“எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்கிற! விடு பார்த்துக்கலாம்.. ஆனா ஒன்னுடா.. நம்பிக்கைனு சொல்லி, ஆப்பை சொருகாம இருந்தா சரி!”
“அதெல்லாம் இல்லை மாமா.. என்னை நம்புங்க.”
“என்னத்த நம்ப…! இத்தனை வருஷத்துக்கும் சேர்த்து வச்சு ஒரே நாளில் நீ பேசினா, சந்தேகம் வராதா! அதிலும் நீ செய்து வச்சு இருக்க காரியம்!”
“எனக்கு உங்களை பிடிக்கும் மாமா.. ஆனா, பேசுறது போல் சூழ்நிலை அமையல…”
“என்னடா என்னலாமோ சொல்ற! இப்ப தான்டா லைட்டா பீதியாகுது.”
“மாமா…!”
“சரி விடு”
“ஹும்ம்.. திருச்சியில் இருக்கும் உங்க சொந்தத்தில், யாருக்கும் உடம்பு முடியலைனு ஹாஸ்பிடலில் சேர்த்ததா சொன்னாங்களா?”
“எனக்கு தெரிந்து இல்லை.. ஆனா, ஏன் குறிப்பா ஹாஸ்பிடல்னு கேட்கிற?”
“வந்த முதல் நாளே, லயனிக்கு சாப்பாடு ஒத்துக்காம புட் பாய்சன் ஆகிடுச்சு.. நைட் நேரம் தொடர்ந்து வாமிட் செய்து தெம்பில்லாம மயங்கிட்டா..! நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன்.. அங்கே சந்தேகமா பார்க்கவும், நான் ஹஸ்பண்டுனு சொல்லி தான் அட்மிட் செய்தேன்.. நான் அட்மிட் செய்த கொஞ்ச நேரத்தில், அவளோட அண்ணா வந்தார்.. அண்ணானா கொஞ்சம் தூரத்து சொந்தம். ஆனா, கூடப் பிறந்த அண்ணா போல தான்.. அவரும் எங்க கூட தான் இருந்தார்.. அடுத்த நாள் பன்னிரெண்டரை போல டிஸ்சார்ஜ் ஆகிட்டோம்.. இப்போ, கூட அவரும் வரார்..
உங்க ரிலேட்டிவ் யாரும் அங்கே வச்சு என்னைப் பார்த்து.. நர்ஸ் கிட்ட பேசியதைக் கேட்டு, அக்கா கிட்ட சொல்லி இருந்தானு யோசிச்சேன்.. இதுவும் இல்லைனா, இன்னைக்கு காலையில் எங்க கல்யாணத்தை முடிச்சிட்டு, லயனி பிரெண்ட் கல்யாணத்துக்கு போன இடத்தில் எங்களை பார்த்து இருக்கணும்.. ஆனா, அதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி.”
“கோவில்?”
“இல்ல மாமா.. அங்க நாங்க மட்டும் தான் இருந்தோம்.. எனக்கு என்னவோ ஹாஸ்பிடல் தான் தோணுது.”
“நான் தனம் கிட்ட பேசிட்டு சொல்லவா?”
“இல்ல மாமா வேணாம்.. எங்க விசயம் தெரிந்த மாதிரி கூட காட்டிக்க வேணாம்.. முடிஞ்சா வீட்டுக்கு 5.30க்கு வாங்க.. அக்கா என்னை எது வேணாலும் சொல்லலாம். ஆனா, லயனியை சொல்ல அனுமதிக்க என்னால் முடியாது.. கோபத்தில் நான் எதுவும் பேசிடவும் கூடாது.. நீங்க சொன்னா, அக்கா கொஞ்சம் கேட்பாங்க.. அதான்.”
“ஒரு வேலை விசயமா நான் பாண்டி (பாண்டிச்சேரி) வந்து இருக்கேன்.. முடிந்தளவு சீக்கிரம் வரப் பார்க்கிறேன்.. உன் வைஃப்காக நீ பேசுறது தான் சரி. என்னைக் கேட்டால், இதுவரை நீ அமைதியா இருந்ததே தப்புனு தான் சொல்வேன். உங்க வீட்டில் உன்னை அமைதியாக்கி, அவளை இப்படி வளர்த்து விட்டு இருக்கிறாங்க! ஆனா ஒன்னு.. உங்க வீட்டில் இருக்கும் தனம் வேற, எங்க வீட்டில் இருக்கும் தனம் வேற…!” என்றான்.
“உங்க கூட இருக்க தனம் தான், அக்காவோட உண்மையான குணம். என்னோட அக்கா, தேவதை தான் மாமா.” என்றான்.
மென்னகையுடன், “உனக்கே தெரியுறப்ப, எனக்கு தெரியாதா!” என்றான்.
“லயனி கிட்ட போனை கொடுக்கிறேன் மாமா…”
“ஹும்ம்”
கைபேசியை வாங்கிய லயனிகாஸ்ரீ உற்சாக குரலில், “எப்படி இருக்கிறீங்க அண்ணா? நான் ரொம்ப நல்லா இருக்கிறேன்.. ஈவ்னிங் வீட்டில் நேரில் பார்க்கலாம்.. இப்போ உங்க மைண்டு வாய்ஸ் என்னனு சொல்லவா? ‘இதுங்க ரெண்டும் சேர்ந்து எந்த வம்பில் நம்மளை கோர்த்து விடப் போகுதுகளோ! இல்ல, எதில் நம்ம தலையை உருட்டி விளையாடப் போகுதுகளோ!’ என்ன சரியா?” எனவும்.
சத்தமாகச் சிரித்த கோமதிநாதன், “உன் பேச்சில் தான் பையன் விழுந்துட்டானா?” என்றான்.
“அப்படி சொல்ல முடியாது.. ஆனா பேசி பேசி தான் அவரை கரெக்ட் பண்ணேன்.” என்றவள் தன்னவனைப் பார்த்து கண் சிமிட்டினாள்.
அவனோ புன்னகையுடன், அவள் பேசுவதைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
“அது மட்டுமா! பேசாதவனை பேச வேற வச்சு இருக்கிறியே!”
“இப்படி தான் இந்த உலகத்தை நம்ப வச்சு இருக்கார்.. ஆனா உண்மை என்னனா, காலேஜ் டேஸில் எனக்கே டஃப் கொடுக்கிற அளவுக்கு பேசுற ஆளாம்.. இவர் பிரெண்ட் சொன்னாங்க.”
“பாரேன், எப்படி ஏமாத்தி இருக்கிறான்.. இது தெரியாம, உன் பேஷன்ட்ஸ் கிட்டயாவது பேசுவியானுலாம் நான் கேட்டு இருக்கேன்.. சரி, என்னைப் பத்தி என்ன சொல்லி இருக்கான்?”
“நீங்க நல்லவர், நியாயமானவர்.. உங்களை அவருக்கு ரொம்ப பிடிக்கும்.. அப்புறம் அவர் சொல்லாமல், அவர் பேசியதில் இருந்து நான் புரிந்து கொண்டது.. உங்க மேல் அவருக்கு மதிப்பும், மரியாதையும், அன்பும் நிறையவே இருக்குது.”
“அவனுக்கு என்னை இவ்வளவு பிடிக்கும்னு நீ சொல்லி தான்மா தெரியுது.. அவன் அளவுக்கு இல்லைனாலும், எனக்கும் மகிழை பிடிக்கும். அவனுக்காக தனத்துக்கிட்ட பேசி கூட இருக்கிறேன். எனக்கும் தனத்துக்கும் கல்யாணம் ஆகி பன்னிரெண்டு வருசம் ஆகுது. இத்தனை வருஷத்தில், இன்னைக்கு தான் என் கிட்ட பேசியே இருக்கிறான். ஆனா, டாக்டர் அமைதியா அப்சர்வ் செய்து இருக்கார் போல…”
“அக்காக்காக விலகி இருந்து இருப்பார்.”
“ஹும்ம்.. பாசக்காரன் தான்.. ஆனா, அவளுக்குப் புரியலையே…!”
“புரியும்..”
“பார்க்கலாம்.. சரிமா, உன் அண்ணா கிட்ட போனை கொடு, ரெண்டு வார்த்தை பேசிடுறேன்”
“அவன் வண்டி ஓடிட்டு இருக்கான்.. நேரில் பேசிக்கலாமா? இல்ல, வண்டியை நிறுத்தி பேசச் சொல்லவா அண்ணா?”
“நேரில் பேசிக்கிறேன்.. யார் காரில் வரீங்க?”
“ட்ராவல்ஸ் தான் அண்ணா.. ஆனா, டிரைவர் மெதுவா ஓட்டவும், இவர் அண்ணாவை ஓட்டச் சொன்னார்”
“ஓ! ரொம்ப வேகம் வேண்டாம்.. பார்த்து வீட்டுக்கு வாங்க.. அங்கே பார்க்கலாம்.. மகிழ் கிட்டயும் சொல்லிடு.”
“ஓகே அண்ணா.. பை.. டேக் கேர்.” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
“ரொம்ப யோசிக்காதீங்க கிங்.. அங்கே போய் பார்த்துக்கலாம்.” என்றபடி கைபேசியை அவனிடம் கொடுத்தாள்.
“ஹும்ம்” என்றவனின் சிந்தனையை திசை திருப்ப,
அவனது புஜத்தை சுற்றிப் பிடித்தபடி தோளில் சாய்ந்தவள், “கொஞ்ச நேரம் தூங்குறேன்.” என்றாள்.
அவளுக்காக வாங்கி வைத்திருந்த மாதுளம் பழச்சாறை எடுத்தவன், “இதை குடிச்சிட்டு தூங்கு.” என்றான்.
“எனக்கு பசிக்கலை..”
“பரவாயில்லை.. இது ஸ்ட்ரென்த்காக”
குரலை வெகுவாகக் குறைத்து, “கிங்” என்று அழைத்தாள்.
ஏதோ வில்லங்கமாக கூறப் போகிறாள் என்பதை உணர்ந்தவன், ‘என்ன?’ என்பது போல் புருவம் உயர்த்தினான்.
“எனக்கு எதுக்கு ஸ்ட்ரென்த்? எப்படியும் இன்னைக்கு பஸ்ட் நைட் நடக்கப் போறது இல்லையே!” என்று கேட்டு கண் சிமிட்டினாள்.
அவளது குரலும் நெருக்கமும் அவனை பாதித்தாலும், தன்னை கட்டுப் படுத்தியவன், அவளைப் போலவே குரலை தாழ்த்தி, “இன்னைக்கு இல்லனா என்ன? எப்படியும் என்னை தாங்கப் போறது நீ தானே! அப்போ ஸ்ட்ரென்த் வேணும் தானே!” என்று கூறியபடி புருவத்தை ஏற்றி இறக்கினான்.
அவனிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்த்திராதவள் முதலில் அதிர்ந்தாலும், நொடிப் பொழுதில் சுதாரித்து, குறும்புப் புன்னகையுடன், “அப்போ, தொலை நோக்குப் பார்வையுடன் கொடுக்கப்படும் ஜூஸ் இது!” என்றாள்.
சிரிப்புடன், “அதே தான்.. குடி” என்றான்.
அவள் குடித்து முடித்ததும், “நான் எதுவும் யோசிக்கல.. நீ தூங்கு.” என்றான். அதன் பிறகு, வீடு வரும் வரை பெரிதாக பேச்சு ஏதும் இல்லை.
அதே நேரத்தில், அங்கே சென்னையில் தனலட்சுமி, “என்னப்பா, அமைதியா உட்கார்ந்து இருக்கிறீங்க?” என்றாள்.
“அவன் வந்ததும் விசாரிக்கிறேன்னு சொன்னேனேமா…”
“அப்போ, என் மேல் நம்பிக்கை இல்லையா?”
“நீயே நேரில் பார்த்து சொல்லி இருந்தா, மறு பேச்சே இல்லாம நம்பி இருப்பேன்.. ஆனா, இப்போ அப்படி இல்லையே! அங்கே என்ன நடந்தது, அதை உன்னோட சின்ன மாமியார் என்னனு புரிஞ்சுக்கிட்டாங்கனு நமக்கு தெரியாதே!”
“என்ன இருந்தாலும், உங்களுக்கு உங்க பையன் தான் உசத்தி.. அதுவும் உங்க ஆசை மனைவியோட பையனாச்சே!” என்று கண்ணை கசக்கி வராத கண்ணீரை அவள் துடைக்க, கனிமொழி அமைதியாகவே இருந்தார்.
தர்மலிங்கம், “அப்படியெல்லாம் இல்லடா.. எனக்கு நீ தானே முக்கியம்.. உனக்கு தெரியாதா!”
பத்மாவதி, “என்ன கனி அமைதியா இருக்க?” என்று பிரச்சனையை துண்டி விடப் பார்த்தார். கனிமொழியோ, “மகிழ் தப்பு செய்தா, அவனை தண்டிக்கும் முதல் உரிமை தனாக்கு தானே இருக்குது! அதான், நான் அமைதியா இருக்கிறேன்.” என்றார்.