அவனை பார்த்தபடி கன்னத்தில் கைவைத்து ஆரவ், நிலா, அர்ஜூன் ஸ்டெபி என வரிசை கட்டி அமர்ந்திருக்க நிலாவின் பக்கத்து இருக்கையில் அவளது குழந்தை நிரல்யா அர்ஜூன் குழந்தையான மூன்று வயது பூஜாவுடன் அமர்ந்திருந்தாள்.
அர்ஜூன் கார்த்திக்கின் பெற்றோரான கிருஷ்ணனும் கல்பனாவும் கூட பக்கவாட்டில் அமர்ந்து நடப்பவற்றை பார்த்திருந்தனர். அவர்கள் அருகில் அமுதாவும் சேகரனும்.
“இவன் போடற சீன் தாங்க முடியலைடா டக்கு. உன் தம்பி உனக்கு மேல இருக்கானே?…” என ஆரவ் வாயாட,
“அதை நீ சொல்லாதடா. உன்னை மாதிரியே எல்லாரும் இருப்பாங்களா? லயா குட்டி நிலாவுக்குள்ள இருக்கும் போதே கிளாஸ் எடுத்தவனாச்சே நீ. ஆனாலும் உன் பொண்ணை போல ஒரு குழந்தையை பார்த்ததே இல்லைடா சக்கு…” என்றான் அர்ஜூன்.
அர்ஜூன் கூறியது போல தினமும் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு பாடம் எடுக்கும் ஆரவ் நிலாவுக்கு கஷ்டம் தராமல் தன்னோடு வந்து சேர்ந்துவிடுமாறு மகளுக்கு போதித்து கொண்டே இருப்பான். நிலா மீது தான் கொண்ட காதலை மகளுக்கும் சொல்லி வளர்த்தான்.
“நடக்கிற காரியமா இது?” என்ற அனைவரின் கேலியையும் பொருட்படுத்தாது.
அவனின் சொல் போல நிலாவின் பிரசவ நேரத்தின் போது அதிசயித்திலும் அதிசயமாக நிலாவை அதிகம் சோதிக்காமல் மிக இலகுவாகவே தன் உலகை காண வந்துவிட்டாள் குழந்தை நிரல்யா. அதில் அவள் தகப்பனுக்கு பெருமையான பெருமை.
அதே கர்வத்தோடு மகளை ஒரு பார்வையால் வருடிவிட்டு மீண்டும் அர்ஜூனிடம் திரும்பியவன்,
“என்னை சொல்லாதே. அதான் பாய் பேபி ரொம்ப சேஃபா பொறந்துட்டான்ல. ஜீவாவும் ஆல்ரைட். ஆனாலும் இவன் பன்ற அலப்பறை முடியலைப்பா. இட்ஸ் டூ மச். ஜீவாக்கிட்ட சொல்லி கொஞ்சம் தட்டி வைக்கனும்…” என கூறி சிரிக்க அர்ஜூனும் இணைந்துகொண்டான்.
“போதும் சிரிச்சது. அவனே வொய்பை பார்க்க விடலைன்னு டென்ஷனா இருக்கான். நீங்க இங்க கிண்டல் செஞ்சுட்டு இருக்கீங்க. போய் அவனை கொஞ்சம் உட்கார சொல்லுங்க. ஃப்ளோர் தேஞ்சு போய்டபோகுது…” என ஸ்டெபி கார்த்திக்கை தலைகீழே கவிழ்த்த அனைவரையும் திரும்பி முறைத்தான் கார்த்திக்.
ஏதோ பேசப்போக அதற்குள் தர்ஷினி அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்டார். மற்றவர்களை விட்டுவிட்டு அவரிடம் விரைந்தவன்,
“தர்ஷிமா நான் ஜீவாவை பார்க்கலாம் தானே?…” பரபரக்கும் குரலில் கேட்டவனின் தலையில் செல்லமாக குட்டியவர்,
“அதான் குழந்தையை பார்த்த தானே? இப்போ ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க. ஒன் ஹவர்ல கான்ஷியஸ் திரும்பிடும். நீ பாரு…” என்றவர் மற்றவர்களிடம் தலையசைத்துவிட்டு நகர்ந்துவிட்டார்.
“ஆஷா, நீயும் நிலாவும் போய் குழந்தைகளை சாப்பிடவச்சு தர்ஷிமா கூட அனுப்பிடுங்க. ஆரவ் கார்த்தி கூட இருக்கட்டும். நான் போய் அங்கிளை பார்த்திட்டு வரேன்…” என்ற அர்ஜூன் ஆண்டனியை காண சென்றான்.
தங்களின் புறம் திரும்ப கூட இல்லாமல் கண்டுகொள்ளாமல் செல்லும் மகனை ஏக்கத்தோடு பார்த்தார் கல்பனா. கிருஷ்ணனோ அப்போதும் தன் வரட்டுப்பிடிவாதத்தை விடாமல் மகனின் புறக்கணிப்பை புறக்கணித்து அமர்ந்திருந்தார்.
மகள் பூஜாவை தூக்கிக்கொண்ட ஸ்டெபியிடம் வந்த கல்பனா, “நீ இங்க இரும்மா. நான் போய் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கூட்டிட்டு வரேன்…” என வலிய வந்து கேட்க,
“இல்லைங்க நானே என் குழந்தையை பார்த்துக்கறேன். உங்களுக்கெதுக்கு சிரமம்?…” என்றவள் நிலாவை பார்க்க அவளும் எழுந்து நிரல்யாவை பிடித்துக்கொண்டாள்.
அவள் அத்தை என அழைக்காததை கண்டுகொள்ளா பாவனையோடு, “என் பேத்திக்கு ஊட்ட எனக்கென்னம்மா சிரமம்?…” அப்போதும் விடாமல் கல்பனா கேட்க,
“அம்மா…” என்ற கார்த்திக்கின் அழுத்தமாக குரலில் தான் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அமர்ந்துகொண்டார் கல்பனா. அவரை பார்த்து நின்ற ஸ்டெபியிடம்,
“அண்ணி நீங்க பேபியை கூட்டிட்டு போங்க…” என்று சொல்லி ஆரவ்வின் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்துவிட்டான்.
அவனை நன்றிப்பார்வை பார்த்துவிட்டு நிலாவோடு நடக்க ஆரம்பித்துவிட்டாள் ஸ்டெபி. அவளோடு இணைந்து சென்ற தன் மனைவியையே பார்த்தபடி கார்த்திக்கின் பேச்சுக்களுக்கு காதுகொடுத்தவனின் மனம் பின்னோக்கி சென்றது.
நிலாவின் வரவின் பின் அவளிடம் பலவித மாற்றங்கள். அவளின் அதீத அன்பில் அவன் தான் திண்டாடி போனான். என்னதான் கற்கண்டின் தித்திப்பாய் வாழ்க்கை நகர்ந்தாலும் நிலாவிடம் தன்னோடு சில மாதங்களே வாழ்ந்த பழைய நிலாவை தேடி தேடி தோற்றான். ஆயினும் மனதின் வலியை ஒருபோதும் முகத்தில் காண்பிக்கமாட்டான்.
அவனின் தேடல் ஆழ்மனதில் அமிழ்ந்துபோகாமல் அதன் வெம்மையை உணர்த்திக்கொண்டுதான் இருந்தது. சில இரவுகளில் நிலாவே எதிர்பாராத வேளைகளில் வெளிவரும் காதலில் அவளின் கிசுகிசுப்பான வார்த்தைகளில் தன்னுடைய நிலவை கண்டுகொள்பவனின் உணர்ச்சிகள் அந்நேரம் கட்டுக்கடங்காமல் பெருகி ஊற்றெடுக்கும்.
தன்னோடு வாழ்ந்த நாட்கள் அவளின் நினைவிலிருந்து மொத்தமாக அழிந்துவிடாமல் அடியாழத்தில் பாதுகாப்பாக இருக்க நிலாவே அதை அவளறியாமல் வெளிப்படுத்த அவனுக்கு அந்த சில நொடிகளும் நிமிடங்களுமே போதுமானதாக இருந்தது.
ஜீவாவும் தன்னுடைய பி.காம் படிப்பை முடித்து விடுமுறைக்கு டெல்லிக்கு வர கார்த்திக் தன்னுடைய விருப்பத்தை அவளிடம் நேரடியாக தெரிவித்தான். அவனிடம் பதில் கூறாமல் நேராக ஆரவ்விடம் வந்துவிட்டாள். அர்ஜூனுக்கும் அழைப்பு விடுத்துவிட்டு.
இருவரிடமும் விஷயத்தை கூற ஆரவ் முதலில் ஒன்றும் கூறவில்லை. அர்ஜூன் தான் அவளிடம் கேட்டான்.
“உனக்கு கார்த்திக்கை பிடிச்சிருக்கா ஜீவா?…” என,
“அர்ஜூன் அண்ணா உங்க தம்பியை பிடிக்குது, பிடிக்கலைன்றதை விட மறுத்து சொல்ல எதுவுமில்லை. முடிவெடுக்க எனக்கு தோணலை. எனக்கு அண்ணாவா நீங்களும் அப்பாவா மாமாவும் இருக்கும் போது நான் ஏன் மூளைக்கு வேலை குடுத்து யோசிக்கனும்? சொல்லவேண்டியதை சொல்லிட்டேன்…” என தோளை குலுக்க,
“மாமாக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லேன் ஜீவா…” என்ற ஆரவ்விடம்,
“என்னால அப்பாக்கிட்ட இதை சொல்லமுடியாது. அவரை நம்பி என் எதிர்காலத்தை ஒப்படைக்கவும் மாட்டேன். எனக்கு எல்லாமே நீங்களும் இந்த குடும்பமும் தான். கார்த்திக் எனக்கு ஹஸ்பண்டா வந்தா அது எனக்கு சந்தோசம் தான்…” என முடித்துக்கொண்டாள்.
ஆரவ்வும் அர்ஜூனும் கார்த்திக்கை அழைத்து கேட்க அவன் முடிவில் தெளிவாகவே இருந்தான்.
“எனக்கு ஜீவாவை பிடிச்சிருக்கு அண்ணா. அவ உங்ககிட்ட தான் வந்து சொல்வான்னு எனக்கு தெரியும். தெரியாமலா தைரியமா சொல்வேன்? அவளை முதல் தடவை பார்த்தப்போவே உள்ளுக்குள்ள சின்ன ப்ளாஷ் அடிச்சது. அவ அந்த தயாளனை வாங்கின வாங்குல நான் ப்ளாட்…”
அர்ஜுன், “கார்த்திக், அப்பா இதுக்கு சம்மதிப்பார்ன்னு நினைக்கிறாயா?…” என,
“அது உங்க பாடு. என் லவ்வை உங்ககிட்ட சொல்லிட்டேன். கல்யாணத்தை உங்க பொறுப்புல விட்டுட்டேன். நீங்க தான் பேசி நடத்தி வைக்கனும்…” என அசால்ட்டாக கூற ஜீவாவும் கார்த்திக்கும் ஒரே மாதிரி பேசுவதை கண்டு குறுநகை பூத்தது ஆரவ்வின் இதழ்களில்.
அர்ஜூனோ, “பயபுள்ளைக எப்படிலாம் கோர்த்துவிடுதுக. பிசாசுக…” என காண்டானவன்,
“இல்லைனா சார் என்ன பன்றதா இருக்கீங்க?…” என,
“சிம்பிள் அண்ணா. நடக்கலைனா அப்பா பார்க்கிற பொண்ணை நான் கல்யாணம் செஞ்சு என் குழந்தைக்கு ஜீவான்னு பேர் வச்சு என் காதலை நிரூபிப்பேன்…” என்றான் அடாவடியாக.
“அடப்பாவி, அப்போ ஜீவா?…” என்ற அர்ஜூனிடம்,
“நீங்களே சமாளிங்க. உங்ககிட்ட ஒப்படைச்ச எங்க காதலை காப்பாத்தி கரைசேர்க்க வேண்டியது உங்க வேலை. வேண்டாம்னா விடுங்க…” என விட்டேத்தியாக பேச வாய்விட்டே சிரித்துவிட்டான் ஆரவ்.
“நேரம்டா. நேரம். இவனோட சேர்ந்தா நீ இப்படித்தான்…” என ஆரவ்வை காட்டி சொல்ல ஆரவ்வோடு ஹைபைவ் அடித்துக்கொண்டான் கார்த்திக்.
“தன்னை கண்டு மரியாதையாக நின்று பேசும் கார்த்திக்கா இவன்? காதல் எப்படியெல்லாம் மாற்றுகிறது மனிதனை?” புன்னகையோடு கார்த்திக்கை தழுவிக்கொண்டான்.
அதன் பின் மடமடவென வேலைகள் நடந்தேறின. சேகரனிடம் கார்த்திக் பற்றி கூற அர்ஜூனின் தம்பி என்பதாலும் ஆரவ் கூறுவதாலும் உடனடியாக மறுபேச்சின்றி ஒப்புக்கொண்டார். அமுதாவிற்கும் இதில் முழு சம்மதம்.
அர்ஜூனின் பெற்றோர் ஏற்கனவே அர்ஜூனின் ஒதுக்கத்தால் கொஞ்சம் இடிந்துபோய் தான் இருந்தனர். மகனின் கோவம் அறிந்தது தான். அதுவும் வருடக்கணக்காக இருந்தது தான் அவர்களின் அதிர்ச்சி.
இத்திருமணத்தை மறுத்து இளைய மகனின் கோபத்திற்கும் ஆளாக கல்பனாவிற்கு மனமில்லை. அந்தளவிற்கு காலம் அவரை மாற்றி இருந்தது. எங்கே வேண்டாம் என கூறி அர்ஜூனை விட்டு மேலும் விலக விரும்பவில்லை அவர். மகனிடம் கொஞ்சமேனும் உறவை பலப்படுத்திக்கொள்ள இதை பயன்படுத்திக்கொண்டார்.
ஜீவா திருமண விஷயம் வள்ளியம்மையை எட்ட மூன்று வருடமாக தங்களை விட்டு விலகி இருக்கும் மகனிற்காக தன்னை தேற்றிக்கொண்டு ஜீவாவை பார்க்க வந்தார் அவர். கோவிலுக்கு வண்ணமதியோடு வந்தவளை வழியில் நிறுத்தி,
“இந்தா பாருமா ஜீவா. உன்னை எனக்கு பிடிக்காது தான். ஆனா இப்போ அதையெல்லாம் விட்டு என் மகனுக்காக நான் உன்னை கேட்டு வந்திருக்கேன். உன் அப்பா அம்மான்னு யாரை நினைச்சும் பயப்படாதே. இப்போவே என்னோட கிளம்பி வா. என் புள்ளைக்கும் உனக்கும் நான் கல்யாணம் செஞ்சு வைக்கேன்…” என வெகுண்டுவிட்டாள் ஜீவா.