வகுப்பிற்கு சென்ற திவ்யா, “எக்ஸ்கியுஸ் மீ சார்”
“எஸ் கெட் இன்” என்று ஹரீஷ் சொன்னதும் உள்ளே சென்றவள், மேடையில் நின்று கொண்டிருந்த அவன் அருகே சென்று, “என்னை டூ டேஸ் சஸ்பெண்டு செய்திருக்காங்க… நான் ஹாஸ்டல் கிளம்புறேன் சார்.” என்றாள்.
அவன் சிறு அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான். அப்பொழுது வகுப்பு முடிவதற்கான மணி அடிக்கவும், அவன் வெளியேறினான்.
அவள் இடத்திற்கு செல்ல, அங்கே வந்த விஜய், “என்னாச்சு திவி?” என்று வினவ, பவித்ராவும் அதே கேள்வியை கேட்டாள்.
திவ்யா புன்னகையுடன், “சைமன் என் மேல் தெரியாமல் இடிச்சதுக்காக நான் அவனை அடிச்சிட்டேன்… ஸோ என்னை டூ டேஸ் சஸ்பெண்டு செய்துட்டாங்க.”
பவித்ரா, “நாங்க சேர்மன் சார் கிட்ட உண்மையை சொல்றோம்.” என்றும்,
“அவனுக்கு என் கையில் இன்னைக்கு கச்சேரி தான்” என்று விஜய் கோபத்துடன் கூறினான்.
அப்பொழுது உள்ளே வந்த ஆசிரியர், “எல்லாரும் இடத்தில உட்காருங்க” என்றார்.
திவ்யா, “என்னை டூ டேஸ் சஸ்பெண்டு செய்துட்டாங்க சார்… டூ மினிட்ஸ்… நான் கிளம்பிடுவேன்.” என்றாள்.
அவர், “என்ன பிரச்சனை செய்த?”
“பைனல் EEE சைமனை அடிச்சிட்டேன்.” என்று புன்னகையுடன் கூற, ஆசிரியர் சிறு அதிர்ச்சியுடன், “என்ன?”
“எஸ் சார்… அதான் டூ டேஸ் சஸ்பெண்டு”
அவரோ மனதினுள், ‘நம்மளையும் அடிச்சாலும் அடிப்பா! எதற்கு வம்பு!’ என்று நினைத்தவர், “சரி…” என்றார்.
திவ்யா கையை நீட்டி, “சைமன் பேசியதை பற்றி யார் கிட்டயும் சொல்ல மாட்டோம்னு சத்யம் செய்யுங்க.” என்றாள்.
இருவரும் தயங்கவும்,
“காரணமா தான் சொல்றேன்… செய்யுங்க.” என்றதும், இருவரும் மனமின்றி சத்யம் செய்தனர்.
அப்பொழுதும் விஜய், “அவன் என்ன பேசினான்னு சொல்லாம தப்பா பேசினான் மட்டும் சொல்லி…”
“நோ… அதை மறந்துருங்க.” என்று கறாரான குரலில் கூறியவள், “விஜி, இப்போ நீ ஒரு காரியம் செய்யணும்”
“என்ன?”
திவ்யா சொன்னதைக் கேட்டு அவன் புன்னகையுடன் கட்டை விரலை உயர்த்தி, “டன்” என்றான்.
பவித்ராவின் முகத்திலும் புன்னகை அரும்பியது.
“ஓகே பை” என்றவள் ஆசிரியரிடம், “தேங்க் யூ சார்” கூறி அவள் கிளம்பினாள்.
திவ்யா, ஆண் ஆசிரியர்கள் அறை வழியாகத் தான் சென்றாள். ஆசிரியர் அறையை கடக்கும் பொழுது, அவளது கண்கள் ஹரீஷை பார்த்தது.
அப்பொழுது அவன், “திவ்யா” என்று அழைத்தான்.
‘இவன் எதுக்கு நம்மை கூப்பிடுறான்?’ என்ற எண்ணத்துடன் அவள் திரும்பி வந்து உள்ளே சென்றாள். அங்கே ஹரீஷ் மட்டுமே இருந்தான்.
அவன், “என்னாச்சு?”
“புரியல…”
“எதுக்கு சஸ்பென்ஷன்?”
“அதுவா! நான் பைனல் EEE சைமனை அடிச்சுட்டேன்”
“ஏன்?”
“அவன் என்னை இடிச்சான், நான் அடிச்சேன்.”
“தெரிந்து இடிச்சானா?”
“அது… இல்லை.. தெரியாம…” என்று அவள் சிறு தடுமாற்றத்துடன் கூற,
அவன் அவளை தீர்க்கமாகப் பார்த்து, “எதுக்கு அவனை அடிச்ச?”
அவன் கண்களை பார்க்காமல், “அதான்… சொன்னேனே” என்றாள்.
“நான் உண்மையை கேட்டேன்.” என்றதும், அவள் சட்டென்று அவன் முகத்தைப் பார்த்தாள்.
“அவன் மேல தப்பு இல்லாம அடிச்சு இருக்க மாட்ட… என்ன செய்தான்?”
அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். அவனுக்கு தன் மேல் நல்ல மதிப்பு இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தவள், அவனது கூற்றை கேட்டு இன்பமாக அதிர்ந்தாள்.
அவள் மகிழ்ச்சியுடன், “தேங்க்ஸ்” என்றாள்.
“எதுக்கு?”
“உனக்கு என் மேல் நல்ல எண்ணம் இல்லைனு நினைத்தேன்.”
அவள், அவனை ஒருமையில் அழைத்ததை உணரவில்லை.
ஹரீஷ் புருவம் உயர்த்தி, “யாரும் இல்லைனா, மரியாதை பலமா வருதே!”
அப்பொழுது தான் அவனை ஒருமையில் பேசியதை உணர்ந்தவள் நாக்கை கடித்து, “சாரி… அது…” என்று திணற,
அவன் மெல்லிய புன்னகையுடன், “இன்னும் என்னை சாரா ஏத்துக்க முடியலை?”
அவள் தன்னை ஆசிரியர் என்று தெரிவதற்கு முன், தன் மேல் உள்ள கோபத்தில் ஒருமையில் பேசிய பழக்கத்தில், இப்பொழுது பேசிவிட்டாள் என்று நினைத்தான்.
அவனது புன்னகையை ரசித்தவள் குறும்புடன், “சாரா ஏத்துக்கிட்டா மட்டும் பன்மையில் பேசுவேன்னு எப்படி எதிர்பார்க்கிறீங்க! அரவிந்த் சாரை தவிர, எல்லாரையும் என் பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது ஒருமையில் தான் பேசுவேன்.”
“ஓ! அரவிந்த்க்கு மட்டும் என்ன ஸ்பெஷல்?”
“அவர் ஒரு கருத்து கந்தசாமி… சரி அதை விடுங்க…! நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.”
“எதை வைத்து, உன் மேல் எனக்கு நல்ல எண்ணம் இல்லைனு நினைத்த?”
அவள் முறைப்புடன், “ரெண்டு முறை நீங்க பேசியதை வைத்து தான்”
“ரெண்டு முறையா?”
“ஆமா, ஒன்னு இன்னைக்கு காலைல… இன்னொன்னு ஆறு மாசத்துக்கு முன்னாடி தியேட்டரில் பேசினீங்க”
அவன் ஆச்சரியத்துடன் பார்க்கவும்,
“என்ன?”
“நீ அதை இன்னுமா மறக்கலை?”
‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்டியவள், “காலைல ஏன் அப்படி சொன்னீங்க? அன்னைக்கும் அப்படி தான்… தெரியாம இடிச்சதுக்கு வேணும்னு இடிச்ச மாதிரி பேசினீங்க!” என்று வருத்தமான குரலில் கேட்டாள்.
அவளது வருத்தத்தை உணர்ந்தவன் மெல்லிய குரலில், “சாரி… காலைல கோபத்தில் அப்படி பேசிட்டேன்…”
“அன்னைக்கு?”
“அது நீ இடிச்சதுற்கு முன்னாடி ஒரு பொண்ணு வேணும்னே மோதினா… அந்த கோபத்தில் இருந்தேன்… அதான்…”
அவனை மேலும் கீழும் பார்த்தவள், “பார்க்க அந்தளவுக்கு இல்லையே!” என்று கிண்டலாகக் கூறவும்,
“இதான் இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்குவது! ஒரு சார் கிட்ட பேசுற மாதிரி பேசு.” என்று சற்று கடுமையான குரலில் கூறினான்.
“சாரி”
“சைமன் என்ன செய்தான்?”
அவள் அமைதியாக இருக்கவும், “சேர்மன் சாருக்கு உண்மை தெரியுமா?”
அவள் ‘இல்லை’ என்று தலையை ஆட்டினாள்.
“ஏன்?”
இப்பொழுதும் அவள் மௌனத்தை பதிலாகத் தந்தாள்.
“அவன் உன்கிட்ட தப்பா ஏதும்….” என்று தயங்கி நிறுத்தினான்.
அவனை தீர்க்கமாகப் பார்த்தவள், “அப்படி நடந்திருந்தால் அவன் இந்நேரம் உயிருடன் இருந்திருக்க மாட்டான். சரி, இவ்வளவு தூரம் கேட்பதால் சொல்றேன்… விஷயம் உங்களை தான்டி வெளியே போகாது என்ற நம்பிக்கையில் சொல்றேன்… அவன் தப்பா பேசினான்… அதான் அடிச்சேன்.”
“என்ன பேசினான்?”
“ஒரு பெண் கணவனிடம் கூட பேச தயங்கிற விஷயத்தை, அவன் பேசினான்.”
அவன் கோபத்துடன், “இதுக்கு அவனுக்கு தானே பனிஷ்மென்ட் தரனும்… நீ ஏன்…?”
“என்னை மட்டும் பேசியிருந்தால், அவன் வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்தி இருப்பேன்..! அவன் பவித்ராவையும் சேர்த்து தப்பா பேசிட்டான்… அவ பெயருக்கு அவதூறு வந்திரக் கூடாதுன்னு தான் நான் சொல்லல…!”
“அது என்ன உன்னை மட்டும் பேசியிருந்தால் பிரச்சனை இல்லைங்கிற மாதிரி சொல்ற! உன் பெயர்…”
“அது அப்படி தான். சரி சார், நான் கிளம்புறேன்.” என்று கூறிக் கிளம்பினாள்.
செல்லும் அவளை யோசனையுடன் பார்த்தான்.
இணைய காத்திருப்போம்…