மேகம் வந்து தாலாட்ட – 20 (1)

மேகம் – 20

         அஷ்வின் பேசவும் அவ்விடம் சற்றே இலகுவாய் மாறியது. ஆனாலும் அதிரன் குடும்பத்துடன் பேச மேகாவின் வீட்டினர் தயங்கத்தான் செய்தனர்.

வாசலில் கேட்ட சத்தங்கள் வேறு உள்ளிருந்தவர்களை கலவரப்படுத்த அதிரனுக்கும் அது புரிந்தது.

“சில விஷயங்களை தவிர்க்க முடியாது இல்லையா?…” என்றான் புன்னகையுடன் அமுதனை பார்த்து.

அவன் பொதுவாய் சொன்னாலும் என்னவென்று புரியத்தான் செய்தது. இனி தங்களும் இதற்கு பழகி போவோமோ என்று நினைத்தார் அமுதன்.

பல்லவனும் அதை நினைத்திருப்பதை போல ஆமோதிப்பாய் மெல்ல தலையசைத்துக்கொண்டான்.

“சொல்லுங்க ஸார் மேகாவை எனக்கு குடுக்கலாம் தானே?…” நேரடியாய் அதிரன் அமுதினியனிடம் பேச அவரும் தலையசைத்தார்.

“உங்க பயம் எங்களுக்கு புரியுது. ஆனா வார்த்தையில் சொல்றதை விட வாழ்க்கையாய் நாங்க எப்படி வாழ்ந்து பார்க்கறோம்ன்றது தான் நான் உங்களுக்கு திருப்பி தர நம்பிக்கையா  இருக்கும்…” என்றான் பொறுமையாக.

அவன் சொல்லியது அவர்களின் மனதை தொட்டாலும் உடனே மாற முடியாத மனநிலை.

“எல்லாம் சரிதான் தம்பி. ஆனா எங்களுக்கு எங்க பொண்ணு சந்தோஷம்  முக்கியம்…” என அமுதன் சொல்ல,

“எங்க பொண்ணை? நாங்க வரவும் உள்ள அனுப்புனீங்க. இன்னும் நேர்ல பார்க்கலையே?…” என்றார் சுபத்ரா.

மலர் அவரை இன்னும் அகன்ற கண்களுடன் பார்த்துக்கொண்டே இருக்க அதை கவனித்த சுபத்ரா,

“ஏன் இப்படி பார்க்கறீங்க? அன்னைக்கும் இப்படி பாத்து தான் ஓடிட்டீங்க. நான் நல்லா பேசுவேன். கார்ட்ஸ் கூட எல்லாம் வெளில தான் நிக்கறாங்க…” என்ற சுபத்ரா,

“அன்னைக்கு கோவில்லையும் இப்படிதான் என்னை பார்த்து திகைச்சு ஓடிட்டாங்க இவங்க…” என அமுதினியனிடம் சரளமாக பேச அவருக்கு பதில் பேச முடியாமல் திகைத்து அமர்ந்தார்.

“ஏன் என்கிட்ட பேச கூடாதா?…” என மீண்டும் மலரை பார்க்க,

“எல்லாரும் ஷாக்ல இருக்காங்க ம்மா. கண்டிப்பா பேசுவாங்க. இப்ப நாம பேசுவோம்…” என்ற மோனிகா,

“நீங்க உங்க மருமகளை பார்க்கனும் இல்லையா?…” என்றாள்.

“போட்டோல பார்த்திருக்கோம். இப்ப நாங்க உள்ள வரும்போதே நீங்க ரூம்க்குள்ள அனுப்பிட்டீங்களே?…” சுபத்ரா அதையும் சொல்ல,

“மலரு…” என்றார் அமுதினியன்.

“இல்ல இல்ல, அவங்க கொஞ்ச நார்மலாகட்டும். நானே போய் பார்த்துட்டு வரேன்…” என்று எழுந்த சுபத்ரா,

“நீங்க பேசுங்க. நான் போய் பொண்ண…” என்று தேவராஜிடம் சொல்லும்பொழுதே,

“ம்மா…” என்றான் மகன் அதிரன்.

“என்ன? பேர் சொல்லனுமா? நான் சொல்லிப்பேன்…” என மோனிகாவின் கையை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த நிமிஷம் தங்கள் வீட்டிற்கு அவர்கள் வந்துள்ளனரா, இல்லை அவர்கள் வீட்டிற்கு தாங்கள் தான் சென்றுள்ளோமா என யோசனையே வந்துவிட்டது அமுதினியன், பல்லவனுக்கும். மலருக்கும்.

“மலரு…” மீண்டும் அமுதினியன் மனைவியை சென்று கவனிக்கும்படி சொல்ல மலரும் உடன் சென்றார்.

அவர் பின்னே செல்லும்முன் மோனிகாவுடன் அத்தனை நெருக்கமாகி இருந்தார் சுபத்ரா.

அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே பார்க்க கண்ணாடியின் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள் மேகா.

“நல்லாருக்கியாமா? நான் சுபத்ரா, அதியோட அம்மா…” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர்,

“ஆமா காலையில ஜாமூன் நல்லா இருந்துச்சா?…” என அடுத்ததாக கேட்டதும் மலர் புரியாமல் பார்க்க மோனிகா சிரித்துவிட்டாள்.

“ஜாமூனா? இது எப்போ? மருமகளுக்கு மட்டுமா?…” என்று மோனிகா கேட்க மலரின் முன்னால் அவஸ்தையுடன் நெளிந்தபடி நின்றாள் மேகா.

“ஆமா மோனி, எப்பவும் எனக்கு செய்வேன். இந்த அதியும், அவங்கப்பாவும் ஸ்வீட் எடுத்துக்கவே மாட்டங்க. கொஞ்சமா பிரசாதம் மாதிரி தான் எடுப்பாங்க. அதி சுத்தம். அவனுக்கு லைட்டா சாப்பிட்டாலே போதும்ன்னு சொல்லிடுவான்…”

“பாடனும், அதோட இப்படி ஸ்வீட்ஸ் எடுத்தா அதுக்கு தனியா வொர்க்கவுட் பண்ணும்னு எனக்கு கிளாஸ் ஆரம்பிச்சிருவான். இன்னைக்கு எனக்கு செஞ்சிருந்தேன்…”

“காலையில திடீர்ன்னு வந்து மருமகளை பார்க்க போறேன்னு சொல்லிட்டிருந்தான். அதான் குடுத்துவிட்டேன்…” என்று நீளமாய் விளக்கி முடித்த சுபத்ரா,

“நல்லாருந்துச்சா? நல்லா சாப்பிட்டியா? நீ ஸ்வீட் சாப்பிடுவியா?…” என்று கேட்க மேகா அடுக்கடுக்கான கேள்வியில் திணறி நின்றாள்.

“அதி சாப்பிட்டானா? நான் கேட்டதுக்கு சாப்ட்டோம்ன்னு சொன்னான். அதான் உன்கிட்ட கேட்டேன்…” என்றார்.

“ஹ்ம்ம் சாப்பிட்டோம் ஆன்ட்டி. நல்லா இருந்துச்சு…” என மேகா சொல்ல,

“ஆன்ட்டியா?…” என்று சுபத்ரா கேட்க,

“அத்தைன்னு சொல்லு வரு. என்ன இது அடுத்தவங்களை சொல்றமாதிரி ஆன்ட்டின்னு…” என்றது மலரே தான்.

அவர் பேசிவிட்டதில் கண்ணெல்லாம் கலங்கிவிட்டிருந்தது மேகாவிற்கு. சுபத்ரா முன்பு காட்டிக்கொள்ளாமல் இருக்க உதட்டை கடித்தபடி அழுகையை அடக்கிக்கொண்டு தலையை தாழ்த்திக்கொண்டாள்.

“என்னவாம்? வீட்டுல என்னவோ சங்கடம்ன்னு அதி சொன்னான். கல்யாணம் ஆகிட்டா எல்லாம் சரியாகிடும்…” என்ற சுபத்ரா,

“இங்க பாருங்க மலரு…” என்று மலர் பக்கம் திரும்ப மலர் இன்னும் தெளியவில்லை.

“ஹாங், என்ன? என்ன?…” என,

“என் பேரு சுபத்ரா, நீங்க எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க. இந்த சம்பந்தி இதெல்லாம் ஆம்பளைங்களுக்குள்ள இருக்கட்டும். நமக்கு வேண்டாம்…” என்று சொல்லியவர்,

“என் பிள்ளைன்றதுக்காக நான் ஒளிச்சு ஒன்னும் பேசலை. அவன் நிஜமாவே தங்கம். நடிகன்னு தான தயங்கறீங்க? அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இன்னொருதடவை அவன் படத்த பாருங்க. உங்களுக்கே தோணும்…” என சகஜமாய் சொல்லி சிரித்தார்.

“அதுமட்டுமில்ல ஒழுக்கம் மனசுல இருக்கனும். அவரும் சரி, அதியும் சரி அதுல நீங்க எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாது. அந்தளவுல நான் குடுத்து வச்சவ. ஒருசொல் யாரும் சொல்ல முடியாதபடி தான் இதுவரைக்கும் வாழ்ந்துட்டு வரோம்…”

அதனை சொல்லும்பொழுது சுபத்ரா முகத்தில் அத்தனை கர்வமும், சந்தோஷ களையும், பெருமிதமும் போட்டி போட்டது.

“சரிதான? இப்ப உங்களுக்கு மனசுக்கு நிம்மதியா இருக்கா?…” என்ற சுபத்ரா,

“நான் ஒருத்தி பேசறேன் பாருங்க. இனிமே நீங்களே பார்க்க தான போறீங்க?…” என்றார்.

“என் பொண்ணு சந்தோஷமா இருந்தா போதும். அதைவிட எங்களுக்கு வேறென்ன வேணும்?…” என்று மலர் கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு சொல்ல,

“அப்பறம் ம்மா…” என்று சுபத்ரா மருமகள் பக்கம் திரும்பினார்.

“நாங்க வருன்னு கூப்பிடுவோம். உங்களுக்கு எப்படியோ அப்படி கூப்பிடுங்க…” என சொல்லிய மலர்,

“கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ வரு…” என்றார் மகளிடம்.

மேகாவும் ஆசிர்வாதம் வாங்க விழ தன்னோடு மலரையும் சேர்த்து நிறுத்திக்கொண்டார் சுபத்ரா.

“எத்தனை பேர் ஆசிர்வாதம் பண்ணாலும் பெத்தம்மா பன்றது தனி. நீங்களும் சேர்ந்து நில்லுங்க…” என்று பிடித்துக்கொள்ள மலருக்கு சுபத்ராவை கொஞ்சம் பிடித்து தான் போனது.

error: Content is protected !!