நட்சத்திர விழிகளிலே வானவில் – 23 (3)

“மகி, நீ நந்தினிக்கிட்ட பேசு, இவ்வளோ பிடிவாதம் நல்லதில்லை அவளுக்கு…” என கூற அதை ஏற்றுக்கொண்டு தான் பார்த்துகொள்வதாக உறுதியளித்தாள்.

அதன் படி நந்தினியிடம் மீண்டும் ஒருமுறை படிப்பை பற்றி பேசவேண்டுமென்று எண்ணிக்கொண்டாள்.

அன்று முழுவதும் வீட்டினுள்ளே அடைபட்டிருந்த ஏழுமலை மறுநாள் வெளியே சென்றுவிட்டு வரலாமென கிளம்பி போனவர் சிறிது நேரத்திலேயே ஓய்ந்து போய் வந்தார்.

அவரது வாடிய முகத்தை பார்த்த சந்திரா, “என்னாச்சுங்க, ஏன் வாட்டமா இருக்கீங்க?…” என கேட்க,

“ஊருக்குள்ள ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி பேசறான் சந்திரா. சில பேர் முதுகுக்கு பின்னால பேசறான். நேர வந்து ஆறுதல் சொல்றேன்ற பேர்ல குத்தி பேசறான். என்னால தாங்க முடியலை. வெளில போகவே மனசில்லை…” என்று தோளில் கிடந்த துண்டை எடுத்து எறிந்துவிட்டு உள்ளே போய்விட்டார்.

இனிமேல் ஒவ்வொருத்தரும் இதையே காரணமாக வைத்து முன்னிறுத்தி பேசத்தான் செய்வார்கள் என தெரிந்ததுதானே? ஆனாலும் வலிக்காமல் இருக்குமா? பொறுத்துதானே போகவேண்டும் என பெருமூச்சை இழுத்துவிட்டார்.

நாட்கள் சடுதியில் வேகமாக நகர ஆரம்பிக்க மகிமா மறுபடியும் வழக்கம் போல உறவாட ஆரம்பித்தாள். யாரிடமும் பழையதை கிளறாமல் அவள் பேசிய விதம் அவள் மேல் உண்டான மதிப்பை அதிகப்படுத்தியது நந்தினி குடும்பத்தாருக்கு.

கோசலை தன்னால் முடிந்த அளவிற்கு நந்தினியின் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். அவரின் எண்ணத்திற்கு ஏற்றவாறு அடுத்து வந்த இரண்டு வரன்களும் ஊர்க்காரர்களின் புண்ணியத்தால் தட்டிபோனது.

அதிலிருந்தே இன்னும் ஒருவருடம் ஆகட்டும் என்று ஏழுமலை அந்த பேச்சை அதோடு நிறுத்திவிட்டார். தரகரே ஏதாவது சொன்னாலும் மறுக்க ஆரம்பித்தார். அதற்கு காரணமும் இருந்தது.

நந்தினியும் கொஞ்சம் கொஞ்சமாக ஏழுமலையுடன் பேச ஆரம்பித்தாள். கேட்கும் கேள்விகளுக்கு முகம் கோணாமல் பதில் பேசுவதால் அதை இப்போதைக்கு கெடுத்துவிட வேண்டாமென்றும், அவளிடம் தன்மையாக பேசி பேசியே முழுமனதாக கல்யாணம் செய்ய சம்மதிக்க வைத்துவிடலாம் என்றும் தான் கல்யாணத்தை பத்தி பேச்செடுக்காமலேயே இருந்தார்.

அதனாலே மகிமாவோடு பார்லருக்கு செல்லவும் அனுமதித்தார். நந்தினி உணராமல் அவளை பாதுகாக்கவும், கண்காணிக்கவும்  தவறவில்லை ஏழுமலை.

எத்தனை போராடியும் படிக்கவே மாட்டேன் என்பதில் உடும்புபிடியாக இருந்த நந்தினியின் பிடிவாதத்தை மகிமா உதயாவிடம் கூற வேறு வழியில்லை என்று ப்யூட்டீஷியன் கோர்ஸ் படிக்க வைக்குமாறும், அதையும் அவள் அறியாமலேயே சொல்லித்தரவேண்டும் என்றும் யோசனை கூறினான்.

ஏதாவது ஒன்றாவது அவள் தெரிந்திருக்க வேண்டும். அவளின் மனம் கொஞ்சம் மாற்றம் பெறவேண்டும் என்பதற்காக தான் இந்த யோசனையை மகிமாவிடம் கூறினான்.

அதன் வழியே மகிமாவும் தான் படித்த படிப்பையும், ஓவியம் வரைதல், எம்ப்ராய்டரிங் போன்ற மேலும் தனக்கு தெரிந்த கலைகளையும் நந்தினிக்கு அவள் அறியாமலேயே கற்றுத்தந்தாள்.

தன்னை வேலை வாங்குகிறார்களோ என முதலில் அசுவாரஸ்யமாக  பின் இது ஒன்றும் படிப்பில்லையே என எண்ணிக்கொண்டு மகிமாவிடம் தானே கேட்டு பழக ஆரம்பித்தாள்.

இப்படியாக வருடங்கள் கடந்தன. மகிமா கர்ப்பமாக இருப்பதை அறிந்து ஏழுமலை குடும்பம் அவளை தாங்கியது. தங்களின் பெண்போல அவளை கவனமாக பார்த்துக்கொண்டனர்.

மகிமாவின் பிள்ளை உண்டான நேரம் அவளது பெற்றோர்கள் மனம் இளகி ரவியிடம் மன்னிப்பை கேட்டு அவளை தங்களோடு வந்து சிறிது காலம் தங்குமாறு அழைத்தனர்.

மகிமா தயங்க ரவி தான் இதை உதயாவிடம் கூறினான். மகியை கடிந்துகொண்டு அவளின் பெற்றோரோடு போய் இருக்குமாறு அறிவுரை கூறிய பின் தான் மகிமாவும் கிளம்பினாள்.

அப்போதும் விடாமல் நந்தினியை யார் பார்த்துகொள்வது என்ற கேள்வியை உதயாவிடம் எழுப்ப ரவி தான் இங்குதானே வேலை பார்க்கிறேன். எதுவானாலும் தானே பார்த்துகொள்வதாக கூறவும் தான் மகிமாவிற்கு நிம்மதியானது.

மகிமாவின் தாய் வீட்டிற்கு தான் வந்து பார்க்கிறேன் என்று உதயாவும் கூறி அனுப்பி வைத்தான். ரவி மட்டும் அவ்வப்போது சென்று மனைவியை கண்டுவருவான்.

இதற்கிடையில் இவர்கள் அறியாமல் பிரசாத் எப்படியெல்லாமோ அலைந்து திரிந்து நந்தினியின் முகவரியை கண்டுகொண்டாலும் அவளை நெருங்கும் வாய்ப்பானது அவனுக்கு கிட்டவே இல்லை.

சிறிது நாள் போகட்டும் என காத்திருந்தவனுக்கு குணாவை பற்றிய தகவல் கிடைக்க அவனை தயார் செய்து தரகர் மூலமாக ஏழுமலையின் முன்னால் நிறுத்த ஆவன செய்துவிட்டான்.

ரவிக்கு ஐந்து நாள் சேர்ந்தது போல விடுமுறை கிடைக்க மனைவியை பார்க்க ஊருக்கு சென்றவன் போய்விட்டு திரும்பும் போது நந்தினியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் இன்னும் இரண்டொரு நாளில் வரப்போவதாக ஏழுமலை கூறினார்.

அதை உதயாவிடம் தெரிவிக்கத்தான் ரவியால் முடியாமல் போனது. முதன் முதலாக வெளிநாட்டு ஏற்றுமதி விஷயமாக விஷ்ணுவோடு செல்வதாக கூறியவன் பதினைந்து நாளில் திரும்பி விடுவதாகவும் சொல்லிவிட்டு தான் சென்றான்.

அங்கே உள்ள போன் நம்பருக்கு முயன்று முடியாமல் போக அந்நேரம் மகிமாவிற்கும் உடல்நிலை சரியில்லை என்று ஊரிலிருந்து அழைப்புவர போட்டது போட்டபடி மீண்டும் லீவ் எடுத்துகொண்டு ஊருக்கு சென்றுவிட்டான்.

ரவியிடமிருந்து எந்த ஒரு தகவலும் வராததால் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று நினைத்துகொண்டான் உதயா.

சமயம் பார்த்து தரகரோடு மாப்பிள்ளை குணாவும், அவனது சொந்தபந்தங்களும் வந்துவிட மீண்டும் தன்னை கூட்டுக்குள் சுருட்ட ஆரம்பித்தாள் நந்தினி.

சம்மதிக்கவே மாட்டேன் என்ற நந்தினியை, “இப்போதைக்கு தயாராகி வந்து நின்னா போது. அவங்க போனதும் பேசிக்கலாம்…” என்று கெஞ்சி அழுது கரைத்து பெரிய போராட்டத்தின் பின் தான் அவர்களின் முன்னால் வந்து நின்றாள். அவளை பார்த்ததுமே அனைவருக்குமே பிடித்துவிட,

“தரகர் எல்லாம் சொன்னாருங்க. உங்க ஊர்லையுமே சொல்லத்தான் செஞ்சாங்க, தோஷம் அது இதுன்னு…” என்று பேசிய பெண்மணியை பார்த்து ஏழுமலையின் முகம் கருத்தது.

“எங்களுக்கு ஜாதகத்துல நம்பிக்கை இல்லைங்க. பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க எந்தவிதமான சீரும் செய்யவேண்டாம். கட்டின புடவையோட அனுப்புங்க. நாங்க கண்ணுக்குள்ள வச்சு நல்லவிதமா பார்த்துப்போம்…” என்று வாயெல்லாம் பல்லாக பேசிய குணாவின் அம்மா பேச்சில் உண்டான சந்தோஷத்தில் ஏழுமலை ஒரேடியாக சாய்ந்துவிட்டார்.

அவரை என்ன ஏதென்று யோசிக்க கூட விடாமல் மடமடவென திருமண பேச்சை ஆரம்பித்து பதினைந்து நாட்களுக்குள் ஏழுமலையே முஹூர்த்தத்தை உறுதி செய்ய வைக்கும் படி இருந்தது அவர்களது பேச்சும் செயல்பாடுகளும்.

அவசரப்படவேண்டாம் என்ற நேசமணி, கோசலையின் பேச்சிற்கு காதுகொடுக்காமல் உடனே திருமணத்திற்கு முஹூர்த்தத்தை பார்க்க தரகர் இன்னும் பதினைந்து நாளில் நல்ல சுபதினம் இருப்பதாக சொல்லவும் அன்றைக்கே புடவை, நெக்லஸ் கொடுத்து நிச்சயமும் செய்துவிட்டு தான் புறப்பட்டனர்.

அவர்கள் உறுதி செய்துவிட்டு செல்லவும் தான் ஏழுமலைக்கு நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. அவர்களது அதிகமான புகழ்ச்சியும், குளிரவைக்கும் பேச்சுக்களும் என அனைத்தும் ஏழுமலையை திக்குமுக்காட செய்தது. அவசரக்கோலத்தில் முடித்த இந்த பேச்சுவார்த்தை மற்றவர்களுக்கு நிறைவை தரவில்லை.

“நீங்க ரொம்ப அவசரப்படறீங்கன்னு தோணுது மாப்பிள்ளை. இது நம்ம பொண்ணோட வாழ்க்கை. எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்க முடியாது. நாங்க சொல்ல சொல்ல கேட்காம நீங்க தட்டு மாத்தினது தப்பு. அடுத்தவங்க முன்னால எதுவும் பிரச்சனை வேண்டாம்னு தான் அமைதியா பொறுத்திட்டு இருந்தோம்…” என நேசமணி தன் விருப்பமின்மையை தெரிவிக்க,

“இங்க பாருங்க மச்சான், உங்களுக்கு மட்டும் இல்லை. எல்லோருக்குமே நான் சொல்லிக்கிறேன். மாப்பிள்ளை வீட்டை பத்தி என்கிட்ட தரகர் போனவாரமே சொல்லிட்டாரு. நானும் போய் விசாரிச்சுட்டேன். எனக்கு திருப்தியா இருக்கு…” என்ற ஏழுமலையிடம்,

“போனவாரமே இந்த விஷயம் தெரிஞ்சிருக்கு. ஆனா எங்க யார்க்கிட்டயும் சொல்லனும்னு தோணலை. உனக்கு மட்டும் திருப்தியா இருந்தா போதுமா? இவ உன் பொண்ணுதானே? இவளுக்கும் மனசு இருக்காதா? ஒரு வார்த்தையாவது அவக்கிட்ட கேட்டியா நீ? இவ என்ன பொம்மையா நீ சாவி குடுத்து உன் இஷ்டத்துக்கு ஆட்டிவைக்க?…” என தன் ஆதங்கத்தை கொட்டினார் கோசலை.

“நீங்க வேற மதினி, ஊர்ல இல்லாத மாப்பிள்ளை கிடச்சதாட்டம் அவங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு பதினஞ்சு நாள்ல கல்யாணத்தை வைக்கவும் சம்மதிச்சு நிச்சயமே பண்ணிட்டாரே? நம்மகிட்ட பொண்ணு பார்க்க மட்டும் தானே வராங்கன்னு சொன்னாரு?…” என்று எடுத்துகொடுத்த நேசமணியை முறைத்த ஏழுமலை,

“எனக்கே தெரியாது, அவங்க நிச்சயமும் உடனே பண்ண ஏற்பாட்டோட வருவாங்கன்னு நான் என்ன கண்டேனா?… ஆனா பாருங்க அவங்களுக்கு என் பொண்ணுமேல எவ்வளோ அன்பு?…” என சில்லாகிக்க,

“மாமா, எனக்கு அந்த மாப்பிள்ளையை பிடிக்கவே இல்லை. அவரோட பார்வையும் பேச்சும் சரியில்லைன்னு எனக்கு படுது. நம்ம மித்ராவோட வாழ்க்கை மாமா, இப்போ நீங்க கொஞ்சம் நிதானமா இல்லைனா பின்னால வருத்தப்பட்டு பிரயோஜனமே இல்லை. இப்போவும் ஒண்ணும் நடந்திடலை மாமா, கொஞ்சம் யோசியுங்களேன்…” என கோவமாக ஆரம்பித்தவன் கெஞ்சலாக முடித்தான்.

error: Content is protected !!