விலகல் – 3
அடுத்த நாள், கல்லூரியின் முதல்வர் அறையில் விஜய் மற்றும் பவித்ரா தலை குனிந்தபடி நிற்க, திவ்யா எப்பொழுதும் போல் கெத்தாக நிற்க, அவர் தொண்டை தண்ணீர் வற்ற கத்திக் கொண்டிருந்தார்.
அரை மணி நேரமாக தொடர்ந்து திட்டியவர் இறுதியாக, “பவித்ரா! உன் கிட்ட இதை எதிர்பார்க்கலை.” என்று கூற,
விஜய், ‘இதை தானய்யா அப்போவே சொன்ன, திரும்ப முதல்ல இருந்தா!’ என்று மனதினுள் அலறினான்.
“இவங்களுடன் சேர்ந்து உன் லைஃப் ஸ்பாயில் செய்துக்காத! அவ்ளோ தான் சொல்வேன்.” என்று கூறியவர் மேஜை மீது இருந்த தண்ணீரைப் பருகினார்.
அவர் நீரை குடித்து முடித்ததும் திவ்யா, “முடிச்சிட்டீங்களா சார்?” என்று கேட்க, அவர் அவளை முறைத்தார்.
அவளோ அலட்டிக்கொள்ளாமல், “அப்போ, முடிச்சிட்டீங்க!” என்று கூறியபடி, காதில் இருந்த பஞ்சை எடுத்து மேசை அருகே இருந்த குப்பை கூடையில் போட்டாள்.
பவித்ரா ‘அடி பாவி!’ என்று மனதினுள் அலறியபடி தோழியை பார்க்க, விஜய் சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றான்.
கல்லூரி முதல்வரின் நிலையை நான் சொல்லியா தெரிய வேண்டும்! இப்பொழுது மட்டும் அவருக்கு இரத்த அழுத்தத்தை பரிசோதித்து இருந்தால், பாதரசம்(Mercury) அந்தக் கருவியை உடைத்துக் கொண்டு வெளியே வந்திருக்கும்.
திவ்யா அமைதியான குரலில், “எனக்கு ஒரு சந்தேகம் சார்… நீங்களும் தான் காலேஜ் ஹவர்ஸில் தியேட்டருக்கு வந்தீங்க… நாங்க செய்தது மட்டும் தப்பா?” என்று வினவ,
அவர் கோபத்துடன் முறைத்தார்.
“என்ன சார்?”
“நீங்களும், நானும் ஒன்னா?”
“தப்பை யார் செய்தாலும், தப்பு.. தப்பு தானே!”
“அதிகமா பேசாத!”
“உண்மையை தானே சொன்னேன்.”
“எது உண்மை? நான் நேத்து லீவ் எடுத்து இருந்தேன்.”
“ஓ! அப்போ இனி நாங்களும் லீவ் எடுத்துட்டு படத்துக்குப் போறோம் சார்” என்று கூறிப் புன்னகைத்தாள்.
“சேர்மன் உன் ரிலேடிவ்னு அதிகமா பேசாத!”
அவள் உடல் இறுகியது.
அவர் தொடர்ந்தார், “இதான் உனக்கு கடைசி எச்சரிக்கை…! சேர்மன் ரிலேடிவ்னு ரொம்ப ஆடாத! இனி ஏதாவது கம்ப்ளைன்ட் வந்தது, உன்னோட அப்பாகிட்ட தான் பேசுவேன்.”
அவள் இறுகிய குரலில், “அடுத்த முறை என்ன? இப்பவே கூட யாருக்கு வேணாலும் போன் செய்து பேசுங்க.”
“யாருக்கோ இல்லை, உன் அப்பாகிட்ட பேசுவேன்னு சொன்னேன்”
“அதைத்தான் நானும் சொல்றேன்… யாருக்கு வேணாலும் பேசுங்க… அப்புறம் இன்னொரு விஷயம்… எனக்கும் சேர்மனுக்கும் எந்த உறவுமில்லை. அவர் என் ரிலேடிவ் கிடையவே கிடையாது.” என்று சிறிது ஆவேசமாகப் பேசியவளை, விஜய் மற்றும் முதல்வரும் வாயடைத்துப் போய் பார்த்திருக்க, பவித்ரா அவளது கையை ஆதரவாக, இறுக்கமாகப் பற்றினாள்.
தோழியின் பிடியில் சற்று இயல்பிற்குத் திரும்பியவள், அமைதியாக நின்றாள்.
“சேர்மன் சார் தான் உன்னை ரிலேடிவ்னு சொன்னார்”
பவித்ரா தோழியை கவலையுடன் பார்க்க, திவ்யாவின் உடலும் மனமும் மீண்டும் இறுகியது.
“சேர்மன் சார் பொய் சொல்ல மாட்டார்… இதில் பொய் சொல்லும் அவசியமும் அவருக்கு இல்லையே!”
தன் உணர்வுகளை கட்டுப்படுத்திய திவ்யா, “யாருக்கோ போன் செய்து பேசுவேன்னு சொன்னீங்களே! அவரிடம் கேட்டுப் பாருங்க, உங்க சேர்மன் சார் எனக்கு ரிலேடிவ்வானு!” என்றவள், அவரது பதிலை எதிர்பாராமல் வெளியேறினாள்.
அவரோ குழப்பத்துடன், “யாரிடம் கேட்கச் சொல்றா? இவ பேசுறதே புரியல…” என்று தனக்குத் தானே கூறியவர், பவித்ராவைப் பார்த்து, “உனக்கு புரிஞ்சுதா?”
“அவளோட அப்பாகிட்ட பேசுறேன்னு சொன்னீங்களே சார்… அதைத் தான் சொல்றா.” என்று மென்குரலில் கூற,
அவர் மேலும் குழம்பியவராக, “அப்பாவையா யாரோனு சொல்லிட்டு போறா!”
தோழியின் மனம் அறிந்த பவித்ரா, மெளனமாக நின்றாள். உடனிருந்த விஜய்யும், அவரது நிலையில் தான் இருந்தான்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய பவித்ரா, “சார்” என்று அழைக்க,
அவர், “இனி இப்படி செய்யாதீங்க… போங்க” என்று கூறவும், இருவரும் வேகமாக வெளியே சென்றனர்.
விஜய் வெளியே வந்ததும், “திவி குழப்பியதில் பனிஷ்மென்ட் எதுவும் கொடுக்காம அனுப்பிட்டார்.” என்றான்.
அதை கவனிக்காத பவித்ராவின் கண்கள் தோழியை தேடியது.
“திவி எங்க?” என்றவன், “சேர்மன் சார் உண்மையில் திவி ரிலேடிவ் இல்லையா?”
“…”
“பவி” என்று அவன் சற்று குரலை உயர்த்தவும்,
“இம்சை, கொஞ்ச நேரம் அமைதியா இருக்கிறியா!”
விஜய் அவளிடம் சண்டை போட வாய் திறக்கப்போகையில், “திவி அங்க இருக்கிறா” என்றபடி வேகமாக தாளாளர் அறை நோக்கிச் செல்லவும், அவனும் வேகமாகச் சென்றான்.
தாளாளர் அறை வாசலில் இறுக்கத்துடன் நின்றிருந்தவளைப் பார்த்து பவித்ரா, “திவி” என்று சிறு கலக்கத்துடன் அழைக்க,
அவளோ தோழியின் முகம் பார்க்காமல், “நீ கிளாஸ்க்கு போ” என்றாள்.
“நான் சொல்றதை கேளுடி…”
கோபமாக திரும்பிய திவ்யா, “உன்னை கிளாஸ்க்கு போனு சொன்னேன்.” என்று கூறினாள்.
அவள் குரலை உயர்த்தவில்லை. ஆனால், அவளது கண்களில் தெரிந்த கோபம் எனும் ஜுவாலை கண்டு, விஜய் அதிர்ச்சி மற்றும் சிறு பயத்துடன் ஓரடி பின்னால் நகர்ந்தான்.
அவன் மனதினுள், ‘பாட்ஷா பாய் ‘உள்ளே போ’ சொன்ன எஃபக்ட்… ஒருவேள அந்த மாதிரி ஏதும் பிளாஷ்பக் இருக்குமோ!’ என்று ஒரு நொடி யோசித்தவன், அடுத்த நொடி, ‘சச அப்படியெல்லாம் இருக்காது! ஆனா இவ ஒரு மர்மம் தான்… இன்னைக்கு அந்த மர்மத்தைக் கண்டு பிடிச்சே ஆகணும்டா விஜி.’ என்று தனக்குள் நூறாவது முறையாக சபதம் எடுத்தான்.
ஆனால் பவித்ரா, சிறிதும் நகராமல் தோழியின் கையை பற்றினாள்.
கையை உதறிய திவ்யா, “ப்ச்… நான் பேசிட்டு தான் வருவேன்… நீ போ”
“சேர்மன் சார் மேல் எந்த தப்பும் இல்லையே… நீ…”
“முன்பு நடந்ததிற்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை தான்… அவர் மேல் தப்பு இல்லை தான்… ஆனா உடைந்த, ஒட்டாத உறவை ஒட்ட அவர் முயற்சிப்பது தப்பு தான்…”
பவித்ரா ஏதோ கூற வர, அதற்குள் தாளாளர் அறையில் இருந்து வேறு துறை தலைமை ஆசிரியர் வெளியே வரவும், திவ்யா அவசரமாக உள்ளே சென்றாள்.
அதிரடியாக உள்ளே வந்தவளைப் பார்த்த ராஜாராம், அவள் முகத்தை பார்த்து கனிவாக, “என்னடா?”
“ஸ்டுடென்ட்ஸ் எல்லாரிடமும் இப்படி தான் பாசமா பேசுவீங்களா?”
“அவங்களும் நீயும் ஒன்றா?”
“அந்த ஆளை டென்ஷன் படுத்தி வெறுப்பேத்தத் தான் உங்க காலேஜில் சேர்ந்தேன்… ஆனா, இப்போ ரொம்ப பீல் பண்றேன்… எதுக்காக என்னை உங்க ரிலேடிவ்னு சொன்னீங்க?”
“அது தானே உண்மை.”
“என்ன உறவுன்னு சொல்லித் தான் பாருங்களேன்.” என்று அவள் நக்கலுடன் கூற,
அவர் அசராது தீர்க்கமான குரலில், “நீ ஆசைப் பட்டால், இப்பவே சொல்ல நான் தயார்.”