அவனது சிரிப்புச் சத்தத்தில் திரும்பியவள், சிரிக்கும் போது அவன் முகத்தின் அழகை ஒரு நொடி ரசித்து, பின் தோள்களை குலுக்கியபடி நகர்ந்தாள்.
அவன் அவரிடம், “அந்தப் பொண்ணு சொன்னது போல பேசுறதுக்கு முன் யோசித்து பேசுங்க… ஏன்னா, அந்தப் பொண்ணு யாருன்னே எனக்கு தெரியாது.” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.
அவர் மனைவியிடம், “அந்தப் பொண்ணு பாப்-கார்ன் கொட்டிட்டு போறா! வாய் திறக்காம ஜடம் மாதிரி நிக்கிற!”
“ஹும்ம்… நீங்கோ தேவை இல்லாம வாய் கொடுத்து மாட்டின்டேள்… அதுக்கு நான் என்ன செய்ய? அந்தக் குழந்தை சொன்னது போல, நான் உங்களுக்கு அதிகம் தான்… என்னை திட்டுறேளா!” என்ற பிறகு, ‘அவர் மறு பேச்சு பேசுவார்? அதற்கு அவருக்கு தைரியம் வரும்!’
அவர், ‘நேக்கு நேரமே சரியில்லை.’ என்று மனதினுள் புலம்பியபடி மனைவிக்கு வேண்டியதை வாங்கச் சென்றார்.
……………….
இதைக் கூறி முடித்த திவ்யா, “அவனோட கோபத்துக்கும், அந்த சிரிப்பிற்கும் சம்பந்தம் இல்லை. அதான், அவன் குணம் என்னன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.”
“நீ ஒரு ஒரிஜினல் பீஸ்டி… ஆனாலும் அந்த மாமா கொஞ்சம் பாவம்”
“மாமாவா?”
“அய்யர் வீட்டு லேடினா, மாமி சொல்வோம் தானே! அந்த மாதிரி மாமா.”
“அதுக்காக, எவனையோ மாமா சொல்லுவியா?”
“சரி… அந்த ஆள்… போதுமா?”
“ஹும்ம்…”
“அவன் உன்னை எப்படி அடிக்காம விட்டானோ?”
“அவன் அடிக்கலன்னு உனக்கு ரொம்ப வருத்தம் போல!”
“லூசு!”
“அதை நீ சொல்லாத.”
“நான் என்ன லூசா?”
“பின்ன இல்லையா?”
பவித்ரா முறைக்க, அதைக் கண்டு கொள்ளாமல், “அவன் அடிக்க கையை தூக்கினான்… ஆனா, என்ன நினைத்தானோ விட்டுட்டான்…”
“உனக்கு பயமா இல்லையா?”
“எதுக்கு பயப்படனும்? என் மேல தப்பு இருந்தா தானே பயப்படனும்? நியாயமா பார்த்தா, அவன் பேசியதுக்கு நான் தான் அவனை அடித்து இருக்கணும். சரி, பொது இடமாச்சேனு விட்டுட்டேன். ஆனா, அவனால் பாப்-கார்ன் வேஸ்ட்டா போச்சு… முன்னூற்றி அறுவது ரூபாய் தண்டம்.”
“அதை கொட்டுறதுக்கு முன் யோசித்து இருக்கணும்.”
“அப்போ, அதானே என் கையில் இருந்தது.”
“சரி… அவன் அடிச்சு இருந்தா, என்ன செஞ்சிருப்ப?”
“ஸோ சிம்பிள்… பதிலுக்கு நான் அவனை அடித்து இருப்பேன்.”
“அடிப்பாவி” என்று பவித்ரா நெஞ்சை பிடிக்க,
“ஒரு நாள் நிஜமாவே உனக்கு நெஞ்சு வலி வரப் போகுது.”
“உன் வாயில் நல்ல வார்த்தையே வராதா?”
“நீ செய்றது அப்படி தானே இருக்குது”
பவித்ரா அவளை முறைக்க, அப்பொழுது அங்கே வந்த விஜய், “ஹாய் கேர்ள்ஸ்… வாட்’ஸ் அப்?”
திவ்யா, “என்ன? உன் நீண்ட நாள் கனவு நிறைவேறிருச்சு போல!”
“என்ன?”
“அந்த சுனிதா கூட கடலை போட்டுட்டு தானே வர… இத்தனை நாள் உன்னை கண்டுக்காதவ, இன்னைக்கு உன் கிட்ட பேசிட்டா போல!”
“ஹி…ஹி…ஹி”
“போதும் வழியாதே! சகிக்கலை.” என்று பவித்ரா கூற, அவன் அவளை முறைத்தான்.
திவ்யா “நான் சொன்னது சரி தானே!”
“எப்படி? பார்த்தியா?”
“இதை வெத்தலையில் மை தடவியா பார்க்கணும்! அதான் உன் முகத்தை பார்த்தாலே தெரியுதே!”
அவன் மீண்டும் அசடு வழிய, இப்பொழுது இருவரும், “டேய் வேணாம்… சிரிக்க மட்டும் செய்யாத! அழுதுருவோம்!” என்று கூற,
அவன், “போங்கடி… உங்களுக்குப் பொறாமை”
“பொறாமை பட்டுட்டாலும்…” என்று பவித்ரா நொடித்துக்கொள்ள,
“ஒரு ஆமையும் இல்லை” என்று திவ்யா கூறினாள்.
“இருந்தாலும், இது தான்னு எப்படி கண்டுபிடிச்ச?”
“பேட் டாங்கி ஸ்மால் வால்…”
பவித்ரா, “என்னடி சொல்ற”
விஜய், “கழுதை கேட்டா குட்டி சுவர்னு சொல்றா… நீயெல்லாம் ஒரு காலேஜ் ஸ்டுடென்ட்”
“போடா… நீங்களும் உங்க பாஷையும்.”
“இது தான் மா காலேஜ் பாஷை”
பவித்ரா, “சரி அதை விடு… நீ அந்த சுனித்தாவை லவ் பண்றியா?”
விஜய் பதில் சொல்லும் முன் திவ்யா, “இது சும்மா டைம் பாஸு.” என்று கூற,
அவன் புன்னகையுடன் காலரை தூக்கியபடி, “யா…” என்றான்.
பவித்ரா, “ஓ! கடலை போடுறதுக்கு கூட ஆள் செலக்ட் செய்து தான் போடுவீங்களோ!”
“பின்ன! ஐயா யாரு? என் லெவல் என்ன?”
தோழிகள் இருவரும் துப்புவது போல் செய்கை செய்ய,
“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்றான்.
அப்பொழுது வகுப்பு தொடங்குவதற்கான மணி அடிக்கவும், அவரவர் இடத்தில் அமர்ந்தனர்.
பவித்ரா, “இப்போ என்னடி யோசனை?”
“வேற என்ன! இன்னைக்கு என்ன கலாட்டா செய்யலாம்னு தான்.”
“வேணாம்டி… என்னால முடியலை…”
அப்பொழுது தங்ககுமார் வகுப்பறையினுள் நுழையவும்,
திவ்யா, “மில்கயா” என்றாள்.
“என்னடி சொல்ற?”
“கண்டுபிடிச்சிட்டேன்னு சொன்னேன்.”
“அதுக்கு எதுக்கு மில்கயா சொன்ன?”
“உன்னையெல்லாம் வச்சிட்டு! நான் சொன்னதற்கு அது தான் அர்த்தம்… த்ரீ இடியட்ஸ் படத்தில் ஆல் இஸ் வெல் பாட்டு முடிஞ்சதும், அமீர்கான் அப்படி தான் கத்துவான்.”
“ஓ” என்றவள் அடுத்த நொடியே கலவரத்துடன், “என்னத்தைடி கண்டு பிடிச்ச?”
“ஹும்ம்… நேத்து சொன்னதை செய்திற வேண்டியது தான்”
“நேத்து என்ன சொன்ன?”
“திருவிழாவில் காணாமப் போன பக்கியாட்டம், நீ இந்த நொந்த குமார் கிட்ட மாட்டிட்டு முழிச்சப்ப, என்ன சொன்னேன்?”
“முன்ன பின்ன தப்பு செஞ்சா தானே தெரியும்?”
“சின்ன வயசில் இருந்து என் கூடவே இருக்கிறவ, இந்நேரம் இதில் Ph.d வாங்கியிருக்க வேணாமா?”
பவித்ரா அவளை முறைக்க,
அப்பொழுது ஆசிரியர், “பவித்ரா, திவ்யா கெட் அப்” என்றார்.
அவர்கள் எழுந்ததும், “இப்போ நான் என்ன நடத்தினேன் சொல்லுங்க.”
பலகையில் எழுதி இருந்த தலைப்பை பார்த்துவிட்டு பவித்ரா ஏதோ சொல்ல வர,
“நீ இரு… திவ்யா முதல்ல சொல்லட்டும்” என்றார்.
அந்த தலைப்பைப் பற்றி சரியாகக் கூறியவள் “ஆனா” என்று நிறுத்தி, அவர் ஒரு இடத்தில் தவறாகக் கூறியதை சுட்டிக் காட்டி கூறவும்,
அவர் மட்டுமின்றி மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
அவள் சிறு தோள் குலுக்கலுடன் இருக்கையில் அமர்ந்து, தோழியின் கையை இழுத்து அவளையும் அமரச் செய்தாள்.
ஒருவாறு அதிர்ச்சியில் இருந்து வெளி வந்த ஆசிரியர், “குட்” என்று தன்னை சமாளித்தவராக கூறிவிட்டு, “இனி அடுத்த டாபிக் பற்றி பார்ப்போம்.” என்றபடி வகுப்பை தொடர்ந்தார்.
பவித்ரா மகிழ்ச்சியுடன் தோழியை பார்க்க, அவளோ, “ரொம்ப சந்தோஷப் படாதே… சும்மா அவருக்கு ஷாக் கொடுக்க தான் பதில் சொன்னேன்.” என்றாள்.