நட்சத்திர விழிகளிலே வானவில் – 27 (2)

வெகுநேரம் கழித்து மாலை மங்கிகொண்டிருந்த பொழுதில் தான் பாக்கியத்தை பார்க்க நந்தினி அனுமதிக்கபட்டாள். அவரை நந்தினி பார்க்கும் போது தன் குடும்பத்தினர் அனைவரும் தன்னோடு இருக்கவேண்டுமென்ற அவளது அன்பு கட்டளையின் படி டாக்டர் பெருமாள் எல்லோரையும் உள்ளே அனுமதித்தார்.

நந்தினியை அருகில் அழைத்து அவளது கையையும், முகத்தையுமாக வருடிக்கொண்டே இருந்தார். அவரை பார்த்த நந்தினி, “எனக்கொண்ணுமில்லை லக்ஷ்மிம்மா. நான் நல்லா இருக்கேன். நீங்க சீக்கிரமா குணமாகிவாங்க. உங்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு…” என பூடகமாக பேச அனைவரும் அதை கேட்டு என்னவாக இருக்குமென யோசிக்க,

“கெளரி!!! என் பொண்ணு கெளரி தான் உன்னை காப்பாத்தியிருக்கா. எனக்கு தெரியும், என்னோட குழந்தைதான் என் வீட்டு குலவிளக்கை அணையாம காப்பாத்தியிருக்கா…” என கண்ணீரோடு கூற அதை பார்த்து நந்தினி புன்னகைக்க அந்த சிரிப்பில் பாக்கியம் தன் பெண் கௌரியே சிரித்தது போல உணர்ந்தார். அவரது உள்ளுணர்வு அப்படித்தான் அவருக்கு சொல்லி நம்பவைத்தது.

“ஆமாம் லக்ஷ்மிம்மா, அதுல என்ன சந்தேகம்? நம்ம கெளரி நம்மை விட்டு எங்கயுமே போகலை. போகவும் மாட்டாங்க. நிச்சயம் அவங்கதான் என்னை காப்பாத்தியிருக்காங்க. நானும் நம்பறேன்…” என பாக்கியத்தின் பேச்சை ஆமோதித்தாள்.

இதை பார்த்த மற்றவர்கள் பாக்கியத்தின் இது போன்ற பேச்சில் முதலில் கவலை கொண்டாலும் அவரின் உறுதியான பேச்சை, நம்பிக்கையை மறுத்து கூற மனம் வரவில்லை. அவரது நம்பிக்கை அப்படியே இருக்கட்டும் என மனம் கலங்கியபடி அமைதியாக இருந்தனர்.

சிறிதுநேரத்தில் உள்ளே வந்த ஒரு பெண் மருத்துவர் அனைவரையும் பார்த்துவிட்டு, “பாக்கியலக்ஷ்மிம்மா உங்க மருமக உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லனுமாம். உங்ககிட்டதான் முதல்ல சொல்லனுமாம். அதுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க…” என கூறிவிட்டு நந்தினியை பார்க்க அவளும் அவரை பார்த்து சிரித்துவிட்டு,

“அது வந்து லக்ஷ்மிம்மா, அது… நம்ம கௌரிக்கு மறுபடியும் உங்ககிட்ட வளரனும்னு கொள்ளை ஆசை போல. லக்ஷ்மிம்மா கூட விளையாடி, உங்க கையால சாப்பிட்டு, உங்க கூடவே தூங்கி, உங்க பார்வை மூலமா உலகத்தை புரிஞ்சுக்கனும்னு விருப்பப்படறாங்க…” என கூற மற்றவர்களுக்கு புரியும் முன்பே தன்னவளின் முகத்தை பார்த்தே உதயாவின் மண்டையில் டொய்ங் என இந்த முறை பல்ப் வேகமாகவே எரிந்தது.

மார்பிற்கு குறுக்காக இரண்டு கைகளையும் கட்டியபடி கண்களில் வழியும் குறும்போடு தன்னையே குறுகுறுப்பாக பார்த்து கொண்டிருந்தவனை ஒரு பார்வை பார்த்தவள், “நம்ம கெளரி,… நம்ம கெளரி மறுபடியும் நம்மக்கிட்டே வரப்போறாங்க. அதுவும் லக்ஷ்மிம்மாவோட சமத்து மருமகளுக்கு மகளா…” என சிவந்த முகத்தோடு மெல்லிய குரலில் கூறவுமே அனைவரின் “ஹோ..”வென்ற சந்தோஷக்குரலில் அந்த அறையே ஆர்ப்பரித்தது.

“ஐயோ சத்தம் போடாதீங்க, இது ஹாஸ்பிட்டல். ஞாபகம் இருக்கட்டும். பேசிட்டு சீக்கிரமா கிளம்புங்க…” என கண்டிப்பான குரலில் கூறிய அந்த பெண் மருத்துவர் அனைவரும் அமைதியாகவும் பாக்கியத்திடம் திரும்பி,

“உங்க மருமகளை காலையில அட்மிட் பண்ணும்போதே நாங்க செக் பண்ணி பார்த்ததுல தெரிஞ்சது. இருந்தாலும் உறுதி பண்ணிடலாமேன்னு தான் நாங்க எல்லா டெஸ்டும் எடுத்தோம். அவங்க கிட்ட சொன்னதுமே யாருக்கும் சொல்லவேண்டாம். நானே எங்க லக்ஷ்மிம்மாக்கிட்ட சொல்லிடறேன்னு சொல்லிட்டாங்க. நல்ல மருமக உங்களுக்கு. குடுத்துவச்சவங்க நீங்க. ஒண்ணும் கவலை வேண்டாம். அந்த அறையில மூச்சு விட சிரமப்பட்டதாலயும், பயத்திலயும் மயங்கி விழுந்திருக்காங்க. மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்லை…” என கூறிவிட்டு,

உதயாவையும், நந்தினியையும் பார்த்து “நீங்க கொஞ்சம் நேரம் கழிச்சு என்னை வந்து பாருங்க, கொஞ்சம் விட்டமின் டேப்லெட்ஸ், சிரப்ஸ் எல்லாம் எழுதித்தரேன்…” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார்.

அனைவருக்குமே சந்தோஷம் அலைமோதியது. உடனே ஸ்வீட் வாங்கி வந்த பிரசாத் அனைவருக்கும் கொடுத்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்.

உதயாவிடம், “உங்களுக்கொன்னும் கோவமில்லையே நான் உங்ககிட்ட முதல்ல சொல்லைன்னு…” என நந்தினி கேட்டதுமே அவளை இறுக அணைத்து கொண்டான்.

அவனது நெஞ்சமெல்லாம் காலையில் தானும், பிரசாத்தும் நேரத்திற்கு செல்லாமல் இருந்திருந்தால் நந்தினியை காப்பாற்றாமல் விட்டிருந்தால் என்ற பயமே வியாப்பித்திருந்தது. அதை அவனது உடல் நடுக்கம் அவளுக்கு உணர்த்தியது.

“யோவ் மாமா, அதான் ஒண்ணும் ஆகலையே. பின்ன எதுக்காக இந்த பயம். இனிமேலும் ஒண்ணும் ஆகப்போறதில்லை. ஏனா நீங்கதான் இனி கருப்பு பூனைப்படைக்கு தலைவர் போல் கண்ணுல விளக்கெண்ணையை ஊத்தி பார்த்துக்கறது போல பத்தரமா என்னை பார்த்துப்பீங்களே?. ஹ்ம் இனி இதுவரை இருந்த சுதந்திரமும் போச்சு…” என தன்னவனை வாரிக்கொண்டே பெருமூச்சு விட அதை பார்த்து அனைவருக்குமே குளிர்ந்தது.

மூர்த்தி தன் சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்த என தெரியாமல் மகிழ்ச்சியில் நெஞ்சம் விம்ம பாக்கியத்தையும், நந்தினியையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார். நாச்சி, சுதர்சனம், பாக்கியம், விஷ்ணுவின் பெற்றோர்கள் என அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினார்கள் நந்தினியும், உதயாவும்.

வேணியை அனுப்பிவைத்த பின் வள்ளியிடம் தொடர்புகொண்டு விசாரித்த பிரசாத் அங்கிருந்த டாக்டர் மூலம் அறிந்த செய்தி, வேணி தன் தலையில் தானே மூர்க்கமாக தாக்கிகொண்டதால் அவர் தன் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும், இனி நினைவு வர வாய்ப்பே இல்லையென்பதும் தான்.

இன்னும் சிலநாட்கள் கழித்து தலையில் உள்ள காயம் ஆறவும் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றும் கூற கேட்டுக்கொண்டான். தான் அறிந்ததை சுதர்சனத்திடம் கூற அவர் அதை கண்டுகொள்ளவே இல்லை. சரி பிறகு சரிபண்ணலாம் என எண்ணி அவனும் விட்டு விட்டான். வள்ளியை மட்டும் அங்கேயே இருந்து பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டிருந்தான்.

ஒருவாரம் சென்றபிறகு பாக்கியம் ஹாஸ்பிட்டல் வாசம் முடிந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். தவறியும் யாருமே வேணி என்னவானார்? என கேட்கவோ, தெரிந்துகொள்ளவோ முயலவில்லை. ஆனால் வள்ளியை காணாது அனைவரும் எங்கே? என கேட்கவும் அதற்கு மேல் மறைக்கமுடியாது என பிரசாத் நினைத்தான்.

வேணியின் நிலையையும், இப்போது வள்ளிதான் அவரை பார்த்துகொள்வதாகவும் கூற சட்டென அங்கே மௌனம் குடியமர்ந்தது. சில நிமிடங்களில் தன்னை மீட்டுக்கொண்ட நாச்சி நந்தினி, பாக்கியத்தின் முகத்தை பார்த்து இயல்பாக அடுத்து ஆகவேண்டிய காரியங்களை பேச ஆரம்பித்தார்.

பிரசாத்தின் வேண்டுகோளுக்கிணங்க தனம் தங்களின் பூர்வீக வீட்டிற்கே குடி வந்துவிட்டார். முதலில் வாய் பிளந்த ஊர்க்காரர்கள் பின் தனத்தின் இளகியமனதை தங்களின் புகழ்ச்சியால் குளிரவைத்து வேண்டிய காரியத்தை சாதிக்கவும், பழையதை பேசி காயப்படுத்தவும் நினைக்க அவர்களது நினைப்பை பிரசாத் தவிடு பொடியாக்கினான்.

தனத்தை யாராவது நெருங்க நினைத்தால் கூட அவனது கருத்துக்கு சென்றுவிடும் அளவிற்கு அவரை பார்த்துக்கொண்டான். இப்போது தனமும் பச்சோந்தித்தனமான மனிதர்களை தன்னை அண்ட விடாமல் பார்வையிலேயே எட்டிவைத்துவிடும் துணிவோடு செயல்பட்டார்.

ஏழுமலை குடும்பத்தார் வந்து நந்தினியையும், பாக்கியத்தையும் பார்த்துவிட்டு தங்கள் வீட்டு பெண் குழந்தை உண்டாகி இருக்கும் சந்தோஷத்தில் பிறந்தவீட்டு சீர் சிறப்பாக செய்துவிட்டுதான் சென்றனர். அவர்களுக்கு இங்கே நடந்த பிரச்சனைகள் எதையுமே தெரியப்படுத்த நந்தினி விரும்பவில்லை. வேணியை பற்றி கேட்டதற்கு கூட ஏதேதோ சொல்லி சமாளித்துவிட்டாள்.

ஒரு மாதம் கழித்து பிரசாத்தும், தனமும் சேர்ந்து சுதர்சனத்திடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி கரைத்து இன்னமும் கோமாவிலேயே இருந்த வேணியை சுதர்சனத்தின் வீட்டிற்கு கொண்டுவர படாதபாடு பட்டனர். ஒருவழியாக சம்மதித்தவர் வேணியின் முகத்தில் கூட விழிக்காமல் தன் வீட்டில் ஒரு அறையில் வேணியை இருக்க அனுமதித்தவர் கூடவே ஒரு நர்ஸையும் பிரசாத் கேட்டு கொண்டதன் பேரில் வேணியை பார்த்துக்கொள்ள நியமித்தார்.

இதனால் கௌரிக்கு கூட சுதர்சனத்தின் மீது கோவமே. அதையும் தனமும், பிரசாத்தும் தான் சமாளித்தனர். வேணி வந்ததிலிருந்து யாருமே சுதர்சனத்தின் வீட்டிற்கு செல்வதில்லை. அவரும் பாதி நாட்கள் உதயாவின் வீட்டில் தான் தங்கினார். வள்ளி தான் அங்கேயும் இங்கேயுமாக மாற்றி மாற்றி அலைந்து கொண்டிருந்தாள்.

பேத்தி வரப்போகிறாள், தன் மகளே தன் மகனுக்கு மகளாக வரப்போகிறாள், மீண்டும் தன் கைகளில் தவழப்போகிறாள் என்ற சந்தோஷமே பாக்கியத்தை விரைவில் குணமாக்கியது. அதன் பின் நந்தினியை கண்ணுக்குள் வைத்து பாதுகாத்தார்.

நந்தினியும் உதயாவும் இனி எப்படி இருக்கவேண்டும் என்றும் நடந்துகொள்ள வேண்டியதையும், நந்தினியை எப்படியெல்லாம் கவனித்து கொள்ளவேண்டியது என்பதையும் இருவரையும் வைத்து விளக்கமாக கூற உதயாவிற்கு நன்கு புரிந்தது.

நான்காம் மாதம் வரை நந்தினியை மனமே இல்லாமல் வீட்டில் விட்டுவிட்டு பேக்டரி, ஆபிஸ், தோப்பு என விஷ்ணுவோடு அலைந்தவன் அதற்குமேல் பொறுக்காமல் அவளையும் தன்னோடு அழைத்துக்கொண்டே சுற்ற ஆரம்பித்தான். நந்தினியை விட்டு பிரியாமல் பழையபடி தன்னோடே வைத்துகொண்டான் உதயா.

வீட்டில் நாச்சியும், பாக்கியமும் மூர்த்தியும் தாங்கினால், போகும் இடமெல்லாம் அவளை உதயா பார்த்துக்கொண்டான். போதாதற்கு தனமும், விஷ்ணுவின் அம்மா தேவகியும் நந்தினிக்கு வாய்க்கு ருசியாக சமைத்துத்தருகிறேன் என்று மாற்றி மாற்றி சமைத்து எடுத்து வந்து கொடுத்து அவளை திக்குமுக்காட வைத்தனர்.

அனைவரின் அன்புமழையில் நந்தினியும், உதயாவும் தான் திணறிப்போனார்கள். நந்தினிக்கு மாற்றி மாற்றி யாராவது அதை சாப்பிடு இதை குடி என அவர்கள் கொடுப்பதை சாப்பிட முடியாமல் திணறினாள். உதயாவிற்கு நந்தினியை பகலில் தான் நினைத்த நேரத்தில் நெருங்க கூட முடியாமல் நாச்சியின் கண்காணிப்பின் கீழே தான் இருப்பதை நினைத்து மனம் குமைந்தான்.

error: Content is protected !!