
குறிப்பு: மீண்டும் நெட் சதி செய்துவிட்டது.. அதான் நேற்று அப்டேட் போட முடியலை..
விலகல் – 12
திவ்யா கல்லூரி உணவகத்தில் அமர்ந்து, தன் மனதை சுய ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.
‘அவன் மேல் கோபம் இருக்கும் பட்சத்தில், அவன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்து அவனுக்கு தண்டனை கிடைப்பதைப் பார்த்தால், என்னோட மனசு ரசிக்கத்தானே செய்யணும். ஆனா, ஏன் கம்ப்ளைன்ட் கொடுக்க எனக்கு மனசு வரலை?
அவன் மேல் கோபப்படுற மனசு, அதே நேரத்தில் அவனோட ஒவ்வொரு செய்கையையும் ரசிக்குதே! கிட்டத் திட்ட ஆறு மாசத்துக்கு முன்னாடி, ஒரே ஒரு முறை பார்த்தவனை நான் மறக்காம இருக்கிறேனே! சரி, அது கூட அவனோட பேச்சினால் மறக்காம இருக்கிறேன்னு வச்சுக்கிட்டாலும்…
பவி சொன்ன மாதிரி, மத்தவங்க விமர்சனத்தை நான் பெரிசா எடுத்துக்கிட்டது இல்லையே! அந்த சூம்பிப் போன சிக்கன் நேரிடையாவே நான் பொண்ணே இல்லன்னு சொன்னதை கூட நான் பெரிசா எடுத்துக்கல.. ஆனா, இவனோட வார்த்தை ஏன் என்னை இவ்வளவு பாதிக்குது!’ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
“கிளாஸ்க்கு போகாம இந்த நேரத்தில் இங்க என்ன செய்துட்டு இருக்கிற?” என்ற ஹரீஷின் குரலில் அவனைப் பார்த்தவள், அடுத்த நொடியே சிறு கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
தனது குழப்பத்திற்கு தீர்வு கிடைக்காத சிறு எரிச்சலிலும், தீர்வு கிடைத்தே ஆக வேண்டும் என்ற தவிப்பிலும் இருந்தவள், தனது இந்த நிலைக்கு அவன் தான் காரணம் என்று எண்ணியே கோபத்துடன் முகத்தை திருப்பினாள்.
அவள் மனதினுள் ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்! எல்லாம் இவனால் தான்… காலைல இருந்து என்னை ரொம்பப் படுத்துறான்.’ என்று கூறிக் கொண்டாள்.
ராஜாராமிடம் பேசிவிட்டு தேநீர் அருந்த இங்கே வந்தவன், திவ்யா அமர்ந்திருப்பதை பார்த்து அவளிடம் வினவினான்.
அவள் முகத்தை திருப்பவும், “திவ்யா” என்று அழுத்தத்துடன் அழைத்தான்.
‘என்ன?’ என்பது போல் பார்க்க மட்டுமே செய்தாள்.
“ஒரு சார் கிட்ட இப்படி தான் பிஹேவ் செய்வியா?”
‘சாரா! உன்னைப் பார்த்தால் ஏதோ நெருக்கமானவன் போல தானே தோணுது!’ என்று மனதினுள் நினைத்தவள், அதிர்ச்சியுடன் எழுந்து நின்றாள்.
அவளது அதிர்ச்சியை முகத்தில் கண்டவன், ‘அப்படி என்ன கேட்டுட்டோம்! எதுக்கு ஷாக் ஆகுறா?’ என்ற யோசனையுடன் அவளைப் பார்க்க,
அவளது மனமோ, ‘உறவுகளை விலக்கி வைக்கும் என் மனம், இவனை ஏன் நெருக்கமானவனா யோசிக்குது!’ என்று மேலும் குழம்பியது.
‘என்னாச்சு இவளுக்கு!’ என்ற எண்ணத்துடன், அவன், “திவ்யா” என்று மறுபடியும் அழைக்கவும்,
அவள், அவனை அமைதியாகப் பார்த்தாள்.
“என்னாச்சு உனக்கு?”
“புரியல…”
“ஏன் இப்படி இருக்கனு கேட்டேன்.”
“எப்படி இருக்கேன்?”
அவன் அவளை முறைக்கவும்,
“நிஜமாவே நீங்க கேட்கிறது புரியல..”
“முதல்ல அலட்சியமா பார்த்த… அதிர்ச்சியுடன் எழுந்த… அதிர்ச்சி குழப்பமா மாறிச்சு… அப்புறம் அமைதியா பார்க்கிற… அதான் கேட்டேன்.”
‘எனக்கே என் மனம் புரியல… இதில் உனக்கு என்னத்தை சொல்லுவேன்?’ என்று மனதினுள் கூறியவள், அவனிடம் இயல்பான குரலில், “அதெல்லாம் ஒன்னுமில்ல” என்றாள்.
அவன் அவளை தீர்க்கமாகப் பார்த்தான். அவள் அப்பொழுதும் அமைதியாகவே நின்றாள்.
“கிளாஸ்க்கு போகாம இங்க என்ன செய்ற?”
“போகணும்.”
“அதைத் தான் நானும் சொல்றேன்… போனு…”
அப்போதும் அவள் அமைதியாகவே பார்க்கவும், “என்ன?” என்று கேட்டான் மீண்டும்.
“தனியா யோசிக்கணும்னு இங்கே வந்தேன்… என்னை யோசிக்க விடாமல் வந்து நிற்குறீங்க…” என்று முடித்த போது, அவள் குரலில் சிறு எரிச்சல் கலந்திருந்தது.
அப்பொழுது ஒரு ஆசிரியர் வருவதை பார்த்தவன், தனியாக அவளிடம் பேசுவதை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாதே என்ற எண்ணத்தில், சிறு தோள் குலுக்கலுடன் அகன்றான்.
அவன் அகன்றதும் தான், ‘தியேட்டரில் ஏன் அப்படி பேசினான்னு கேட்கேவே இல்லையே!’ என்று நினைத்தவள், அடுத்த நொடி ‘பயபுள்ள எங்கே போய்டப் போகுது! முதல்ல நாம தெளிவோம், அப்புறம் அவன் கிட்ட கேட்டுக்கலாம்.’ என்று கூறிக்கொண்டு அமர்ந்தாள்.
சிறிது யோசித்தவள் மனம் அதிர, ‘இது தான் காதலா! அப்போ நான் அவனை காதலிக்கிறேனா!’ என்று தன்னைத் தானே வினவியவள்.. நிமிர்ந்து அமர்ந்தாள்.
அவள் அவனைத் தேட, அவன் அங்கே இல்லை.
தேநீர் அருந்திவிட்டு, ஹரீஷ் ஆசிரியர் அறைக்குச் சென்ற போது.. அங்கே இருந்தது அரவிந்த் மட்டும் தான்.
அரவிந்த், “சேர்மன் சார் என்ன சொன்னார்?”
“என்ன நடந்ததுன்னு விசாரித்தார்… திவ்யா கம்ப்ளைன்ட் கொடுத்தால் ஆக்சன் எடுப்பேன்னு சொன்னார். ஆனா, அவ கம்ப்ளைன்ட் கொடுக்கல…”
“ஆச்சரியம் தான்!”
“திவ்யா கம்ப்ளைன்ட் கொடுக்காததா?”
“ஹும்ம்”
“சேர்மன் சாரும் அப்படி தான் சொன்னார்.”
“ஒருவேளை பெருசா எதுவும் யோசிக்கிறாளோ?”
“எனக்கு அப்படி தெரியலை…” என்றான் யோசனையுடன்.
“எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.”
யோசனையிலிருந்து கலைந்தவன்.. சிறு கிண்டலான புன்னகையுடன், “ஒரு ஸ்டுடென்ட் கிட்ட சார் ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்றதை இங்கே தான் கேட்கிறேன்.”
அரவிந்த் புன்னகையுடன், “என்ன செய்றது, நிலைமை அப்படி.”
“திவ்யா அப்பாவுக்கு தெரிந்தால் சும்மா விட மாட்டார்னு சேர்மன் சார் சொன்னார்… அவளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஐ மீன் ஃபமிலி பற்றி!”
“திவ்யா பெரிய இடம் தான்.”
அவன், ‘அப்படியா!’ என்பது போல் பார்த்தான்.
“சொர்ணம் கோல்ட் ஷாப் அண்ட் ‘RR’ டிரெஸ் ஷாப் ஓனர் பொண்ணு…”
“இந்த ஷாப்ஸ் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனா பெருசா தெரியாது… நிறைய இடத்தில் கிளைகள் இருப்பது தெரியும்.”
“எங்க வீட்டில் அங்க தான் கோல்ட் வாங்குவாங்க. அதனால் தெரியும்… கோல்ட் ஷாப் என் தாத்தா காலத்தில் இருந்தே இருக்குது… ரொம்ப நாணயமான நம்பிக்கையான பேமஸ்ஸான கடைனு வீட்டில் சொல்லிக் கேட்டிருக்கிறேன்… டிரெஸ் ஷாப், என் அப்பா காலத்தில் ஆரம்பித்தது… அதுவும் பேமஸ் தான்.”
“ஓ”
“பெரிய இடம்… கோடீஸ்வரி தான்… ஆனா என்ன பிரச்சனைனு தெரியல.. ஆரம்பத்தில் இருந்தே ஹாஸ்டலில் தான் இருக்கிறா. சேர்மன் சார் அவளுக்கு ரிலேடிவ்னு தெரியும். ஆனா, என்ன உறவுனு யாருக்கும் தெரியாது. இதில் வேடிக்கை என்னனா, அவளைக் கேட்டால் சேர்மன் சார் ரிலேடிவ் இல்லைனு சொல்லுவா…! ஒரு முறை அப்பாவை கூட யாரோ போல் பேசிக் கேட்டிருக்கிறேன். அவள் ஒரு புரியாத புதிர் தான்…!”
ஹரீஷ் அமைதியாக இருக்கவும், அரவிந்த், “ஹரீஷ்”
இரண்டு முறை அழைத்த பிறகே, “ஹும்ம்… என்ன?” என்றான்.
“என்ன யோசனை?”
“அது… சேர்மன் சார் பற்றி யோசித்தேன்.”
“என்ன?”
“திவ்யா அவருக்கு என்ன உறவுனு அவரிடம் கேட்டேன்.”
“என்ன…!”
“ஏன் இவ்ளோ ஷாக்?”
“எல்லார் மனதிலும் இருக்கும் கேள்வி தான். ஆனா யாரும் இதுவரை அவர் கிட்ட கேட்டது இல்ல… ஆனா, யாரும் தப்பா பேசியது இல்ல… நீங்க கேட்டதுக்கு அவர் என்ன சொன்னார்?”
“அவர் பதில் சொல்றதுக்கு முன்னாடி, திவ்யா வந்து ஸ்டுடென்ட் சேர்மன் உறவுனு சொன்னா… அப்புறம் பேச்சு மாறிடுச்சு.”
“வட(வடை) போச்சே!” என்றவன், “சரி, உங்களை பற்றி சொல்லுங்க” என்றான்.
“என்னை பற்றி சொல்லிக்கிறதுக்கு பெருசா ஒன்றுமில்லை.”
“என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க!”
“ஹரீஷ்னே கூப்பிடுங்க.”
“ஓகே…” என்றவன், “உங்களை பற்றி சும்மா சொல்லுங்க பாஸ்.” என்றான் புன்னகையுடன்.