குழலிசை 14
அடுத்த நாள் காலையில் தோட்டத்தில் தனது மெது ஓட்டத்தை ஆரம்பித்த மாறவர்மசிம்மன், புதிதாக தீரனும் சுதிரும் சட்டென்று கண்டு பிடிக்க முடியாத இடத்தில் நின்றபடி சுற்றுப்புறத்தை கண்காணித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, தன்னுள் மென்னகைத்துக் கொண்டான்.
உறவுகள் விஷயத்தில் தன்னை வஞ்சித்த கடவுள் நட்பு மற்றும் விசுவாசிகள் விஷயத்தில் தன்னை ஆசிர்வதித்ததாகக் கருதினான்.
சட்டென்று தன்னவளிடம் பேசும் எண்ணம் வர, கைப்பேசியின் செவிப்பொறியை காதில் மாட்டிக் கொண்டு அவளை அழைத்தவன், அழைப்பு சென்றதும் கைபேசியை கால்ச்சட்டைப் பையினுள் வைத்தான்.
அவன் மீனாட்சியை தான் அழைக்கிறானோ என்ற சந்தேகத்தில் ஒலிவாங்கியை அணைக்க என்று தீரன் அந்த இடத்தில் இருந்து நகரப் போக, அப்பொழுது சரியாக அவனைப் பார்த்த மாறவர்மசிம்மன் மறுப்பாக தலை அசைத்து, ‘தேவை இல்லை’ என்று செய்கை செய்தான்.
தீரன் ‘ராஜாக்கு நாலா பக்கமும் கண்ணு’ என்று நினைத்தபடி அதே இடத்தில் நின்று கொண்டான்.
அழைப்பை எடுத்த மீனாட்சி, “இனிய காலை வணக்கம், மாறா” என்றாள் புத்துணர்ச்சியுடன்.
“இனிய காலை வணக்கம் தேவி.. குரலில் தனி புத்துணர்ச்சி தெரிகிறதே!”
“இப்போ தான் முழிக்கிறேன்.. கண்ணை திறக்கவும் உங்க அழைப்பு.. அதான் புத்துணரச்சி தானா வந்து ஒட்டிகிடுச்சு”
“ஓ”
“ஜாக்கிங் போயிட்டே பேசுறீங்களா?”
“ஹ்ம்ம்.. கல்யாணத்துக்கு அப்புறம் ரோஜாவன தோட்டத்தில் நாம் சேர்ந்து ஓடலாம்.”
அவள் சிறு வெட்கத்துடன், “ஹ்ம்ம்” என்றாள்.
அதை ரசித்தவன், “சரி தேவி. உன் குரலைக் கேட்கத் தான் அழைத்தேன்.. நீ போய் உன் வேலையைக் கவனி” என்றான்.
“ஹ்ம்ம்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவள், உற்சாகத்துடன் எழுந்து குளியல் அறையினுள் சென்றாள்.
மாறவர்மசிம்மனும் உற்சாகத்துடன் மெது ஓட்டத்தை முடித்துக் கொண்டு, தனது அறைக்குச் சென்றான்.
சில நொடிகளில் காப்பியும் செய்தித்தாளும் வந்தது. காப்பியை பருகி முடித்தவன், செய்தித்தாளை கையில் எடுத்த வேளையில், அவனது கைபேசி சிணுங்கியது. அழைத்தது அமரகேசரி.
செய்தித்தாளை வைத்துவிட்டு கைப்பேசியை எடுத்துப் பார்த்தவன், புன்னகையுடன் அழைப்பை எடுத்து, “இனிய இரவு வணக்கம், நண்பா.” என்றான்.
“இனிய காலை வணக்கம், நண்பா.. உன் நலனை விசாரிக்க அழைத்தால், நீயோ படு உற்சாகத்துடன் இருக்கிறாய்!”
“என் நலனிற்கு என்ன! அமோகமாக இருக்கிறேன்.. நீ எப்படி இருக்கிறாய்?”
“என் தந்தையின் சதிச் செயலைக் கேள்விப்பட்டு தான் அழைத்தேன்.” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
“உன் தந்தையால் என்னை எதுவும் செய்ய முடியாது.”
“அது வேறு விஷயம்.. நான் கிளம்பும் முன் சொல்லிவிட்டு தான் வந்தேன்.. இருந்தும்..” என்று பேசியவனின் பேச்சை இடையிட்ட மாறவர்மசிம்மன்,
“அவரை மாற்ற முடியாது.. விடு” என்றான்.
“ப்ச்.. நீ விட்டு விட்டு தான் அவர் தொடர்ந்து உனக்கு இன்னல் கொடுக்கிறார்.”
“இன்னல் கொடுக்க முயற்சிக்கிறார் என்று கூறு”
“ஏதோ ஒன்று.. உன்னைத் தொந்தரவு செய்கிறார் தானே! அதுவும் அவரது நேற்றைய செயல்..” என்று கோபமாகப் பேசியவனின் பேச்சை, மீண்டும் இடையிட்ட மாறவர்மசிம்மன்,
“நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது திறமையை சோதிக்க வாய்ப்பு அமைத்துக் கொடுத்து இருக்கிறார்.”
“ஏதாவது சொல்லிவிடப் போகிறேன்.”
“சொல்”
“நீ எதிர்த்து நின்றால், உனது ஒரு தாக்குதலை தாங்குவாரா! எனக்காகப் பார்க்காதே என்றால் கேட்கிறாயா?”
“இதை விடுத்து வேறு பேசு.” என்று சற்று அழுத்தத்துடன் கூறினான்.
“ப்ச்.. போடா”
நண்பனை திசை திருப்ப மாறவர்மசிம்மன், “நீ இங்கே வந்த பிறகு, ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்கிறேன்.” என்றான் உற்சாக குரலில்.
அமரகேசரி சிறு யோசனையுடன், “உன் குரலின் உற்சாகமே தனியாகத் தெரிகிறதே! அழைப்பை எடுத்ததும் இதே குரலில் தான் பேசினாய்.. என்ன விஷயம்?” என்று கேட்டான்.
“நேரில் சொல்கிறேன்.” என்றான் உல்லாசமாக சிரித்தபடி.
“டேய்! நீயாடா இப்படிச் சிரிக்கிறது!” என்று இன்ப அதிர்ச்சியுடன் கூறிய அமரகேசரி, உற்சாகத்துடன் சிரித்தபடி, “சிங்கம் சிக்கிடுச்சு போல! யாரு அந்த மங்கை?” என்று கேட்டான்.
சத்தமாகச் சிரித்த மாறவர்மசிம்மன், “உன் அத்தையை பார்த்துக் கொள்ள வந்திருக்கும் மங்கையே, உன் நண்பன் மனம் கவர்ந்த நங்கை” என்றான்.
“பேரழகியோ!”
“ஹ்ம்ம்.. முகத்தை விட, என் தேவியின் அகம் இன்னும் பேரழகு.”
“உன் மனதையே கவர்ந்து இருக்கிறாள் என்றால் நிச்சயம் முக அழகை விட, அக அழகு கூடுதலாகத் தான் இருக்கும்.”
“ஹ்ம்ம்”
“உன் காதலை சொல்லிவிட்டாயா?”
“உன் சின்ன மச்சானிடம் வருங்கால ராணி என்றே அறிவித்து விட்டேன்.”
“பலே”
“என் கதை இருக்கட்டும்.. என் தங்கையிடம் பேசுவதை விட்டுவிட்டு, என்னிடம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டு இருக்கிறாயே!”
“உனக்கு உன் ஆளுடன் பேச வேண்டும் என்றால் நேரிடையாகச் சொல்லேன்.”
“அதெல்லாம் முடிந்து விட்டது.”
“ஓ”
“பேச்சை மாற்றாமல் பதில் சொல்.. என் தங்கையிடம் பேசுகிறாயா இல்லையா?”
“உன் தங்கையிடம் போனில் பேசினால், சண்டை தான் வருகிறது.”
“என்னாச்சு?”
“எப்போதும் போல் தான்” என்று சிறு சலிப்புடன் கூறினான்.
“அவளிடம் எனக்காக வரிந்து கட்டிக் கொண்டு பேசாதே என்று கூறினால் கேட்கிறாயா?” என்று சிறு கோபத்துடன் திட்டினான்.
“என் மனம் கவர்ந்தவள் என்பதற்காக, அவள் கூறும் அனைத்தையும் சரி என்று தலை ஆட்ட மாட்டேன்.”
“என் தங்கை நல்லவள் தான்.. சிறு வயது முதல் கிடைத்த ராஜமாதாவின் உபதேசம்.”
“என் தந்தையை விட்டுவிட்டாயே!” என்றவன், “கல்யாணத்திற்குப் பிறகு அவளை திருத்திக் கொள்கிறேன்.” என்றான்.
“சிறு பெண்ணடா…”
“நீ தான் தங்கை என்று உருகுகிறாய்”
“அன்பு என்ன பண்ட மாற்றுப் பொருளா! நீ கொடுத்தால் தான், நான் கொடுப்பேன் என்பதற்கு! அவள் என்னை வெறுப்பதால் என் தங்கை இல்லை என்று ஆகிவிடுமா?”
“உன் அன்பும் அருமையும் அங்கே யாருக்கும் புரியவில்லையே!”
“அதில் நான் ஒன்றும் குறைந்துவிடப் போவது இல்லை.”
“நிச்சயம் காஞ்சனா மனதை மாற்றி, உனக்கு உன் தங்கையை பரிசளிப்பேன்.”
மாறவர்மசிம்மன் மென்னகையுடன், “பாசப் பயிரை வளர்க்கும் எண்ணத்தை விட்டு விட்டு, காதல் பயிரை வளர்க்கும் வழியைப் பார்” என்றான்.
அவனும் மென்னகையுடன், “உன் நண்பன் ஒரே நேரத்தில் இரண்டு பயிர்களையும் வளர்ப்பவன்டா” என்றான்.
“சரி உனக்கு நேரமாகிறது.. உறங்கச் செல்”
“என் தங்கையின் புகைப்படத்தை அனுப்பு.”
“மாலை அனுப்புகிறேன்.”
“தற்போது உன்னிடம், என் தங்கையின் புகைப்படம் இல்லை.. இதை என்னை நம்பச் சொல்கிறாய்!”
சற்று சத்தமாகச் சிரித்தபடி, “இருவருமாக சேர்ந்து இருக்கும் புகைப்படம் மட்டுமே இருக்கிறது.. அது மற்றவர் பார்வைக்கு இல்லை.” என்றான்.
“நான் வரும் போது, என் மருமகனையும் சேர்த்து அறிமுகம் செய்வாய் போலயே!”
“அது என்ன மருமகன்?”
“எனக்கு முன் நீ பெற்றுக் கொண்டால், மருமகன்.. இல்லை மருமகள்.” என்றவன், “நான் சொன்னது நடந்துவிட வாய்ப்பு இருக்கிறதோ!” என்றான்.
“டேய்!” என்று மாறவர்மசிம்மன் சிரிப்புடன் மிரட்ட,
“ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.. என்றும் இதே மகிழ்ச்சியுடன் நீ இருக்க வேண்டும்..” என்று நெகிழ்ந்த குரலில் கூறிய அமரகேசரி, “இருப்பாய்” என்று உறுதியான குரலில் கூறினான்.
“நன்றி” என்று இவனும் ஆத்மார்த்தமாகக் கூறினான்.
“மூன்று வாரங்கள் கழித்து நேரில் சந்திக்கலாம்.. இப்போது தூங்கப் போகிறேன்.”
“ஹ்ம்ம்.. பார்க்கலாம்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன், செய்தித்தாளை கையில் எடுத்தான்.
செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இருந்த செய்தியைப் பார்த்ததும் மாறவர்மசிம்மனின் மூளையில் சட்டென்று ஒரு மின்னல் வெட்டியது.
செய்தித்தாளை கீழே வைத்தவன், கைபேசியை எடுத்து தீரனை அழைத்தான்.
அழைப்பை எடுத்த தீரன், “காலை வணக்கம் ராஜா” என்றான்.
“காலை வணக்கம் தீரா.. உடனே என் அறைக்கு வா” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
தீரன் வந்ததும், மாறவர்மசிம்மன், “ரஞ்சித்தை அழை.” என்றான். துப்பறிவாளன் ரஞ்சித்தை தனது கைபேசியில் அழைத்த தீரன், அழைப்பு சென்றதும் கைபேசியை மாறவர்மசிம்மனிடம் கொடுத்தான்.