மேகம் வந்து தாலாட்ட – 33 (4)

வெளியே வரவும் மேகாவின் முகம் எப்போதும் போல இருக்க அதிரன் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு வர தயாரிப்பாளருடன் தேவராஜ் பேசிக்கொண்டு இருந்தார்.

“ப்பா நாங்க கிளம்பறோம்…” என்றதும் மகனை பார்த்தார்.

“ஓகே அதி. ஹாங், மூவி ரொம்ப அழகா வந்திருக்குப்பா…” என்று தோளை தட்டி சொல்லியவர்,

“வர்ணா உனக்கு பிடிச்சிருக்காம்மா?…” என்றார்.

“பிடிச்சிருக்கு மாமா…” என்றவள் அதிரனை பார்க்கவில்லை.

“சரி நீங்க கிளம்புங்க. நான் மார்னிங் தான் வீட்டுக்கு வருவேன். அம்மாட்ட சொல்லிட்டேன்…” என்றவர் தயாரிப்பாளருடன் பேசிக்கொண்டே சென்றுவிட இன்னும் குறையாத கூட்டம் வெளியே.

அதிரன் காருக்காக மேகாவுடன் வந்து நிற்க பாதுகாப்பு தடுப்பை தாண்ட முயலும் ரசிகர்கள் அங்கே ஆர்ப்பரிக்க கையசைத்தான் அனைவருக்கும்.

கார் வந்துவிட்டது. வந்ததை போல இருவரும் சென்று காரில் ஏறிக்கொள்ள அந்த திரையரங்க வளாகத்தை தாண்டும் வரை அதிரன் ரூப்டாப்பை திறந்துவைத்து நின்றுகொண்டு கையசைத்தபடி இருந்தான்.

அவற்றை தாண்டும் வரை கூட ரசிகர்களின் அலை ஓயாதது போல அவனின் காரை பின்தொடரவும் செய்தனர்.

“பின்னாடியே வராங்க…” மேகா திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு சொல்ல,

“சொல்லியாச்சு. கேட்கமாட்டேன்றாங்க. என்ன பன்றது மேகா?…” என்றான் அதிரன்.

காரின் வேகத்தில் பைக்கில் இளைஞர்கள் காரை சுற்றிக்கொண்டு வர அதிரன் தலையை குனிந்தபடி மொபைலில் இருந்தான்.

“உங்களை தான் கூப்பிடறாங்க, பாருங்க…” என ஜன்னல் வெளியே தெரிந்தவர்களை காண்பிக்க,

“இப்ப ஒருத்தரை பார்த்து கை கொடுத்தா அடுத்தடுத்து பின்னாடி இருக்கறவங்க இன்னும் வேகமா பார்க்கனும்னு வருவாங்க மேகா. அது அவங்களுக்கு தான் ஆபத்து…” என்றான்.

மேகாவிற்கு அவர்களை பார்க்க பாவமாகவும், கோபமாகவும் வந்தது. இதென்ன உயிரை பணயம் வைத்து அப்படி ஒருவனை பார்க்கவேண்டும் என்று ஆசை என.

அவள் பார்ப்பதை கண்டதும் அவளுக்கும் அவர்கள் கையசைத்து ஆர்ப்பரிக்க தூக்கிவாரிபோட்டது மேகாவிற்கு.

தானாக இன்னும் தள்ளி அதிரனருகே வந்து அமர்ந்துகொள்ள எப்போதும் இருவருக்கும் இடையில் இருக்கும் அந்த இடைவெளி அன்றில்லை.

“மேகா…” சிரிப்புடன் புருவம் உயர்த்தினான் அதிரன்.

“இல்லை நான் அங்க பார்த்தேன். எனக்கு கையாட்டறாங்க…” என சொல்லிய பாவனையில் அதிரன் சத்தமாய் சிரித்துவிட,

“உங்ககிட்ட சொன்னேன் பாருங்க…” என்று திரும்ப அங்கே இன்னும் அந்த பைக்கில் வருபவர்கள்.

“போச்சு, எங்கயும் பார்க்க முடியலை…” என முன்னால் பார்த்தபடி அமர்ந்துகொள்ள அதிரன், ஹர்ஷத், டிரைவர் என அனைவருக்குமே புன்னகை மேகாவின் புலம்பலில்.

வீடு வந்து சேரும் வரை மேகா ஜன்னல் பக்கம் திரும்பவில்லை. நேர்கொண்ட பார்வை தான் முன்னால் கண்ணாடியில் தெரிந்த சாலையில்.

“கழுத்து சுழுக்கிக்கும் மேகா…” என அதிரன் கூட மெல்லிய குரலில் சொல்ல,

“நீங்க பேச கூடாது…” என்றாள் அவளும் அதே குரலில்.

“ப்பா பயங்கர காரம் தான்…” என்று சிரித்துக்கொண்டான்.

வீடு வரும் வரை பின்தொடர்ந்து வந்தவர்கள் கார் கேட்டை தாண்டி வீட்டிற்குள் நுழையும் வரை வாசலில் நின்று வேடிக்கை பார்த்தனர்.

“உங்களை ட்ராப் பண்ண தான் வந்திருக்காங்க போல?…” என கிண்டலாய் சொல்லிக்கொண்டவள் உள்ளே செல்ல சுபத்ரா கையில் கந்தஷஷ்டி கவசம் வைத்து பார்த்துக்கொண்டு இருந்தார்.

இருவரும் உள்ளே வருவதை பார்த்ததும் சாப்பிடுகிறாயா என சைகையில் கேட்க மேகா மறுத்துவிட்டாள்.

“கொஞ்ச நேரம் ஆகட்டும் ம்மா. ரூம்க்கு அனுப்புங்க…” என மேகாவை பார்த்துக்கொண்டே சொல்ல சுபத்ரா மேகாவிடம் படம் எப்படி என்று கேட்டார்.

“நல்லா இருந்துச்சு அத்தை…” என்றவள்,

“நான் போகட்டுமா? நாளைக்கு கிளாஸ் இருக்கு…” என்றாள்.

அவளுக்கு தலையசைத்தவர் அதிரனிடம் என்னவோ கேட்க அடக்கமாட்டாமல் அப்படி ஒரு சிரிப்பு அதிரன்.

என்னவென்று திரும்பி பார்த்தாள் மேகா. மகன் சிரிக்கவும் அதன் கிண்டலை புரிந்துகொண்ட சுபத்ரா போகுமாறு சைகை காண்பித்துவிட்டு மீண்டும் அமர்ந்துகொண்டார்.

மேகா மாடி ஏற அவளோடு சேர்ந்துகொண்டவன் அவள் என்னவென்று கேட்பாள் என பார்க்க எதுவும் பேசவில்லை.

“கோபத்தை பிடிச்சு வைக்கிறியா நீ? மேகத்தால முடியுமா?…” என்று நெற்றியோடு முட்டியவன் முதல் தளத்தை கடந்து இரண்டாம் தளம் செல்லவும் அவளை கைகளில் தூக்கிக்கொண்டான்.

“விடுங்க நீங்க…” என்று துள்ள அவனின் கைகளில் அழுத்தம் கூடியது.

“முடியாது, நீ சொல்லு. என்னன்னு ஏன் கேட்கலை?…”

“என்ன கேட்கனும்?…”

“அம்மா சொன்னதுக்கு நான் சிரிச்சேன்ல. உனக்கு தெரிஞ்சுக்கனும் தானே?…”

“இல்லை…”

“ஆனா எனக்கு சொல்லனுமே மேகத்துக்கிட்ட…” என்றவன் அவளை அனாயசமாக தூக்கியபடி படிகளில் ஏறினான்.

“அம்மா ப்ரிவ்யூ ஷோவுக்கு தனியா போனதுக்கு மாமனார் குடும்பத்தை கூட்டிட்டு போயிருக்கலாமேன்னு சொன்னாங்க…” என்று சொல்ல மேகாவின் பார்வை அகன்றது.

“என்ன?…” என அப்பட்டமாய் அதிர்ச்சியாக,

“ஏன் இந்த மூவியை உங்க வீட்டுல யாரும் பார்க்கமாட்டாங்களா? இல்லை நல்லா இல்லையா?…” என்றவன் அறையின் வாசலுக்கு வந்ததும்,

“பிங்கரை பிரஸ் பண்ணு மேகா…” என்றான்.

அவன் சொல்லவும் மேகா தன் கட்டை விரலை திறப்பானில் வைக்க கதவு திறந்துகொண்டது.

உள்ளே வந்து கதவை அடைத்துவிட்டு அவளை இரண்டு சுற்று சுற்றி இறக்கிவிட்டவன்,

“சேரி கட்டியிருக்கலாம் நீ…” என்று வேறு சொல்ல அவன் சுழற்றியதில் தலை சுற்ற நிற்க முடியாமல் அவனின் சட்டையை பிடித்து தடுமாற இருவரும் கட்டிலில் விழுந்தனர்.

“கோபம் போயிருச்சா மேகத்துக்கு?…” என்றான் சிரிப்போடு.

அவனை தள்ளிவிட்டு எழுந்தமர்ந்தவள் மூக்கு விடைக்க கண்களில் கண்ணீர் முட்டி நின்றது.

“நீங்க ஏன் அப்படி பண்ணுனீங்க?…”

“என்னடா பண்ணேன் மேகா?…”

“நான் ஒன்னும் உங்களை சந்தேகப்படலை. வேற மாதிரியும் நினைக்கலை…” என சொல்லிவிட அதிரன் விளையாட்டுக்களை கைவிட்டு அமைதியாக பார்த்தான் மேகாவை.

“ஹ்ம்ம், அப்படியா?…” என்றவன் அவளின் கையை எடுத்து தன் இரு கரங்களுக்குள் வைத்துக்கொண்டவன்,

“உனக்கு எதுவுமே பீல் ஆகலைன்னா ஏன் உன் கையெல்லாம் வேர்த்து போயிருந்துச்சு மேகா? என்னை திரும்பி கூட பார்க்கலையே?…”

அதுவரை கலாட்டாவாக, குறும்பாய் பேசிய குரலில்லை இது. கரகரப்பாய், லேசாய் களைப்பை உணர்த்திய குரல்.

“அதி…”

“ஏன்டா என்னை பார்க்கலை பொண்ணே? மேகம் என்ன நினைச்சதோன்னு தவிச்சுட்டேன்…” என்றதும் அவனை நெருங்கி தோளில் சாய்ந்துகொண்டவளுக்கு அவனை அப்படி பார்க்க முடியவில்லை.

“சத்தியமா இல்லை அதி. ஆனாலும் அந்த நிமிஷம் என்னால முடியலைன்றது உண்மை…” என்றவள் மீண்டும் அவன் முகம் நிமிர்ந்து பார்த்தவள்,

“சந்தேகம் எல்லாம் இல்லவே இல்லை. இப்பவும் மூவில இருந்த அந்த அதிரன் இல்லை இல்லை. அதுல நீங்க அதிரன் இல்லையே…” என்றாள்.

“மேகாடா…” ஒற்றை கையால் அவளின் ஒருபக்க கன்னத்தை தாங்கிக்கொண்டான் அதிரன்.

“ஆனாலும் அந்த குரல், இன்னொரு பொண்ணோட. ரொம்ப ரொம்ப பக்கமா, இந்த கை, இந்த முகம். இந்த மீசை…” என்றவள்,

“தப்பு, தப்பு. நான் நினைச்சது தப்பு. ஆனாலும் அந்த நிமிஷத்தை என்னால தாண்டி வர முடியலை அதி. கஷ்டமா இருந்துச்சு ரொம்ப…” என்ற சொல்லியவளை மீண்டும் அணைத்துக்கொண்டான்.

“மேகாம்மா என்னடா நீ?…”

“தப்பு தான், ஆனாலும் என்னை நானே சமாளிச்சுட்டேன். எனக்கே என் மேல கோவம். நான் தடுமாறினது உண்மை தான். ஆனாலும் அது எனக்கு நீங்க ப்ரூவ் பன்ற மாதிரி நின்னது தான் ரொம்ப காயப்படுத்திருச்சு. ஏன் அப்படி நின்னீங்க?..”

“இல்லடா, நான்…”

“எனக்கு தெரியும், நான் என்னை நினைக்கிறேனோன்னு உங்களுக்கு தோணிருச்சு. அதான் அப்படி பண்ணிட்டீங்க இல்லையா? ஆனா ப்ராமிஸ். நான் அடுத்தடவை அப்படி நினைக்க மாட்டேன். ப்ராமிஸ்….”

மீண்டும் மீண்டும் மேகா தான் தான் தவறு என சொல்லியவிதம் அதிரனை வெகுவாய் கலங்க செய்தது.  

“சில்டா மேகாம்மா. ஒண்ணுமில்லை. ரெண்டுபேருமே ஒரு நிமிஷம் தடுமாறிட்டோம். ஆனா இனி அப்படி ஆகாது. நீ இதை நினைக்காத. நானும் தப்பு. சரியா?…” என மென்மையாய் தன் மேகத்தை கைகளுக்குள் பொத்திக்கொண்டான் அதிரன்.

முத்தங்கள் மருந்தாகியது. அணைப்புகள் மயிலிறகாகியது. தென்றலின் வருடலாய் நேசம் கரைபுரண்டது.

ஊடல் காதலில் ஒரு அங்கமென்றால், அதன் பின்னான நம்பிக்கையின் இறுக்கம் இரும்பை விட வலிமையானது.  

காதலின் சக்தியை விட நம்பிக்கையின் சக்திக்கு வலிமை அதிகம் தானே? நம்பிக்கை கொண்ட நெஞ்சங்களின் தவிப்புகள் மீட்சிக்கும் உகந்ததே.

நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளில் மீண்டும் மீண்டு காதலுடன் கரை சேர மீளட்டும்.

நெஞ்சில் ஆசை வெள்ளம்

பொங்கும் நேரம் இன்பம்

காற்றோடு நான் பாடவா

மார்கழி மாதமோ பார்வைகள் ஈரமோ

ஏனோ ஏனோ

error: Content is protected !!