விஜய் மெல்லிய குரலில், “எங்கே போன?”
“அதுவா! அவனை பற்றி யோசிச்சிட்டு இருந்தேனா… அவன் குணம் என்னனு குழப்பமாவே இருந்தது… தியேட்டரில் ஏன் அப்படி பேசினான்னு அவனிடமே கேட்டிரலாம்னு நினைச்சேனா..! என்னையும் அறியாம எழுந்து நின்னுட்டேன்…! பெல்லை சமாளிச்சு வெளிய போயிட்டேன்… சரி, வந்தது வந்தாச்சு.. அவனைப் போய் பார்க்கலாம்னு போனா, அங்க நம்ம கருத்து (அரவிந்த் அவர்களுக்கு சில நேரம் அறிவுரை கூறுவதால் கருத்து கந்தசாமி என்று பெயர் வைத்தவள், அதை கருத்து என்று சுருக்கி இருந்தாள்) மட்டும் தான் இருந்தார். அவனை சேர்மன் கூப்பிட்டதா சொன்னதும், அங்கே போனேன்.” என்றவள் அங்கே நடந்ததை மட்டும் சுருக்கமாக கூறினாள்.
“அம்மாடியோவ் எம்புட்டு பெரிய பிளாஷ்-பேக்..!” என்று போலியாக வியந்தான்.
திவ்யா முறைக்கவும்,
சிரித்தபடி, “சும்மா டா” என்றவன், “சரி நீ ஏன் அவர் மேல் கம்ப்ளைன்ட் கொடுக்கலை?”
“நீயும் பவி மாதிரி அவர்னு சொல்ற! சரி, சரி.. அப்படியே சொல்லு” என்று சேர்த்துச் சொன்னாள்.
“நீயா பேசியது! நீயா பேசியது!” என்று ராகம் இழுத்தான்.
“ஏன் அரவிந்த் சாரை ஒருமையில் பேச மாட்டேன் தானே!”
“ஆனா, இவர் உன்…”
“உன்னைத் தான் அவர்னு பேசிக்கோனு சொன்னேன், நான் அப்படி பேசுவேன்னு சொல்லலையே!”
“அதானே பார்த்தேன்.”
“நீ ஏன் அவர்னு சொன்ன?”
“காலையில் அவர் பார்த்த பார்வையே அப்படி சொல்ல வைக்குது… சரி, நீ ஏன் கம்ப்ளைன்ட் கொடுக்கலைன்னு கேட்டேனே!”
“அது” என்று அவள் சிறிது திணற, அவன் அவளை வினோதமாகப் பார்த்தான்.
அப்பொழுது வகுப்பு முடிந்து மதிய உணவு இடைவேளை தொடங்குவதற்கான மணி அடிக்கவும், இருவரும் உள்ளே சென்றனர். மணிமேகலை இவர்களை முறைத்துவிட்டே வெளியே சென்றார்.
பவித்ரா பரபரப்புடன், “இப்போ சொல்லுடி… என்ன குட் நியூஸ்?”
விஜய் ‘என்ன?’ என்பது போல் பார்த்தான்.
திவ்யா, “கேன்டீன் போய் பேசலாம்”
பவித்ரா முறைக்கவும், “முக்கியமான விஷயம்டி… வா” என்ற திவ்யா தோழியையும், நண்பனையும் இழுத்துக்கொண்டு கல்லூரி உணவகத்திற்குச் சென்றாள். செல்லும் வழியில் நண்பனிடம் கூறியதை தோழியிடமும் சுருக்கமாகக் கூறியிருந்தாள்.
மூவரும், சற்று ஒதுங்கி இருந்த மேஜையில் அமர்ந்தனர். பவித்ராவும் விஜய்யும் தோழியை யோசனையுடனும், எதிர்பார்ப்புடனும் பார்த்தனர்.
திவ்யா புன்னகையுடன், “நான் ரிஷியை காதலிக்கிறேன்.” என்றாள்.
பவித்ராவும் விஜய்யும், “என்ன!” என்று அதிர்ந்தனர்.
முதலில் சுதாரித்த விஜய், “அது யாரு ரிஷி?” என்று வினவினான்.
“எதுக்கு இவ்ளோ ஷாக்?” என்ற திவ்யா பவித்ராவைப் பார்த்து, “பவி அன்னைக்கு உன்கிட்ட சொன்ன மாதிரி, எனக்கே எனக்கானவனை நான் கண்டு பிடிச்சுட்டேன்… அவனுடன் திகட்ட திகட்ட காதல் வாழ்க்கை வாழ்வேன்.” என்று கண்ணில் காதலுடன் கனவில் மிதப்பவள் போல் புன்னகையுடன் கூறினாள்.
பவித்ரா மகிழ்ச்சியுடனும், கவலையுடனும் தோழியை பார்க்க… விஜய் பெரும் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பார்த்தான்.
பவித்ராவின் கவலை… ‘தோழி விரும்புகிறவன் நல்லவனாக இருந்து, அவளின் மனம் புரிந்து அவளது ஆசையைப் போல் அவளை உயிராக விரும்ப வேண்டுமே’ என்று!
முதல் முறையாக தோழியை இப்படி ஒரு உணர்ச்சிபூர்வமான பரவச நிலையில் பார்த்த விஜய், அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் கொண்டாலும், அவள் வாழ்க்கை இனியாவது இனிமையாகச் செல்லும் என்று மகிழ்ச்சிக் கொண்டான்.
விஜய் அவள் கையை குலுக்கி, “சூப்பர் மச்சி… நிச்சயம் உன் விருப்பம் போல் நடக்கும்.” என்றான்.
கனவில் இருந்து வெளியே வந்த திவ்யா, “தேங்க்ஸ் விஜி” என்றாள்.
“அப்படியே, அந்த ரிஷி யாருன்னு சொல்லிடு.”
திவ்யா சிறு வெட்கத்துடன், “ஹரீஷ்” என்றாள்.
பவித்ரா நெஞ்சில் கை வைத்து, “என்ன!” என்று அதிர்ந்தாள்.
திவ்யாவோ அதை கண்டு கொள்ளாமல், “ஹரீஷை எல்லாரும் ஷார்ட்டா ஹரினு தானே கூப்பிடுவாங்க… அதான், எனக்கு மட்டும் ரிஷி.” என்றாள் புன்னகையுடன்.
விஜய் பெயரை கேட்டதும் சிறிது அதிர்ந்தாலும் வெளியே காட்டாமல், “பார் டா! நம்ம திவிக்கு வெட்கமெல்லாம் வருது!” என்று புன்னகையுடன் கிண்டல் செய்தான்.
“டேய்!” என்று புன்னகையுடன் செல்லமாக மிரட்டினாள்.
“அதான் மேடம் சார் மேல் கம்ப்ளைன்ட் செய்யலையா!”
“ஹும்ம்… ஏன் கம்ப்ளைன்ட் செய்யத் தோணலைனு யோசிச்சிப்ப தான், என் மனசை நான் உணர்ந்தேன்.” என்றவள் பவித்ராவை பார்த்து, “இன்னுமாடி நீ ஷாக்கில் இருந்து வெளிய வரல..?”
“நீ நிஜமா தான் சொல்றியா திவி?” என்று பவித்ரா வினவ, திவ்யா அவளை முறைத்தாள்.
“இல்ல… இன்னைக்கு தானே ரெண்டாவது முறை பார்க்கிற!”
“லவ் அட் பஸ்ட் சைட் இருக்கிறப்ப, லவ் அட் செகண்ட் சைட் இருக்கக் கூடாதா?”
விஜய், “அதானே! நான் உனக்கு தான் சப்போர்ட் மச்சி.” என்று கை தட்டினான்.
அவனை முறைத்த பவித்ரா, “அவரைப் பற்றி நமக்கு ஒன்னுமே தெரியாதே!”
திவ்யா, “கொஞ்சம் முன் கோபக்காரன்… பெண்களிடம் வழியிறது இல்லை…! தியேட்டர் விஷயத்தில் இருந்தே ‘எட்டி நில் எச்சரிக்கிறேன்’ என்ற அவனோட மனோபாவனை புரியுது. அதிகம் பேசாம, பார்வையிலேயே எதிரில் இருப்பவர் எண்ணத்தைப் படிக்கிறான். பார்வையிலேயே நம்ம கிளாஸ்ஸை கண்ட்ரோல் செய்றது, இன்ட்ரெஸ்டிங்கா சூப்பரா பாடம் நடத்துறதுனு, எல்லாமே கெத்து…! கலர் கொஞ்சம் கம்மினாலும் பார்க்க ஸ்மார்ட்டா இருக்கிறான்.”
பவித்ரா ‘அடிப்பாவி’ என்பது போல் பார்க்க,
விஜய், “சூப்பர் மச்சி” என்றான்.
திவ்யா, “ஆனாலும் தியேட்டரில் ஏன் அப்படி பேசினான்னு தெரிஞ்சுக்கணும். அது மட்டும் இடிக்குது.”
பவித்ரா, “இதெல்லாம் சரி. ஆனா, அவர் உன் மேல் கோபத்தில் இருக்கிறாரே!”
“கோபத்தில் தானே இருக்கிறான்! வெறுப்பில் இல்லையே!” என்றவள் யோசனையுடன், “ஆனா, எனக்கு என்னவோ அவன் உள்ளுக்குள் என் செய்கையை, பேச்சை ரசிப்பது போலத் தான் தோனுது.”
“ஆமா, ரசிக்கிறவர் தான் உன்னை அடிச்சாராக்கும்!” என்று பவித்ரா கூற,
“என்னவோ பட்சி அப்படி தான் சொல்லுது.”
“எனக்கு என்னவோ காதல் கொண்ட உன் மனம், உனக்கு சாதகமா யோசிக்கிற மாதிரி தோனுது… பார்த்துடி” என்று பவித்ரா சிறு கவலையுடன் கூறினாள்.
“இல்லை… ஒரு சாராக ஸ்டுடென்ட்டான என் மேல் அவனுக்கு கோபம் இருக்கலாம். ஆனா, அதையும் மீறி அவனுள் என் மேல ஒரு பிடித்தம் இருக்கிற மாதிரி தான் எனக்கு தோனுது.” என்றவள் உணவு விடுதியில் நடந்ததை சுருக்கமாகக் கூறி, “என்னோட உணர்வுகளை அவன் துல்லியமாகப் படிக்கிறான்… ‘என்னாச்சு? ஏன் இப்படி இருக்கிற?’ னு அவன் கேட்டப்ப, அவனோட குரல்ல அக்கறையை நான் உணர்ந்தேன்.”
“உன் இடத்தில் வேறு ஒரு பொண்ணு இருந்தாலும், அப்படி தான் கேட்டிருப்பாரோ என்னவோ!”
அவளை முறைத்த திவ்யா, விஜயை பார்த்து, “நீ என்ன நினைக்கிற விஜி?”
“அவர் உணர்வுகளை சரியா கவனிக்கலை… இனி என் வேலை அது தான்.” என்று புன்னகையுடன் கட்டை விரலைக் காட்டினான்.
திவ்யா புன்னகைக்க,
தன் கலக்கத்தை மறைத்து, “இதையாவது ஒழுங்கா செய்.” என்ற பவித்ரா, மனதினுள் தோழிக்காக பிராத்தனை செய்தாள்.
பவித்ரா கூறியதை கேட்டு, விஜய் அலட்சிய பாவனையில் உதட்டை சுழித்தான்.
இணைய காத்திருப்போம்…