அவள் அடங்காத கோபத்துடன், “அவனுங்க ரெண்டு பேரோட டெட் பாடி, ஆற்று கரையோரம் கிடைச்சு இருக்குறதா, நவி போன் பேசினப்ப சொன்னா…” என்றாள்.
அவன் அதிர்வுடன், “தயாவா?” என்று கேட்க,
“சார் அமைதியா இருக்கிறதில் இருந்தே தெரியலையா…! இவன் இப்படி ஏதாவது செய்திடக் கூடாதுனு தான், அவன்களை என்ன செய்யப் போறான்னு கேட்டேன்.. ஒரு மாசம் தன்னோட கஸ்டடியில் வைச்சிட்டு, என்னைக் கொல்ல முயற்சி செய்றது யாருனு கண்டு பிடிச்சதும், அவனுகளை விட்டு விடுறதா சொன்னான்.” என்று முடித்தபோது, தயாளனை முறைத்தாள்.
“அவனுங்க… உயிர் வாழ தகுதியே இல்லாத ஜென்மங்க பாப்பா. எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை அழிச்சு இருக்கானுங்க தெரியுமா?”
“அதுக்காக, நீ அவங்களை அழிப்பியா?” என்று சற்றே ஆவேசக் குரலில் கேட்டாள்.
தயாளன், மகிழ் கொற்றவனைப் பார்த்து, “நான் செய்தது தப்புனு நீங்க நினைக்கிறீங்களா?” என்று கேட்டான்.
அவனோ, “சாகும் நிலையில் இருப்பவன் கொலையாளியாவே இருந்தாலும், அவன் உயிரை காப்பது தான் என்னோட தொழில் தர்மம்.. நானும் அதைத் தான் செய்வேன்.” என்றான்.
‘ஜாடிக்கு ஏத்த மூடி’ என்று முணுமுணுத்த தயாளன், “அவன் உங்களை கொல்ல வந்தவனா இருந்தாலும், இதான் உங்க பதிலா?” என்று கேட்டான்.
“மயக்க மருந்து கொடுத்து காப்பாத்திட்டு, என்னையும் காப்பாத்திப்பேன்.. உங்களோட அடுத்த கேள்விக்கும் பதில் சொல்லிடுறேன்.. லயனியை கொல்ல வந்தவனா இருந்தா, முதல்ல, உயிருக்கு ஆபத்தில்லாம அவனை தாக்கி செயழிக்கச் செய்து லயனிய காப்பாத்திட்டு, தேவைப்பட்டா மருத்துவமோ அம்புலன்ஸ்கோ கூப்பிட்டுட்டு, லயனியோடு எஸ்கேப் ஆகிடுவேன்.”
தலையை இருபுறமும் அசைத்த தயாளன், “உன் மேல கை வச்சு இருக்கான்க பாப்பா.. எப்படி சும்மா விட முடியும். அதுவும் காலை சுத்தின பாம்பாட்டம், நிச்சயம் அவனுக திரும்ப வந்து பிரச்சனை செய்வானுங்க.. அதான் சத்தமே இல்லாம முடிச்சுட்டேன். என் மேல் சந்தேகம் கூட வராது..
அவங்க உன் கிட்ட பிரச்சனை செய்தது, வெளியே தெரியப் போறது இல்லை.. அது போக, ஆத்தோரம் அவனுங்க டென்ட் போட்டு இருந்த மாதிரியும், ட்ரக்ஸ் கொஞ்சம் அதிகமா எடுத்துட்டு, ஆத்தில் குளிக்க போனப்ப தண்ணியில் மூழ்கி இறந்ததா தான், செட் பண்ணேன்.. நியூஸ் கூட அப்படி தான் வந்து இருக்குது.” என்றான்.
“இனி உன்னால் எந்த உயிரும் போகாதுனு சத்தியம் செய்.” என்றபடி கையை நீட்டினாள்.
அவன் தயங்கியபடி, “உனக்கு பாய்சன் கொடுத்..” என்று ஆரம்பிக்க,
அவளோ இடையிட்டு, “இப்போ, நீ சத்தியம் செய்யலைனா, இதான் நான் உன் கிட்ட பேசுறது கடைசி.” என்றாள்.
“பாப்பா!”
“என் மேல் சத்தியம் செய்.”
அவன் வேறு வழி இல்லாமல் கோபமும், ஆதங்கமுமாக முகத்தை தூக்கி வைத்தபடி, அவள் அருகே வந்து சத்தியம் செய்தான்.
“உனக்கு ஒரு டாஸ்க் தரேன்.. ஒரு வாரத்தில், நீ ஆரி குட்டிக்கு நல்ல பிரெண்ட்டா மாறி இருக்கணும்.”
“இது அநியாயம் பாப்பா.”
“நான் சொல்றதை சொல்லீட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்!”
“ஒரு வாரத்தில் எப்படி?”
“அப்போ, ரெண்டு நாளுனு மாத்தவா?”
“அங்கே, வீட்டில் இருக்கும் கருப்பு ஆட்டை வேற கண்டு பிடிக்கணும்.”
“ஏன்! உன்னால் ஒரே நேரத்தில் ரெண்டு வேலை செய்ய முடியாதா?”
“நான் இது வரை, எந்த ஒரு குழந்தை கிட்டயும் பழகியதே இல்லை!”
“இப்போ பழகு…”
“இந்த பனிஷ்மென்ட், ரொம்ப கடுமையா இருக்குது.”
“குழந்தை கூட பழகுறது வரம்.. பனிஷ்மென்ட் இல்லை.. உன்னோட கோபம் குறைய தான், குழந்தையோட பழகச் சொல்றேன்.. அவங்களோட உலகமே தனி..! அதுக்குள்ள போக பொறுமை ரொம்ப அவசியம்.”
“உன் கிட்டயே அவன் பேசலை…”
அவள் கைகளை கட்டியபடி அமைதியாகப் பார்க்க, “சரி.. செய்றேன்.” என்றான்.
அடுத்து அவள் கதவையும் தன்னவனையும் பார்க்க, அவன் சென்று கதவை திறக்க, தயாளன் இறுதி முயற்சியாக அவளைப் பார்க்க, அவள் கண்ணால் மிரட்டவும்… பெருமூச்சொன்றை வெளியிட்டு விட்டு வெளியேறினான்.
கதவை மூடிய மகிழ் கொற்றவன், இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை சிரித்தான்.
பின், “ஸோ… ஆரி குட்டியை இவர் கரெக்ட் பண்ணுவார், நீ மலரை கரெக்ட் பண்ணுவ.. நீ நடத்து!” என்றான்.
முறைப்புடன், “நான் அவன் கிட்ட சீரியஸ்ஸா பேசிட்டு இருக்கேன்.. நீங்க சிரிச்சிட்டு இருக்கிறீங்க!” என்றாள்.
“சிரிக்கலையே! அடக்கிட்டு தானே இருந்தேன்.”
“ஆனா, எனக்கு தெரியும் தானே!”
“நான் என்ன செய்யட்டும்! எனக்கு சிரிப்பு தான் வந்தது.. நீ அவரை மிரட்டுறதும், அவர் உனக்கு அடங்கிப் போறதும்! அதுவும் ஆடு தானா வந்து சிக்கிடுச்சுனு, என் மைண்டு வாய்ஸ் வேற கௌண்டர் கொடுக்குது!”
“போதும்.. போதும்” என்றவள் சிறு கவலையுடன், “தயாக்கு எந்த பிரச்சனையும் வராது தானே! அவன் மேல் யாருக்கும் சந்தேகம் வராது தானே!” என்றாள்.
அவள் அருகே சென்று அவளை தோளோடு அணைத்தவன், “அதெல்லாம் பக்காவா தான் செய்து இருப்பார்.. கவலைப்படாத…” என்றான்.
பின் பேச்சை மாற்றும் விதத்தில், “சொல்ல மறந்துட்டேன்.. பிரேக் பாஸ்ட்… சந்தோஷ் வீட்டுக்கு போறோம்.” என்றான்.
“விருந்தா?”
“விருந்தும் தான்.. ஆனா முக்கியமான காரணம்.. உனக்கு ட்ரெஸ், மொபைல் அண்ட் சிம் வேணுங்கிறது தான்.. மொபைல் அண்ட் சிம் அவன் வாங்கி வச்சு இருப்பான்.. சிம், அவன் பெயரில் தான் இருக்கும்.
ட்ரெஸ்சஸ் அண்ட் உனக்கு வேண்டிய திங்க்ஸ், பாட்டியை நேத்தே அவன் வீட்டுக்கு அனுப்பச் சொல்லிட்டேன்.. இப்போ இருக்க சிட்சுவேஷனில், வெளியே போய் பர்சேஸ் செய்ய முடியாது.. அதான்…”
விரிந்த புன்னகையுடன், “லவ் யூ கிங்!” என்றாள்.
“இங்க வந்து, இப்போ தான் சொல்ற…”
“ரொம்ப மிஸ் செய்தீங்களோ?”
“ரொம்ம்பபபப…”
“அப்போ, இனி நீங்க சொன்ன பிறகு தான் சொல்லுவேன்!”
“ஓகே” என்று சாதாரணமாகச் சொன்னபடி அவன் நகர,
“90’ஸ் கிட்” என்று அவள் முறைப்புடன் கூற, அவன் உதட்டோரப் புன்னகையை உதிர்த்தான்.
“என்ன சிரிப்பு?”
“நீ சொல்லுவ…” என்றபடி கதவைத் திறக்க,
“ஓவர் கான்ஃபிடென்ஸ் நல்லது இல்லை!” என்றபடி அவளும் வெளியே வந்தாள்.
“ஓவர் கான்ஃபிடென்ஸ் தானே!” என்று அமைதியான புன்னகையுடன் கூறினான். அடுத்த இரண்டு மணி நேரம் பெரிதாக சச்சரவு இன்றிக் கழிய, ஆச்சி மற்றும் அன்னையிடம் கூறிவிட்டு, தன்னவளை அழைத்துக் கொண்டு நண்பன் வீட்டிற்குச் சென்றான்.