மேகம் வந்து தாலாட்ட – 31 (1)

மேகம் – 31

          நள்ளிரவை கடந்து நேரம் செல்ல செல்ல கடல் காற்றின் குளுமை இன்னும் கூடியது.

“மேகா, வா கிளம்பலாம்…” அதிரன் எழுந்து நின்று மேகாவிற்கு கை கொடுத்ததும் இருவரும் வாகனம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

“வீட்டுக்கு வரப்போ இருந்த டயர்டுக்கு நீ தூங்கிடுவன்னு நினைச்சேன். பரவாயில்லையே?…” என சிரித்தான்.

“தூங்கிருப்பேன். ஆனா இதை மிஸ் பண்ண மனசு வரலை. அதனால எனக்கு தூக்கமும் வரலை…” என்றாள் முகமெல்லாம் நிறைந்த சந்தோஷத்துடன்.

“ஹ்ம்ம்…” என்ற அதிரனின் புன்னகை இன்னும் பெரிதாகியது.

இதற்குள் காரை வந்தடைந்திருந்தார்கள் இருவருமே. அதிரன் தனது இருக்கையில் அமரவும் மேகா தண்ணீரை எடுத்து அருந்த,

“பழத்தை கூட சாப்பிட விடாம கூட்டிட்டு வந்துட்டேன்ல…” என்றான்.

“போய் சாப்பிட்டுக்கலாம்…” என்றவள்,

“உங்களுக்கும் தூக்கம் வரலையோ?…”

“எனக்கு தூக்கத்தை கண்ட்ரோல் பன்றது எல்லாம் பழக்கம் தான் மேகா…” என்றான் இலகுவாய்.

“ஷூட்டிங் சில நேரம் தொடர்ந்து இருக்கும். கிடைக்கிற அரைமணிநேரம், ஒருமணிநேரம் எல்லாம் கூட போதும். உக்கார்ந்துட்டே தூங்கி எழுந்திருவேன்…”

“அச்சோ, கஷ்டமே. உடம்பு என்னாகும்?…” மேகா கவலையுடன் கேட்க,

“என்னாகும்?…” என்றான் அதையும் சிரிப்போடு.

“போங்க போங்க. கேட்கலை…” என்று சொல்ல இன்னும் சிரித்தான்.

“அது அப்படித்தான். அதுக்காக தூங்காமலே என்னை நான் பாழாக்கிக்கவும் மாட்டேன். அதுக்குத்தான் டாக்டர்ஸ், டயட்டீஷ்யன் இப்படி நிறையப்பேர் என்னை கவனிச்சுக்க இருக்காங்களே?…”

“ஹ்ம்ம்…”

“என்ன மேகத்துக்கு சுருதி குறையுது?…”

“ஒண்ணுமில்லை…”

“மேகம் முகம் மாறுதே? இல்லைன்னு சொன்னா நம்பிருவேனா நான்?…”

“அம்மா, அண்ணி சொல்லிருக்காங்க. நான் உங்களை நல்லா பார்த்துக்கனும்னு…” அவள் சின்ன குரலில் சொல்ல,

“ஆமா, நீ என்னை பார்க்கனுமே மேகா. நானுமே கூட சொல்லுவேன்…” குறும்புடன் அவன் சொல்லியவிதத்தில் அதிரனை பார்க்க,

“பார்த்துக்கனும் தானே?. பாரு…” என்றான் கண்சிமிட்டி.

“இது அது இல்ல…” அவள் திணறுவதை ரசித்து பார்த்து சிரித்தவன்,

“டேய் மேகா…” என்றான் அடக்கமாட்டாமல்.

“அப்பா அம்மாவை பார்த்துக்கற மாதிரி. அச்சோ இல்லை. வொய்ப் ஹஸ்பண்டை பார்த்துக்கற மாதிரி. அப்படி பார்க்கனும், பார்த்துக்கனும்…”

“நானும் அதை தான் மேகமே மீன் பண்ணேன்…” என தன் இதழ்களை மடக்கிக்கொண்டு சிரிப்பை அடக்க அவனின் தோள் குலுங்கியது.

அவனின் கன்னமெல்லாம் சிரிப்பில் அதிர, அதிரனின் விழிகளில் அப்படி ஒரு குறும்பு. உடல்மொழியில் ஒரு உல்லாசம்.

“ப்ச்…” என்று மேகா திரும்பிக்கொண்டாள்.

“ஏதாவது குடுத்தியா மேகா?…” அவளை சீண்டியபடி.

“என்ன? ஒன்னும் இல்லையே?…” அவள் கையை விரிக்க,

“ப்ச், இந்த சவுன்ட்…” என்று கேட்டு அவன் இதழ் குவித்து சொல்ல,

“அச்சோ…” என முகத்தை மூடிக்கொண்டு அப்படியே தன் மடியில் சாய்ந்துகொண்டாள்.

“ஹேய் சில்டா மேகா…” என்று அவளின் தலையில் தட்டியவன் காரை ஓரமாய் ஓரிடத்தில் நிறுத்தவும் நிமிர்ந்து பார்த்தாள்.

“இங்க என்ன?…”

“உனக்கு தான். இப்ப வரும்…” என்று சொல்லிவிட்டு ஸ்ட்ரியரிங்கில் தாளமிட அவனையும் அவனின் விரல்களையுமே பார்த்தாள்.

“என்ன மேகா?…” தன் மீது குவிந்திருந்த அவளின் கவனத்தை கண்டு கேட்க,

“நீங்க எப்பவும் இப்படித்தானா? இந்த தாளம்…” என கேட்டதுமே அவன் முகத்தில் ஒரு மென்னகை.

“ஹ்ம்ம், கவனிச்சியா நீ?…”

“பர்ஸ்ட் டைம் கூட பேசும் போது இப்படித்தான்…”

“ஹ்ம்ம், அப்பறம்…”

“செகென்ட் டைம் கூட. கார்ல வச்சும் கூட…”

ஒவ்வொன்றாய் அவள் ஞாபகத்தில் மீட்டு அவனுக்கு சொல்ல கன்னத்தில் கையை ஊன்றியபடி ஸ்ட்ரியரிங்கில் தலையை சாய்த்து பார்த்திருந்தான் அவளை.

“உங்க மேனரிசமா?…”

“ஹ்ம்ம் அப்படியும் வச்சுக்கலாம். கொஞ்சம் டென்ஷனாவோ, இல்லை ரெஸ்ட்லெஸாவோ, இல்லை என் கண்ட்ரோல்ல நான் இல்லைன்னாலோ இப்படி தான்…”

“இப்படித்தான்னா?…” அவன் சொல்ல வருவது அவளுக்கு ஓரளவு புரிந்தாலும் கேட்டு தெரிந்துகொள்வதில் அத்தனை ஆர்வமாய் இருந்தாள்.

“அந்த நிமிஷம் என்னை நிதானத்துக்கு கொண்டுவர என்னோட விரல்கள் தானாவே தாளம் போட ஆரம்பிச்சிரும்…”

“இப்ப என்னவாம்? என்ன டென்ஷன்?…” என்றவளை ஆழ்ந்து பார்த்தவனுக்கு சொல்லவா முடியும் அவனின் மேகத்திடம்?

‘உன்னை இப்படியே நிறைவாக, சந்தோஷமாக வைத்திருக்க முடியுமா என எனக்குள் எழும் கேள்வி தந்த அலைப்புருதல்’ என்று.

“வேற ஏதாவதா இப்போ? ஷூட்டிங் போகனுமா சீக்கிரமே?…” என்றவள்,

“இன்னைக்கு ரிசப்ஷன்ல நடந்ததே அதுவா?…” என கேட்டு,

“ஒன்னும் பிரச்சனை இல்லை தானே?…”என்றாள் அவனிடத்தில்.

மேகாவின் கேள்விகளில் புன்சிரிப்புடன் இடதுகையை அவளை நோக்கி நீட்டியவன் கன்னத்தை மெல்ல வருடினான்.

“இப்பவே உன்னை அணைச்சுக்கனும்னு தோணுது. அதான் முடியலையேன்னு தாளம்…” என்று சொல்ல அவனின் கையை தட்டிவிட்டவள்,

“ஆளை பாரு…” என்றாள் சிணுங்கலுடன்.

“ஹ்ம்ம், நீ தான் பார்க்கவே மாட்டேன்ற…” எனும்பொழுதே கார் கண்ணாடி தட்டப்பட்டது லேசாய்.

கண்ணாடியை இறக்கியவன் தனது பாதுகாவலன் நீட்டிய தட்டை வாங்கிக்கொண்டான்.

“சாப்பிடு…” என மேகாவிடம் நீட்ட சுட சுட மூன்று இட்லியும், சாம்பார் சட்னியும் இருந்தது அதில்.

வாங்கியவளுக்கு அத்தனை ஆசை. இதை எல்லாம் அத்தனை விரும்புவாள். அதிலும் மோனிகாவுடன் கிளம்பி வந்துவிட்டால் போதும் வெளியில் தான் உணவுகள்.

இப்போதும், அதுவும் இப்படி நள்ளிரவில் மனதிற்கினியவனுடன் அந்த பொழுதே ரம்யமாய் தோன்றியது. முதல் வாய் எடுத்து உண்டவள்,

“உங்களுக்கு…” என கேட்டு பின் அவனை அங்கே எப்படி சாப்பிட சொல்ல என்று யோசனையுடன் பார்த்தாள்.

என்ன முயன்றும் ஒரு நொடி இருவரும் இப்படியெல்லாம் நினைத்த உணவுகளை பகிர்ந்துண்ண முடியாதென்பதில் மனது சோர்வுற முகமும் கட்டிக்கொடுத்தது.

“எனக்கு தரனும்னா தா. அதுக்கு ஏன் முகம் இப்படியாகுதாம்?…” என்று அவளின் உச்சந்தலையில் கை வைத்து கலைத்துவிட்டான்.

“ம்ஹூம், சேராம போய்ட்டா கஷ்டம் உங்களுக்கு…” என ஏற்கனவே அவன் கஷ்டத்தை அனுபவித்த ஞாபகத்தில் சொல்ல அதிரனுக்கு அந்த பாவனையில் ஐயோ என்று அள்ளி கொஞ்சிவிடலாம் என்று தோன்றியது.

“ஒரே ஒரு எக்ஸ்ப்ரெஷன்ல ரெண்டுவித உணர்வை உன்னால தான் குடுக்க முடியும் போ…” என்றான் சிரித்தபடி.

“ஆக்டர், அதான் பேச்சும் எக்ஸ்ப்ரெஷன்ஸ் பத்தி வருது…” முணுமுணுப்பாய் சொல்லியவள் மெதுவாய் சாப்பிட இடையில் ஒரு வாய் இட்லியை எடுக்க அதிரன் அவளின் கையை இழுத்து தனக்குள் சாப்பிட வாங்கிக்கொண்டான்.

“விளையாடாதீங்க…” என தட்டை திருப்பிக்கொண்டு அமர,

“ஒரு வாய்ல என்ன வந்துரும் மேகா?…” என காரில் இருந்த பிளாஸ்க்கை எடுத்து சுடுநீரை ஊற்றிக்கொண்டான்.

“ஹாட் வாட்டர் வேணுமா?…” என கேட்க,

“ம்ஹூம், எனக்கு எந்த தண்ணியும் ஒத்துக்கும்…” என சொல்லி நாக்கை கடித்துக்கொண்டாள்.

“நல்லது தானே? கரெக்ட்டா தான் சொன்ன…” என சொல்லிவிட்டு அவள் உண்டு முடிக்க காத்திருக்க சாப்பிட்டவள் பிளேட்டை கழுவ கீழே இறங்க,

“ம்ஹூம், இறங்காத மேகா. விண்டோ ஓபன் பண்ணி வாஷ் பண்ணிட்டு குடு…”  என்று சொல்லவும் தான் அந்த நேரத்திலும் அந்த கடையின் முன்பு ஆட்கள் நடமாட்டத்தை கவனித்தாள்.

“இப்பலாம் எதையுமே கவனிக்கிறதில்லை நான், இனி கவனமா இருக்கனும்….” மேகா சாதாரணமாக சொல்ல அதிரனின் மனதின் ஓரத்தில் எல்லாம் சேர்ந்துகொண்டே இருந்தது.

முகத்தில் மாறாத புன்னகை தான் அப்போதும். மேகா இனி ஒவ்வொன்றிலும் கவனம் வைக்க வேண்டும் என்பது உண்மை தானே?

பிளேட்டை கழுவி டிஷ்யூ வைத்து லேசாய் துடைக்க அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான் அதிரன்.

“என்ன பன்ற நீ மேகா?…”

“இல்லை இப்படியே ஈரத்தோட எப்படி அவங்கட்ட குடுக்க?…”

“ப்ளேட் மேல இலை இருந்ததே? ஏன் இவ்வளோ பார்க்கற மேகா?…” என்றவன் அதனை வாங்கி வெளியே இருந்தவனிடம் நீட்டிவிட்டு காரை கிளம்பினான்.

இந்த சிறு பயணம் இருவரின் மனதிலும் பலவகை உணர்வுகளை, நிறைய விஷயங்களை நிகழ்த்தியிருந்தது.

அத்தனையும் கடந்து இருவருமே அந்த நேரத்தை அனுபவித்து கடந்தது அத்தனை உண்மை.

வீடு வந்தவள் மறுநாள் எப்போது தங்கள் இல்லம் போகிறோம் என கேட்கவே இல்லை அவனிடம்.

முகம் கழுவிவிட்டு வந்து படுக்கவும் அதிரனும் தொப்பென்று விழுந்தான் அவளருகே.

error: Content is protected !!