மகிழ் கொற்றவன், “சார், நான் என் மனைவியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்.. அதுக்கு உதவ தான் இவங்க இந்நேரம் இங்கே வந்ததே..! நீங்க வழியை விட்டீங்கன்னா, நான் கிளம்புவேன்!”
சுதீப் பேசும் முன் ராகேஷ், “அதெல்லாம் முடியாது.. நீ பொய் சொல்றனு நான் நிரூபிப்பேன்.”
மகிழ் கொற்றவன், “சார்..” என்று ஆரம்பிக்க,
சுதீப், “மிஸ்டர் மகிழ்.. நான் இரண்டு பக்கமும் விசாரிக்கணும்.. நான் என் கடமையை தான் செய்றேன்..” என்றான்.
“தாராளமா உங்க கடமையை செய்யுங்க. ஆனா, இப்போ என் மனைவிக்கு மருத்துவ உதவி தேவை.. நான் ஹாஸ்பிடல் போகணும்.. அதையும் நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.”
“ஜஸ்ட் ஃபியூ மினிட்ஸ்.. நீங்க சொல்றது உண்மைனா, இவர் மேல் நீங்க கம்ப்ளைண்ட் தரலாமே!”
ராகேஷ் அதிர்ச்சி கலந்த கோபத்துடன், சுதீப்பைப் பார்த்து ஏதோ சொல்ல வர,
அவன் அவசரமாக இவனுக்கு புரிவது போல், “நான் பார்த்துக்கிறேன்..” என்று கூறி ஒரு நொடி இடைவெளி விட்டு, “என் வேலையை.. நீங்க அமைதியா இருங்க.” என்றான்.
மகிழ் கொற்றவன், “நியாயமா பார்த்தா, நீங்க சொல்றது போல் நான் தான் இவன் மேல் கம்ப்ளைண்ட் கொடுக்கணும்.. அதை செய்யாம இருக்க இரண்டு காரணங்கள்.. வெளியூர் வந்த இடத்தில் தேவை இல்லாத பிரச்சனை வேணாம்னு தான், நான் அமைதியா இருக்கிறேன்.. இன்னொன்னு என்னோட கம்ப்ளைண்ட்டால் மிஸ்டர் ராஜீவ் கிருஷ்ணா ரெபுடேஷன் பாதிக்கப்பட கூடாதுனும் யோசித்தேன். இல்லை, இவன் விடாம பிரச்சனை தான் செய்வான்னா.. வரது வரட்டும்னு, நான் தயங்காம கம்ப்ளைண்ட் கொடுத்திடுவேன்.
இது எல்லாம் விட, இப்போ முதல்ல என்னோட ப்ரியாரிட்டி என் மனைவியோட ஹெல்த் தான்.. என்னை ஹாஸ்பிடல் போக விட்டா போதும்.. இல்லை, உங்களுக்கு சந்தேகம் இருந்தா நீங்களும் என்னுடன் வரலாம்.” என்றான்.
சுதீப் கூட மகிழ் கொற்றவனின் அசாத்திய தைரியத்திலும், மறு கேள்வி கேட்க முடியாத அவனது விளக்கங்களிலும், அசந்து தான் போனான். ராகேஷின் நண்பனாக இல்லாமல் இருந்து இருந்தால், மகிழ் கொற்றவனின் கூற்றை உண்மை என்றே நம்பி இருப்பான். யார் என்றே தெரியாத பெண்ணிற்கான அவனது செயல்கள், சற்று பிரமிக்க வைத்தது என்று கூடக் கூறலாம்.
‘நீ ஸ்மார்ட் தான், ஆனா என்னிடம் பலிக்காது’ என்று மனதினுள் சிரித்தபடி நினைத்த சுதீப், “சரி நானும் உங்களுடன் ஹாஸ்பிடல் வரேன்.. அவங்க கண் முழித்ததும், அவங்களிடமும் பேசிவிட்டே கிளம்புறேன்.” என்றான்.
‘என்னடா தலைவலி இது! இப்படி பேசினா வர மாட்டார்னு நினைத்தால்…’ என்று மகிழ் கொற்றவன் மனதினுள் சலித்தாலும், வெளியே திடமான குரலில், “ஓகே சார்.. வாங்க..” என்றான்.
ராகேஷோ சுதீப்பின் திட்டத்தை புரிந்து கொள்ளாமல், “இவன் பொய் சொல்றான்னு நான் நிரூபிக்கிறேன்.” என்றான்.
சுதீப், “மிஸ்டர் நித்தின்..” என்று ஆரம்பிக்க,
அவனோ, “பொய்னு நிரூபிச்சிட்டா.. இவனை அரெஸ்ட் செய்யுங்க.. நான் லயாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்.” என்றான்.
மகிழ் கொற்றவன் நக்கல் குரலில், “கொடுக்காத கம்ப்ளைண்ட்கு அரெஸ்ட் செய்ய முடியாது.. முதல்ல அதற்கு அவசியமே வராது.” என்றான்.
ராகேஷ் ஒருவித ஆவேஷக் குரலில், “நான் கம்ப்ளைண்ட் கொடுக்கிறேன் சார்.. இவனை அரெஸ்ட் செய்யுங்க” என்றான்.
சிரித்த மகிழ் கொற்றவன், “உன்னை மாதிரி எடுத்தோம் கவிழ்த்தோம்னு, அவரும் குதிப்பாரா என்ன? பொறுப்பான காவல் அதிகாரி..! பின் விளைவுகளை யோசிக்காம செயல் பட மாட்டார்.” என்று அழுத்தமான குரலில் முடித்தவனின் பார்வை, தன்னை எச்சரிக்கை செய்தது போல் தான், சுதீப்பிற்குத் தோன்றியது.
ராகேஷோ, “நான் போய் மெடிக்கல் காண்ஃபரென்ஸ் வந்து இருக்கும் டாக்டர்ஸ்ஸில் இருந்து ஒருத்தரை கூட்டிட்டு வரேன்.” என்றவன் நக்கல் சிரிப்புடன், “அவர் வந்து சொல்லட்டும். இவன் லயாக்கு யாருனு.. அப்புறம் கவனிச்சுக்கிறேன் உன்னை…” என்றான்.
நவீனா பதற்றம் கொள்ள, அப்பொழுதும் அலட்டிக் கொள்ளாமல் கால் சட்டை பையினுள் கையை விட்டபடி, “ஒருவேளை நீ கூட்டிட்டு வர டாக்டருக்கு, என்னையே யாருனு தெரியலைனா?” என்று கேட்டான்.
ராகேஷ் நக்கல் சிரிப்புடன், “என்ன டாக்டர்! உன் சாயம் வெளுத்திடும்னு பயமா இருக்குதா?”
சத்தமாக சிரித்த மகிழ் கொற்றவன், “நான் தான் உண்மைக்கு நிறம் மாறாதுனு சொன்னேனே! அப்புறம் எப்படி அது வெளுக்கும்?” என்றான்.
அவனது திடத்தில் எரிச்சலும் கோபமும் கொண்ட ராகேஷ், “அப்புறம் என்ன ***டா வரவனுக்கு உன்னை தெரியலைனானு கேள்வி கேட்டு பின் வாங்குற?” என்று சற்றே ஆக்ரோஷமாகக் கேட்டான்.
மகிழ் கொற்றவன் சுதீப்பைப் பார்த்து, “சார்.. பார்த்து பேசச் சொல்லுங்க.” என்றான்.
சுதீப்பும், “மிஸ்டர் நித்தின் தேவை இல்லாம வார்த்தையை விடாதீங்க.. அப்புறம் உங்க மேல அக்சன் எடுக்கிற நிலைமை தான் வரும்.” என்று நண்பனை மறைமுகமாக எச்சரிக்கை செய்தான்.
ராகேஷ் முறைப்புடன் நிற்க,
மகிழ் கொற்றவன், “நான் ஒன்னும் பின் வாங்கலை.. எதார்த்தத்தை சொல்றேன்.. காண்ஃபரென்ஸ் வந்து இருக்கிற எல்லா டாக்டர்ஸ்கும் என்னை தெரிந்து இருக்கிற அளவுக்கு, நான் பேமஸ் டாக்டர் இல்லை.. அதைத் தான் சொன்னேன்.” என்றான்.
ராகேஷ், சட்டென்று மகிழ் கொற்றவன் முகத்தை தனது கைபேசியில் புகைப்படம் எடுக்கப் போக, இடது கையால் முகத்தை மறைத்த மகிழ் கொற்றவன், “என் போட்டோ தேவை இல்லை.. மகிழ் கொற்றவன்னு என் பெயரைச் சொல்லிக் கேளு போதும். ஸோ… நீ கூட்டிட்டு வர, என்னை ஓரளவாவது தெரிந்த டாக்டர், நானும் லயனிகாஸ்ரீயும் கணவன் மனைவினு சொல்லிட்டா, நீ மூடிட்டு கிளம்பிடனும்.” என்ற மகிழ் கொற்றவன் சுதீப்பை பார்த்து, “என்ன எஸ்.ஐ சார்! நான் சொல்றது சரி தானே?”
சுதீப் வேறு வழி இல்லாமல், ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்ட,
ராகேஷோ… அலட்சியமும் எகத்தாளமும் கலந்த குரலில், “அப்படி நடந்தா பார்க்கலாம்.” என்றான்.
மகிழ் கொற்றவன் அதை விட அதீத அலட்சியத்துடன் உதட்டை லேசாகப் பிதுக்கி, வலது தோளை லேசாக உயர்த்தி இறக்கியபடி, “ஆல் தி பெஸ்ட்” என்றான்.
ராகேஷ் முறைத்து விட்டு செல்ல,
நவீனா, “நான் ரிதன்யாவை பார்த்துட்டு வரேன்.” என்று கிளம்பப் பார்க்க,
உடனே சுதீப், “இந்த விசாரணை முடியும் வரை, நீங்க இங்கிருந்து எங்கேயும் போக முடியாது மேடம்.” என்றான்.
ரிதன்யா வந்தால், அடுத்து ராஜீவ் கிருஷ்ணா வருவானே என்ற பயத்தில் தான், அவன் அவளைத் தடுத்தான். அவளும் அந்த எண்ணத்தில் தான் கிளம்ப நினைத்தாள். ஆனால், சுதீப் தடுத்துவிட்டான்.
சரியாக அந்த நேரம், லயனிகாஸ்ரீயின் மெய்க்காவலர் மற்றும் நலம் விரும்பியான தயாளன்… பக்கத்து அறை கதவைத் திறந்து வெளியே வந்து, “இங்க… என்ன நடக்குது நவீனா?” என்று கேட்டான்.
நவீனா அதிர்வுடன், “தயா சார்…” என்று முணுமுணுத்தாள்.
கீதம் இசைக்க காத்திருப்போம்…