எப்படியாவது மகிழ் கொற்றவனை இழிவு படுத்திவிடும் வெறியில், ஆரியன் விசயத்தை விட முடிவு செய்து, “ஆமா.. நான் தான் தப்பா நினைச்சுட்டேன் போல! ஆனா, இவங்க ரெண்டு பேர் விசயம்..” என்றவரின் பேச்சை இடையிட்டவள்,
“அதுக்கு அடுத்து வரேன்.. இப்போ சொல்லுங்க.. ஸோ இனி ஆரி குட்டியை ராசி இல்லாதவன்னு பேச மாட்டீங்க, ரைட்!” என்றாள்.
வேறு வழி இல்லாமல், “ஹும்ம்” என்றார்.
“தனா அண்ணியும், சுபாவும் கூட பேச மாட்டாங்க, ரைட்!”
“அது எப்படி நான் சொல்ல முடியும்?”
“நீங்க சொல்லி தான், இவ்ளோ நாள் பேசினாங்க.. அப்போ நீங்க தானே அவங்களை பேசக் கூடாதுனு சொல்லணும்.”
“சரி சொல்றேன்” என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னவர், “இப்பவாவது இவங்க ரெண்டு பேரையும் விசாரிக்கிறியா?” என்றார்.
“ஓ!” என்றவள், “அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்.” என்றாள்.
“என்ன?”
“முன்னாடி, சுபா பிறக்கிறதுக்கு முன்னாடி, பிஸ்னெஸ் விசயமா சின்ன மாமா ரெண்டு மாசம் வெளியூர் போய் இருந்தாங்களாம். அந்த நேரத்தில் தான் நீங்க கன்சீவ் ஆகி இருந்தீங்க..! உங்களை மாமா தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வந்தாங்கலாமே…! ஏனோ, துணைக்கு அத்தையையும் ஆச்சியையும் வர நீங்க அனுமதிக்கலயாமே! அப்போ உங்க ரெண்டு பேருக்கு நடுவில்…!” என்று அவள் இழுத்து நிறுத்த,
பெரிதும் அதிர்ந்த பத்மாவதி கோபத்துடன், “ஏய்!” என்று கத்தி இருக்க,
கனிமொழி ஒருபடி மேலே போய், கையை ஓங்கிய படி, “யாரைப் பத்தி என்ன பேசுற!” என்று கத்தி இருந்தார்.
ஒரு வேகத்தில் கையை ஓங்கி இருந்தாலும், அவருக்கு அடிக்கும் எண்ணம் வரவில்லை. மகிழ் கொற்றவன் அவள் அருகே வரப் பார்க்க, பார்வையால் அவனை தடுத்துவிட்டாள்.
அவள் மென்னகையுடன், கனிமொழியையும் அவரது கையையும் பார்க்க, அவர் தானாக கையை இறக்கியபடி, “இனி இப்படி தப்பா பேசாத” என்று அமைதியான குரலில் கூறி இருந்தார்.
சிரிப்புடன், “ஸோ… உங்களுக்கு கோபம் வரும்.. அதுவும் அடிக்கும் அளவுக்கு கோபம் வரும்! ஆனா, அது உங்க கணவருக்கு ஒன்னுனா மட்டும், ரைட்!
தப்பா பேசாதனு என்னை சொல்ல, உங்க மனசாட்சி உறுத்தலை…! என்ன பார்க்கிறீங்க! மூனு வருஷத்துக்கு முன்னாடியும் சரி, இப்பவும் சரி, உங்க பையனையும் மூத்த மருமகளையும் இப்படி தானே தப்பா பேசினாங்க.. அப்பல்லாம் தப்பா பேசாதனு சொல்லாத வாய், இப்போ மட்டும் ஏன் சொல்லுது?
நீங்க நல்லவங்க தான், இல்லைனு சொல்லல…! ஆனா ஒரு மனைவியா, மருமகளா மட்டும் தான் நீங்க நல்லவங்க. ஒரு அம்மாவா நிச்சயம் இல்லைனு தான் சொல்லுவேன். இந்த வீட்டு சுமைதாங்கியா நீங்க இருக்கணும்னு முடிவு செஞ்சுட்டீங்க.. ஓகே, அது உங்க விருப்பம். ஆனா ராஜா மாமாவும், இவரும் சுமைதாங்கியா இருக்கணுங்கிற முடிவை, நீங்க எப்படி எடுக்கலாம்? உங்களோட அந்த முடிவில் பாதிக்கபட்டது நாலு ஜீவன்கள்.. ஒருத்தரை நான் மீட்டுட்டேன். மீதம் இருக்கிற ரெண்டு பேரையும் மீட்டிடுவேன்.” என்றாள்.
அவளது ஒவ்வொரு வார்த்தைகளும், சாட்டையாய் கனிமொழியை சுழட்டி அடிக்க, அவர் பித்துப் பிடித்தது போல் நின்றார்.
அறையில் வைத்து அவள் பேசியதிற்கான காரணம், மகிழ் கொற்றவனுக்கு இப்போது புரிந்தது.
‘லயனி சொல்வது போல், அப்பா மேல் மட்டும் முழு தவறும் இல்லையோ!’ என்ற எண்ணம் அவனுள் தோன்றியது.
அடுத்து பத்மாவதி பக்கம் திரும்பியவள் நக்கல் குரலில், “உங்களுக்கு வந்தா இரத்தம்.. எங்களுக்கு வந்தா ஜாமா(jam)!” என்றவள், “இனி இப்படி தத்துபித்துனு உளறிட்டு இருந்தீங்க.. மன உளைச்சல் தந்து கொடுமை படுத்துறீங்கனு சொல்லி, போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திடுவேன்.. ஜாக்கிரதை..! சும்மா பேச்சுக்கு சொல்றேன்னு நினைக்காதீங்க.. நான் நிஜமாவே சொன்னதை செய்வேன்.. கமிஷ்னர் வரை எனக்கு செல்வாக்கு இருக்கு.” என்று மிரட்டினாள்.
பலத்த கைதட்டலுடன், “வாவ்! சூப்பர் அண்ணி” என்றபடி வந்த வெற்றிவேந்தன் அன்னையைப் பார்த்து, “ஸோ பத்துமா, பாத்து பதமா நடந்துக்கோமா!” என்றான்.
அவர் அவனை கடுமையாக முறைத்து விட்டுச் செல்ல, அவனோ, “இது எப்படி இருக்குது தெரியுமா அண்ணி! ‘உயிரே! எப்படியாவது தப்பிச்சு ஓடிவிடு!’னு வடிவேலு பார்த்திபனுக்கு பயந்து பாடிட்டு ஓடினது மாதிரி இல்ல…!” என்றான்.
அவன் பேச்சில், அனைவர் முகத்திலும் புன்னகை அரும்பியது. கனிமொழி கூட, அதிர்ச்சியை மீறி லேசாகப் புன்னகைத்து இருந்தார்.
வெற்றிவேந்தன் தோளில் கை போட்ட மகிழ் கொற்றவன், “இந்த நேரத்தில் நீ எப்படி இங்க…?” என்று கேட்டான்.
“பசங்க மாஸ் கட்டடிச்சிட்டு படத்துக்குப் போறாங்க.. எனக்கு பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல.. அதான் வீட்டுக்கு வந்துட்டேன்.”
“ஆனா, இன்னும் கொஞ்ச நேரத்தில் வெளிய போவியே!” என்று லயனிகாஸ்ரீ கண் சிமிட்ட,
அவனும் சிரிப்புடன், “க க க போ!” என்றபடி அவளுடன் கை தட்டினான்.
“அத்தை.. நான் பேசியதில் நீங்க ஹர்ட் ஆகி இருப்பீங்கனு..” என்ற லயனிகாஸ்ரீயின் பேச்சை இடையிட்ட கனிமொழி,
“கஷ்டமா இருந்தாலும், நீ சொன்னது தானே உண்மை.. இனியாவது என்னை மாத்திக்கிறேன்.. உடனே முடியாது.. கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிறேன்.” என்றார்.
அவள், அவரை தோளோடு அணைத்துக் கொள்ள, மகிழ் கொற்றவன் மறுபக்கம் வந்து அணைத்துக் கொண்டான். அவர் புன்னகையுடன், இருவரது கன்னத்தையும் பற்றினார்.
“பெரியம்மா நானு” என்றபடி வெற்றிவேந்தன் வர,
“ரெண்டு கை தானேடா இருக்குது.” என்றார்.
“இதுங்க ரெண்டும் உங்களை கட்டிக்கிறேன்னு ஜோடி போடுதுங்க..! நீங்க அதுங்களை கழட்டி விட்டுட்டு, என்னை கொஞ்சுங்க”
“என்ன! இதுங்க, அதுங்கவா!” என்றபடி லயனிகாஸ்ரீ அவனை அடிக்க வர,
“அண்ணி, நோ வயலன்ஸ்.. மீ யுவர் ஒன் அண்ட் ஒன்லி கொழுந்தனார்.” என்றபடி ஓடினான்.
“அந்த கொழுந்தனாரைத் தான், இப்போ நார் நாரா கிழிக்கப் போறேன்.” என்றபடி அவனை துரத்திக் கொண்டு ஓடினாள்.
ஒரு கட்டத்தில் அவள் கையில் சிக்கி, இரண்டு கொட்டுகளை வாங்கியவன், மூச்சு வாங்க மெத்திருக்கையில் அமர்ந்தபடி, “எப்படி அண்ணி இவ்ளோ வேகமா ஓடுறீங்க?” என்று கேட்டான்.
“அம் அன் அத்லெட்.” என்று அவள் புன்னகையுடன் கூற,
“இது தெரிந்து இருந்தா, முதல்லேயே கொட்டு வாங்கி இருப்பேன்.. இப்படி மூச்சு வாங்க ஓடியே இருக்க மாட்டேன்.” என்றவன், “ஆமா, அது என்ன ஜாம்! போதுவா, தக்காளி சட்னியானு தானே கேட்பாங்க!” என்றான்.
“எதிலும் நாம வித்யாசமா இருக்க வேணாமா! அதும் போக, அம் ஆல்வேஸ் ஸ்வீட் யூ னோ(know)!” என்றவள், “என்ன கிங்!” என்று தன்னவனைப் பார்த்துக் கேட்டு கண் சிமிட்டினாள்.
“எஸ்.. லயனினாலே இனிமை தானே!”
‘இதுங்க லவ்ஸ் தாங்கலையே!’ என்று முணுமுணுத்த வெற்றிவேந்தன், மீண்டும் ஒரு கொட்டை லயனிகாஸ்ரீயிடம் இருந்து பரிசாகப் பெற்றுக் கொண்டான்.
வடிவழகி ஆச்சி, “சரி சரி.. மலரும் மகிழும் நல்ல நேரத்தில் கிளம்புங்க.” என்றதும், இருவரும் கிளம்பினர்.
கீதம் இசைக்க காத்திருப்போம்…