போனை தூக்கிப் போட்டு உடைச்சிருவேன்.” என்றவள் அழைப்பைத் துண்டித்து ஹரீஷிடம் கொடுத்தாள்.
பின் கோபத்துடன், “இன்னொரு முறை அவருக்கு எடுபடி வேலை பார்த்துட்டு என் முன்னாடி வந்து நின்ன, நான் மனிஷியா இருக்க மாட்டேன்.”
மனதின் அழுத்தத்தில் இருந்தவளால், தன் மனம் கவர்ந்தவன் ராஜாராமிற்கு சாதகமாக செயல்படுவதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவளது பேச்சை கேட்டு ஹரீஷிற்கு கோபம் வந்தது. ஆனால் அவளது முகத்தில் தெரிந்த இறுக்கத்தை கண்டவன், கோபத்தை மறந்தவனாக, “என்ன பாட்டு கேட்டுட்டு இருந்த?” என்றான்.
‘நீ என்ன லூஸா!’ என்பது போல் அவள் பார்க்க,
அவன் உதட்டோர மென்னகையுடன், “சும்மா கேட்கணும் தோனுச்சு” என்று கூறி தோளை குலுக்கினான்.
அவன் நினைத்தது போல், அவள் முகத்தில் இருந்த இறுக்கம் மறைந்து அவள் அவனை சிறு யோசனையுடன் பார்த்தாள்.
அவன் ‘என்ன?’ என்பது போல் புருவம் உயர்த்த,
அவள், “என் இறுக்கத்தை மாற்ற தான் இந்த கேள்வினா..! நான் ஒன்னு கேட்கட்டுமா?”
அவள் தன்னை கண்டு கொண்டதில் சிறிது அதிர்ந்தாலும், அவன் அதை காட்டிக் கொள்ளாமல், “என் கேள்விக்கு பின்னாடி எந்த நோக்கமும் இல்ல… கேட்கனும் தோனுச்சு, கேட்டேன்… அவ்ளோ தான்.”
அவள் அழுத்தத்துடன் பார்க்கவும், அவன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், “கேளு” என்றான்.
“ஸோ என் இறுக்கத்தை மாற்ற தான் அந்தக் கேள்வி!”
“நான் சாதாரணமா தான் கேட்டேன்.”
“நான் என்னச் சொன்னேன்? ‘என் இறுக்கத்தை மாற்ற தான் இந்த கேள்வினா..! நான் ஒன்னு கேட்கட்டுமா?’… நீ ‘கேளு’ னு சொன்னதில், என் கூற்றை ஒத்துக்கிறனு தானே அர்த்தம்!” என்று புருவம் உயர்த்தினாள்.
“ஒருமையில் பேசாதனு சொன்னேன்.” என்றவனின் குரலில் மீண்டும் கோபம் எட்டிப் பார்த்தது.
இப்பொழுது அவள் உதட்டோர புன்னகையுடன், “இந்த கோபம் நான் ஒருமையில் பேசியதுக்காக இல்ல… உன்னோட மனசை நான் கண்டு கொண்டதுக்காகவும், அதை இல்லனு சொல்ல வலுவான காரணம் கிடைக்காத இயலாமையிலும் வந்த கோபம் தான்.”
அவன் முறைப்புடன், “உன் தவறான எண்ணத்துக்கு, நான் பொறுப்பில்லை” என்றுவிட்டு கிளம்ப,
அவள் புன்னகையுடன், “ஓய்” என்று அழைத்தாள்.
இரண்டடி எடுத்து வைத்தவன், அவளது குரலில் நின்றாலும் திரும்பவில்லை.
அவள் விரிந்த புன்னகையுடன், “உனக்கு வெற்றி தான்… தேங்க்ஸ்… இப்போ என் மனசு லேசா இருக்குது… நான் கேட்க நினைத்த கேள்வியை அப்புறம் கேட்கிறேன்… இப்போ உனக்கு ஒரு கோட்(CODE)தரேன்… அதை டிகிரிப்ட் செஞ்சு சொல்லு.” என்றாள்.
அவன் அவள் கூறியதை கண்டு கொள்ளாதது போல் நடக்கவும்,
அவள் சீண்டும் குரலில், “என்ன க்ரிப்டோக்ராபி சார்! டிகிரிப்ட் செய்யச் சொன்னா இப்படி ஓடுறீங்க! உங்க திறமை மேல் அவ்ளோ தானா நம்பிக்கை!”
அவன் திரும்பி நின்று அவளை முறைக்கவும்,
அவள் புன்னகையுடன் புருவம் உயர்த்தினாள்.
அவன் கிளம்பாமல் தேங்கியதை அவனது சம்மதமாகக் கருதி, “போட்டிக்கு ரெடி ஆகிட்ட! குட்… நான் இப்போ சில நம்பர்ஸ் டேட் பார்மட்டில்(Format)சொல்றேன்… அதை டிகோட் செஞ்சு, அதுக்குள்ள மறைந்திருப்பதை கண்டு பிடிச்சு சொல்லு…! நீ டிகோட் செய்ய வேண்டியது 24.10.56
ஒரே ஒரு க்ளு தரேன்… நம்பர்ஸ் எதுவும் சரியான இடத்தில் இல்லை… நம்பர்ஸ் மாத்தி போட்டதுக்கு அப்புறம் டிகோட் செய்யனும்… ஆல் தி பெஸ்ட்… பை!” என்று கூறி கை அசைத்தாள்.
ஹரீஷ், பதில் எதுவும் கூறாமல் வெளியேறினான்.
…………………..
அதே நேரத்தில், மருத்துவ கல்லூரியில் தன் அறையில் இருந்த ராஜாராம், சைமனின் தந்தையை அழைத்தார்.
அவர் அழைப்பை எடுத்து, “ஹலோ” என்றதும்,
“மே ஐ ஸ்பிக் டு மிஸ்டர் ஸ்டான்லி?”
“எஸ் ஸ்பீகிங்.”
“நான் சைமன் படிக்கிற காலேஜ் சேர்மன் பேசுறேன்.”
“சொல்லுங்க சார்” என்றபோது, அவர் மனதினுள் ‘என்ன செய்தானோ?” என்று கூறிக் கொண்டார்.
மதியம் சைமன் அவரை சந்தித்ததில் இருந்து, அவன் நண்பனுடன் கல்லூரி விட்டு சென்றது வரை சொன்னவர், “இப்போ தான் விஷயம் தெரிந்தது. அவன் தெரியாமல் இடித்ததாக சொன்னது பொய்… அவன் தப்பா பேசியதால் தான், திவ்யா அவனை அடித்து இருக்கிறாள்… இது முதல்லேயே தெரிந்து இருந்தால், நான் உங்க பையனைத் தான் சஸ்பெண்டு செய்திருப்பேன்.” என்று சிறு கோபத்துடன் கூறினார்.
சைமனின் தந்தை, “என் பையன் சொன்னது பொய்னு எப்படி சொல்றீங்க?”
“அவன் தப்பா பேசியதுக்கான ஆதாரம் என்கிட்ட இருக்குது… இப்போ கூப்பிட்டது, உங்க பையனால் திவ்யாக்கு எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாதுனு சொல்லத் தான்…! திவ்யா எனக்கு நெருங்கிய சொந்தம்… இருந்தும், உங்க பையன் சொன்னதை நம்பி திவ்யாவை தான் நான் சஸ்பெண்டு செய்தேன்… ஆனா, உங்க மகன்…”
“சாரி சார்… நான் அவனை கண்டிக்கிறேன்… அவனால், அந்தப் பொண்ணுக்கு இனி பிரச்சனை வராது.”
“ஹும்ம்… மிஸ்டர் ஸ்டான்லி, நீங்களும் உங்க மகனும் எப்படி பழகுவீங்க?”
“ஏன் சார்?”
“பிரெண்ட்லியா பழகுவீங்களா… இல்லை, ஒரு டிஸ்டன்ஸ் கீப்-அப் செய்வீங்களா?”
அவர் யோசனையுடன், “முன்னாடி பிரெண்ட்லியா தான் பழகினேன்… ஆனா.. காலேஜ் வந்த பிறகு, எப்படியோ சிறு இடைவெளி வந்திருச்சு.”
“ஹும்ம்… உங்களை போல் சில பரென்ட்ஸ், அந்த சிறு இடைவெளியை குறைக்காமல் விடுவதால் தான், இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருது… நீங்க பிரெண்ட் போல் பழகினால், அன்றாடம் நடப்பதை சொல்வார்கள். அப்போ அவங்களோட சிறு தவறை கூட நீங்க அன்பா எடுத்துச் சொன்னா, மாத்திப்பாங்க…! நீங்க நினைத்தால், இப்போ கூட உங்க மகனை சரி செய்ய முடியும்.”
“புரியுது சார்.” என்று அவர் வருந்திய குரலில் கூறினார்.
“சைமன், இப்போ கோபத்தில் இருப்பான்… நீங்க கோபப்படாமல் அமைதியா அவனுடன் உட்கார்ந்து பேசுங்க…”
“தேங்க்ஸ் சார்.”
“சைமன் தெளிந்தால், சந்தோஷம்.” என்று புன்னகையுடன் அழைப்பைத் துண்டித்தார்.