“அது… காயம், சின்னது தான் சார்… லேசா தான் ரத்தம் வந்தது.”
“எதை வைத்து கீறினா?”
“பென்சில்.”
“ரொம்ப ஷார்ப்பா இருந்ததா?”
“அது… ஷார்ப்பா தான் சார் இருந்தது. ஆனா, காயம் சின்னது தான்… கவலைப்படும்படி பெருசா இல்ல.”
“சரி… நீங்க போகலாம்.” என்றதும் வெளியே வந்த மணிமேகலை, இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டார்.
அடுத்த நாள் காலையில் திவ்யா வந்ததும், அவள் கையை இழுத்துப் பார்த்த பவித்ரா, சிறிது கலங்கிய விழிகளுடன் தோழியை முறைத்தாள்.
திவ்யா புன்னகைத்து கண்சிமிட்டவும், பவித்ரா இறுகிய குரலில், “இனி எக்காரணம் கொண்டும் உன்னை காயப்படுத்திக்க மாட்டனு சத்தியம் செய்!” என்றபடி கையை நீட்டினாள்.
“பவி செல்லம், வொய் எமோஷன்? பெல்லுக்கு பயம் காட்ட லேசா தான் கீறினேன்…”
ஆனால், பவித்ரா கையை நீட்டியபடியே தீர்க்கமாகப் பார்க்கவும், “சத்யம் எல்லாம் வேணாம்… இனி இப்படி செய்ய மாட்டேன்” என்றாள் திவ்யா சற்று சமாதானமாக.
தன் கையை மடித்துக் கொண்ட பவித்ரா, மீண்டும் முறைக்கத் தொடங்கினாள்.
“அதான் சொல்லிட்டேனே! இன்னும் என்ன முறைப்பு? இப்பலாம் ரொம்பத்தான்டி முறைக்கிற!”
“நேத்து என்னடி சொன்ன?”
“ஓராயிரம் சொல்லியிருப்பேன்… எதை கேட்கிற?”
“விளையாடாம பதில் சொல்லு.”
“நிஜமாவே எதை சொல்றனு தெரியலைடி”
“HOD முன்ன போய் நிற்கிறதுக்கு முன்னாடி…”
சிறிது யோசித்தவள் உதட்டைப் பிதுக்கி, “தெரியல.. நீயே சொல்லு.”
“என்னை, உன்னை விட்டு விலகிக்கோன்னு சொன்ன!”
“ஓ… நான் சொன்னா மேடம் விலகிப் போயிடுவீங்களோ! கொன்னுடுவேன்!” என்றதும், பவித்ரா புன்னகைத்தாள்.
மீண்டும் யோசித்த திவ்யா, “எனக்கு என்ன சொன்னேன்னு ஞாபகம் இல்ல… கோபத்தில் சொல்லியிருப்பேன்… அதுக்காக சாரிலாம் கேட்க முடியாது.”
“நான் சாரி கேட்கச் சொல்லலையே!”
“அப்புறம் என்ன டஷ்க்கு முறைச்ச?”
“அது சும்மா!”
“சரி விடு, நேத்து நான் போன பிறகு என்ன நடந்தது?”
“பெருசா ஒன்னுமில்ல… இந்த விஜி தான் ‘சொல்லுங்க… நீங்க யாரு? பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க… சொல்லுங்க’னு உன்னை பத்தி கேட்டுட்டு இருந்தான்.”
“அவன் கிடக்கிறான் டம்மி பீஸ்!” என்றதும் பவித்ரா கண்ணசைவில் திரும்பச் சொல்ல, திரும்பிப் பார்த்தாள்.
அங்கே விஜய், திவ்யாவை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
திவ்யா சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், “உண்மையை தானே சொன்னேன்…! இதுவரை நீ சிறப்பான தரமான சம்பவம் எதுவும் செய்யலையே! ஸ்வீட் மட்டும் தானே சாப்டுட்டு இருக்க!”
அவன் கடுப்புடன், “என்ன, நேத்து ரூமுக்குப் போய் ‘பேட்ட’ படம் பார்த்தியா?”
“ச… தலைவர் படத்தை தியேட்டரில் தான் பார்க்கணும்…” என்றவள் கண்கள் மின்ன, “இன்னைக்கு மதியம் போகலாமா? டிக்கெட் இருக்குதா பாரு.”
பவித்ரா, “ஏன்டி படுத்துற! முன்னலாம் வாரத்துக்கு ஒரு வினையை தானே கூட்டுவ! நேத்து மட்டுமே, மூனு முறை வம்பை இழுத்து விட்டுருக்க! HOD விஷயத்துக்கே, நீ இன்னும் ஒரு மாசத்துக்கு அடக்கி தான் வாசிக்கணும்.”
தோழியை திரும்பிப் பார்த்தவள் பின் விஜய்யிடம், “ரொம்ப பேசுறாடா… இவளுக்கும் சேர்த்து டிக்கெட் போடு.”
பவித்ரா நெஞ்சில் கை வைத்தபடி, “ஆத்தி! மிஸ்டர் சந்திரன் என்னை கொன்னுடுவார்.”
திவ்யா குறுநகையுடன், “விஜி தியேட்டரில் இருந்து போன் போட்டு, மிஸ்டர் சந்திரமௌளியை காபி குடிக்க கூப்பிடுவோமா!”
“எங்க அப்பாவை காபி குடிக்க கூப்பிட, நீ மௌன ராகம் கார்த்திக்கும் இல்ல, நான் ரேவதியும் இல்ல!”
“பார்டா! அப்புறம்?”
“ஹ்ம்ம்… விழுப்புரம்.”
விஜய், “மதியம் மூனு மணிக்கு, மூனு டிக்கெட் புக் பண்ணிட்டேன்.”
திவ்யா புன்னகையுடன் விஜய் தோளில் கை போட்டு, “நண்பேன்டா” என்று கூற…
அவனும், “நண்பி..டி” என்று கூறி கை தட்டினான்.
பவித்ரா இருவரையும் முறைக்க, இருவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.
பவித்ரா, “நான் வர மாட்டேன்.”
“ஸோ சிம்பிள், உன்னை கடத்திட்டு போய்டுவோம்.” என்றவள் மீண்டும் நண்பனுடன் கை தட்டினாள்.
பவித்ராவின் நெஞ்சுக்குள், ரயில் சூழ்ச்சியம்(engine) ஓடத் தொடங்கியது.
ஆசிரியர் வரவும், விஜய் தன் இடத்திற்குச் செல்ல, அவர்கள் பேச்சு தடை பட்டது.
அதன் பிறகு, பவித்ராவின் கெஞ்சல்கள் பலிக்காமல் போக, மதியம் 12.45க்கு பீதியுடன், திவ்யா மற்றும் விஜய்யுடன் வாகனங்கள் நிற்கும் இடத்திற்குச் சென்றாள்.
கடைசி முயற்சியாக பவித்ரா, “ப்ளீஸ்டி, என்னை விட்டிரு” என்று கெஞ்சினாள்.
அதை சிறிதும் கண்டு கொள்ளாத திவ்யா, “விஜி, நீ முதல்ல ஏறி குதி… அப்புறம் இவளை அனுப்புறேன்… அப்புறம் நான் வரேன்.”
பவித்ரா, “என்னது, இந்த சுவரை ஏறி குதிக்கணுமா?” என்று மீண்டும் நெஞ்சைப் பிடிக்க,
“இவ ஒருத்தி… சும்மா சும்மா நெஞ்சை பிடித்து ஸீன் போட்டுட்டு”
பவித்ரா தோழியின் முதுகில் அடித்தபடி, “நான் ஸீன் போடுறேனா!” என்று கேட்டுக் கொண்டிருக்க,
விஜய், சுவர் ஏறி வெளியே குதித்திருந்தான்.
“எனக்கு அப்புறம் மசாஜ் செய்… இப்போ யாரும் வரதுக்கு முன் போகணும்… சீக்கிரம்… நான் உன்னை தூக்குறேன், ஒழுங்கா சுவரை ஏறி குதி… விஜி உன்னை பிடிச்சுப்பான்.”
பவித்ரா பரிதாபமாக அவளைப் பார்க்க, அப்பொழுது ஒரு ஆசிரியர் (திவ்யா சுண்ணத்துண்டு எறிந்தவர்) வரவும்,
திவ்யா, “பவி ஜூட்… சொக்கத் தங்கம்(அவர் பெயர் தங்ககுமார்) வருது.” என்றவள், அடுத்த நொடி ஓடி ஒளிந்திருந்தாள்.
இதுவரை தப்பு செய்து பழக்கமில்லாத பவித்ரா, திருதிருவென்று முழித்துக்கொண்டு அங்கேயே நின்றிருந்தாள்.
“நீ இங்கே என்ன செய்ற?” என்ற ஆசிரியரிடம்,
“அது… சார்..”
“என்ன?”
‘முன்ன பின்ன செத்தா தானே சுடுகாட்டிற்கு வழி தெரியும்! உங்களுடன் கூட்டு சேர்த்து என் உசுரை வாங்குறியே பிசாசு!’ என்று மனதினுள் திவ்யாவை திட்டியவள், பதில் சொல்வதறியாது திணற,
சட்டென்று அவர்கள் முன் வந்து நின்ற திவ்யா, “உங்க பைக் டயரை பஞ்சராக்க வந்தேன்… நீங்க வந்ததும் ஒளியச் சொன்னேன்… இந்த லூசு முழிச்சிட்டு நிக்குது.” என்றாள் அசால்ட்டாக.
பவித்ரா பாசத்துடன் திவ்யாவை பார்க்க, அவளோ முறைத்துவிட்டு ஆசிரியர் பக்கம் திரும்பினாள்.
அவர் இருவரையும் முறைத்துவிட்டு, அங்கே நின்று கொண்டிருந்த தனது வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றார்.
“அப்பாடா… தப்பிச்சோம்.”
திவ்யா முறைத்தபடி, “சீக்கிரம் வா”
“கண்டிப்பா நான் வரணுமா?”
“வரியா? இல்ல, ஏதாவது வம்பில் உன்னை மாட்டி விடவா?”
“இது மட்டும் வம்பு இல்லையா?”
“ஓ! சரி… நான் போய் சீனியர் ரவி கிட்ட, நீ அவனை லவ் பண்றதா சொல்றேன்.”
“பிசாசு…! வந்து தொலையுறேன்… தூக்கு”
“அது!” என்றவள் தோழியை தூக்க,
கஷ்டப்பட்டு சுவர் ஏறிய பவித்ரா, “ரொம்ப உயரமா இருக்குது திவி”
“இப்போ நீ குதிக்கல, நானே தள்ளி விட்டிருவேன்… குதிடி!”
“முருகா காப்பாத்து.” என்றபடி குதித்தவளை, கீழே விழாமல் விஜய் பிடித்துக் கொண்டான்.
அடுத்து திவ்யா குதித்ததும், பவித்ரா, “ஏதோ சத்தம் கேட்டுதே! என்ன?”
விஜய், “ரொம்ப முக்கியம்… சீக்கிரம் வா”
திவ்யா, “ஒரு பைக் மேல ஏறி சுவர் ஏறினேன்… அப்போ, அதை தட்டி விட்டேன்… வரிசையா எல்லா பைக்கும் விழுந்துருச்சு.”
“தெரியாம தட்டி விட்டியா?”
“நீயே சொல்லேன்.” என்று புன்னகையுடன் கண்சிமிட்டவும்,
பவித்ரா, “அடிப்பாவி!” என்றாள்.
விஜய் நடந்தபடியே, “எங்க கிட்ட மட்டும் வாய் கிழிய பேசு… அந்த நொந்த குமார் கிட்ட மட்டும் முழிச்சுட்டு நில்லு.”
“நான் முழிச்சிட்டு நின்னதை நீ பார்த்தியா!”
“அதெல்லாம், என் ஞான கண்ணில் தெரிந்தது”
“இங்கே ஞானமே இல்லையாம், இதுல ஞானக் கண்”
“வேணாம்டி, என்னை சீண்டாத…”
“போடா, டம்மி பீஸ்.”
நடையை நிறுத்திய விஜய் திவ்யாவை முறைக்க,
அவள், “அட விடுங்க பாஸ்…! வாழ்க்கையில் சில அடிகள் விழத் தான் செய்யும்.”
“நீ சொன்னா கூட பரவாயில்லை… இந்த சுண்டைக்காய் சொல்றதை தான் ஏத்துக்க முடியல.”
“நானாடா சுண்டைக்காய்?” என்று பவித்ரா அடுத்த சண்டையை ஆரம்பித்தாள். ஒருவழியாக சண்டையிட்டபடியே திரை அரங்கத்திற்கு வந்து சேர்ந்தனர், மூவரும்.
இணைய காத்திருப்போம்…