அவள் சிறிதும் பயமின்றி, “நான் சொன்ன காரணத்தை நீ ஒழுங்கா கவனிக்கலையா?”
“அப்படி என்ன உனக்கு டார்ச்சர் கொடுத்தேன்? சைட் அடிச்சேன்… சின்னதா கண்ணடிச்சேன்… அது உன் மனதை வருத்திருச்சோ!” என்றவன் சிறு நக்கலுடன்,
“அதுக்கெல்லாம் நீ ஒரு பொண்ணா இருக்கணும்! நீ உருவத்தில் வேணா பெண்ணா இருக்கலாம்.” என்றவன் அவளை மேலும் கீழும் பார்த்து அதீத நக்கலுடன், “அது கூட கொஞ்சம் சந்தேகமா தான் இருக்குது.”
அவனது பேச்சில் சிறிது அதிரத் தான் செய்தாள். இருப்பினும் அந்த வார்த்தைகள் தந்த வலியை புறம் தள்ளி, இரண்டே நொடிகளில் அவனை தீர்க்கமாகப் பார்த்தவள்… அதை விட தீர்க்கமான குரலில், “நான் பொண்ணா இல்லையானு உன்கிட்ட நிரூபிக்கனும்னு எனக்கு அவசியம் இல்லை… நான் எனக்காக மட்டும் பேசலை.” என்றவள் விக்னேஷை சுட்டிக் காட்டி,
“இவனோட அக்காக்கும் சேர்த்து தான் பேசுகிறேன்… உன்னோட செயலால் மென்மையான சுபாவம் கொண்டவ எவ்வளவு பயத்தில் இருக்கிறானு உனக்கு தெரியுமா? உனக்கு இது ஒரு டைம் பாஸ், ஆனா அது அவளை எவ்வளவு பாதிக்குதுனு தெரியுமா? ஒருவேளை அவளுக்கு பயம் அதிகமாகி, அவளை மனநல மருத்துவரிடம் காட்டும் நிலை வந்தா என்ன செய்வ? சிம்ப்பிளா ஒரு சாரி சொல்லுவ… வேற என்ன செய்ய முடியும் உன்னால்?”
அவன் வாய்யடைத்துப் போய் நிற்பதை பார்த்து, “நான் ஏன் பொறுக்கினு சொன்னேன்னு இப்போ புரியும்னு நினைக்கிறேன்.” என்றவள் சிறு பயத்துடன் நின்றிருந்த விக்னேஷின் கையை பற்றி, “வாடா போகலாம்.” என்றபடி அழைத்துச் சென்றாள்.
தான் பேசியதின் தாக்கத்தை சட்டென்று மறைத்து, நிமிர்ந்த திவ்யாவின் ஆளுமையை சிறு வியப்புடன் பார்த்தவன், அவள் கூறிய விஷயத்தை கேட்டு அதிர்ந்தான். தனது செய்கைக்கு இப்படி ஒரு கோணம் இருக்கும் என்று அவன் சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. அவன் அதே அதிர்ச்சியுடன் மேலே சென்றான்.
அவன் வீட்டின் உள்ளே வந்ததும் அவன் நண்பன், “என்னடா! இப்போ என்ன சொன்னா?”
அவன் அமைதியாக இருக்கவும், அவன் தோளை பிடித்து உலுக்கிய அவன் நண்பன், “டேய்!” என்று கத்தினான்.
நண்பனின் உலுக்கலில் தெளிந்தவன், “என்னடா?”
“இப்போ என்ன சொன்னா?”
“என்னை பொறுக்கினு சொல்லிட்டா..டா”
“என்னடா சொல்ற? இருந்தாலும் இது கொஞ்சம் அதிகம் தான்”
“பதிலுக்கு நானும் நீயெல்லாம் பொண்ணே இல்லைனு சொன்னேன்டா”
“என்னடா சொல்ற?”
நடந்ததை சொல்லியவன், “இப்படி ஒரு கோணம் இருக்கும்னு நான் யோசிக்கவே இல்லைடா… சும்மா தான் அப்படி செய்தேன்… அந்தப் பொண்ணு அமைதியா போகும். ஆனா, உள்ளுக்குள் பயந்துட்டு இருக்கானு சத்தியமா எனக்கு தெரியாதுடா” என்று வருந்தினான்.
“சரி விடுடா… அந்த பொண்ணு கிட்ட சாரி சொல்லி, இனி தொந்தரவு செய்ய மாட்டேன்னு சொல்லிடு… சரியாகிடும்.”
“என்னடா நீயும் தொந்தரவுனு சொல்ற? அப்போ அந்த சொர்ணாக்கா சொன்னது போல, நான் நிஜமாவே பொறுக்கி போல தான் நடந்துகிறேனா!”
“சச… அப்படி இல்லைடா… ஆனா நீ செய்றது பொண்ணுங்களுக்கு தொந்தரவு தானேடா!”
“பொண்ணுங்களும் தானேடா என்னுடன் கடலை போடுறாங்க!”
“எல்லா பொண்ணுங்களுமா அப்படி இருக்கிறாங்க?”
“இல்லை தான். ஆனா அதுக்காக இப்படி பொறுக்கியுடன் கம்பேர் செய்துட்டாளே மச்சி!”
“நீ கூட தான், அவளை பொண்ணே இல்லைனு சொல்லியிருக்க”
“அது… சும்மா கோபத்தில் சொன்னதுடா”
“அது போல தான் அவளும் சொல்லியிருப்பா”
“இருந்தாலும், அந்த பொண்ணை நினைச்சா மனசுக்கு ஏதோ செய்யுதுடா! சொர்ணாக்கா சொன்னது போல, அந்தப் பொண்ணுக்கு என்னால் பிரச்சனை வந்திருக்குமோ!” என்று பெரிதும் கலங்கினான்.
“அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காதுடா”
“ச்ச்… எனக்கு என்னவோ போல் இருக்குதுடா”
“டேய், அவ என்ன சொன்னா! ஒருவேளை அப்படி நடந்தால்னு தானே சொன்னா! அப்போ அப்படி இல்லைனு தானே அர்த்தம்”
அவன் சிறு புன்னகையுடன், “ஹ்ம்ம்… கரெக்ட் டா! அப்போ அந்த பொண்ணுக்கு ஒன்னுமில்ல தானே!” என்று சிறு நிம்மதியுடன் கேட்டான்.
அவன் நண்பனும் சிறு புன்னகையுடன், “ஒன்னுமில்லடா… நீ நாளைக்கு அந்த பொண்ணு கிட்ட பேசு”
“ஹ்ம்ம்… சரிடா” என்றவன், “ஆனாலும் இந்த சொர்ணாக்காக்கு வாய் கொஞ்சமில்ல ரொம்பவே அதிகம்டா”
நண்பன் மென்னகையுடன், “இத்தனை நாள், நான் சொன்னதை எல்லாம் கொஞ்சமாவது கண்டுக்கிட்டியா! அப்படிப்பட்ட உன்னையே யோசிக்க வச்சிட்டாளே!”
“ஹும்ம்… நான் மாற இப்படி ஒரு சொர்ணாக்கா தேவைப் பட்டிருக்கிறா.”
“ஹும்ம்” என்றபடி எழுந்த நண்பன், தனது அறைக்கு சென்று அறை வாயிலில் நின்றபடி, “அப்புறம் மச்சி… ஜன்னல் மறைவில் இருந்து நான் தான் அவளைப் பார்த்தேன்.” என்றதும்,
அதிர்ச்சியுடன் எழுந்து நின்று, “அடப்பாவி!” என்று கத்தினான்.
நண்பன் சிரிக்கவும்,
அவன் கடுப்புடன், “நண்பனாடா நீ! என்னை அந்த கிழி கிழிச்சிட்டு இருக்கா! அப்போவே கீழ வந்து சொல்லியிருக்க வேண்டியது தானே!”
“எதுக்கு! அந்த மாரியாத்தா என் மேல ஏறுறதுக்கா!”
அவன் கடுப்புடனும், கோபத்துடனும் முறைக்க,
நண்பனோ அலட்டிக்கொள்ளாமல், “இன்னைக்கு டின்னர் உன் டர்ன் தான்… ஒழுங்கா சமைச்சு வை” என்றுவிட்டு அறைக்கதவை சாற்றிக் கொண்டான்.
…………..
விக்னேஷ் கையை பிடித்தபடி சென்ற திவ்யா, “உன் அக்காவுக்கு ஒன்னுமில்ல டா… அவனை பயமுறுத்த தான் அப்படி சொன்னேன்…”
“நிஜமா அக்காவுக்கு ஒன்னுமில்லை தானேக்கா”
“ப்ராமிஸ்ஸா ஒன்னுமில்லைடா… இவனைப் பார்த்தால் மட்டும் கொஞ்ச நேரத்திற்கு பயத்தில் இருக்கிறா… அவ்ளோ தானே! இனி அதையும் சரி செய்திடலாம்.”
“ஹும்ம்”
“டேய்… எப்போதும் போல சிரித்துப் பேசிட்டு தானே இருக்கிறா?”
“ஆமா”
“பாதி நேரம் ஏதோ யோசனையிலோ, பயத்திலோ இல்லை தானே!”
“ஆமாக்கா” என்று அவன் சிறு தெளிவுடன் கூறவும்,
“அவனைப் பார்த்தால் கொஞ்சம் நல்லவனா தான் தெரிறான்… இனி உன் அக்காக்கு தொல்லை தர மாட்டான்னு நினைக்கிறேன்… பார்க்கலாம். இல்லைனாலும், திவ்யா இருக்க பயம் ஏன்! கவலைப் படாத!” என்று புன்னகையுடன் கூறியபடி நிமிர்ந்தவள், அதிர்ச்சியுடன் நடையை நிறுத்தினாள்.
அவள் எதிரே, பவித்ராவின் தந்தை சந்திரன் நின்று கொண்டிருந்தார்.
அவள் பார்வையை சுழற்ற, அவளையும் விக்னேஷையும் தவிர மற்றவர்கள் மறைந்து இருந்தனர். அவள் அந்த இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்த போது, சந்திரனின் வண்டியை தெருமுனையில் பார்த்ததுமே பவித்ரா வீட்டின் உள்ளே சென்றிருந்தாள். பவித்ரா ஓடுவதை பார்த்த மற்ற சிறுவர்களும் மறைந்திருந்தனர்.
‘இப்படி சிக்னல் கொடுக்காம, பயபுள்ளைங்க எஸ் ஆகிருச்சுங்களே!’ என்று மனதினுள் சொல்லிக்கொண்ட திவ்யா, வெளியே சந்திரனை பார்த்து சிரித்தாள்.
விக்னேஷோ மனதினுள், ‘இந்த அக்கா கையை விட்டா, இப்போ கூட எஸ் ஆகிடலாமே!’ என்று புலம்பினான்.
இணைய காத்திருப்போம்…