நட்சத்திர விழிகள் – 27
நந்தினியின் தாக்குதலில் இருந்து அழகாக தப்பித்தனர் உதயாவும், பிரசாத்தும். நந்தினியை பார்க்கவென்று சற்று முன் அறைக்குள் நுழைந்தவர்களுக்கு இந்த செல்ல சண்டை எதற்காகவென புரியவில்லை என்றாலும் இதுவரை தங்களுக்கு வந்த சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் இனி தங்கள் வாழ்வில் இடமில்லை, மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கும் என்பதும் தெளிவாக புரிந்தது.
“அம்மாடி கண்ணு, நந்தினிம்மா. ஏண்டா இப்போதான் எழுந்திருக்க? உடம்பை அலட்டிக்காதடா. என் கிட்ட சொன்னா நானே இந்த பயலுகளை உண்டில்லைன்னு ஆக்கிருப்பேனே?…” என்று நாச்சி நந்தினியின் சார்பாக பேச,
“ம்ம். எங்களை நீ உண்டில்லைன்னு ஆக்கிருவயாக்கும்? முடிஞ்சா ஒருபடி சோறு ஆக்கி வை. அதுக்கப்பறம் இந்த வாய்ச்சவடால் விடலாம். கிழவி என்னை பார்த்தும் உனக்கு துளிர் விட்டு போச்சு. சும்மாவே உன் பேத்தி குதிப்பா. இதுல நீ வேற ட்ரெயினிங். ரெண்டுக்கும் ஓவர் பேச்சால இருக்கு?…” என்று கூறிய பிரசாத் நாச்சியின் காதில் தொங்கிய தண்டட்டியை பிடித்து ஆட்ட அவனின் முகம் வழித்து உச்சிமுகர்ந்தார் நாச்சி.
“இப்போதான்யா நான் கும்பிட்ட சாமி கண்ணை திறந்திருக்கு. என்னோட வேண்டுதலை வீண் போகவிடாம நீ வந்து சேர்ந்துட்ட…” என கூறியவரின் கண்களை கண்ணீர் நிறைக்க அவரை அணைத்துகொண்ட பிரசாத் கண்களும் கலங்கியது.
உணர்ச்சிமயமான அந்த நொடிகளை அனைவருமே அமைதியாக ரசித்தனர். நந்தினி மட்டுமே கொஞ்சம் சுணங்கினாள். அருவியூரில் பார்த்த பிரசாத்தின் பிம்பத்தை முழுவதுமாக மனதிலிருந்து அழிக்க முடியாமல் தடுமாறினாள். தன் வாழ்க்கைக்காக, தன்னோட உயிரின் பாதுகாப்புக்காக, தன் குடும்பத்தின் நலனுக்காக பாடுபட்ட இந்த பிரசாத்தை ஏற்றுக்கொள்ள அந்த தவிப்பே தடையாக இருந்தது.
அவளின் முகம் அதை பிரதிபலித்ததோ என்னவோ பிரசாத்தே அதை உணர்ந்தது போல மெல்லிய முறுவலோடு அவளை நெருங்கினான். தன் அருகில் வந்தவனை பார்த்து நந்தினி முறைக்க,
“என்ன பூலான்தேவி? ரொம்ப குழப்பத்துல இருக்கீங்க போல? இல்லாத மூளையை தேடிப்பிடிச்சு வச்சு நீ என்ன யோசிச்சாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. நடந்ததையே யோசிச்சுட்டு இப்போ இந்த நிமிஷ நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழந்திடாத. அதெல்லாம் அவ்வளோ ஈஸியா மறக்கக்கூடியது இல்லைதான். ஆனா சின்ன முயற்சி பண்ணேன். இதுக்கு மேல என்ன சொல்லன்னு எனக்கு தெரியலை…” என அமைதியாக கூறியவனை பார்த்தவள்,
“ம்ம் பார்க்கலாம். பார்க்கலாம். மவனே என்னை பூலான்தேவி, பூலோகதேவின்னு சொல்லிட்டு திரிஞ்ச, கொன்னுடுவேன். ஜாக்கிரதை…” என அந்த அறையில் இருந்தவர்களை கருத்தில் கொண்டு அவனுக்கு மட்டும் கேட்குமாறு மெதுவாக முணுமுணுக்க அந்த பதிலே தனக்கு போதும் என்று நிம்மதிகொண்டான்.
மற்றவர்கள் நந்தினியை சூழ்ந்துகொள்ள உதயா மட்டும் தனத்தை தனியே அழைத்தான். “சித்தி, பிரசாத்…” என ஆரம்பிக்க அவனை கையமர்த்தி தடுத்தவர்,
“எந்த விளக்கமும் வேண்டாம் பிரபா. நான் என் பிள்ளையை சரியாதான் வளர்த்திருக்கேன். அவனை பெத்த வயிறும், மனசும் நிறைச்சிருக்கு. நந்தினியை காப்பாத்த என்னவெல்லாம் யோசிச்சிருக்கான்?…” என தூரத்தில் நந்தினியோடு வம்பு வளர்த்துகொண்டு அவளை சீண்டி விளையாடிக்கொண்டிருந்த பிரசாத்தை பார்த்துக்கொண்டே பேசினார்.
“என் பையனை பத்தி நான் தான் சரியா புரிஞ்சிக்காம இருந்துட்டேன் பிரபா. அவன் சொன்னது போல என்னோட வைராக்கியத்தை விட்டுட்டு ஊரோட ஒண்ணா இருந்திருந்தா இது போன்ற மூர்க்கத்தனமும் முரட்டு குணமும் அவனுக்கு வந்திருக்காதுன்னு நினைக்கேன்.என்ன செய்ய எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரனுமே?…” என பெருமூச்சு விட,
“சித்தி. பிரசாத் எங்களுக்காக என்னவெல்லாம் செய்திருக்கான் தெரியுமா?… கேட்டீங்கன்னா நீங்க ஆச்சரியப்படுவீங்க…” என கூற ஆரம்பித்தவனை தடுத்து,
“இல்லைப்பா, என் பையன் எனக்கு கிடைச்சுட்டான். நீ சொல்வதை கேட்டு நான் என் மகனை தெரிஞ்சுக்க விரும்பலை. இது நான் நம்ம வீட்டிலையே புரிஞ்சுக்கிட்டேன். அவன் ஏதாவது தப்பு செய்திருந்தாலும் நிச்சயமா தெரியாம தான் செய்திருக்கனும். இனிமே அப்படி ஒரு தவறு நடக்காம பார்த்துப்பான். இது போதும் எனக்கு. இனி அவனோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்…” என கண்ணீரை துடைத்து கொண்டே சொல்லியவர் புன்னகையோடு நந்தினியின் அருகில் சென்று அவளோடு பேச ஆரம்பித்தார்.
அனைத்தும் சரியானது போன்ற அளப்பறியா ஆனந்தம் உதயாவை ஆட்டிப்படைத்தது. விஷ்ணுவை அழைத்து பிரசாத்தை பற்றி சந்தோஷமாக பகிர்ந்துகொண்டான்.
விஷ்ணுவால் நடந்ததையெல்லாம் நம்பவே முடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை. வேணியின் சுயரூபத்தை மொத்தாமாக வெளிக்கொண்டு வந்தவன் ஆகிற்றே. இப்போது அவனின் மனதில் பிரசாத்தின் மேல் மரியாதை சிறிது சிறிதாக பெருக்கெடுக்க ஆரம்பித்தது. அதை உணர்ந்தவன் போல விஷ்ணுவை பார்த்து சிரித்துக்கொண்டான் பிரசாத்.
அனைவரும் பேசி முடிக்கவுமே கொஞ்சம் ஒதுங்கியிருந்த சுதர்சனத்தை அப்போதுதான் பார்த்த நந்தினி, “அப்பா, ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க? பக்கத்துல வரமாட்டீங்களா?…” என அன்போடு உரிமையாக கேட்ட நொடி அவளை பார்த்து கண்ணீரோடு கை கூப்பினார் சுதர்சனம்.
அதில் பதறிப்போயினர் நந்தினியும், உதயாவும். நந்தினி, “அச்சோ என்னப்பா இது? நீங்க போய் எனக்கிட்ட? அப்போ நான் உங்க பொண்ணு இல்லையா?…” என கவலையோடு அவரை பார்த்து கேட்டாள்.
“ஐயோ, இல்லடாம்மா, நீ என் பொண்ணுதான். என்னோட பொண்ணே தான். ஆனா உனக்கு தகப்பனா இருக்கிற தகுதியை நான் இழந்துட்டேன். கட்டின பொண்டாட்டியோட எண்ணத்தை, மாற்றத்தை கூட கணிக்கமுடியாத நான் ஒரு மனுஷனா இருக்ககூட தகுதி இல்லாதவன்…” என நந்தினியின் கையை பிடித்துகொண்டு கதற உதயாவும். விஷ்ணுவும் தான் அமைதிப்படுத்தினார்கள்.
கெளரி கூட பழையபடி கலகலப்பாக பேசாமல் குற்ற உணர்வோடுதான் நந்தினியிடம் உரையாடினாள். சுதர்சனம் நந்தினியிடம் மன்னிப்பை யாசிக்கவும் அவளாலும் தாங்கமுடியவில்லை. தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய தன் தாயை நினைத்து வெட்கினாள்.
இருவரையும் சமாதானம் செய்வதற்குள் அனைவருக்கும் போதும் போதுமென ஆகியது. ஓரளவிற்கு இயல்புநிலைக்கு திரும்பவும் தான் அனைவருமே ஆசுவாசமடைந்தனர். அடுத்து அவர்களை கலகலப்பாக்குகிறேன் பேர்வழி என அந்த அறையே அதிரும்படி கலாட்டா செய்து ரகளையை கூட்டினார்கள் உதயா, பிரசாத், விஷ்ணுவின் மூவர் கூட்டணி.
சிறிதுநேரத்தில் நந்தினியை செக்கப்பிற்கு என அழைத்து சென்றவர்கள் அவளை கொஞ்சம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு எல்லோரையும் வெளியேற்றிவிட்டனர்.
பிரசாத்தின் மொபைலில் வள்ளியின் அழைப்பு வர அதை எடுத்து பேசியவனின் முகம் மாறியது. வேணி தலையில் அடிபட்டு ரத்தம் வடிந்த நிலையில் மயங்கிக்கிடப்பதாக கூறவுமே அங்கே இருந்த யாரது கவனத்தையும் கவராமல் சுதர்சனத்தை ஏதோ சாக்கு சொல்லி அழைத்தவன் கைய்யோடு டாக்டர் பெருமாள் கூட்டிக்கொண்டு உதயாவின் வீட்டிற்கு சென்றான்.
அங்கே முன்னால் இருந்த தோட்டத்தில் ரத்தத்தில் மிதந்த வேணியின் உடலை பார்த்ததுமே ஒரு நொடி பதறிய சுதர்சனம் உடனே தன் உணர்வுகளை துடைத்தெறிந்தார். அவரது முகம் கல்போல இறுகிவிட்டது. முன்பின் தெரியாதவர்களை ஆபத்தில் பார்க்கும் போது அனைவருக்குமே எழும் சாதாரண மதிதாபிமான உணர்வு கூட அவருக்கு வராமல் போனதுதான் விந்தை.
ஹாஸ்பிட்டலில் இருப்பவர்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு வெளியே வந்த வள்ளியின் கண்களில் விழுந்தது இந்த காட்சிதான். பிரசாத் வந்ததுமே அதை கூறியவளின் உடல் அச்சத்தில் வெடவெடத்தது. வேணியின் கைகளில் இருந்த இரும்புக்கம்பியை பார்த்ததுமே என்ன நடந்திருக்குமென சுலபமாக யூகிக்க முடிந்தது.
வேணியை வேகமாக பரிசோதித்த டாக்டர் பெருமாள் இன்னும் உயிர் இருப்பதாகவும் இங்கே காப்பாற்ற முடியாதென்றும், உடனடியாக வெளியூர் சென்றால் காப்பாற்ற முடியுமென்றும் கூறிவிட்டு ஆம்புலன்ஸ் வர ஏற்பாடு செய்து முதலுதவி அளித்து கூடவே ஒரு நர்ஸையும் அனுப்பிவைத்தார். அவர்களோடு சுதர்சனத்தை அனுப்ப நினைக்க அவர் ஒரேடியாக மறுத்தேவிட்டார். வேறு வழியில்லாமல் பிரசாத் தான் வள்ளியை உடன் செல்லுமாறு அனுப்பிவைத்தான்.
டாக்டர் பெருமாளும் வீட்டிற்கு போய்விட்டு ஹாஸ்பிட்டலுக்கு வருவதாக சொல்ல இங்கே நடந்ததை இப்போதைக்கு யாருக்கும் சொல்லவேண்டாம் என கேட்டு கொண்டு அவரை அனுப்பிவைத்தான்.
அனைத்தும் முடியவும் தன் மனதிலிருந்த மொத்த தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் வடிந்தவராக தொய்ந்துபோய் வாசலில் அமர்ந்தவர் ஓ வென கதறி அழத்துவங்கினார். வேணிக்காக இல்லாமல் தன் மீது உண்டான சுயபச்சாதாபத்தால்.
பிரசாத் அவரை தேற்றமுடியாமல் தோற்றவன் சிறிது நேரம் அவரின் துக்கங்கள் கரையட்டுமென அழவிட்டுவிட்டான். ஆனால் அவரை விட்டு நகராமல் ஆறுதலாக கையை பிடித்துக்கொண்டே அமைதிகாத்தான். நேரம் செல்ல செல்ல கொஞ்சமாக தன்னை மீட்டவர் ஒரு சிறு பையனின் முன்னால் இப்படி தான் ஒரு பெண் போல அழ நேர்ந்துவிட்டதே என தலை கவிழ அதை புரிந்தவன்,
“மாமா இங்க நடந்ததை ஹாஸ்பிட்டல்ல யார்க்கிட்டையும் சொல்லாதீங்க. ஏற்கனவே லக்ஷ்மிம்மா முடியாம படுத்திருக்காங்க. ஒரு அண்ணனா நீங்க அவங்களுக்கு தைரியம் சொல்லனும். அவங்களோட இழப்பில் இருந்து நாம தான் மீட்டு கொண்டுவரனும். ஆகவேண்டியதை பார்ப்போம். அதை விட்டுட்டு இப்படி நீங்களே உடைஞ்சு போனா எப்படி?…” என பெரியமனிதன் போல பேசியவனை பிரமிப்பாக பார்த்தவர் கொஞ்சம் தெளிவு பெற்றார்.
பிரசாத்தின் மென்மையான பேச்சில் தன்னை சமாளித்துக்கொண்டு அவனோடு தன் தங்கையை பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தார். இனி தன் தங்கையையும் அவர்களின் குடும்பத்தையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளவேண்டிய கடமை தனக்கிருக்கிறது என தனக்குத்தானே முடிவெடுத்துக்கொண்டார்.
ஹாஸ்பிட்டலுக்கு வந்தவர் அனைவரிடமும் கொஞ்சம் தெளிவாகவே பேசினார். எங்கே சென்றீர்கள்? என கேட்டதற்கு அது இது என சமாளித்துவிட்டார் பிரசாத்தின் உதவியோடு. பெருமாளும் பாக்கியம், நந்தினி இருவரின் தற்போதைய உடல்நிலையால் இதை யாரிடமும் தெரிவிக்கவில்லை.
பாக்கியம் கண்விழித்ததுமே நந்தினியை காணத்தான் விரும்பினார். அவருக்கு நந்தினி எப்படி இருக்கிறாள்? என அறிந்தே ஆகவேண்டி இருந்தது. நந்தினிக்கு ஒன்றும் ஆகியிறாது என்றும், கண்டிப்பாக தன் பெண் கெளரி தான் நந்தினியை காப்பாற்றியிருப்பாள் என ஆணித்தரமாக நம்பினார்.
வெகுநேரம் கழித்து மாலை மங்கிகொண்டிருந்த பொழுதில் தான் பாக்கியத்தை பார்க்க நந்தினி அனுமதிக்கபட்டாள். அவரை நந்தினி பார்க்கும் போது தன் குடும்பத்தினர் அனைவரும் தன்னோடு இருக்கவேண்டுமென்ற அவளது அன்பு கட்டளையின் படி டாக்டர் பெருமாள் எல்லோரையும் உள்ளே அனுமதித்தார்.