
குறிப்பு: சனிக்கிழமை 10த் எப்பி போஸ்ட் செய்திருந்தேன்.. படிக்காதவர்கள் படிச்சுக்கோங்க தோழமைகளே!!!
தலைவலி காரணமாக இன்று வெகு தாமதம் ஆகி விட்டது.. மன்னிக்கவும்..
கீதம் 11
தன்னையும் மன்னிப்பு கேட்க வைத்து விடுவார்களோ என்ற எண்ணம் தோன்றவும், பத்மாவதி எழுந்து தங்கள் அறைக்குள் சென்று விட்டார்.
தனலட்சுமியும் அமைதியாகிவிட, இது தான் சரியான நேரம் என்று நினைத்த மகிழ் கொற்றவன், “அழகி.. இவர் தயாளன்.. லயனியோட அண்ணா..! கொஞ்சம் தூரத்து சொந்தம், ஆனா கூட பிறந்த அண்ணா மாதிரி தான்..”
பேரனவனின் பேச்சை இடையிட்ட வடிவழகி,
“இதைத் தான் அன்னைக்கே சொன்னியேடா!” என்று தனது நடிப்பைத் தொடர்ந்தார்.
அவன் பிறர் அறியாமல் கண்களை உருட்ட,
அவரோ, “உன் அப்பன் கிட்ட சொல்லு” என்றார்.
தந்தை பக்கம் திரும்பியவன், அவர் அருகில் இருந்த அன்னையைப் பார்த்து, “தயாவை, சில மாசம் நம்ம வீட்டில் தங்கச் சொல்லி கூட்டிட்டு வந்து இருக்கிறேன். சில காரணங்களால், லயனியோட குடும்ப பின்னணி பற்றி, இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாது. என் மேல் நம்பிக்கை இருந்தால் காத்திருங்க.. இல்லை, உங்களுக்கு விருப்பம் இல்லைனா… நாங்க இப்பவே வெளியே போறோம்.” என்றான்.
கனிமொழி கணவரைப் பார்க்க,
தர்மலிங்கம், “அவனுக்கு என் மேல் இல்லாத நம்பிக்கை, அவன் மேல் எனக்கு நிறையவே இருக்குதுனு சொல்லு.” என்றார்.
உடனே அவன், “நம்பிக்கை தரும்படி, எதுவும் அவர் செய்தது இல்லைனு சொல்லுங்கம்மா” என்றான்.
நிலைமையை சகஜமாக்க லயனிகாஸ்ரீ, “மாமா, அத்தை… எங்களை ஆசீர்வாதம் செய்யுங்க.” என்றபடி தன்னவனைப் பார்த்தாள்.
இருவரும் அவர்கள் காலில் விழு,
அவர்கள், “நல்லா இருங்க” என்று வாழ்த்தினர்.
பிறகு தன்னவனை இழுத்துக் கொண்டு வைத்தியலிங்கம் முன் நின்றவள், “சின்ன மாமா, நீங்களும் ஆசீர்வாதம் செய்யுங்க.” என்றபடி அவர் காலில் விழுந்தாள்.
இதை எதிர்பார்த்திடாதவர் விழிக்க,
வடிவழகி, “பிள்ளைகளை வாழ்த்துடா, சின்னவனே!” என்றார்.
அதன் பிறகே அவர் அவசரமாக, “நல்லா இருங்க.. நல்லா இருங்க.” என்று வாழ்த்தினார்.
இதை அறையின் உள்ளே இருந்து கேட்டுக் கொண்டு இருந்த பத்மாவதி கோபத்துடன், ‘உன் சித்தி கூட சேர்ந்து தான் ஆசீர்வாதம் செய்வேன்னு சொல்றாரா! இந்த மனுஷனை கட்டிக்கிட்டு, என்ன சொகத்தைக் கண்டேன்? ஒன்னுத்துக்கும் ஆகாத மனுஷன்!’ என்று வறுத்தெடுக்க ஆரம்பித்தார்.
அடுத்து, கோமதிநாதன் தனலட்சுமி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கப் போக,
இருவரையும் தடுத்த கோமதிநாதன், “காலிலெல்லாம் விழ வேண்டாம்.. எப்போதும் சந்தோஷமா இருங்க.” என்று வாழ்த்தினான்.
பிறகு இரு தங்க மோதிரங்களை, தனலட்சுமி கையால் கொடுக்க வைத்து, இருவரையும் மற்றவருக்குப் போட வைத்தான்.
தனலட்சுமி கேள்வியாய் கணவனைக் நோக்க, “அவன், கல்யாணம் செய்ததும் பேசினான்.. அவனுக்காக தான் சீக்கிரம் வந்தேன். ஆனா, உன் கிட்ட இருந்து இப்படி ஒரு வரவேற்பை எதிர்பார்க்கல…” என்றான்.
தனலட்சுமி உண்மையான வருத்தத்துடன் தலை குனிய, அவளை தோளோடு அணைத்தபடி, “சரி விடு…” என்றவன் மகிழ் கொற்றவன் மற்றும் லயனிகாஸ்ரீயைப் பார்த்து, “விருந்துக்கு ஒரு நாள் வீட்டுக்கு வாங்க.” என்றான்.
“கண்டிப்பா வரோம்.” என்று இருவரும் ஒன்றாகக் கூறினர்.
அடுத்து லயனிகாஸ்ரீ விரிந்த புன்னகையுடன், மலர்கொடி அருகே சென்று அவளது கைகளைப் பற்றியபடி,
“இந்த அழகி தான், மலர்கொடி அக்கா, ரைட்!” என்றாள்.
மலர்கொடி மென்மையாக புன்னகைக்க,
வடிவழகி, “அவளையும் அழகினு சொல்ற!” என்று சண்டைக்கு வந்தார்.
லயனிகாஸ்ரீ வாடாத புன்னகையுடன், “மலர் அக்கா, உள்ளூர் அழகி! நீங்க உலக அழகி!” என்று கூறி கண் சிமிட்டினாள்.
“நீ பொழச்சுக்குவ…” என்று அவர் சிரிப்புடன் கூற, அனைவர் முகத்திலுமே மென்னகை அரும்பியது.
தனலட்சுமி சிரிக்கவில்லை என்றாலும், வெறுப்பின்றி அமைதியாகத் தான் நின்றிருந்தாள்.
வடிவழகி தயாளனைப் பார்த்து, “என்ன தம்பி.. நீங்க ரொம்ப அமைதியோ? அதான், என் பேரனுக்கு உங்களை பிடிச்சு போச்சோ?” என்றார்.
தயாளன் மென்னகையுடன், “அப்படியெல்லாம் இல்ல.. நல்லாவே பேசுவேன். ஆனா, அவசியம் இல்லாத இடத்தில் மூக்கை நுழைக்க மாட்டேன்.” என்றான்.
“நல்ல குணம் தான்.” என்று பாராட்டியவர், “மொட்டையா பேசாம… ஆச்சி, மாமா, அத்தைனு முறை சொல்லி பேசுப்பா.. உன் வீடு போல் இயல்பா இரு.” என்றார்.
“சரி ஆச்சி.”
“ஹும்ம்” என்றவர், “மலர்மா, தயா தம்பிக்கு மேல ரூம் ரெடி பண்ணு.”
மலர்கொடி, “சரி ஆச்சி” என்றுவிட்டு கிளம்ப,
“லயனிமா, நீ போய் முகம் அலம்பிட்டு வந்து விளக்கேற்று.”
லயனிகாஸ்ரீயும் மென்னகையுடன், “சரி ஆச்சி” என்று கூறி தன்னவனைப் பார்த்தாள்.
அவனோ ஆச்சியை முறைத்தபடி, “அழகி.. அவ எனக்கு மட்டும் தான் லயனி.. நீ வேற பேர் சொல்லிக் கூப்பிடு.” என்றான்.
“வெடைச்சிட்டு நிக்கிறத பார்!” என்று கிண்டல் செய்தவர், “பொழச்சுப் போ.. நான் ஸ்ரீ னு கூப்பிட்டுக்கிறேன்.” என்றார்.
அவன் விரிந்த புன்னகையுடன், அவர் கன்னத்தைப் பற்றிக் கொஞ்ச,
அவரோ, “ஆரி குட்டிக்கு, லயனி சித்தினு சொல்லித் தரேன்.” என்று சீண்டினார்.
“நான் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து அவனை கரெக்ட் பண்ணிக்கிறேன்.” என்று அலட்டிக் கொள்ளாமல் கூறிவிட்டு, “வா லயனி, நம்ம ரூமுக்கு போகலாம்.” என்றான்.
முதல் தளத்தில் இருக்கும் தங்கள் அறைக்கு செல்லும் முன், தயாளனிடம் கண்ணசைவில் பேசிவிட்டே இருவரும் சென்றனர்.
ஐந்தே நிமிடங்களில் இருவரும் தயாராகி கீழே வர, அங்கே சிறு சலசலப்பு நடந்து கொண்டு இருந்தது.
மகிழ் கொற்றவன், “என்னாச்சி?” என்று வினவ,
வடிவழகி பத்மாவதியை முறைத்தபடி, “என்னைக்கும் இல்லாத திருநாளா, உன் சித்தி இன்னைக்கு விளக்கேற்றி இருக்கா!” என்றார்.
பத்மாவதி நக்கலும் எகத்தாளமும் கலந்த, உதட்டோர வெற்றிப் புன்னகையுடன் நின்றிருந்தார்.
“இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகி, உங்க உடம்பை கெடுத்துக்கிறீங்க! அவங்க என்ன நினைத்து செய்து இருந்தாலும், நான் இதை நல்ல விதமாவே எடுத்துக்கிறேன்.” என்ற லயனிகாஸ்ரீ, “கிங், நம்ம கல்யாணத்துக்கு வாங்கிய விளக்கை எடுத்துட்டு வரேன்.. அதை ஏத்துறது ஸ்பெஷல் தானே!” என்றாள்.
அவனும் புன்னகையுடன், “கண்டிப்பா.. காலையில் நமக்கான பூஜைக்கு வைத்த விளக்கு ஸ்பெஷல் தானே! எடுத்துட்டு வா.” என்றான்.
அவள் விரைந்து சென்று விளக்கை எடுத்து வந்து, கனிமொழி உதவியுடன் புது திரியை வைத்து ஏற்றி, கடவுளை வணங்கினாள். அதன் பிறகே வடிவழகி மற்றும் கனிமொழி மனம் நிம்மதியுற்றது.
பத்மாவதி கடுப்புடன், உதட்டை சுழித்துவிட்டு அகன்றார். தயாளன் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டான்.