சந்திராவிடம் நந்தினி பேசிகொண்டிருந்த சில நிமிடங்களில் விஜியை அழைத்து அவனது மொபைல் நம்பரை வாங்கிகொண்டு தன் நம்பரையும் கொடுத்துவிட்டு பிறகு தொடர்புகொள்வதாக கூறி நேரத்தை கடத்தாமல் அவனிடம் சொல்லிக்கொண்டு திரும்பினான்..
சந்திராவிடமும் சொல்லிகொண்டு கிளம்ப நந்தினியின் விழிகளில் இரண்டரை வருடங்களாக அடைபட்டிருந்த கண்ணீர் உடைப்பெடுத்தது.அத்தனை நாட்களுக்கும் சேர்த்து அன்று வழியெல்லாம் அழுது தீர்த்து உதயாவின் பெரும் கண்டனத்திற்கு ஆளானாள். குறிஞ்சியூருக்கு மருமகாளாகவும் ஆனாள்.
இவ்வாறாக சுழன்றடித்த தங்களின் பழைய நினைவுகளில் இருந்து மீண்டவர்கள் இன்னும் தங்கள் மனதில் அந்நினைவுகளின் தாக்கம் சான்றும் குறையாமல் பாரமாக அழுத்தியது.
“நந்தும்மா, எவ்வளோ நேரம் பழசையே நினச்சிட்டு இருப்ப? நடுஜாமம் ஆகிடுச்சு, தூங்கு பேசாம…” என தன்மையாக கூறியவனை தீயாக பார்த்தவள்,
“ஏன் நீ கூடதான் தூங்காம முழிச்சிட்டு இருக்க, நான் கேட்டேனா?…” என்றவளை பார்த்து பேந்த பேந்த விழித்தான்.
அவனின் பரிதாபமான பார்வையில் என்ன உணர்ந்தாளோ, “எனக்கு தூக்கம் வருது. நீ சொன்னதனால ஒண்ணும் இல்லை. குட் நைட்…” என்று கூறியவள் அவனுக்கு முதுகாட்டி திரும்பி படுத்துகொண்டாள்.
“ஸ்யப்பா என்னனுதான் இவளை அந்த ஹிட்லர் இத்தனை வருஷம் வளர்த்தாரோ?. நமக்கு இப்போவே கண்ணை கட்டுதே?…” என பெருமூச்சோடு நினைத்தவன் தானும் கண்களை மூடிகொண்டான். மனதில் அமைதியில்லாததால் தூக்கம் மட்டும் வருவேனா என்று ஆட்டம் காட்டியது இருவருக்கும்.
சிறிது நேரத்தில் உறக்கம் விழிகளை தழுவ நந்தனி தன்னை நித்திரையில் ஆழ்த்திக்கொண்டாள். ஆனால் உதயாவிற்கு தான் தூங்க முடியவில்லை.
உருண்டு பிரண்டு படுத்தும் தூக்கம் வராமல் போக நல்ல உறக்கத்தில் இருந்தவளை தன் கைவளைவிற்குள் கொண்டுவந்து அவளை அணைத்தவாறு படுத்த பின்புதான் அவனின் மனம் ஒருநிலையாக அமைதியானது. உறக்கமும் தழுவியது.
எப்போதும் போல அடுத்த இரண்டு நாட்களும் வழக்கம் போல இயல்பாகவே நடந்தது. உதயாவிற்கும் சாதாரணமாக தான் வாழ்க்கை போவதாக தெரிந்தது தனத்திடமிருந்து அழைப்பு வரும் வரை.
“பிரசாத் எங்க இருக்கான்? நீ அவனை பார்த்தியா வேலு…” என்று அங்கே தேங்காய்களை உரித்துகொண்டிருந்த பணியாளரிடம் கேட்டார் தனம்.
“தேங்காய்களை உரிச்சு எண்ணிவைக்க சொல்லிட்டு இதோ வந்திடறேன்னு மாடிக்கு போனாருங்கம்மா. இன்னும் வரலை…” என மரியாதையாக கூறியவரை பார்த்து,
“இன்னும் சாப்பிடாம இருக்கியாமே? போ போய் சாப்பிடு. வந்து வேலையை கவனிக்கலாம்…”என்று புன்னகையோடு கூறியவர் வேலு சென்றதும் பிரசாத்தை சாப்பிட அழைக்க மாடியேறினார்.
“அவளை அவ்வளோ சீக்கிரம் நான் விட்டுடுவேனா? புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து என்னை அவமானபடுத்திட்டாங்கள்ள. அனுபவிப்பாங்க. எங்கியாச்சும் தனியா சிக்காமலா போய்டுவா அந்த குள்ளக்கத்தரிக்கா. அவளை தூக்கிட்டு அந்த பிரபாவுக்கும், அவன் குடும்பத்துக்கும் ஆட்டம் காட்டுறேன். என்னை பகைச்சதுக்கு சரியான பாடத்தை கத்துக்கொடுக்கறேன்…” என ஆக்ரோஷமாக பேசிக்கொண்டிருந்தான்.
அவன் பேச ஆரம்பித்ததுமே உள்ளே வந்த தனத்தை அப்போதுதான் பார்த்தவன், “டேய் நான் அப்பறமா கால் பண்ணறேன். இப்போ வை…” என அவசரமாக பேசி போனை வைத்தான். அவனை பார்த்து வேகமாக வந்தவர்,
“உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதாடா? என் வயித்துல நீ எப்படிடா அவனது பொறந்த? உன்னை பெத்த வயிறு எரியுதேடா? இப்படி மேலும் மேலும் அந்த தீயில கொள்ளிக்கட்டையை வச்சுட்டே இருக்கறியே?…” என அழுதவர்,
“இங்க பாருடா கண்ணா, அம்மா சொல்றதை கேளு. அவங்க நல்லா இருந்துட்டு போகட்டும். இங்க இருந்தாதானே உனக்கு அவங்களை பார்க்கும் போதெல்லாம் கோவம் வரும்? நாம இங்க இருந்து கண்காணாத இடத்துக்கு போய்டலாம். அம்மா பேச்சை கேளுப்பா…” என கதறியவரை பார்த்த பிரசாத்,
“இப்போ கூட அவங்களுக்காகதானே இங்க இருந்து போகனும்னு சொல்றீங்க?.. முதல்ல நாம நம்ம வீட்டையும் ஊரையும் விட்டு இப்படி தோப்புக்கு நடுவுல எந்தவிதமான சந்தோஷத்திலையும் கலந்துக்காம ஒதுங்கி இருக்க காரணமும் அவங்க தான்…”
“இப்போ கண்காணாத இடத்துக்கு போயிடலாம்னு முடிவெடுத்ததுக்கு காரணமும் அவங்கதான். இப்படி நம்மளை விடாம துரத்துரவங்களை நான் எப்படிம்மா சும்மா விடமுடியும்?…”
“ஐயோ நான் நமக்காகதாண்டா சொன்னேன்…” என தனம் பேச அதை கண்டுகொள்ளாமல் பேசினான் பிரசாத்.
“அவளையும், அவளுக்கு ஆதரவா நின்னு என்னை அவமானபடுத்தி உங்க கையால அடிவாங்க வச்ச அவனையும் நிம்மதியா இருக்க விடமாட்டேன். அவளுக்காகத்தானே இத்தனை தூரம் என்னை எதிர்த்தான். அவனை நான் எவ்வளவு கஷ்டபடுத்தினாலும் அமைதியா கண்டுக்காம இருந்தான்ல…”
“பிரசாத் வேண்டாம்ப்பா…” என கெஞ்சியவரின் பேச்சு அங்கே எடுபடவில்லை.
“என்ன வேண்டாம்?.. இனி அவனை ஒண்ணும் செய்யமாட்டேன். அவளை என்ன செய்யறேன்னு பாருங்க. அவ தானே அவனோட உசுரு. அவளை வச்சு உங்க தத்துப்பிள்ளையை துடிக்க வைக்கிறேன். இதை நான் நடத்தியே காட்டுவேன். இந்த விஷயத்துல உங்க பேச்சை கேட்க என்னால முடியாது…” என கூறிவிட்டு கீழே இறங்கிவிட்டான்.
பிரசாத்தின் பேச்சை கேட்ட தனம் பிரம்மை பிடித்ததை போல சிலையாக அமர்ந்துவிட்டார். தான் இவனின் மனதை மாற்ற எங்கையாவது போய்விடலாம் என்று சொன்னால் அதற்கும் அவர்களையே காரணமாக்கி மேலும் அவர்கள் மீது துவேஷத்தை வளர்த்துக்கொண்டானே என மனம் கலங்கினார்.
அன்றைக்கு கார்மெண்ட்ஸ் குடவுனில் உள்ள துணிகளை சரிபார்த்து கொண்டிருந்த உதயாவின் கவனத்தை அவனது செல்போன் ஒலி திசை திருப்பியது. தனம் தான் அழைத்திருந்தார்.
“சொல்லுங்க சித்தி, என்ன விஷயம்?…” என துணிகளை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே தான் கேட்டான்.
“பிரபா, நந்தினி எப்டி இருக்கா?…”
“ம்ம் அவளுக்கென்ன சித்தி ரொம்ப நல்லா இருக்கா. நீங்க சௌக்கியமா?…” என தானும் அவரை விசாரித்தான்.
“ம்ம் இருக்கேன் பிரபா. ஒரு முக்கியமான விஷயம் அதுக்குதான் போன் பண்ணினேன்…”
“சொல்லுங்க சித்தி, அடுத்து எனக்கிட்ட என்ன பிரச்சனை செய்றதா இருக்காரு உங்க சீமந்த புத்திரர்?…” என சிரித்துக்கொண்டே கேட்க,
“உனக்கு எப்படித்தான் இவ்வளவு பொறுமையோ போ. நானே பதறிப்போய் இருக்கேன். நீ என்னடான்னா கிண்டலா பேசறியே?…” என்று கவலையோடு பேசியவரின் குரலில் மௌனமானான்.
“பிரபா நீ நந்தினியை பத்திரமா பார்த்துக்கோ. உன் கூடவே வச்சுக்கோ. அவளை எங்கயுமே தனியாக அனுப்பாதே. உன் பக்கத்துல உன் கண்பார்வையில நீ அவளை வச்சுக்கறதுதான் உனக்கும், அவளுக்கும் நல்லது…” என்று பீடிகையாக பேசவும் வெலவெலத்துப்போனான் உதயா.
“சித்தி என்ன விஷயம் தெளிவா சொல்லுங்களேன்?…” என பதறிய குரலில் கேட்க நடந்த விஷயத்தை கூறவும் உதயா ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றான்.
“அவன் அடங்கவே மாட்டானா சித்தி…” என்றவனின் குரலில் இருந்த ஆவேசமே தனத்தை பதறவைத்தது.
உதயாவின் குரலில் இருந்த வேகத்தில், “பிரசாத் நினைத்தது போல தன்னிடம் கூறியது போல இந்த விஷயத்தை சொன்னதுக்கே இப்படி கோவப்படறானே?…” என அதற்கு மேலே யோசித்து பார்க்கவே தனம் பயந்தார்.
“கோவப்படாத பிரபா, அவன் எதிர்பார்க்கிறதும் அதைத்தான். நான் சொல்றதை நீயாவது கேளேன்…” என இறைஞ்சும் குரலில் கேட்டதற்காக தன் கோவத்தை அடக்கிக்கொண்டவன்,
“சொல்லுங்க சித்தி, என்ன செய்யனும்? அவன் என் மனைவியை தூக்குவேன்னு சொல்றான். நான் வேடிக்கை பார்க்கனுமா?…” என தன்னை மீறி வெடித்தான்.
இதுவரை உதயா தனத்திடம் இவ்வாறு பேசியதில்லை. இப்போது இதை கேட்டதுமே தனம் உடைந்துவிட்டார். எல்லாம் தன் மகனால் தானே வந்தது என தன்னை நொந்துகொண்டார்.
அவரது அமைதியும் மெல்லிய விசும்பலும் உதயாவை சங்கடப்படுத்த, “சித்தி ப்ளீஸ். சாரி சித்தி, அழாதீங்க. ஏதோ வேகத்தில அப்படி பேசிட்டேன்…” என கெஞ்சினான்.
“இல்லைப்பா, இப்படி ஒரு பிள்ளையை பெத்ததுக்கு நான் அழுதுதானே ஆகணும். அதை விடு. நீ நான் சொல்றதை கவனமா கேளு. நந்தினி உன் பொறுப்பு. அவளை உன் கைக்குள்ளயே வச்சுக்கோ…”
“எத்தனை நாளைக்கு சித்தி?…” என்றவனின் கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் திகைத்தார் தனம்.
“நான் பார்த்துக்கறேன் சித்தி. இதுக்கு சீக்கிரமா ஒரு முடிவை கொண்டுவருவோம்…” என சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் தொடர்பை துண்டித்துவிட்டான்.
அடுத்து வேலையில் கவனத்தை செலுத்தமுடியாமல் விஷ்ணுவை அழைத்து பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.
வீட்டிற்கு வந்ததிலிருந்து யோசனையில் இருந்தவனை பார்த்த நந்தினி, “என்ன யோசனை பலமா இருக்கு. என்கிட்ட சொல்லனும்னா சொல்லலாம். நான் சும்மா தான் வெட்டி ஆபிசரா இருக்கேன்…” என்று கிண்டலாக கூறவும் உதயாவின் முகம் பளீரிட்டது.
“நந்தும்மா உன் கிட்ட ஒண்ணு சொல்லணும். ஆனா எப்படி சொல்ல?…” என தவித்தபடி உதயா கேட்க,
“எல்லோரும் எனக்கிட்ட எப்படி ஒண்ணு சொல்லுவாங்களோ அதே போலதான் நீயும் என்கிட்டே சொல்லணும். உங்க ஊர்ல பொண்டாட்டிக்கிட்ட ஒண்ணு சொல்றதுக்கெல்லாம் வாடைகைக்கா ஆள் பிடிச்சிட்டு வருவாங்க…” என ஒண்ணு என்ற வார்த்தையை அழுத்திக்கூறியவள் கேலியாக உச்சுக்கொட்டினாள்.