ராஜாராம், “யாராக இருந்தாலும் அனுமதி கேட்ட பிறகு தான், என் அறைக்குள் வரனும்.” என்று அழுத்தத்துடன் கூறினார்.
திவ்யா அலட்டிக்கொள்ளாமல், “இதுக்கு முன்னாடி இப்படி வந்தது இல்லையே! நீங்க என்னைப் பற்றி பேசுவதால் வந்தேன்”
ஹரீஷ், “நாங்க உன்னைப் பற்றி பேசலையே”
“நான் இவருக்கு என்ன உறவுன்னு கேட்டது, என்னை…”
“சாரைப் பற்றி தெரிந்துக்க கேட்டேன்”
அவள் அவனை முறைக்க, அவன் இதழோரம் மெல்லிய புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
திவ்யா கோபத்துடனும் கடுப்புடனும் ராஜாராமை பார்த்து, “இவனை எதுக்கு கூப்பிட்டீங்க?”
“திவ்யா மரியாதை கொடுத்துப் பேசு” என்று ராஜாராம் கண்டிக்கும் குரலில் கூற, அப்பொழுது தான் ஹரீஷை ஒருமையில் பேசியதை உணர்ந்தாள்.
மன்னிப்பு கேட்க மனம் நினைத்தாலும், ஏதோ ஒன்று தடுக்க அமைதியாக நின்றாள்.
ராஜாராம், “திவ்யா” என்று கடுமையான குரலில் அழைத்தார். அவரது குரலே ‘நீ மன்னிப்பு கேட்டே ஆகணும்.’ என்று சொல்லியது.
அவள் வேண்டா வெறுப்புடன் “சாரி” என்று மெல்லிய குரலில் கூறினாள். ஆனால் அதை ராஜாராமிடம் தான் கூறினாள்.
அவர், “என்கிட்ட ஏன் சொல்ற?”
அவள் கடுப்புடன், “ஏதோ ஒன்னு… சொல்லிட்டேன் தானே!”
ஹரீஷ் சுவாரசியத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான், ஆனால், அதை சிறிதும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
ராஜாராம் அவளை முறைத்தார்.
அவளோ, “இவரை எதுக்கு கூப்பிட்டீங்க?”
ராஜாராம் பதில் சொல்லும் முன் ஹரீஷ், “சேர்மன் அண்ட் ஸ்டாஃப் பேசுறதை எதுக்கு ஸ்டுடென்ட் கிட்ட சொல்லணும்?”
“நான் உன்…உங்களிடம் கேட்கல…” என்று முகத்தை திருப்பிக் கொண்டு ராஜாராமை பார்த்தாள்.
அவரோ ‘இங்கே என்னங்கடா நடக்குது?’ என்பது போல் இருவரும் போடும் சண்டையை பார்த்தார். அவர் இருவரையுமே சிறு ஆச்சரியத்துடன் பார்த்தார்.
ஒரு ஆசிரியர் முன் திவ்யா அவரிடம் இப்படி நடந்து கொள்வது, இதுவே முதல் முறை. அதைப் போல், ஒரு ஆசிரியர் பயமின்றி திவ்யாவை கண்டிப்பதும், அவர் முன்னிலையில் எதிர்த்து பேசுவதும் இதுவே முதல் முறை.
திவ்யா, “சார்” என்று அழுத்தத்துடன் அழைத்தாள்.
ஹரீஷ் சொன்னதிற்கு சாதகமாகப் பேச நினைத்தவர், திவ்யா முகத்தில் தெரிந்த தன் மீதான நம்பிக்கையில், “மார்னிங் நடந்ததைப் பற்றி கேட்க கூப்பிட்டேன்.” என்றார்.
திவ்யா ஹரீஷை வெற்றிப் பார்வை பார்க்க,
அவனோ அலட்டிக் கொள்ளாமல், “காலையில் நடந்ததுனு தான் சார் சொன்னாங்க… உன்னைப் பற்றி பேசியதா சொல்லலையே!” என்றான்.
‘இன்னுமாடா மீசையில் மண் ஓட்டலன்னு சொல்ற…’ என்பது போல் அவனைப் பார்த்தவள்…
ராஜாராமிடம், “இப்போ நான் இவர் மேல் கம்ப்ளைன்ட் கொடுத்தால் என்னாகும் சார்?” என்றவள் முடிக்கும் போது, ஹரீஷை மிதப்பாகப் பார்த்தாள்.
அவனோ சிறிதும் பதறாமல், ‘என்ன வேணாலும் செய்துக்கோ’ என்ற அலட்சியத்துடன் அவளைப் பார்த்தான்.
அவனது தைரியத்தை அவளது மனம் ரசித்தது ஆனால், அதை அவள் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
“நீ கம்ப்ளைன்ட் கொடுத்தால் சொல்றேன்.” என்ற ராஜாராமின் குரலில்,
அவள் பார்வையை சிறு யோசனையுடன் அவர் பக்கம் திருப்பினாள்.
அவர், “நீ கம்ப்ளைன்ட் கொடுக்க நினைத்து இருந்தால், சம்பவம் நடந்ததும் கொடுத்திருப்ப…”
“அது… நீங்க அப்போ வரல…” என்று சிறு தடுமாற்றத்துடன் கூறினாள்.
“நீ கம்ப்ளைன்ட் கொடுக்க நினைத்து இருந்தால், கம்ப்ளைன்ட் கொடுக்காம கிளாஸ் உள்ளேயே போயிருக்க மாட்ட” என்றவர், அவளை கூர்மையுடன் பார்க்கவும்,
“ஏன், இப்போ கொடுக்கக் கூடாதா?”
“கொடுக்கலாமே! ஆக்ஷன் எடுக்கட்டுமா?”
அவளது மனம் முதல் முறையாக படபடத்தது. ஏனோ அவன் மேல் புகார் கொடுக்க அவள் மனம் சிறிதும் விரும்பவில்லை. அதை ராஜாராம் அறிந்து கொண்டதில் தான், அவளிடத்தில் இந்த படபடப்பு.
அவளை ராஜாராம் ஆராய்ச்சிப் பார்வை பார்க்க, ஹரீஷ் ஆச்சரியம் கலந்த ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான்.
அவள் ‘ஏன்டா வந்தோம்’ என்று நொந்து கொண்டாள். அதை மறைக்க ஹரீஷை முறைத்தவள், அவனது இதழோரச் சிரிப்பை கண்டு கோபம் கொண்டாள். கூடவே ஒரே நேரத்தில் அவனை ரசிப்பதும், கோபம் கொள்வதுமாக அவளது மனமே அவளுக்கு எதிராக செயல்பட, இயலாமையில் அதிகம் கோபம் கொண்டாள்.
அவள் அவளாக இல்லாத நிலையில், அவளையும் அறியாமல் அவனை நெருங்கி அடிக்க கையை ஓங்கியவள்…, ராஜாராமின் “திவ்யா!” என்ற அழைப்பில் சுதாரித்து கையை இறக்கி, “உன்னை எதிர்த்தால் என்னை பொண்ணு இல்லைனு சொல்லுவியா?” என்று கோபத்துடன் வினவினாள்.
அவனை அடிக்க கையை ஓங்கியதிற்காக மனதினுள் வருந்தினாலும், எப்பொழுதும் போல் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
ராஜாராம் கோபத்துடன், “திவ்யா, என்ன காரியம் செய்யப் பார்த்த! சாரி கேள்”
“என்னை அடிச்சதுக்கும், என்னை தவறா பேசியதுக்கும் அவர் மன்னிப்பு கேட்டால், நானும் மன்னிப்பு கேட்கிறேன்”
“திவ்யா… எல்லாரும் சொல்ற மாதிரி, நான் தான் உன்னை கெடுத்துட்டேன் போல! ஒரு பொண்ணுக்கு இவ்வளவு கோபமும் தெனாவெட்டும் ஆகாது…”
“அது என்ன! ஒரு பொண்ணு கோபப் பட்டால் மட்டும் அது தப்பு!” என்று கோபமாகக் கேட்டவள்,
ஹரீஷை கை காட்டி, “இவர் என்னடானா நான் பொண்ணே இல்லைங்கிற மாதிரி சொல்றார்” என்றபோது, அவளையும் மீறி அவளது குரல் சிறிது கலங்கியது.
ஆனால், அடுத்த நொடியே நிமிர்வுடன் ராஜாராமை பார்த்து, “அவர் மேல டீயை கொட்டியது தப்பு தான்… அதுக்கு நான் சாரி கேட்டுட்டேன்…” என்றவள் அவனைப் பார்த்தபடி, “அவர் என்னை அடிச்சதுக்கும், இதுவரை என்னை தப்பா பேசிய எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டால், நானும் கேட்கிறேன்.” என்றவள் மீண்டும் பார்வையை ராஜாராம் பக்கம் திருப்பி,
“அவர் என் மேல் கம்ப்ளைன்ட் கொடுத்தால், தாராளமா என்னை காலேஜை விட்டு தூக்குங்க… நான் அவர் மேல் எந்த கம்ப்ளைன்ட்டும் கொடுக்கல…” என்று கூறிவிட்டு வெளியேறினாள்.
ராஜாராம், “சாரி ஹரீஷ்…”
“நீங்க ஏன் சார் சாரி சொல்றீங்க! இதை இத்துடன் விடுங்க சார்” என்றவன்,
“அவ அப்பா பிரச்சனை செய்தால், நான் பார்த்துக்கிறேன் சார்” என்றான்.
ராஜாராம் சங்கடத்துடனும், சிறு கவலையுடனும் அவனைப் பார்க்க…
அவன் புன்னகையுடன், “இங்கே நடந்ததை மறந்துருங்க சார்…” என்றவன், “நானும் மறந்துடுறேன்” என்று அழுத்திக் கூறினான்.
அதையும் மீறி அவர், “திவ்யா” என்று தயங்க,
“பழிவாங்கும் எண்ணமெல்லாம் எனக்கு இல்லை சார்… கவலைப் படாதீங்க… உங்களிடம் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்… என்னைக்கும் உங்க நிம்மதி கெடும்படி நான் நடந்து கொள்ள மாட்டேன்.” என்று உறுதியான குரலில் கூறினான்.
“எதையும் எதிர்பார்த்து நான் உதவி செய்றதில்லை” என்றவர், “திவ்யா பிரச்சனை செய்தால் சொல்லுங்க”
“அவளை நானே சமாளிச்சுப்பேன் சார்… சரி சார், நான் கிளம்புறேன்” என்று புன்னகையுடனே விடை பெற்றான். அவள் ராஜாராம் முன்னிலையில் அடிக்க கை ஓங்கியதும், அவனுக்கு அவள் மேல் கடும் கோபம் வந்தது தான். ஆனால், அவளது கலங்கிய குரலையும், வருந்திய விழிகளையும் கண்ட நொடியில்… கோபம் எங்கே சென்றது என்று அவனுக்கே தெரியவில்லை.
இணைய காத்திருப்போம்…