அதற்கு லயனிகாஸ்ரீ பதில் சொல்லும் முன், அங்கே வந்த மணமகன், “ஹே ஹனி! ரொம்ப நாள் கழிச்சு உன் பெஸ்டீயை பார்த்து இருக்க தான்.. அதுக்காக என்னையும், நம்ம ஃபங்ஷனையும் மறந்துட்டு கதை பேசுறது நியாயமா? அதை என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா!” என்று நெஞ்சில் கை வைத்தபடி தலையை லேசாகச் சரித்து, உருக்கமான குரலில் ஏற்ற இறக்கத்துடன் கூற, தோழிகள் மூவரின் முகத்திலும் மென்னகை பூத்தது.
“கிருஷ்!” என்று சிணுங்கியபடி, அவனது புஜத்தில் லேசாகத் தட்டிய ரிதன்யா, லயனிகாஸ்ரீயை தோளோடு அணைத்தபடி, “இவ தான் லயா.. லயனிகாஸ்ரீ.. என்னோட..”
“டியர் மோஸ்ட் பெஸ்டீ!” என்று மென்னகையுடன் அவளவன் முடித்தான்.
விரிந்த புன்னகையுடன் அதை ஆமோதித்த அவள், தன்னவனின் புஜத்தை இரு கரங்கள் கொண்டு பிடித்தபடி தோழியைப் பார்த்து, “இவர்….”
லயனிகாஸ்ரீ, “ராஜீவ் கிருஷ்ணா.. உன்னோட சோல்மேட்” என்றாள்.
அவளின் ‘சோல்மேட்’ என்ற வார்த்தையில், இருவரும் காதலுடன் ஒருவரை ஒருவர் நோக்க, அதை லயனிகாஸ்ரீ அழகாக தனது கைபேசியில் படம் பிடித்தாள்.
சில நொடிகள் அதை காணொளியாகவும் எடுத்தவள், “அட போதும்பா.. இங்கே ரெண்டு கன்னிப் பொண்ணுங்க இருக்கோம்.. அதையும் கொஞ்சம் மனசில் வச்சுக்கோங்க.” என்று குறும்புப் புன்னகையுடன் கூறினாள்.
இருவரும் சிறிது அசடு வழிந்தபடி, பார்வையை விலக்கினர்.
லயனிகாஸ்ரீ, ராஜீவ் கிருஷ்ணாவிடம் கை குலுக்கியபடி, “வாழ்த்துக்கள்.. உங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி மற்றும் பிரகாசம் நிறைந்த வெற்றிகரமான வாழ்க்கை அமைய, எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..! என்றென்றும் இதே காதலுடன் மகிழ்ச்சியாக இருங்கள்.” என்று ஆங்கிலத்தில் வாழ்த்தினாள்.
அவனும் மனம் நிறைந்த புன்னகையுடன் ஆங்கிலத்தில், “மிக்க நன்றி” என்றான்.
அதே நேரத்தில், சற்று தள்ளி நின்றிருந்த ஒருவன் லயனிகாஸ்ரீயை பார்த்தபடி, “யாருடா இந்த பிகர்? சும்மா அள்ளுது.. அதுவும் சிரிக்கும் போது……”
மற்றவன், “வேணாம்டா. ராஜீவ் பியான்ஸியோட க்ளோஸ் பிரெண்ட் மாதிரி தெரியுது.”
“ஸோ வாட்! இன்னைக்கு நைட் அவ கூட தான்.. மடக்கிக் காட்டுறேன்.” என்றபடி கையில் இருந்த மது நிறைந்த கண்ணாடிக் குவளையை அருகில் இருந்த வட்ட மேசையின் மீது வைத்தான்.
“குடிக்கல…?”
“மதுவை விட, இந்த மாது போதை செமையா இருக்குது மச்சி.”
“வேணாம்டா.. ராஜீவிற்கு தெரிந்தா பிரச்சனை…”
“அவனுக்கு தெரிந்தா தானே! பார்த்துக்கலாம்.”
“அந்தப் பொண்ணும், உன் டைப் மாதிரி தெரியல…”
“இழுத்து போர்த்தி இருக்கிறதை வைத்து சொல்றியா? பேசுற விதத்தில் பேசினா, தன்னால மடியும்.. அவளே என் மடியில் வந்து விழுவா பாரு.” என்றவன் ஒருவித வெறியுடன், “இல்லைனாலும் எனக்கு வேணும்.. நான் முடிவு செய்துட்டேன்.” என்றான்.
“எனக்கு என்னவோ, இது சரியா படல..” என்ற நண்பனின் எச்சரிக்கையை அசட்டை செய்தவன், “போய் ஒரு அட்டெண்டன்ஸ் போடலாம் வா.” என்றபடி, வர மறுத்தவனையும் இழுத்துக் கொண்டு சென்றான்.
நால்வரும் சிரித்து பேசிக் கொண்டிருந்த பொழுது, அங்கே சென்ற அந்தக் கயவன், “என்ன ராஜீவ்! எங்களை எல்லாம் இன்ட்ரோ கொடுக்க மாட்டியா?” என்று கேட்டான்.
அந்த கயவனைப் பற்றி அறிந்து இருந்தாலும், கல்லூரி மற்றும் தொழில் சார்ந்த நட்பு முறையில் தான், ராஜீவ் கிருஷ்ணா அவனை அழைத்து இருந்தான். தனது விழாவில் தனக்கு பிடிக்காத எதுவும் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையில் தான், அழைத்து இருந்தான். ஆனால், தனது நம்பிக்கையை பொய் ஆக்குவதோடு, தனது ஐந்து நட்சத்திர விடுதியின் நன்மதிப்பையே கெடுக்கும் விதத்தில் அவன் நடந்து கொள்ளப் போகிறான் என்பதையோ, அவனால் தன்னவளின் மகிழ்ச்சி கெட்டு, கோபத்தையும் தான் சம்பாதித்துக் கொள்ளப் போவதையோ, அவன் அறியவில்லை.
ராஜீவ் கிருஷ்ணா பேசும் முன், “ஓகே, யூ கேரி ஆன்..” என்றவள், ரிதன்யாவிடம் சிறு தலையசைப்புடன் விலக, நவீனாவும் தலை அசைத்துவிட்டு லயனிகாஸ்ரீயுடன் அகன்றாள்.
அவளது விலகலில் மனதினுள், ‘ஷிட்’ என்று கோபத்துடன் கூறிக் கொண்ட, அந்தக் கயவன் வெளியே புன்னகையுடன் தான் நின்றிருந்தான்.
ராஜீவ் கிருஷ்ணா, “ஹனி.. இவன் ராகேஷ்.. என்னோட காலேஜ் மேட்.. அப்பாவும் இவனோட அப்பாவும் பிரெண்ட்ஸ்.. ஸோ சின்ன பிஸ்னெஸ் டை-அப் இருக்குது.. இவன் டேவிட்.. என்னோட காலேஜ் மேட்.. அண்ட் ராகேஷ் சொந்தமா தனியா செய்ற பிஸ்னெஸ்ஸில் பார்ட்னர்.” என்று அறிமுகம் செய்தவன்,
அவர்களிடம், “இவள் ரிதன்யா.. என்னோட லைஃப் பார்ட்னர் அண்ட் *** டெக்ஸ்டைல்ஸ்ஸோட எம்.டி” என்றான்.
தன்னை நண்பன் என்று கூட சொல்லாமல் அறிமுகம் செய்த முறையில், ராகேஷிற்கு உள்ளுக்குள் கடுகடுப்பும், ராஜீவ் கிருஷ்ணா மேல் கோபமும் எழுந்தாலும், வெளியே மென்னகையுடன்,
“ஹாய் சிஸ்டர்.. கங்கிராட்ஸ்” என்றபடி ரிதன்யாவிடம் கை நீட்டினான்.
அவளும் மென்னகையுடன், “தேங்க்ஸ் ப்ரோ” என்றபடி கை குலுக்கினாள்.
“நாம இன்னொரு நாள் நிதானமா பேசலாம்.. நீங்க மத்தவங்களை கவனிங்க.” என்று கூறி அகன்ற ராகேஷின் விழிகள், லயனிகாஸ்ரீயைத் தான் தேடியது.
ரிதன்யா, ‘என்ன இது!’ என்பது போல் பார்க்க,
ராஜீவ் கிருஷ்ணா, “விடு.. அவன் ஒரு டைப் தான்” என்றதுடன் முடித்துக்கொள்ள, அவளும் சிறு தோள் குலுக்கலுடன் ராகேஷ் பற்றி மறந்தாள்.
அதன் பிறகு வந்தவர்களை கவனிப்பதில் மும்முரமாக, லயனிகாஸ்ரீயுடன் தனியே பேசும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கவில்லை.
ஓர் இடத்தில் அமர்ந்து இருந்த நவீனா, “சரி சொல்லு..” என்று ஆரம்பிக்க,
“இன்னொரு நாள் நிதானமா, விளக்கமா பேசலாம்.. இப்போ போய் ரிது கூட இரு.”
நவீனா முறைக்க,
அவளோ மென்னகையுடன், “உங்களோட கேள்விகளுக்கான பதில்களை கண்டிப்பா சொல்லுவேன். ஆனா, அதுக்கான நேரம் இப்போ வரல…” என்றாள்.
“எங்ககிட்டயே இவ்ளோ அழுத்தம் ஆகாதுடி.” என்றதிற்கு புன்னகையையே பதிலாகத் தந்தாள்.
“சரி.. அதை பத்தி எதுவும் கேட்கல.. நீயும் வா.”
“எனக்கு யாரையும் தெரியாது.. ஸ்கூல் பிரெண்ட்ஸ்னு நம்மள மட்டும் தான் கூப்பிட்டு இருக்கா.. நீங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ், ஸோ, உனக்கு தான் அவங்களை தெரியும்.”
“அதனால் என்ன? இங்க தனியா உட்கார்ந்து இருக்கிறதுக்கு, என் கூட வா.”
“கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுவேன்.. கொஞ்சம் வொர்க் இருக்குது.”
நவீனா முறைக்கவும்,
“உங்களுக்காக தான் கஷ்டப்பட்டு, 3 நாள் பிளான் போட்டு வந்து இருக்கிறேன்.” என்றவள் கண்களை சுருக்கியபடி கொஞ்சும் குரலில், நவீனாவின் தாடையை பற்றியபடி, “நாளைக்கு நிறைய டைம் ஸ்பென்ட் செய்து பேசலாம். இப்போ சமத்தா, என்னை கிளம்ப விடனும், ஓகே!” என்று கேட்டாள்.
“எப்போதுமே இப்படி கொஞ்சி கெஞ்சியே… எங்களை மயக்கிடுடி..! ஐ தின்க், மாய கண்ணனோட ஃபிமேல் வெர்ஷன் இப்படி தான் இருக்கும்.”
லயனிகாஸ்ரீ நன்றாகச் சிரிக்க, “சிரிக்காதடி” என்ற நவீனாவின் முகத்திலும் புன்னகை தான் குடியேறி இருந்தது.
“சரி சரி.. நீ போய் கவனி. இப்போதைக்கு ரிது கிட்ட நான் கிளம்புறதை சொல்லாத…”
“போன் செய்து வண்ட வண்டையா திட்டப் போறா”
“அதை மாயக் கண்ணி (கண்ணன்) வெர்ஷனில் நான் சமாளிச்சுக்கிறேன்.” என்று கூறி கண் சிமிட்டினாள்.
“நீ செய்வ!” என்றபடி மென்னகையுடன் எழுந்தவள், “கிளம்புறதுக்கு முன்னாடி என் கிட்டயாவது சொல்லிட்டு கிளம்பு.” என்று விட்டு சென்றாள்.