விலகல் – 5
நாட்கள் நகர, அவர்களது மூன்றாம் ஆண்டு இறுதி தேர்வு வந்தது. கடைசி தேர்வை முடித்துக்கொண்டு மூவரும் வெளியே வந்தனர்.
விஜய், “பேப்பர் ரொம்ப கஷ்டமா இருந்தது… நீங்க எப்படி எழுதி இருக்கீங்க?”
பவித்ரா, “ஓகே” என்று கூற,
திவ்யா, “கஷ்டமா இருந்ததா? எனக்கு அப்படி ஒன்னும் தெரியலையே!”
விஜய், “நீ ஒரு புரியாத புதிர் தான் திவி”
அவள் சிரிக்கவும்,
“அது எப்படி கஷ்டமான பேப்பரை எல்லாம் அசால்ட்டா டீல் செய்துட்டு பஸ்ட் மார்க் வேற வாங்குற?”
அவள் தோள் குலுக்கவும் அவன் கடுப்புடன், “பதில் சொல்ல மாட்டியே! ஏன் வேணும்னே சில பேப்பரில் பெயில் ஆகுற? அதுவும் ரொம்ப ஈஸியான பேப்பரில்?”
அவள் உதட்டைப் பிதுக்க, அவன், “நான் உன் நண்பன் தானே திவி?”
“என்னை பற்றி சொன்னால் தான், என்னை உன் தோழியா…”
“லூசு மாதிரி பேசாத! இதெல்லாம் நீ வேணும்னு செய்றனு தெரியாம இல்லை… ஏதோ உன் மனசைப் போட்டு படுத்துது… அது என்னன்னு தெரிந்து, என்னால் முடிந்தால் அதை தீர்க்கத் தானே கேட்கிறேன்”
“நீ தீர்க்கக் கூடியதா இருந்தா உன் கிட்ட சொல்ல மாட்டேனா?”
“அதை என் கிட்ட சொன்னா தானே தெரியும்!”
“என் கஷ்டம் என்னோட போகட்டும்.”
“அப்போ, நான் யாரு உனக்கு?”
“நீ எப்படி நல்ல தோழனா என் துயர் நீக்க நினைக்கிறியோ, அதைப் போல தான் நானும் நல்ல தோழியா என் துயரை தெரிந்து நீ வருந்த வேண்டாம்னு நினைக்கிறேன். என்னை நினைத்து இவ ஒருத்தி வருந்துறது போதாதா?”
“ஏன்டி இப்படி செய்ற?”
“ப்ளீஸ்டா… அதைப் பற்றி பேசி, என் ரணத்தை கிளற நான் விரும்பலை… எனக்கு உதவி வேணும்னா, உன்னைத் தான் கேட்பேன்.”
“ச்ச்… போடி”
“அங்க பாரு… அருண் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிறான்.”
“இப்போ மட்டும் என்னை கிளப்புறதில் குறியா இருப்பியே!”
அவள் புன்னகைக்கவும், “சரி நான் கிளம்புறேன்… ரெண்டு பேரும் சீக்கிரம் கிளம்புங்க.” என்று அக்கறையுடன் கூறியவன், மெல்லிய புன்னகையுடன் பவித்ராவை பார்த்து,
“ஏய் குள்ளக் கத்தரிக்கா, திவியை பத்திரமா அவ வீட்டில் விட்டுட்டு போ.” என்று கூறியவன், அவள் அடிக்கும் முன் சிட்டாகப் பறந்தான்.
திவ்யா, “விஜி” என்று அழைக்கவும், அவன் திரும்பிப் பார்த்தான்.
அவள் அவனை நோக்கி வரவும், அவன் வேகமாக அவள் அருகே ஓடி வந்து, “என்ன?”
“பசங்க கூட சேர்ந்து ஊர் சுற்றி கூத்தடி. ஆனா, நைட் தண்ணி அடிச்ச… கொன்னுடுவேன்!”
அவன் சிரிக்கவும், அவள், “இளிக்காத! கொன்னுடுவேன்!”
“இன்னைக்கு மட்டும்… ஒரே ஒரு பீர்… ப்ளீஸ்டி…”
“ஓகே குடிச்சுக்கோ.” என்றவள் பளிச்சிட்ட அவன் முகத்தை பார்த்தபடி, “ஆனா, இன்னைக்கு தான் நான் உன்கிட்ட பேசும் கடைசி நாள்.”
அவன் முறைக்கவும், “நான் சொன்னது சொன்னது தான்… அதுக்கு மேல உன் இஷ்டம்!” என்று விட்டு பவித்ராவுடன் நகர்ந்தாள்.
“ஓகே… நீ சொன்னதை கேட்கிறேன்.” என்று அவன் கடுப்புடன் கத்திவிட்டு செல்ல, திவ்யாவின் இதழ் புன்னகையில் மலர்ந்தது.
இருவரும் கல்லூரி உணவகத்திற்குச் சென்றனர்.
பவித்ரா, “எப்படிடி, இவனை இவ்ளோ ஈஸியா டீல் பண்ற?”
“ஏன்னா, அவன் என்னோட நண்பன்”
“எனக்கும் தான் நண்பன்”
“ஆனா, உன்னதை விட எங்க நட்பு ஆழமானது… நீ அவனை நண்பனா ஏத்துக்கிட்டது, என்னோட நண்பன் என்பதால. ஆனா நாங்க அப்படி இல்லையே! எனக்கு நீ எப்படியோ, அப்படி தான் அவனும்.”
“அப்போ… நானும், அவனும் ஒன்னா?”
“குறுகிய காலமா இருந்தாலும், அவனும் உன்னைப் போல தான் எனக்கு...! எப்படி சொல்ல உனக்கு? எதையும் எதிர்பார்க்காம அன்பை, நட்பை, நம்பிக்கையை, பாதுகாப்பை தருபவன் அவன்…! உன்னதும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாதது தான். ஆனா என்னைப் பற்றி எதையுமே தெரிஞ்சுக்காம, அதை போர்ஸ் பண்ணி கேட்காம, என்னை எனக்காக ஏற்றுக்கொண்டு துணை நிற்பவன் அவன்…!”
“என்ன போர்ஸ் பண்ணலை?”
“இப்போ கேட்டதை சொல்றியா? அவன் நினைத்து இருந்தால் என்கிட்ட இருந்து விஷயத்தை வாங்கி இருக்கலாம். என்னை நண்பனாக நினைத்தால் சொல்லுனு சொல்லி இருந்தா, நான் சொல்லி இருப்பேன். அது அவனுக்கும் தெரியும். ஆனா, அப்படி கேட்கலையே… இன்னொன்னு…” என்றவள் தோழியின் கன்னத்தை கிள்ளி புன்னகையுடன் விளையாடியபடி, “என் செல்ல பவி கிட்ட இருக்கும் பொசஸிவ்நெஸ் அவனிடம் கிடையாது. அவன் தெளிவா இருக்கிறான்…”
“போடி” என்று தோழியின் கையை தட்டிவிட்டபடி அவள் சிணுங்க,
“இப்படி சிணுங்கும் போது நீ செம்ம அழகுடி” என்று கூற,
பவித்ரா சிறு வெக்கத்துடன், “போடி லூசு” என்றாள்.
அப்பொழுது அங்கே வந்த ஒரு இளம் பெண், திவ்யாவிடம் புன்னகையுடன் இன்னட்டை(டைரி-மில்க் chocolate) நீட்டினாள்.
நிமிர்ந்து பார்த்த திவ்யா அவளை முறைக்கவும்,
“இன்னைக்கு என் பர்த் டே அதான்…” என்றாள் அவள்.
திவ்யா இறுகிய குரலில், “பவி, வா கிளம்பலாம்.” என்றபடி எழுந்தாள்.
அந்த இளம் பெண், “ப்ளீஸ் கா”
திவ்யாவோ, அவளை தீ பார்வை பார்த்தாள்.
அவள், “பவிக்கா, நீங்களாவது சொல்லுங்களேன்” என்றதும் தான் தாமதம்,
பவித்ரா நெஞ்சில் கை வைத்தபடி, ‘ஆத்தி, மாரியாத்தாவை என் பக்கம் திருப்புறாளே!’ என்று மனதினுள் அலறினாள்.
கோபத்துடன் தோழி பக்கம் திரும்பிய திவ்யா, தோழியின் நிலை அறிந்து சின்னதாக சிரிப்பு வந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கிளம்ப, பவித்ரா, அவளைத் தொடர்ந்து ஓடினாள்.
கல்லூரி விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த திவ்யாவின் முன், அந்த இளம் பெண் வந்து வழியை மறித்தாள்.
அவள், “ப்ளீஸ் கா… வாங்கிக்கோ”
“என்னை அக்கானு கூப்பிட்ட! பிச்சிடுவேன்!”
அந்த இளம் பெண் தலையை சரித்து சிரிப்புடன், “அப்போ, சிஸ்னு கூப்பிடவா?”
திவ்யா முறைக்கவும், அவள் அதே புன்னகையுடன், “அப்போ திவினு கூப்பிடவா?”
“நீ எப்படியும் கூப்பிட வேணாம்… இனி என்னை வந்து பார்க்காத!”
“அது முடியாதே!”
“ஏய்! உனக்கு ஒரு முறை சொன்னா புரியாது?”
“உன் தங்கை, உன்னைப் போல் தானே இருப்பேன்.”
“ஏய்… என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு… ஓடிப் போய்டு.”
அவள் அமைதியாக இன்னட்டை நீட்டவும்,
திவ்யா கோபத்துடன், “இந்த ஆடு பகை குட்டி உறவு கதையெல்லாம் என்னிடம் வேண்டாம். என்னைப் பொறுத்தவரை ஆடும் பகை தான், குட்டியும் பகை தான்.”
“பெண் ஆடு பகை… குட்டி ஆடும் பகை. ஆனா, ஆண் ஆடு மட்டும் உறவோ?”
திவ்யா நக்கலாக வாய்விட்டு சிரிக்கவும்,
“அப்பா மேல் உனக்கு சாப்ட் கார்னர் இருப்பது எனக்குத் தெரியும்.”
“ஒரு மண்ணும் இல்லை…”
“கத்தினால் பொய் உண்மை ஆகிடாது”
“உன் எண்ணத்திற்கு நான் பொறுப்பாக முடியாது…”
“நான் சொன்னது உண்மைனு எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும் கா.”
திவ்யா கோபத்துடன், “எனக்கு யாரும் உறவு இல்லை… அதுவும் உன் அப்பா நிச்சயம் இல்லை.”“என் அப்பா இல்லை, நம்ம அப்பா.”