
விலகல் – 13
யோசனையில் இருந்த பவித்ராவிடம் திவ்யா, “சாப்பிடாம அப்படி இன்னும் என்னடி யோசிக்கிற?”
“இல்ல… காலைல அவர் மேல அவ்வளவு கோபமா இருந்த… ரெண்டு முறை அடிக்க கையை வேற ஓங்கியிருக்க! ஆனா, இப்போ லவ்ன்னு சொல்ற! எனக்கு உன் லாஜிக்கே புரியல..”
“காதலில் லாஜிக்கிற்கு இடமில்லை…” என்றவள் தீவிர குரலில், “அவன் மேல இப்பவும் எனக்கு கோபம் இருக்கத் தான் செய்யுது.”
“தெளிவா குழப்புறடி”
விஜய் பவித்ராவை பார்த்து, “குழம்புறதுக்கு, மூளைனு ஒரு சமாச்சாரம் வேணுமே!”
பவித்ரா அமைதியான குரலில், “உனக்கு குழப்பமா இல்லையா?”
“இல்லை” என்று அவன் பெருமை போல் கூற,
பவித்ரா நக்கலுடன், “ஹும்ம்… மூளை இருக்கப் போய் தான், நான் குழம்புறேன்… இல்லாததால் தான் நீ குழம்பல…!”
“பார்டா! கலாய்ச்சிட்டாங்களாம்!”
“இல்லையே! உண்மையை சொன்னேன்.”
“ஆமா, இவ பெரிய உண்மை விளம்பி!”
பவித்ரா திவ்யாவை பார்த்து, “இவன் கிடக்கிறான் லூசுப் பையன்… நீ சொல்லுடி”
விஜய் சிலிர்த்துக் கொண்டு எழ, பவித்ரா அலட்டிக்கொள்ளாமல் பார்க்க, திவ்யா புன்னகையுடன், “விடு விஜி.”
“இந்த சுண்டைக்காய் இப்பலாம் ரொம்ப பேசுது… நல்லது இல்லை… சொல்லி வை.” என்றபடி அமர்ந்தான்.
பவித்ரா அவனுக்கு அழகு காட்டி முகத்தை திருப்பிக் கொள்ள, அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.
திவ்யா பவித்ராவிடம், “இப்போ உனக்கு என்ன சந்தேகம்? கோபம் இருக்கும் இடத்தில எப்படி காதல் வந்தது? காதல் வந்த பிறகும், கோபம் எப்படி இருக்குது என்றா?”
“ஹும்ம்”
“இன்னைக்கு அவனைப் பார்த்ததும் ஒரு ஈர்ப்பு வந்தது தான்… ஆனா, ஈர்ப்பு வேறு காதல் வேறு…! அவனோட தைரியமும், ஆளுமையும் எனக்கு பிடித்து இருக்கு. அவனோட தீர்க்கமான நேர் கொண்ட பார்வை, எனக்குள் ஊடுருவி அந்தப் பிடித்ததை அவன் மீதான கோபத்தையும் மீறி, காதலா மாத்திடுச்சு… அவனை பார்க்கிறப்ப, எனக்கு என்னவோ அவன் எனக்கு நெருக்கமானவன் மாதிரி தோனுது… அது ஏன்? எப்படினு எனக்கு தெரியல…! சில உணர்வுகளுக்கு விளக்கம் கிடையாது.” என்றவள் மெல்லிய புன்னகையுடன் தோழியை பார்த்து, “என்ன, முதல் கேள்விக்கு பதில் கிடைச்சுதா?” என்று வினவினாள்.
அவளது விளக்கத்தை கேட்டு, சிறிது வாய் திறந்தபடி அமர்ந்திருந்த பவித்ராவின் தலை, அவளையும் அறியாமல் ‘ஆம்’ என்பது போல் ஆடியது.
திவ்யா, “அடுத்தது… அவன் மேல கோபம் குறைந்து இருந்தாலும், மறையலை. என்ன தான், நான் செய்தது தப்புனாலும்… அவன் என்னை அடிச்சது தப்பு தான்…! என் அப்பா கூட என்னை அடிச்சது இல்லை.” என்றவளின் குரல் சிறிது பிசிறியது,
ஆனால் அடுத்த நொடியே, தன்னை சமாளித்து மெலிதாகப் புன்னகைத்தாள்.
பவித்ரா அவளது தடுமாற்றத்தை கண்டு கொள்ளாதது போல், “சரி… அடுத்து என்ன செய்யப் போற?” என்று தோழியின் எண்ணத்தை திசை திருப்பினாள்.
“என்னைப் பற்றிய அவனோட எண்ணத்தை தெரிஞ்சிக் கிட்டதுக்கு அப்புறம், என் காதலை சொல்லணும்.”
“இருந்தாலும், உன்னோட வேகத்தை பார்த்து எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு.”
திவ்யா விரிந்த புன்னகையுடன், “நீ பயப்படலைனா தான் அதிசயம்!” என்றாள்.
அப்பொழுது அங்கே வந்த சைமன் என்ற மின் மற்றும் மின்னணுவியல்(EEE) துறையை சேர்ந்த இறுதியாண்டு மாணவன், மகிழ்ச்சி மற்றும் நக்கல் குரலில், “என்ன திவ்யா! சேதாரம் அதிகமோ!” என்றவன், “ச..! அந்த கண்கொள்ளா காட்சியை நான் பார்க்காம போயிட்டேனே!” என்று போலியான வருத்தக் குரலில் முடித்தான்.
விஜய், “டேய் வேணாம்!” என்றபடி கோபத்துடன் எழுந்தான்.
அது நால்வர் அமரும் சதுர மேஜை. திவ்யாவும் பவித்ராவும் எதிர் எதிரே அமர்ந்திருக்க, விஜய் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தான். சைமன், விஜய் எதிரில் இருந்த இருக்கை அருகே நின்றிருந்தான்.
விஜய்யின் கையைப் பற்றி அமர வைத்த திவ்யா, அலட்டிக் கொள்ளாமல், “விடு விஜி… இவனெல்லாம் ஒரு ஆள்னு உன் எனர்ஜியை ஏன் வேஸ்ட் செய்ற?”
சைமன் கோபத்துடன் திவ்யா அருகே வந்து, “அடி வாங்கியும் உன் திமிர் அடங்கலயே!” என்றான்.
திவ்யா அவனை கண்டு கொள்ளாமல், உணவில் கவனத்தை திருப்பினாள்.
சைமன் அதிகரித்த கோபத்துடன், “உன் திமிரை அடக்கல… என் பெயர் சைமன் இல்லைடி!”
அவனை நிமிர்ந்து பார்த்த திவ்யா, “உன் பெயர் சூட்டும் விழாக்கு சொல்லி அனுப்பு, மறக்காம வரேன்.” என்றதும் விஜய் வாய்விட்டு சிரித்தான்.
சைமன் விஜய்யை பார்த்து, “ஆனாலும், உன்னை பாராட்டியே ஆகனும்டா! அது எப்படிடா ஒரே நேரத்தில் ரெண்டு பிகரை கரெக்ட் பண்ணின!”
விஜய் கோபத்துடன், “டேய்” என்று எழுந்தான்.
திவ்யா பல்லை கடித்துக்கொண்டு, “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை! நம்ம நட்பை பற்றி இவனுக்கெல்லாம் புரியாது.”
சைமன் சிரித்தபடி நக்கல் குரலில், “நட்பு!” என்றவன் விஜயை பார்த்து, “அது எப்படிடா ஒரே நேரத்தில் ரெண்டு பேரையும் திருப்திப் படுத்துற! முடியலைனா சொல்லு… நான் வேணும்னா இவளை கவனிச்சிக்கிறேன்.” என்றவன் துச்சாதனன் பார்வையுடன் பவித்ராவை நெருங்க,
பவித்ராவை மறைத்தபடி வந்து நின்ற விஜய், கோபத்துடன் சைமன் சட்டையை பிடிக்கும் முன், திவ்யா சைமனின் கன்னத்தில் அடித்து இருந்தாள்.
பவித்ரா சிறு பயத்துடன் விஜய்யின் பின் மறைந்தபடி, அவனது கையை இறுக்கமாகப் பற்றினாள். பவித்ராவின் பிடியில் இருந்தே அவளது பயத்தை உணர்ந்த விஜய், அவளை திரும்பிப் பார்த்து கண்களில் தைரியம் அளித்தான்.
சைமன் திவ்யாவை அடிக்க கை ஓங்க, அவன் கையை தடுத்த திவ்யா, “சைமன், நீ இயல்பில் கெட்டவன் இல்லை… என்னை காயப்படுத்துவதா நினைச்சு உன் தரத்தை நீயே தாழ்த்திக்காத!”
சைமன் தனது பேச்சில் பவித்ராவை இழுத்தது மட்டுமின்றி, அவளை நெருங்கவும்… கோபம் கொண்டு சட்டென்று அவனை அடித்த திவ்யா, அடித்த பிறகே சற்று சிந்தித்தாள்.
பிரச்சனை பெரிதாகி, பவித்ராவின் பெயர் தேவை இல்லாமல் பேசப்படுவதை தவிர்க்கவே, தற்போது அமைதியாகப் பேசினாள்.
சைமன் கோபம் மற்றும் நக்கல் குரலில், “என்ன! சாத்தான் வேதம் ஓதுது?”
“நான் சாத்தான்னா, நீ யாரு?”
“ஏய்! நீ ரொம்ப பேசுற…”
“நீ மட்டும் குறைத்துப் பேசுறியா?”
“அப்படி என்ன நான் இல்லாததை கேட்டுட்டேன்.”
“இவனை எல்லாம் சும்மா விடக் கூடாது திவி” என்றபடி விஜய் நகரப் பார்க்க, பவித்ரா பயத்தில் இன்னும் இறுக்கமாக அவன் கையைப் பற்றினாள். “விஜி” என்று அழைத்த திவ்யா கண்ணசைவில், ‘வேண்டாம்’ என்று நண்பனை தடுத்தாள். சைமன் திவ்யாவின் செய்கையை, சிறு யோசனையுடன் பார்த்தான்.