தலையில் கை வைத்தபடி நிமிர்ந்த திவ்யா, பவித்ராவின் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த ஒருவன் அவளை பார்த்துக் கொண்டிருந்த பார்வையில் அவனை முறைத்துவிட்டு தோழியிடம், “யாருடி அந்த குரங்கு?”
“யாரை கேட்கிற?”
“உன் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருப்பவன்.”
“தெரியலையே”
“உன்னையெல்லாம்” என்று பல்லை கடித்தவள், சண்டை போட்டுக் கொண்டிருந்த பசங்களிடம், “சரி… பூவா தலையா போடலாம்.” என்றதும் சண்டை ஒருவாரு நின்றது.
பசங்க பூவா தலையா போடத் தயாராக, பவித்ரா, “உண்மையிலேயே நல்லா விளையாடுவியா? இவன்க சண்டை போட்ட அளவுக்கு நீ வொர்த்தா? மானத்தை வாங்கிறாதடி” என்று முணுமுணுக்க,
திவ்யா புன்னகையுடன், “வெயிட் அண்ட் ஸீ பேபி” என்றாள்.
பூவா தலையா போட்டு திவ்யா யார் குழு என்பது முடிவானதும், அவளது குழு தலைவனைப் பார்த்து, “உன் பெயர் என்ன?” என்றாள்.
அவன், “ராஜா” என்று கூற, எதிர் குழு தலைவன் சிரிப்புடன், “ராசப்பா” என்றான்.
திவ்யா குழு தலைவன் அவனை முறைத்து, “ராஜானு சொல்லுங்கக்கா” என்றான்.
மற்றவன் சிரிப்புடன், “அவன் பெயர் ராசப்பா தான்கா” என்றான்.
“டேய் வேணாம்”
“உண்மைய தான சொன்னேன்”
“சரி சரி திரும்ப சண்டையை ஆரம்பிக்காதீங்க… இனி உன்னை ‘லயன் கிங்’னு கூப்பிடுறேன்… ஓகே வா!”
“அக்கா!” என்று ராஜா சிணுங்க,
திவ்யா புன்னகையுடன், “நீ தானே ராஜானு கூப்பிட சொன்ன… ராஜானா கிங் தானே!” என்றவள் மற்றவனை பார்த்து, “உன் பெயர் என்ன?”
“விக்னேஷ்… விக்கினு கூப்பிடுவாங்க”
“விக்கி… கொக்கி… ஹா… இனி நீ கொக்கி குமாரு… ஓகே வா?”
ராஜா வாய்விட்டு சிரிக்க, விக்னேஷ் அவனை முறைத்து விட்டு, “அவனுக்கு மட்டும் கிங்னு அழகா பேர் வச்சீங்க!”
“உனக்கும் சூப்பர் பெயர் தான்டா… கொக்கி குமார் ஒரு டான் தானே!”
“ஹும்ம்” என்று அவன் அரை மனதுடன் கூற, திவ்யா மற்றவர்கள் பெயரை கேட்டு அவர்களுக்கு, சைல்ட் சின்னா, சோட்டா பீம், டக்லஸ், லட்டு பையா என்று அருமையாக பட்டப் பெயரை வைத்தாள்.
அதன் பிறகு மெல்ல ராஜாவிடம், “பவித்ரா வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கிறவன் யாருடா? அவன் பார்வையே சரி இல்லையே!”
“அந்த அண்ணாக்கு வேறு வேலையே இல்லைக்கா… நாங்க விளையாடும் போது எங்க விளையாட்டை பார்க்கிற மாதிரி, இந்த தெருவில் இருக்க அக்காக்களை சைட் அடிப்பார். ஆனா இன்னொரு அண்ணா இருக்கார்… ரொம்ப நல்லவர்… எங்களுக்கு ப்ரீயா பாடம்லாம் சொல்லித் தருவார்… நல்லா பேசுவார்…”
“சரி விளையாடலாம் வா” என்றபடி விளையாடத் தொடங்கினாள். முதலில் அவளது குழு பந்தை வீசத் தொடங்கியது. தனது திறமையால் அவர்களை முப்பது இலக்கு எண்ணை மட்டுமே அடைய செய்து இருந்தாள்.
அடுத்து அவள் மட்டையை பிடித்து விளையாடியபடி, எதேச்சையாக திரும்ப, அவன் இவளைப் பார்த்து கண்ணடிக்கவும், பல்லை கடித்தபடி முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அதன் பிறகு முகத்தில் கோபத்தை காட்டாமல், ராஜாவை பார்க்காமல், “டேய் லயன் கிங், கொக்கி குமாரை லட்டு பால் போடச் சொல்லு… இந்த பாலை கவுன்ட் பண்ண வேண்டாம்னு சொல்லு”
“ஏன் கா?”
“காரணமா தான்… சொன்னதை செய்” என்றதும் யோசனையுடன் அவள் சொன்னதை விக்னேஷிடம் சொல்லிட்டு வந்தவன் புன்னகையுடன், “பார்த்து செய் கா… ஆம்புலன்ஸ் வர மாதிரி செய்திறாத…” என்று கூற, அவள் புன்னகையுடன் பந்திற்காக தயாரானாள்.
விக்னேஷ் அவள் சொன்னது போல் பந்தை போடவும், அவள் அடித்த பந்து அவளைப் பார்த்து கண்ணடித்தவனின் கண்ணை பதம் பார்த்தது.
ராஜா, “செம கா” என்று கூற,
விக்னேஷ் வலது கை பெருவிரலை தூக்கிக் காட்டினான்.
விக்னேஷ் பந்தை எடுக்கப் போக, “டேய் கொக்கி குமாரு… நான் போறேன்” என்றபடி இவள் ஓடினாள்.
அந்த இளைஞன் செய்த சேட்டை அறியாத பவித்ரா, திவ்யாவின் செயலில் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தாள்.
பவித்ராவின் எதிர் வீட்டிற்கு சென்று பந்தை எடுத்தவள், அந்த இளைஞனை நெருங்கினாள்.
இவள் வருவதை பார்த்தவன் வலியை பொறுத்துக்கொண்டு, “பரவாயில்லைங்க” என்று அசடு வழிந்தான்.
“நான் உன்கிட்ட சாரி கேட்க வரலை. ஏன்னா! தெரிந்தே தான் குறி பார்த்து அடித்தேன்.” என்றவள் அடுத்து சொன்னதில் அவன் பேய் அறைந்தது போல் நிற்க, இவளோ புன்னகையுடன் வெளியே சென்றாள்.
திவ்யா வந்ததும், ராஜாவும் விக்னேஷும் கை கொடுத்து கொண்டாடினர்.
பவித்ரா, “சும்மா இருங்கடா… இவளை சும்மாவே கையில் பிடிக்க முடியாது… இதில் நீங்க வேற ஏத்தி விடாதீங்க.” என்றவள் தோழியை பார்த்து, “ஏன்டி வந்த அன்னைக்கே வினையை கூட்டுற?”
திவ்யா பதில் சொல்லும் முன் விக்னேஷ் கோபத்துடன், “விஷயம் தெரியாம பேசாதீங்கக்கா… அவன் நம்ம திவி அக்காவை பார்த்து கண்ணடித்தான். அதான் அக்கா அவன் கண்ணுலேயே அடிச்சுட்டாங்க”
பவித்ரா, “அப்படியாடி” என்று அதிர்ச்சியுடன் கேட்க..
அவளோ தோளை குலுக்கிவிட்டு, விக்னேஷை பார்த்து, “நீ ஏன் டா இவ்ளோ பொங்குற!”
அவன் பல்லை கடித்துக்கொண்டு, “அவன் என் அக்காவையும் பார்த்து கண்ணடித்து இருக்கிறான். என்னால ஒன்னும் செய்ய முடியல… அப்பா அம்மா கிட்ட சொல்லலாம்னா, அக்கா பயப்படுறா.”
“உன் அக்கா என்ன படிக்கிறா?”
“பி.இ பஸ்ட் இயர்”
“எல்லாரிடமும் இப்படி தான் செய்வானா? ரொம்ப தொல்லை கொடுப்பானா?”
“தொல்லைனு இல்லை. ஆனா அக்கா இவனை பார்த்தா பயப்படுவா…”
“சரி, நான் உன் அக்காகிட்ட பேசுறேன்…” என்றவள் தோழியிடம், “நீ இவன் யாருனே தெரியாது சொன்ன!”
“நிஜமாவே, இன்னைக்கு தான் நான் இவனை பார்க்கிறேன்.”
விக்னேஷ், “பவி அக்கா குனிஞ்ச தலை நிமிர்ந்தா தானே, அவனை பார்க்க முடியும்… இவன் இங்கே வந்து ஒரு மாசம் தான் ஆகுது. அது போக சந்திரன் அங்கிள் கிட்ட கொஞ்சம் பயம் உண்டு… எதிர் வீடுன்னு பவி அக்காகிட்ட வால் ஆட்டியிருக்க மாட்டான்.”
“பார்டா! உன் வயசு என்னடா?”
“போர்டீன்… நயன்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்”
“செம விவரமா பொறுப்பா இருக்கடா”
“அக்கா கூட பிறந்து இருக்கிறேனே!” என்றதும், திவ்யா புன்னகையுடன் அவன் தலையை செல்லமாகக் கலைத்தாள்.
பவித்ரா, “இதெல்லாம் இருக்கட்டும்… அவன் ஏன்டி பேயை கண்டது போல் முழித்தான்?”
“அதுவா”
“என்ன சொன்ன?”
“இன்னொரு முறை கண்ணடித்தா, அடுத்த பால் கண்ணை தாக்காது… நேரா குடும்ப கட்டுப்பாடு தான்னு சொன்னேன்.” என்று அலட்டிக் கொள்ளாமல் கூற, பவித்ரா வாயடைத்துப் போய் பார்க்க,
சிறுவர்கள் வாய்விட்டு சிரித்தபடி, “நீங்க சான்ஸே இல்லை கா”, “செம கா”, “சூப்பர் கா” என்று வித விதமாக அவளை பாராட்டினர்.
இணைய காத்திருப்போம்…