அதன்பின்னர் தான் விலகி இருந்த மொத்த சோர்வும் ஆட்கொள்ள அப்படி ஒரு உறக்கம் இருவருக்கும்.
காலை வெகுநேரம் கழித்தே விழித்தனர். மேகாவின் உள்ளங்கை அதிரனின் கன்னத்தில் பதிந்திருக்க விழிக்கும் பொழுதே அவள் விரல்களில் முதல்நாள் இட்டிருந்த மெஹந்தியின் வாசம்.
ஆழ்ந்து நுகர்ந்தவன் கையை எடுத்து பார்த்தான். திருமணத்தில் தன்னுருவத்தை வரைய செய்திருந்தவன் இப்போது இருவரின் முகத்தையும் வரைய வைத்திருந்தான்.
மாட்டேன் என்று மறுத்தவளிடம் அதிரனின் சமாதான பேச்சுக்களோ, கட்டாயப்படுத்துதலோ இல்லை. புன்னகை மட்டுமே.
“போட்டுக்கோ மேகா, கல்யாணத்தப்போ தனியா இருந்தேன் உன் கைல. இப்ப ரெண்டுபேரும் சேர்ந்து. இல்லை இப்பவும் கப்பிளா வேண்டாம்ன்னா என்னை மட்டும் வரைஞ்சுக்கோ…” என்று சிரிக்க அவனை அடுத்து எங்கே அவள் மறுக்க?
காலை மெஹந்தி இட்டிருக்க மதியம் பார்த்து ரசிக்க கூட நேரமின்றி அதிரனின் வேலைகள் அதிகமிருந்தது.
அதன்பின்னரும் மாலை வரவேற்பு, உமேஷ் வருகை என கடந்து போக முதல்நாள் இரவு வெளியே சென்றபொழுதும் பெரிதாய் ஞாபகமில்லை அதிரனுக்கு.
இப்போது ரசித்து பார்த்தவனின் விரல்கள் மேகாவின் கையிலிருந்த மருதாணியில் கோலமிட அந்த விரல் கூச்சத்தில் மேகாவும் விழித்துக்கொண்டாள்.
“ஹ்ம்ம், அதி…” என புரண்டு படுத்தவளால் கையை எடுக்க முடியாது போக கண் திறக்க அதிரன் அவளின் உள்ளங்கையில் அழுத்தமாய் முத்தமிட்டு தன் முகத்தை புதைத்துக்கொண்டான்.
“குட்மார்னிங் மேகா…” என மெல்ல சொல்ல,
“குட்மார்னிங்…” என்றவள் கையை இழுத்துக்கொள்ள பார்க்க மொத்தமாய் அவன் அணைப்பிற்குள் வந்தாள்.
“டைம் என்னன்னு பாருங்க…”
“நீ பார்த்தா போதும். எதுக்கு ரெண்டுபேரும் பார்த்துட்டு…” என சிரித்தவன்,
“நைட் பயங்கர தூக்கமோ மேகத்துக்கு?…”
“ஹ்ம்ம், படுத்தது தான் தெரியும். தூங்கிட்டேன்…” என்று சொல்ல அதிரனின் மொபைலில் சத்தம்.
“ஹப்பா…” என்று அவன் லேசாய் திரும்பியதும் எழுந்து ஓடியேவிட்டாள் மேகா.
“மேகா பார்த்து…” அவள் ஓட்டத்தில் சிரிப்புடன் சொல்லியவன் தனது மொபைலை எடுத்தான்.
“சொல்லு ஹர்ஷத்…” என்றதும்,
“ஸார், உமேஷை புக் பண்ணின பிரடியூசர் உங்களை காண்டேக்ட் பண்ணனும்னு சொல்றார்…”
“ஓஹ்…” என்றவன்,
“அப்பாவை காண்டேக்ட் பண்ண சொல்லு. அதுக்கு முன்னாடி அப்பாட்ட பேசிடு…”
“ஸார், தேவராஜ் ஸார் தான் உங்களை கேட்க சொன்னார்…”
“நான் சொன்னேன்னே சொல்லிடு ஹர்ஷத்…” என சொல்லி போனை வைத்துவிட்டான்.
குளித்து கீழே இறங்கி செல்ல தேவராஜ் வீட்டில் இல்லை. ஆனால் கீழே சென்று காலை உணவை முடித்ததும் அழைத்துவிட்டார் மகனுக்கு.
“குட்மார்னிங் ப்பா, ஸ்டுடியோவா?…” என்றான் எடுத்ததும்.
“ஆமாப்பா, காலையிலையே வந்துட்டேன்…” என்றவர்,
“ரவிசங்கர் கால் பண்ணினார் அதி…”
“என்னை காண்டேக்ட் பண்ண கேட்டிருப்பார் போல?…” அதிரன் சொல்லவும்,
“ஹ்ம்ம், ஹர்ஷத் சொன்னான். நான் பேசிட்டேன்…”
“என்ன சொன்னார்?…” என்றான்.
“வேற டைரக்டர்க்கு பேச்சுவார்த்தை போயிட்டிருக்காம்…”
“ஓஹ்,…”
“பட் ம்யூஸிக் நம்ம தான் பண்ணனும்னு கேட்டுக்கிட்டார்…”
“யூர் விஷ் ப்பா…”
“அதோட நீயும் இதுல மூணு சாங் பாட முடியுமான்னு, டூயட் பாடனும்னு என்கிட்ட கேட்கிறாரே?…” என்றதும் சிரித்தவன்,
“ஹ்ம்ம், டேட் ப்ரீயா இருந்தா பண்ணலாம் ப்பா, நீங்களே எப்போ கம்போஸிங்ன்னு சொல்லுங்க. பண்ணலாம்…”
“அனேகமா இந்த மந்த் என்ட் இருக்கும். நீ வேற ட்ரிப் ப்ளான் பண்ணியிருக்கியா அதி?…” என்றதும் ஒரு நொடி யோசித்தவன்,
“இப்போதைக்கு இன்னைக்கு மாமனார் வீட்டுக்கு ப்ளான் பண்ணியிருக்கேன்…” என சொல்ல தேவராஜ் சிரித்துவிட்டார்.
“இனி உனக்கு அது கூட ட்ரிப் தான் அதி…” என கிண்டல் பேசியவர்,
“ஓகே, நான் டேட் பார்த்துட்டு சொல்றேன். ஒரு சோலோ, ரெண்டு டூயட் இருக்கற மாதிரி பார்த்துக்கலாம்…”
“ப்பா…” அதிரன் சிரிக்க,
“அவர் மொத்த படத்துக்கும் உன்னையே பாட வைக்க முடியுமான்னு பார்க்கறார். எனக்கு அது சரிவராது. முடிஞ்சளவு ரெண்டாவது பாடனும்…”
“ஹ்ம்ம், ஓகே…”
“எப்போ போற சம்பந்தி வீட்டுக்கு?…” என கேட்டவர்,
“அங்க இன்னும் வர்ணா ரிலேட்டிவ்ஸ் இருக்காங்கன்னு நினைக்கறேன்…”
“ஆமாப்பா, இன்னைக்கு கிளம்பிருவாங்க. ஆனாலும் இன்னைக்கு மேகா போகலாம்ன்னு எப்ப சொல்றாளோ அப்போ கிளம்பனும்…”
“அதி…”
“வாயை திறந்து எதுவும் கேட்பேனான்றா ப்பா. அதான்…” என்றான் சிரிப்போடு.
“ஹ்ம்ம், போய்ட்டு வா. அங்க ஸ்டே பன்ற ஐடியாவா?…”
“இப்ப வரைக்கும் யோசிக்கலை. நானே கால் பன்றேன்…”
“ஓகே இருக்கட்டும், வீட்டுக்குள்ளயே இருக்காம வெளில போய்ட்டு வாங்க, சேஃபா. நம்ம ஸ்டுடியோவுக்கு கூட கூட்டிட்டு வாயேன்…” என சொல்லி போனை வைத்துவிட்டார்.
அதிரனும் மேகாவின் நடமாட்டங்களை கவனித்தபடி தான் இருந்தான். நாளிதழை கையில் வைத்துக்கொண்டு ஒரு பார்வை மேகாவின் மீதும் இருந்தது.
தன்னை பார்ப்பதும், தாயிடம் பேசுவதுமாக மேகா வலம் வர அதிரன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
“பேசு மேகா, என்னை கூப்பிடு வீட்டுக்கு போகலாம்ன்னு…” என முணுமுணுத்துக்கொண்டே தான் இருந்தான்.
அதற்குள் மதிய உணவு நேரமும் வந்திருக்க மேகாவின் முகத்தில் எதிர்பார்ப்பு போய் இப்போது மறந்துவிட்டானோ என தோன்ற ஆரம்பித்தது.
வேலை இருக்குமோ? கேட்டால் தனக்காக வரவேண்டியதாக இருக்குமோ? இல்லை கிளம்ப முடியாத சூழலோ?
இப்படி மேகா கேட்க தயங்கி, யோசித்து, மருகி, பின் தன்னை சமாளித்தபடி இருந்தாள்.
முதல்நாளே அத்தனை அயர்வையும் தாண்டி தன்னை வெளியே அழைத்து சென்று வந்திருந்தான்.
தனக்காக யோசித்து அழைத்து சென்றவன் இப்போது கிளம்பாமல் இருக்க தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்துக்கொண்டாள்.
மனதிற்கு அத்தனை ஆசை, இன்றாவது தன் வீட்டில் நிம்மதியாக, சந்தோஷமாக தாய், தந்தை, அண்ணன், அண்ணி, அஷ்வின் எல்லோருடனும் இருக்கலாம் என நினைத்தாள்.
“என்ன வரு, சாப்பிடாம கூட என்ன யோசனை?…” என சுபத்ரா கேட்கவும் அதிரன் மேகாவை பார்க்க,
“இல்லத்தை, ஒன்னுமில்லையே. சும்மா அஷ்வினை பத்தி யோசிச்சிட்டிருந்தேன்…” என்று சொல்லிவிட்டு அதிரனை பார்க்க,
“கால் பண்ணி பேசு மேகா. ஏன் யோசிச்சுட்டே இருக்கனும்?…” என்றான் அவன்.
“ஹ்ம்ம், ம்ம்ம், பேசிடறேன்…” என சொல்லியவள் முகமே கூம்பிவிட்டது.
“மேகா, என்னாச்சு?…” என்றான் அதிரன்.
“ஒன்னுமில்லையே, இல்லையே…” என்று வேகமாய் மறுத்தவள் உணவை வேகமாய் உண்ண புரையேறியது.
தலையில் தட்டியவள் இருமிய வேகத்தில் கண்ணில் நீர் நிறைந்து முகம் ரத்தமென சிவந்துவிட,
“ஹேய் பார்த்துடா, மேகாம்மா…” என தலையை தட்டினான்.
“ஏன் மெதுவா சாப்பிடேன்?…” என்று அவளிடம் சொல்லிவிட்டு தாய் இருப்பதை கண்டு கைகளை மடக்கியபடி அமர்ந்துகொண்டான்.
“என்னம்மா, அம்மா வீடு ஞாபகமா?…” என சுபத்ரா கேட்க அதிரன் மொபைலில் பார்வையை பதித்தான்.
“இல்லத்தை…” என அதற்கும் அவள் சொல்ல,
“அதெல்லாம் இருக்கத்தான் செய்யும், ஆமா நீ பேசினியா அம்மாட்ட? என்ன பன்றாங்க? ப்ரீயா இருந்தா வர சொல்லேன்?…” என கேட்டபடி சாப்பிட,
“காலையில பேசினேன் த்தை. சொந்தக்காரங்க எல்லாரும் ஊருக்கு கிளம்பிட்டிருந்தாங்க காலையில….”
“கிளம்பிட்டாங்களா?…”
“ஆமா, நேத்தே மண்டபத்தில இருந்து கொஞ்சம் கிளம்பிட்டாங்க. இன்னைக்கு மார்னிங் எல்லாரும் கிளம்பிட்டிருந்தாங்க…”
“வீடே கலகலப்பில்லாம இருக்கும் போ…” என்றார் அவர்.
“ஆமா, அம்மாவும், அண்ணியும் மட்டும் அஷ்வினோட இருப்பாங்க…” தொண்டையில் உணவு இறங்க மறுத்தது.
“சரி, நீ சாப்பிடு. அப்பறமா நானும் பேசறேன் அம்மாவுக்கு…” என்றார்.
இத்தனை பேச்சுக்களிலும் அதிரன் எந்த பாவனையும் காண்பிக்கவில்லை. காதில் வாங்கினானா என்றும் தெரியவில்லை.
அதிலேயே மேகா அமைதியாகிவிட்டாள். காரணமின்றி அவன் வராமல் இருக்க போவதில்லை என்று.
நினைத்த நேரம் அழைத்துக்கொண்டு செல்லும் இடத்தில் அவன் இல்லையே என மனது தவித்து அடங்கியது.
“ஓகே ம்மா, நான் ரூம்க்கு போறேன். ஹர்ஷத் கேட்லாக் கொண்டு வருவான். வாங்கி வைங்க…” என்று சொல்லிவிட்டு மேகாவை பார்க்க அவளும் உண்டு முடித்திருந்தாள்.