நட்சத்திர விழிகளிலே வானவில் – 24 (4)

“ஐயோ!!!,,, காமெடி சிரிச்சுட்டேன் போதுமா? நான் சொல்லவரதை முழுசா கேட்டுட்டு பேசு…” என தானும் அவளை கேலியாக அடக்கியவன்,

“என்கூட நீ இனிமே தினமும் கார்மெண்ட்ஸ் வரனும். எனக்கு துணையா…” என கூறிவிட்டு இரண்டாவதாக தான் சொன்னதை உணர்ந்து நாக்கை கடித்துகொண்டான்.

அவன் நினைத்தது போல விழுந்து விழுந்து சிரித்தாள் நந்தினி. “அடப்பாவி, அவ்வளோ தைரியசாலியா நீ? இந்த மேட்டர் உங்க வீட்டுக்கு தெரியுமா?…” என்றவளது நக்கலில் தன்னையே திட்டிகொண்டவன்,

“எந்த மேட்டர்?…” என கேட்டு மீண்டும் சிக்கினான்.

“அதான்ய்யா, நீ துணைக்கு ஆள் தேடுற மேட்டர். அப்போ இதுவரைக்கும் நீ தனியா எங்கயுமே போகமாட்டியா?…” என கூறிவிட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பிக்க அவளின் காதை பிடித்து திருகியவன்,

“எவ்வளோ தைரியம் உனக்கு, என்னையே வாய்யா, போய்யான்னு சொல்லுவா?…”

“எனக்கு எவ்வளோ தைரியம்னு அளவு கணக்கெல்லாம் எனக்கு தெரியாது. என் புருஷனை நான் சொல்ல யார்க்கிட்ட பர்மிஷன் கேட்கணும்?…” என தன் உயரத்துக்கு எகிறியவளை பார்த்து ஒரு நொடி தடுமாறியவன் அவளை இழுத்து அணைக்க அவளோ அவனை போல எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல் இலகுவாகவே அவனை உதறி ஒரே தள்ளாக தள்ளினாள்.

“என்ன மரமண்டை ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கற?.. ஓவர் சேதாரம் ஆகிடுவ. ஜாக்கிரதை. நான் தான் சொல்லிருக்கேனே, என் மனசு தானாவே உன்னை தேடணும்னு. புரியுதா?…” என முகம் மாறாமல் கூறினாலும் அவளின் விழிகளில் நிறைந்திருந்த வலி நந்தினியின் இதயத்தை காட்டிக்கொடுத்தது.

அவனும் தன்னை கண்டுகொண்டான் என உணர்ந்தாலும் நந்தினி உதயாவின் தொடுகையை வெறுக்கவில்லை. ஆனால் அவன் மீதான அவளின் ஆதங்கம், மனத்தாங்கல் சிறு கோவம் என அனைத்தும் சேர்ந்து அவனோடு ஒன்றமுடியாமல் தடுத்தது.

அவனுக்காக அவனது காதல் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நொடியில் அவனோடு கலந்துவிடலாம்தான். ஆனால் அந்த இடத்தில் தன் மீதான தனக்குள்ள மரியாதை மரித்துவிடும்.

அது அவனின் மனைவியான தனக்கு தானே செய்யும் பாதகம் என்றும், அப்பாதகத்தை அவனுக்கே செய்வது போல என எண்ணி அவனை விலக்கி வைத்தாள். இல்லை இல்லை அவனுக்காக தானே விலகி நின்றாள்.

அவனும் அவளும் வேறு வேறல்ல என்பது அவளது ஆணித்தரமான நம்பிக்கை. அதை அசைத்துப்பார்க்கும் எந்த ஒரு செயலையும் அவள் செய்ய விரும்பவில்லை. தங்களுக்குள் உள்ள இந்த பனித்திரை விரைவில் விலகும் என்ற நம்பிக்கையோடு தன்னவனை பார்த்தாள்.

“பார்வைக்கொன்றும் குறைச்சலில்லை. ஆளை விடு தாயே. தெரியாம உணர்ச்சிவசப்பட்டுட்டேன். இனிமே இது போல நடக்காது. நல்லவேளை கட்டில்ல தள்ளின, கீழே விழுந்திருந்தா கண்டிப்பா சேதாரம் தான்…” என புரிந்துகொண்டு தானுமே அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டான்.

“சரி விடுங்க. என்னால கார்மெண்ட்ஸ் வரமுடியாது. எனக்கு அதுல இஷ்டம் இல்லை. வீட்லனா பாட்டி, லக்ஷ்மிம்மா, கெளரி எல்லோருமே இருப்பாங்க. போதாததுக்கு வள்ளி. ஆனா கார்மெண்ட்ஸ்ல என்ன இருக்கும்? ம்ஹூம் நான் மாட்டேன்ப்பா…” என்று அவனை அடுத்து பேசவிடாமல் அந்த இடத்தை விட்டு நழுவிவிட்டாள்.

நந்தினி சென்றதுமே தலையில் கைவைத்து அமர்ந்தவன் எப்படி அவளை தன் பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டுவரப்போகிறோம் என ஆயாசமானான்.

மறுநாளும் அவள் பின்னாலேயே அலைந்துகொண்டிருந்தான் உதயா. வீட்டிலிருந்தவர்களின் கேலிப்பார்வைக்கு ஆளானாலும் அதை அவன் பொருட்படுத்தாமல் நந்தினியை கரைப்பதிலேயே குறியாக இருந்தான்.

அவனின் குறும்புகளும், அலும்புகளும் பொறுக்காமல், “ஏன் என் பின்னாலையே அலையறீங்க? எல்லோருமே சிரிக்காங்க. நீங்க இன்னைக்கு ஆபிஸ் கிளம்பலையா?…” என அறையில் வாகாக சிக்கியவனிடம் கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

“சிரிச்சா சிரிக்கட்டுமே? சோ வாட் குட்டிம்மா. நான் சொல்றதை நீ கேட்கிற வரைக்கும் உன்னையும் விடமாட்டேன். நானும் ஆபிஸ் போகமாட்டேன்…” என கால்மேல் கால் போட்டுகொண்டு தெனாவெட்டாக கூறியவனின் கழுத்தை பிடிக்க போனாள் நந்தினி. அதற்கும் அசராமல் சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.

“இப்போ நான் எதுக்கு உன் கூட கார்மெண்ட்ஸ் வரனும்? உன் மனசுல என்னதான் நினச்சிட்டு இருக்க? நான் தான் நேத்தே சொல்லிட்டேன்ல. திரும்ப இதையே பேசி என்னை சும்மா சும்மா தொந்தரவு பண்ணாத. எனக்கு அங்க என்ன தெரியும்னு நீ என்னை கூட்டிட்டு போகணும்னு பார்க்க?. ஒருநாள் சுத்திப்பார்க்க அப்டினா கூட பரவாயில்லை. ஆனா நீ ஏன் தினமும் வர சொல்ற?…” என்று படபடவென பொரிந்த நந்தினியை அவஸ்தையோடு பார்த்தான் உதயா.

“இவக்கிட்ட பிரசாத் பேசினதை சொன்னா அதுக்கும் சேர்த்து ஆடி என்னை படுத்திவைப்பா. ம்ஹூம் எப்படியாவது நீதான் உதயா நந்தினியை கூட்டிட்டு போகணும். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி அளவுக்கு இல்லைனாலும் அட்லீஸ்ட் ஒரு அண்டா சைஸ்க்காவது வெற்றி பெறட்டுமே…” என தனக்குள் பேசிக்கொண்டிருக்க நந்தினி அவனது முகபாவங்களை பார்த்துவிட்டு தலையில் அடித்துகொண்டு அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

அடுத்த இரண்டுநாட்களும் இதே தொடர்ச்சியாக உதயா நந்தினியை மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ளவர்களையும் படுத்திவைக்க பொருத்தது போதும் என்று நாச்சியும், மூர்த்தியும் தான் நந்தினியிடம் பேசி கார்மெண்ட்ஸ் செல்ல சம்மதிக்க வைத்தனர்.

ஒருவழியாக நந்தினி உதயாவிடம் தான் அவனோடு தினமும் வருவதாக வாக்களிக்கவும் உதயாவின் முகத்தில் மின்னிய வெற்றியையும் மீறி விழிகளில் தெரிந்த தீவிரம் நந்தினியை பெரும் யோசனைக்குள்ளாக்கியது.

இதையனைத்தையும் கண்டும் காணாமல் பார்த்துக்கொண்டிருந்த வள்ளி தான் எதிர்பார்த்த நேரம் கிடைத்தவுடன் பிரசாத்திற்கு அழைத்து நந்தினி கார்மெண்ட்ஸ் போகபோகும் விஷயத்தை கூறவும் சரி என்று மட்டும் சொல்லிவிட்டான்.

பிரசாத் எதிர்பார்த்ததுதானே. எப்படியும் தன் தாய்தான் அவனிடத்தில் கூறியிருப்பார். அதனால் உண்டான மாற்றம் தான் இது. எவ்வளவு தூரம் அவனால் அவளை காப்பாற்ற முடியும் என்று பார்க்கலாம் என ஏளனமாக கறுவிக்கொண்டான்.

உதயா தனக்காக பயந்து நந்தினியை பாதுகாக்க நினைக்கிறான் என்ற எண்ணமே பிரசாத்திற்கு உற்சாகத்தை கொடுத்தது. அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான்.

மறுநாளில் இருந்து நந்தினியும் தினமும் காலையில் உதயாவோடு கார்மெண்ட்ஸ் செல்பவள் அவன் எங்கு சென்றாலும் கூடவே செல்லும் நிர்பந்தத்திற்கு ஆளானாள்.

தோப்பிற்கு சென்றாலும், பருத்திக்காட்டிற்கு சென்றாலும், கௌரியின் திருமண வேலையாக சென்றாலும், வேறு வெளியிடங்களுக்கு சென்றாலும் என போகும் இடமெல்லாம் அவளையும் இழுத்தடித்தான்.

அவளது மறுப்புகளுக்கு அவள் கணவன் மதிப்பளிக்கவில்லை. உதயாவை சீண்டி விட்டு இங்கிருந்து தன்னை அவனே கிளப்பும் படி செய்ய எத்தனையோ முயற்சி செய்ய அனைத்தையும் அனாயசமாக முறியடித்தான் அவளவன்.

நந்தினி அவனோடு குறிஞ்சியூருக்குள் அடியெடுத்து வைத்து ஒருமாதம் ஆகிவிட்டது. அன்றைக்கு தோப்பில் மாங்காய் லோட் அனுப்பிவிட்டு வீட்டுக்கு இருவருமாக திரும்புகையில் மெல்ல பேச ஆரம்பித்தாள் நந்தினி.

“நான் உனக்கு ரொம்ப தொந்தரவு குடுத்துட்டேன்ல. அதுக்குன்னு மன்னிப்பெல்லாம் கேட்கமாட்டேன். நீ காரணமில்லாமல் என்னை இப்படி உன்கூடவே  வச்சுக்கலைன்னு எனக்கு தெரியும். ஆனா என்ன காரணம்னு நீ எனக்கு சொல்லாததுதான் என் கோவம்…”

“அதுக்காகத்தான் நான் உனக்கு இடஞ்சல் கொடுத்தேன். எனக்கே அது  சலிச்சுப்போச்சு. நீ எப்படித்தான் பொறுத்துக்கிட்டையோ? சரியான பொறுமை பூஷணம் நீ…” என்று வரும் வழி முழுவதும் அவனை கலாய்த்தாலும் அவனிதழில் ரசனையான மெல்லிய புன்னகை மட்டுமே இருந்தது.

மறுநாள் ஏழுமலையும் சந்திராவும் வந்திருந்தனர். உதயாவையும் நந்தினியையும் கைய்யோடு மறுவீடு அழைத்துச்செல்ல வீட்டிற்கு வந்தவர்களுக்கு ஏகபோக கவனிப்பு.

பெற்றோரை பார்த்ததும் அப்பட்டமான மகிழ்ச்சியை வெளிப்படுத்திய  நந்தினிக்கு அவர்கள் வந்த விஷயம் அறிந்ததும் முகம் இருண்டுவிட்டது. அவளை பார்த்துக்கொண்டே இருந்தா உதயா ஏழுமலையிடம் ஔ முக்கியமான வேலை இருப்பதாகவும், இன்னும் இரண்டொரு நாளில் தாங்களே வருவதாக சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தான்.

அரைமனதோடு அனைவரிடமும் சொல்லிகொண்டு கிளம்பிய ஏழுமலை சந்திராவின் முகமே வாடிவிட்டது. ஆனாலும் சமாளித்துக்கொண்டனர்.

அவர்களை வழியனுப்ப வெளியே வந்த நந்தினியை பார்த்த சந்திரா, “அம்மாடி நீங்க வரப்போறதா அங்க எல்லோருமே எதிர்பார்த்திட்டு இருப்பாங்க. ரெண்டு நாள்ல வந்திருவீங்க தானே?…” என பரிதவிப்போடு கேட்டவரிடம் நந்தினி பதில் சொல்ல தயங்கினாள்.

உதயா தான் உறுதியாக தாங்கள் வருவோம் என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து அனுப்பிவைத்தான். அவனது வார்த்தையில் நிம்மதியடைந்த இருவரும் ஊருக்கு கிளம்பிச்சென்றனர்.

இனி நந்தினியை சமாளிக்கனுமே என்ற ஆயாசத்தோடு திரும்பினால் அவள் அங்கு இல்லை. அவனுக்கு தெரியும் நிச்சயமாக நந்தினியை ஊருக்கு அழைத்து செல்வது கடினம் என்று.

அவளை தெரியாதவனா அவன்? அவள் மனம் புரியாதவனா? சமாளிக்கலாம் என நினைத்துக்கொண்டே உள்ளே சென்று தன் அறைக்குள் நுழையவுமே,

“என்னை கேட்காம உன்னை யாரு ஊருக்கு கண்டிப்பாக வருவோம்னு உறுதி கொடுக்க சொன்னது?…” சண்டைக்கோழியாக சிலிர்த்துக்கொண்டு நின்றாள்.

error: Content is protected !!