நட்சத்திர விழிகளிலே வானவில் – 23 (1)

நட்சத்திர விழிகள் – 23

         தன்னை கோவமாக நோக்கிய கோசலையை துச்சமாக பார்த்தவர், “சந்திரா நாளைக்கு உன் அண்ணனை வர சொல்லணும், தாய்மாமா தானே வந்து நடத்திக்கொடுக்கணும்…” என்று இலகுவாக கூறினார் ஏழுமலை.

அவ்வளவுதான் கோசலைக்கு வந்ததே கோவம். “உனக்கு கொஞ்சமாவது கூறு இருக்கா? ஏற்கனவே கல்யாணம் ஆனா பொண்ணுக்கு திரும்பவும் கல்யாணம் செய்யனும்னு சொல்றியே? என்ன மனுஷன்டா நீ?…” என ஆத்திரத்தில் அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி எறிய அனைவருமே ஒரு கணம் ஆடிபோய்விட்டனர்.

ஏற்கனவே நந்தினிக்கு கல்யாணமான விஷயத்தை மகிமாவை வைத்துக்கொண்டு இப்படி கோசலை போட்டு உடைப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

செய்வதறியாமல் ஏழுமலையும் சந்திராவும் மகிமாவை பார்க்க அவள் திகைப்பிலிருந்து விடுபட்டு அவஸ்தையாக பார்த்துக்கொண்டே அவ்விடம் விட்டு உடனடியாக வெளியேறிவிட்டாள்.

சிறிதுநேர அமைதிக்கு பின், “இது என் பொண்ணோட வாழ்க்கை. அவளை யாருக்கு கட்டித்தரனும், தரக்கூடாதுன்னு நான் தான் முடிவெடுப்பேன். நீ இதுவரைக்கும் செய்ததெல்லாம் போதும். உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு. இதுல நீ தலையிட்ட நடக்கிறதே வேற…” என கூறிவிட்டு,

“அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆச்சா? யாரு சொன்னா அதுக்கு பேரு கல்யாணம்னு. என்னை பொறுத்தவரைக்கும் அவளுக்கு தாலிகட்டி தோஷம் கழிச்சிருக்கு அவ்வளவேதான். அதுக்கு மேல பேச அந்த சம்பவத்தில் எதுவுமே இல்லை…” என்று சூடாக பேச,

“தோஷம் கழிச்சிருக்கா? இப்படி சொல்ல உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு? தெய்வ சந்நிதியில, அந்த ஊர் ஜனங்க சாட்சியா நடந்த கல்யாணம் உனக்கு தோஷம் கழிக்கிறது போலவா?, இதை அந்த ஊர்க்காரங்க கேட்டா என்ன நினைப்பாங்க?…” என்று ஏழுமலைக்கு சளைக்காமல் தானும் பதில் வாதம் புரிந்தார்.

சந்திராவோ யாரையும் சமாதானப்படுத்த முடியாமல் தன் மகளின் வாழ்க்கை தன் கணவனின் கைகளில் ஒரு விளையாட்டு பொம்மை போல ஆகிவிட்டதே என்று கண்ணீரில் கரைந்துகொண்டிருந்தார்.

“அவனுங்க யார் என் மகளோட வாழ்க்கையை முடிவு பண்ண? பெத்தவன் நான் தான் முடிவெடுப்பேன். அது போல இந்த கல்யாணத்தை நடத்தியும் காட்டுவேன்…” என்று சவாலாக பேசினார்.

ஏழுமலை திரும்ப திரும்ப தன் பிடியிலேயே பிடிவாதமாக நிற்க எப்படியாவது சமாதானம் செய்து இப்போதைக்கு இந்த திருமண ஏற்பாட்டை தவிர்க்க ஆகவேண்டியதை மட்டும் பேசலாம் என்று முடிவெடுத்தார் கோசலை.

“சரிப்பா, உன் பொண்ணுக்கு உன் விருப்பம் போல நீயே கல்யாணம் செய்து வை. ஆனா அதுக்கு இப்போ என்ன அவசரம்? இன்னும் நம்ம மித்ரா பழைய மித்ராவா மாறலையே? இன்னமும் அருவியூர்ல நடந்ததையே நினச்சு வருந்திட்டு இருக்காளே? இயல்பான அவ சுபாவம் அந்த கல்யாணத்திலேயே தொலஞ்சு போச்சு. கொஞ்ச நாள் ஆகட்டும். அப்பறமா கல்யாணம் பத்தி பேசலாமே?…” என்று கெஞ்ச,

“அவ மாறவே வேண்டாம். இப்படியே இருந்தா எனக்கொண்ணும் கஷ்டமில்லை. சொல்லபோனா இப்போதான் சந்தோஷமா இருக்கு. அமைதியா ஒரு இடத்துல அவ இருக்கிறதுது. எப்படி இருந்தாலும் இந்த கல்யாணம் நடக்கும். நாளைக்கு பொண்ணு பார்க்க வந்துதான் தீருவாங்க….” என்று கூறியவர் நந்தினியை முறைத்துக்கொண்டே,

“அப்படி வரவங்க முன்னால இவ வந்து நின்னுதான் ஆகணும். நான் சொல்றபடி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சுதான் ஆகணும். போட்டோ, ஜாதகம் எல்லாம் எப்போவோ தரகர்க்கிட்ட கொடுத்துவிட்டுட்டேன். இந்த இடம் கண்டிப்பா உறுதியாகிடும்…” என்று பேசிக்கொண்டே போனார்.

அவருக்கு தான் இவ்வளவு பேசியும் நந்தினியின் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட சாதகமாகவோ, பாதகமாகவோ வரவில்லையே என்ற ஆதங்கம். அது கோவமாக மாறி அவளை சுட்டுவிட துடித்தது.

நந்தினியின் அருகில் வந்தவர், “என்ன பேசினதெல்லாம் கேட்ட தானே? எந்த நாளைக்கு தயாரா இருக்கணும். புரியுதா?…” என்று கேட்டும் அவள் பதில் கூறாமல் மௌனம் காக்க,

“கேட்கறதுக்கு பதில் சொல்லாம கல்லுமாதிரி இருக்கியே?… உன்னால பொண்ணு பார்க்க வரவங்ககிட்ட நான் அசிங்கப்பட்டு நிக்கனுமா?… இன்னும் எங்கெல்லாம் என்னை அவமானபடுத்தி என் உயிரை குடிக்கப்போற?…” என்று கடுமையான வார்த்தைகளை சிதறவிட்ட ஏழுமலையின் குரலுக்கு சிறிதும் அஞ்சாமல் அமைதியாக நின்றாள்.

எங்கே கோவத்தில் நந்தினியை இன்னமும் காயப்படுத்திவிடுவாரோ என்று பயந்த சந்திரா, “ஐயோ அவளை எதுவும் சொல்லாதீங்க. நான் பேசறேன். நீங்க போங்க. அடுத்து நடக்கவேண்டியதை பாருங்க…” என நந்தினியை அணைத்துக்கொண்டு கூறினார்.

“ம்ம் சொல்லிவை, என் அக்காக்கும் சேர்த்து. அப்பறம் இன்னொரு விஷயம். அந்த மகிமா பொண்ணு வந்து ஏதாவது கேட்டா பழைய விஷயம் எதையுமே எக்காரணம் கொண்டும் சொல்லக்கூடாது. என்ன சொல்லி சமாளிப்பீங்களோ? எனக்கு தெரியாது. ஆனா எதுவுமே அந்த பொண்ணுக்கு தெரியக்கூடாது…” என கடுமையாக கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.

அவர் சென்றதும், “ஏண்டா மித்ரா இப்படி பேசாம இருக்க? நான் சொல்றதை கொஞ்சம் கேளுமா, உன் அப்பாப்பத்தி உனக்கு தெரியாததா? அவர் இப்போ வெறி புடிச்சது போல இருக்காரு. இப்போ நாம சொல்றது எதையுமே கேட்கமாட்டாருடா. உனக்கு நான் எப்படி சொல்லன்னு எனக்கு தெரியலை. உன் மனசு புரியத்தான் செய்யுது…” என்று அழுத சந்திராவை விலக்கிவிட்டு தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துகொண்டாள். அறைக்குள் நுழைந்தவள் வழக்கம் போல மாங்கல்யத்தை எடுத்து வைத்து பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

இப்போதெல்லாம் நந்தினி அதிகமாக தனிமையை நாடுகிறாள் என்று அனைவருக்குமே தெரிந்தாலும் அதிலிருந்து அவளை வெளியே கொண்டுவர யாராலுமே முடியவில்லை.

முன்பு அவளின் தனிமையை தடுக்க யாரும் முயற்சிக்கவில்லை. இப்போதெல்லாம் முயற்சித்தாலும் அவளின் தனிமை தேடலை தடுக்க முடியவில்லை. இது எங்கே போய் முடியுமோ என்று கவலைகொள்ள மட்டும் தான் முடிந்தது.

“என்ன சந்திரா, இவனுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. என் மருமவ தனக்குள்ளேயே மெழுகா உருகிட்டு இருக்கா. அவளோட மனசுல எரியிற தீயை குளிரவைக்காம இப்படி மேலும் தூண்டிவிட்டு ஒரேடியா சாய்க்க பார்க்கானே?…” என கோசலை புலம்ப,

“அண்ணி நாம நினைக்கிறது இந்த வீட்ல என்னைக்கு நடந்திருக்கு? உங்க மனசுல இருக்கிற ஆசை புரியுதான். ஆனா அது நடக்கிற காரியமில்லை…”என சமாதானம் செய்தவர்,

“அதுவுமில்லாம அந்த புள்ளை தான் அன்னைக்கே உங்க தம்பி கேட்ட வாக்கை குடுத்துட்டு விலகிடுச்சே? இனி மித்ராக்கு என்ன நடக்கனும்னு விதிச்சிருக்கோ அது போல நடக்கட்டும். என் பொண்ணு கஷ்டமில்லாம வாழ்ந்தாலே எனக்கு போதும் அண்ணி…” என கூறியதும் தான் பேச இங்கே எதுவுமில்லை என நினைத்துகொண்டு நேசமணி வீட்டை நோக்கி நடையை கூட்டினார் கோசலை.

———————————————————————

உயிரின் ஆழம் வரை பரவிய வலியின் தாக்கத்தோடு, “என்னது நந்தினிக்கு அவங்கப்பா மாப்பிள்ளை பார்க்கிறாரா?… என்ன இப்படி திடீர்னு  சொல்ற மகி?…” என பரிதவிப்போடு கேட்ட உதயாவின் குரலில் கலக்கமான மகி,

“அண்ணா பொண்ணு பார்க்கத்தான் வராங்க. அதுவும் நாளைக்குதான். நீங்க கோவப்படாம இருங்க. நாம பொறுமையா யோசிச்சு ஏதாவது செய்யலாம்…” என அக்கறையாக சொன்ன மகியிடம் பதில் ஏதும் பேசாமல் அமைதிகாத்தான்.

வீட்டிற்கு வந்ததும் மகிமா செய்த முதல் வேலை உதயாவிற்கு போனில் அழைப்பு விடுத்தது தான். அவளால் நந்தினியின் திருமண தகவலை கேட்டதும் தாளமுடியவில்லை.

எப்படியாவது உதயாவிடம் கூறவேண்டும் என்ற உத்வேகத்தில் வந்து அவனிடம் திருமண தகவலை கூற அதை கேட்டு அதிர்ந்த அவன் குரலில் தொனித்த வேதனையை கண்டவள் மனமும் கவலைகொண்டது.

“அதுமட்டும் இல்லை அண்ணா, அங்க கோசலையம்மா இருக்காங்கல்ல. அவங்களுக்கு சரியான கோவம். அண்ணியோட அப்பாவை நல்லா திட்டிவிட்டுட்டாங்க. ஆனா என் முன்னாலையே உங்க கல்யாண விஷயத்தை பத்தி சொல்லவும் எல்லோருக்குமே ஷாக் ஆகிடுச்சு. நான் ஒண்ணும் பேசாம உடனே வீட்டுக்கு வந்துட்டேன்…” என்று கூற,

“சரிம்மா, நீ கவனமா இரு. இனிமே அவங்க கிட்ட எங்க கல்யாண விஷயம் பத்தி எதுவுமே கேட்கவோ பேசவோ செய்யவேண்டாம். புரியுதா? பத்திரம். நாளைக்கு என்ன நடந்ததுன்னு பார்த்துட்டு சொல்லு. வச்சிடறேன்…” என்று பேசி வைத்துவிட்டு திரும்பிய உதயாவை பார்த்து முறைத்த விஷ்ணு,

“ரொம்ப நல்லா இருக்குடா, உன் பொண்டாட்டிக்கு கல்யாணமா? நீ போய் சாப்ட்டுட்டு மொய் நிறைய எழுதிட்டுவாயேன். உன்னையெல்லாம்?????? அந்த ஹிட்லர் நல்லா காய் நகர்த்தரார். இப்போவாவது சொல்றதை கொஞ்சமாவது கேளு பிரபா…” என பேச ஆரம்பித்தவனை கையமர்த்தி தடுத்தான் உதயா.

“இங்க பாரு விஷ்ணு. இந்த கல்யாணம் சீக்கிரமா நடக்குதேன்னுதான் எனக்கு வருத்தம். அவளை படிக்க வைக்காம இப்படி சின்ன வயசுலையே கல்யாணம் செய்து வைக்க போறாங்கன்னு. வேற ஒண்ணுமில்லை…” எனவும் விஷ்ணுவின் முகத்தில் இருந்த சந்தேகத்தை படித்தவன்,

“இப்போ உனக்கென்னடா? நல்ல மாப்பிள்ளையா இருந்தா சந்தோஷம் தானே? நல்லபடியா கல்யாணம் நடக்கட்டும். இப்போ வேலை நிறைய இருக்கு சார். அதை பார்க்கலாம்…” என வலிக்கும் மனதை மறைத்து தன் கவனத்தை குவிந்துகிடந்த வேலையில் செலுத்த ஆரம்பித்தான்.

error: Content is protected !!