மேகம் வந்து தாலாட்ட – 31 (4)

“என்னப்பா?…” என்று மகளிடம் கேட்க,

“இப்பதான் நிம்மதியா இருக்குப்பா. பார்த்ததும் மனசுக்கு என்னவோன்னு ஆகிடுச்சு…” என சொல்ல,

“நல்ல பொண்ணுடா நீ? இங்க எல்லாரும் சந்தோஷமா தான் இருக்கோம். வேற ஒண்ணுமில்லை ப்பா…” என்றார் மகளிடம்.

அதன்பின் அவளின் படிப்பும், எழுதிய பரிட்சை, எங்கே யாரிடம் மூன்று வருடம் ட்ரெய்னிங் என்பதெல்லாம் பேசி முடிவானது.

இடையே செல்வத்தை அழைத்து அவரிடம் தனியே பேசினான் அதிரன். முதல்நாள் நிகழ்வுகளை பற்றி கேட்டதுமே அவரின் அனுமானம் ஊர்ஜிதமாகியது.

“பேசினது வரை தெரிஞ்சிருக்கே மாப்பிள்ளை? இங்க யாராச்சும்…” என்றதற்கு,

“சீக்ரெட்…” என்றான் ரகசிய குரலில் புன்னகையுடன்.

“இது இப்ப இல்லை. மேகாவை பார்த்த அன்னைக்கே அவளுக்காக, குடும்பத்துக்காக நான் ஏற்பாடு செஞ்சது. ஆனா நேத்து நடந்ததை நானுமே எதிர்பார்க்கலை…” என்றான் கவலையுடன்.

“எங்க கவலை எல்லாம் பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்கறதை பார்த்தாலே மறைஞ்சிரும் மாப்பிள்ளை. என்ன ஒன்னு அந்த வார்த்தை மனசை கலங்கடிச்சிருச்சு…” என்றார் தழுதழுக்கும் குரலுடன்.

“வாழ்க்கையை சொல்லி புரிய வைக்க முடியாது மாமா. வாழலாம்…” என்று புன்னகைத்தவன் மீது இன்னுமின்னும் அபிமானம் கூடியது.

இரவு நேரம் நெருங்க நெருங்க எங்கே தன்னை அழைத்துக்கொண்டு கிளம்பிவிடுவானோ என்று யோசித்தபடி மேகா இருக்க இரவிற்கு சப்பாத்தியும், பருப்பும் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டான் அதிரன்.

இரவும் கவிழ உறங்கும் நேரம் வந்துவிட்டது. அதிரன் பேச்சுக்கள் குறையவே இல்லை.

அழகாய் பேசிக்கொண்டே இருக்க செல்வமும் கிளம்ப மனதின்றி அங்கேயே இருந்தார்.

அவரின் குடும்பம் காலையிலேயே சென்றிருக்க இரவு வருகிறேன் என்று சொல்லிவிட்டார் அவர்.

அதிரனும் இருக்க பேச்சு சுவாரசியம், அனைத்திற்கும் மேல் அஷ்வினின் அலப்பறைகள்.

‘என் மாமா, என் மாமா’ என்று சொல்லிக்கொண்டு மற்ற யாரையும் கண்டுகொள்ளவில்லை அவன்.

அமுதினியனுக்கு இங்கே தங்க சொன்னால் தங்குவானோ, இல்லை என மறுத்து கிளம்பிவிடுவானோ என யோசனையாக இருக்க பல்லவனின் முகத்தையே பார்த்தபடி இருந்தார் அவரும்.

சொல்லவும் தயக்கம், இருந்தால் நன்றாக இருக்குமே என்றும் ஆசை. இன்னும் வெளியே அவனின் ஆட்கள் நின்றுகொண்டு இருக்க கிளம்பித்தான் விடுவான் என நினைத்தார்.

“தூங்கற நேரமாகிடுச்சோ?…” மடியில் உறங்கிய அஷ்வினை கண்டு கேட்க,

“ஆமா, நேரமாகிடுச்சு…” என்ற அமுதன்,

“இல்லை, இல்லை மாப்பிள்ளை, லேட்டாகும்…” என்றும் மறுத்து கூறினார்.

எங்கே ஆமாம் என சொன்னால் கிளம்பிவிடுவானோ என்று. மகளின் முகத்தையும் வேறு பரிதவிப்புடன் பார்க்க அவளுக்கு தந்தையின் தவிப்பு உருக்கிவிட்டது.

உரிமையாய் சொல்ல கூட எத்தனை தயக்கம் என்று மனதில் பெரிதாய் ஒரு அழுத்தம்.

சமாளிப்பாய் சிரித்தபடி அதிரனின் முகத்தை பார்த்தபடி அவளும் நிற்க பல்லவன் அஷ்வினை தூக்கிக்கொண்டான்.

“ஓகே, மேகா நாமளும் தூங்கலாம்…” என்ற அதிரன்,

“குட்நைட்…” என சொல்லி மேகாவின் அறைப்பக்கம் நகர அத்தனைபேரும் வாய் பிளந்து பார்த்தனர், மேகாவும்.

“என்னாச்சு? இவ்வளோ ஷாக்? நான் இங்க இருக்கலாம் தானே?…” என்றான் சிரிப்போடு.

“மாப்பிள்ளை என்ன? என்ன இப்படி சொல்லிட்டீங்க? இங்க, நீங்க, அச்சோ இது உங்க வீடு. உங்க வீடு…” அமுதன் அதிரனின் கையை பிடித்துக்கொள்ள வெகுவாய் உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.

“கண்டிப்பா இது என் வீடு தான். அதான் நானே இருக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்…” என்று சிரிக்க அத்தனை பெரும் முகமும் பளீரென்று இருந்தது.

“சரி தூங்கட்டும், நீங்க தூங்குங்க. தூங்குங்க…” என்று மலர் வேகமாய் சொல்லியவர்,

“ஒரு நிமிஷம்…” என்றவர்,

“நீங்க உள்ள போங்க மாப்பிள்ளை…” என்று சொல்லி மகளை அழைத்தார். அதிரன் சிரிப்புடன் அறைக்குள் செல்ல போக,

“மாப்பிள்ளை உங்களுக்கு ட்ரெஸ்…” பல்லவன் கேட்கவும்,

“கார்ல இருக்கு. வசந்த் கொண்டுவருவான்…” என்று சொல்லவும் தலையசைத்தான்.

அதற்குள் மோனிகாவும், மலரும் மகளின் முகத்தை கழுவ செய்து, உடை மாற்ற வைத்து, தலையில் இருந்த பூவை எடுக்க சொல்லி வேறு வைத்துவிட்டார்.

“ம்மா, ஈவ்னிங் தானே வச்சீங்க?…” மேகா முணங்கலாய் சொல்ல,

“நீ சும்மா இரு வரு…” என்று புதிதாய் இருந்த பூவை சூட்டிவிட்டார்.

“அப்பறம் நாளைக்கு காலையில சாப்பிட…” என மலர் ஆரம்பிக்க,

“அத்தை அவளை விடுங்க. காலையில பார்த்துப்போம்…” என்று மோனிகா சொல்லவும் மேகா அறைக்குள் வர அதிரன் உடை மாற்றி இருந்தான்.

அத்தனை நாள் அவனோடு இருந்தவள் தான். ஆனாலும் இந்த நொடி அன்று தான் திருமணம் ஆனதை போல வெட்கமும், அவன் மீதான அளவற்ற நேசமும் ஆர்ப்பரித்தது.

மெல்லிய கொலுசொலியும், வளையல்களின் சத்தமும் சலசலக்க உள்ளே வந்தவளை பார்த்தவன் இதழ்களில் ரசனை கொஞ்சியது.

“ஜஸ்ட் வாவ் மேகா…” என்றான் அவளை கண்டதும்.

“என்னவாம், திடீர்ன்னு ட்ரெஸ் சேஞ்ச்?…” என அவள் முன் குனிந்து முகம் பார்த்து கேட்க,

“அது அம்மாவும், அண்ணியும்…”

“ஹ்ம்ம்…” என்றான் ஒற்றை தலையசைப்புடன்.

“மேகா…” என்று கைகளை விரிக்க அவனின் கரங்களுக்குள் புகுந்துகொண்டவள்,

“நான் நினைக்கவே இல்லை….”

“நீ என்னை நினை. உனக்காக நான் என்னவும் செய்வேன்னு நினை மேகா. அதை எப்பவும் நீ கேட்கவும் செய்யனும். அந்த உரிமை உனக்கு இருக்குடா…”

“ஹ்ம்ம்…”

“எங்க உரிமையா கேளு பார்ப்போம்…”

“என்ன கேட்க?…”

“என்னையே கேளேன்…” என்றான் அதிரன் புன்னகை மின்ன.

“மேகத்துக்கு அதிரன் வேணும் தானே?…” என்று மெல்லிய குரலில் நாணமாய் மொழிய,

“அதிரனுக்கும் மேகம் தான் வேணும்…” என சொல்லி அவனின் கையகத்திற்குள் சேர்த்திருந்தான்  அவனின் மேகத்தை.

வெள்ளி மணிச்சத்தம் துள்ளி குதித்தொரு

தாளம் போட

வெள்ளி அலையுடன் செல்ல கயல்களும்

நாளும் கூட

error: Content is protected !!