ஹரீஷ், “நான் சேர்மன் சார் கிட்ட பேசுறேன்… நீ தான் அதிகம் அவளோட இருக்கிற… அதான் உன்கிட்ட பேசினேன். சரி கிளம்பு.” என்றான்.
“தேங்க்ஸ் சார்” என்று மகிழ்ச்சியுடன் கூற,
ஹரீஷ் சிறு புன்னகையுடன் தலையசைத்தான்.
இரண்டடி நடந்த விஜய் திரும்பி, “சார், உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா?” என்று கேட்டான்.
விஜய் திடீரென்று கேட்கவும், ஒரு நொடி ஹரீஷ் சிறு அதிர்ச்சியுடன் பார்த்தான். பின், “இல்ல… ஏன் கேட்கிற?”
விஜய் புன்னகையுடன், “சும்மா தான் சார்.” என்று கூறிவிட்டு ஓடி விட்டான்.
ஹரீஷ் சிறு தோள் குலுக்கலுடன், அடுத்த வேலையை பற்றி யோசிக்கத் தொடங்கினான்.
சைமன் நண்பர்களிடம், “நான் கிளம்புறேன்… நீங்க கிளாஸ்க்கு போங்க…”
“உன் பேக்(Bag)”
“என் பேக்-யும்(Bag)வண்டியையும் வீட்டில் கொண்டு வந்து விட்டுருங்க.” என்றவன் அவர்கள் பதிலை எதிர் பார்க்காமல், சுவர் ஏறிக் குதித்து வெளியே சென்றான்.
“அவனை தனியா விடுறது நல்லது இல்ல… நான் அவனோட போறேன்… நீ கிளாஸ்க்கு போ.” என்ற நண்பன் ஒருவன் அவசரமாக சுவர் ஏறி குதித்து சைமனைப் பிடித்தான்.
இன்னொருவன் வகுப்பிற்குச் சென்றான்.
விஜய் வகுப்பிற்கு செல்லும் முன், ஒரு மரத்தடியில் நின்று திவ்யாவை அழைத்தான்.
அழைப்பை எடுத்தவள் சிறு கோபத்துடன், “இப்போ எதுக்குடா கூப்பிட்ட?”
“என்னாச்சு திவி? இன்னும் என்ன கோபம்?”
“ச்ச்… அந்த சைமன் கிட்ட பேசிய கோபம்… விடு…! எதுக்கு கூப்பிட்ட?”
“அவன் எதுவும் தப்பா பேசினானா?”
“அதெல்லாம் இல்லைடா… நீ விஷயத்தை சொல்லு.”
“நிஜமா பிரச்சனை இல்ல தானே!”
திவ்யா மெல்லிய புன்னகையுடன், “பிரச்சனையிடமே பிரச்சனை செய்ய முடியுமா?”
விஜய் புன்னகையுடன், “ஹும்ம்… நான் இப்போ ஒரு குட் நியூஸ் சொல்ல தான் போன் செய்தேன்.”
“என்னடா?”
ஹரீஷுடன் பேசியதை சுருக்கமாகக் கூறினான். சைமன் தவறாகப் பேசிய விஷயம் ஹரீஷிற்கு தெரிந்திருப்பதைப் பற்றி விஜய் கேட்டிக் கொள்ளவில்லை.
விஜய், “அவருக்கு உன் மேல் அக்கறை இருக்குது மச்சி… நீ சொன்னது போல, அவருக்கும் உன்னை பிடித்து இருப்பது போல தான் தோணுது…! உனக்காக அவர் கவலைப்படுறார்… அப்புறம் அவருக்கு கல்யாணம் ஆகலைனு அவரிடமே கேட்டு கண்பர்ம் செய்துட்டேன்.”
“தேங்க்ஸ் டா… ரொம்ப சந்தோஷமா இருக்கு.”
“ஹும்… உன் ஆளுடன் ட்ரீம்ஸ்ல டூயட் பாடு… நான் கிளாஸ் போறேன்.”
“ஹும்ம்… பை” என்று அழைப்பைத் துண்டித்தவள், உதட்டில் உறைந்த புன்னகையுடன் ஹரீஷ் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.
……………………
அதே நேரத்தில், ராஜாராமை அழைத்த ஹரீஷ்… அவர் அழைப்பை எடுத்ததும், “குட் அப்ட்டர்நூன் சார்… பிஸியா இருக்கீங்களா?”
“முதலில் நீங்க கூப்பிட்டப்ப மீட்டிங்கில் இருந்தேன்…. இப்போ தான் மீட்டிங் முடிந்தது… சொல்லுங்க”
(இப்பொழுது இராஜாராம் அவரது மருத்துவ கல்லூரியில் இருக்கிறார்)
சைமன் மற்றும் திவ்யா விஷயத்தின் தற்போதைய நிலவரத்தை விளக்கமாகக் கூறியவன், “உங்க வாட்ஸ்-அப்-பில், அந்த ரெண்டு விடியோவையும் அனுப்பி இருக்கிறேன் சார்… சைமன் கோபத்தில் திவ்யாவை எதுவும் செய்திடக் கூடாதேனு, உங்களுக்கு விஷயத்தை சொல்ல கூப்பிட்டேன்.”
“தேங்க்ஸ் ஹரீஷ்… நான் சைமன் அப்பாகிட்ட பேசுறேன்… நீங்க அவன் அப்பா நம்பர் பார்த்துட்டு, எனக்கு அனுப்புங்க.”
“தேங்க்ஸ்லாம் வேணாம் சார்… திவ்யா உங்க ரிலேடிவ்… உங்களுக்காக இந்த சின்ன விஷயத்தை செய்ய மாட்டேனா சார்! சைமன் அப்பா நம்பர், அஞ்சு நிமிஷத்தில் உங்களுக்கு அனுப்புறேன்.”
“ஓகே” என்றதும் அழைப்பைத் துண்டித்தவன், சைமன் வகுப்பு ஆசிரியரை நோக்கிச் சென்றான்.
விடுதிக்கு வரும் முன், ஹரீஷுடன் பேசியதை அசை போட்ட திவ்யா, ‘ஒருமையில் பேசியதை கேட்டு சிரிக்க தானே செய்தான், ஸோ இப்போ அவனுக்கு என் மேல் கோபம் இல்ல…! ஸோ இப்போ என் மேல் காதல் இல்லைனாலும், சீக்கிரம் வர வச்சிடலாம்’ என்று குதூகலித்தாள்.
அதன் பிறகு, ‘அப்புறம் ‘அது என்ன அரவிந்த் மட்டும் ஸ்பெஷல்’னு கேட்டதில் பொறாமை இருந்ததோ? இல்லை, சாதாரணமா தான் கேட்டானா?’ என்று யோசித்தவளால், அவனது மனநிலையை சரியாக கணிக்க முடியவில்லை என்றதும், ‘சரி விடு, பார்த்துக்கலாம்’ என்று தோளை குலுக்கிக் கொண்டாள்.
‘பவிக்காக நான் கவலை பட்ட போது, அவன் என் பெயருக்காக கவலைப் பட்டானே! இப்போ கூட விஜி கிட்ட எனக்காக பேசி இருக்கிறானே! நிச்சயம், அவன் மனதில் எனக்குனு தனி இடம் இருக்குது தான்.’ என்று மகிழ்ந்தவள்,
சிறிது யோசித்த பின், ‘தியேட்டர் விஷயம் பற்றி பேசினப்ப ‘அதை இன்னும் நீ மறக்கலையானு கேட்டானே!’ அப்போ அவனும் மறக்கலைனு தானே அர்த்தம்… அப்போ காலையில் அவனும் என் பெயரை தெரிந்துக்க தான் கேள்வி கேட்டானா?
எனக்கு தான், அவன் திட்டிய தாக்கத்தில்… அந்த சம்பவமும் அவன் முகமும் மறக்கலைனு வச்சுக்கிட்டாலும், அவனுக்கு என்ன? அப்போ அப்போதில் இருந்தே அவனை நான் பாதித்து இருக்கிறேன்னு தானே அர்த்தம்!’ என்று யோசித்தவள், சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள்.
திவ்யாவிற்கு இரண்டு முறை அழைத்த ராஜாராமிற்கு, அவள் எடுக்கவில்லை என்றதும், சிறு பதற்றம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது.
அப்பொழுது ஹரீஷ், சைமன் தந்தை எண்களை குறுஞ்செய்தியாக அனுப்பினான்.
அவர் உடனே அவனை அழைத்தார்.
அவன், “சொல்லுங்க சார்”
“நம்பர் வந்தது… இப்போ நான் போன் செய்தது திவ்யா பற்றி… இப்போ அவளுக்கு இரண்டு முறை கூப்பிட்டேன். அவ எடுக்கலை… சைமன் கிளாஸ்ஸில் தான் இருக்கிறானா?” என்ற போது, அவர் குரலில் சிறு பதற்றம் இருந்தது.
அவரது பதற்றம், ஹரீஷையும் தொற்றிக் கொண்டது. ஆனால் அதை அவரிடம் காட்டி, அவரை கலவரப்படுத்த விரும்பாமல் இயல்பு குரலில், “இதோ, இப்போவே பார்த்து சொல்றேன் சார்.” என்றான்.
“குவிக்… நான் லைனில் இருக்கிறேன்.”
“ஓகே சார்” என்றவன் கிட்ட திட்ட சைமன் வகுப்பை நோக்கி ஓடினான். அங்கே போய் சைமனை அழைத்தான்.
வகுப்பில் இருந்த ஆசிரியர் வகுப்பை பார்த்துவிட்டு, “அவன் இல்லை” என்றார்.
ஹரீஷ் வரவழைத்த இயல்பு குரலில், “ஓகே சார்… தாங்க் யூ… அவன் வந்ததும் CSE ஸ்டாஃப் ரூம் வந்து, என்னை பார்க்கச் சொல்லுங்க.”
“ஓகே சார்” என்றதும் வேகமாக அகன்றவன், கைபேசியை காதிற்கு கொண்டு சென்று, “சார்” என்று ஆரம்பிக்க,
ராஜாராம், “நீங்க உடனே கேள்’ஸ் ஹாஸ்டல் போய் பாருங்க.”
“எஸ் சார்” என்றவன், பதற்றத்துடன் விடுதி நோக்கி விரைந்தான்.
இணைய காத்திருப்போம்…