நட்சத்திர விழிகள் – 21
ஏழுமலையின் மிரட்டலில் அதிர்ந்தது நந்தினி மட்டுமல்ல, அவளது குடும்பமும் தான்.
பெற்ற மகளின் இக்கட்டான நிலைமையை கண்டு சந்திரா மனதிற்குள்ளேயே அரற்றினார். கணவரது செயலில் அவருக்கு உடன்பாடில்லைதான்.
அதை அவரது முகத்தில் கூட காண்பிக்க முடியாத தன் துயரநிலையை வெளியே யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே அமிழ்த்திக்கொண்டார்.
“அப்பா, ஏன்ப்பா இப்படியெல்லாம் பேசறீங்க? நான் என்ன சொல்ல வரேன்னு…” என நந்தினி முடிக்கும் முன்னாலே,
“ஓ எனக்கே நீ புத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டியா? அந்த அளவுக்கு உனக்கு திமிர் கூடிருச்சு அப்படித்தானே?…” என கூறியவருக்கு பதில் சொல்ல முடியாமல் விழித்தவளிடம்,
“வளவளன்னு பேசாத. என்னோட முடிவை மாத்த மாட்டேன். நான் சொன்னதை செய்ய முடியுமா முடியாதா?…” என்ற மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றார்.
“அப்பா நீங்களாவது சொல்லகூடாதா? பாவம்ப்பா நம்ம மித்ரா…” என்று தன்னிடம் இறைஞ்சிய தன் மகனை பார்த்த நேசமணி தன்னால் இதில் செய்யக்கூடியது ஒன்றுமில்லை என்பது போல மறுப்பாக வேதனையோடு தலையசைத்து தன்னோடு அணைத்துக்கொண்டார்.
தன் மகளின் மனதை தன் கூரிய வார்த்தைகளாலும், பிடிவாதத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று அவளின் உணர்வுகளுக்கு சமாதி எழுப்பிக்கொண்டு இருக்கிறோம் என்பதை உணராமல் இறுக்கமாக நின்றார் ஏழுமலை.
அவரது விழிகளில் ஒரு துளி அன்பாவது இருக்குமா என்று தேடி தேடி சோர்ந்துபோனாள் நந்தினி. மறுத்து மேலும் பேச எத்தனிக்க ஏழுமலை தன் கண்களை நன்கு அகற்றி விரித்து பயங்கரமாக முறைத்தார்.
அதில் வார்த்தைகள் தடைபட்டு போகவும் தன் இயலாமையால் செய்வதறியாது கைகளால் முகத்தை மூடிகொண்டு ஓவென கதறி தீர்த்தாள். கோசலை நந்தினியின் ஆற்றாது அழுத ஓலத்தை காண முடியாமல் இழுத்து மார்போடு அணைத்துகொண்டவர்,
“இரக்கமில்லாத அப்பனுக்கு மகளா பிறந்து தொலைச்சிட்டியே?… நீ என்ன அழுதாலும் அவன் கல்லு மாதிரிதாண்டா கண்ணு இருப்பான். இந்த மனசாட்சி இல்லாதவனுக்காக உன் கண்ணீரை ஏண்டாம்மா வீணடிக்கிற?…” என்று நந்தினியின் கண்களிலிருந்து வழிந்த நீரை துடைத்துக்கொண்டே கூறினார்.
கோசலையின் பேச்சில் அவர் மேல் இருந்த கோவம் இன்னமும் அதிகமாகியது ஏழுமலைக்கு. ஆனாலும் இப்போது எதுவும் பேசவேண்டாமென அமைதியாக நந்தினியையே பார்த்து கொண்டிருந்தார்.
ஒட்டுமொத்த வேதனையையும் தன் ஒளியிழந்த விழிகளில் நிறுத்தியவள், “இதுக்கு பதிலா என்னை கொன்னு போட்டுடலாம்ப்பா நீங்க…” என கூறிக்கொண்டே நடுங்கும் கரங்களால் தன் கழுத்தில் தவழ்ந்த மாங்கல்யத்தை ரணவலியோடு கழட்டியவள் கோசலையின் கையில் கொடுத்து விட்டாள்.
கழட்டி கொடுத்தவுடன் உண்டான உயிர்வலியில் கண்களை நிறைத்த கண்ணீரை சிந்தாமல் மீண்டும் கண்களுக்கும் சேமித்தவள் நெஞ்சை அடைத்து கொண்டு வந்த அழுகையை மென்று முழுங்கினாள்.
நந்தினியின் முகத்தை பார்க்கும் திராணியற்று பூரணியின் தோள்களில் சாய்ந்து கொண்டு சத்தம் வராமல் கேவினார் சந்திரா.
நினைத்ததை சாதித்து விட்ட பெருமிதத்தில் இருந்தவர் கோசலையின் கண்டனப்பார்வையை கண்டுகொள்ளாமல் அவருக்கு தண்டனை தரவேண்டுமே என நினைத்தார்.
“அக்கா அதான் அவ அந்த கயறை கழட்டி குடுத்துட்டால்ல, அதை போய் கோவில் உண்டியல்லையாவது, இல்லை அங்க வேற எங்கையாவது போட்டுட்டு வா. அதை பார்க்க பார்க்க எனக்கு பத்திக்கிட்டு வருது…” என்றார் ஏழுமலை.
இறுமாப்பில் அதிகாரம் செய்த தன் தம்பியை, “நீயெல்லாம் ஒரு மனுஷனா?…” என்பது போல பார்த்தார் கோசலை.
சட்டென அவரது மனம் ஒரு யோசனைக்குள் தாவியது. உடனே வேனை விட்டு கீழே இறங்கி கோவிலுக்குள் சென்றவர் போன வேகத்தில் திரும்பியும் விட்டார்.
தன் அக்கா கோவிலுக்கு நுழையும் போதிலிருந்து பார்த்துகொண்டிருந்த ஏழுமலை கோசலை மஞ்சள் கயிறை உண்டியலில் போட்டதை கண்ணால் கண்ட பின் தான் நிம்மதியுற்றார்.
கோசலை திரும்பி வரும் போது தன்னையே பார்த்துகொண்டிருந்த ஏழுமலையின் மீதான அவரது கோவம் முகத்தில் தாண்டவமாடியது. அதை ஒருவிதமான திருப்தியோடு பார்த்தார் ஏழுமலை.
“போதும் அழுது கரைஞ்சது. ட்ரைவரை கூப்பிட போறேன். அமைதியா இருங்க எல்லோரும்…” என்று எச்சரித்துவிட்டு போனில் ட்ரைவரை அழைத்தார். ட்ரைவர் வரவும் தங்கள் ஊரை நோக்கி சென்றனர் அனைவரும்.
நந்தினியின் கண்கள் மட்டும் அந்த கோவிலை நிராசையோடு பார்த்தது. தான் என்ன உணர்கிறோம் என்று கூட புரியாமல் தவித்தாள். ஆனால் அவளது தவிப்பும் வேதனையும் முகத்தில் பிரதிபலிக்காதபடி உணர்வற்ற கடினத்தன்மையை ஒட்டவைத்துகொண்டாள்.
இருள் கவிழ்ந்த நேரத்தில் வீடு வந்ததுமே நேராக தன் அறைக்குள் செல்ல இருந்தவளை நிறுத்தி, “எங்க போற? முதல்ல பின்பக்கமா போய் தலைமுழுகிட்டு வா. நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்…” என கடுமையாக கூறிவிட்டு சென்றார்.
அவர் போனதுமே அனைவரும் நந்தினியை கட்டிகொண்டு அழுதனர். அனைவரது கண்ணீரில் கரைய துடித்த உள்ளத்தை கடிவாளமிட்டு நிறுத்தியவள் அவர்களது பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பின்பக்கமாக சென்றாள்.
அவளது இந்த அமைதியும், நடவடிக்கையும், இறுக்கமும் அனைவருக்குமே அதிர்ச்சியை தந்தது. நந்தினியை பின்தொடர்ந்து சென்ற கோசலை,
“மித்ராக்கண்ணு. கொஞ்சம் பொறுடா…” என்று அவளை நிறுத்தியவர் பின்பக்க கதவை அடைத்துவிட்டு வந்தார்.
“எதற்கு இப்படி செய்கிறார்?…” என யோசித்துக்கொண்டே அவரது போக்கு புரியாமல் பார்த்துகொண்டிருந்தாள் நந்தனி.
யாருக்கும் தெரியாமல் முந்தானையில் முடிந்து வைத்திருந்த தாலியை கையில் கொடுத்த கோசலை, “இந்தா மித்தும்மா, பத்தரமா வச்சுக்கோ. உனக்கு சொந்தமானதை உன் கிட்டயே ஒப்படைச்சிட்டேன். நம்பிக்கையை மட்டும் கை விட்டுடாத. இந்த ஜென்மத்துல அந்த தம்பிதான் உன்னோட புருஷன். கண்டிப்பா உன் வாழ்க்கை உன் கையில வந்து சேரும். இது உன்னோட அப்பன் கண்ணுல படாம பார்த்துக்க கண்ணு…” என கூறவும் அவரை கட்டிகொண்டாள் நந்தினி.
“அத்தை…” என கதறியவள் தன் மாங்கல்யத்தை தடவியவள்,
“நான் என்ன தப்பு பண்ணினேன் அத்தை?… தாலியை பத்தியும் அதோட புனிதத்தை பத்தியும் எனக்கு சொல்லிக்குடுத்துட்டு இப்போ இப்படி ஒரு பாவத்தை பண்ணவச்சுட்டாங்களே அத்தை?…” என அழுதுகொண்டே பேசியவள்,
“இதை நான் என் உயிருக்குள்ள வச்சு பார்த்துப்பேன். சத்தியமா அவங்க மேல எனக்கு எந்த விதமான நோக்கமும், எண்ணமும் இல்லைங்க அத்தை. நீங்களாவது புரிஞ்சுக்கோங்க. கல்யாணம் வாழ்க்கையில ஒருமுறைதான்னு நம்பறேன். நான் நம்பறேன் அத்தை. நிச்சயமா அவங்க என்னை தேடி வருவாங்க. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நான் எதுக்காக அழனும்? என்மேல எந்த தப்புமில்லையே? அதனால அழமாட்டேன்…” என கூறிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்துகொண்டாள்.
ஏழுமலை எண்ணியது போல கோசலை உண்டியலில் போட்ட மஞ்சள் கயிறு உதயா நந்தினிக்கு அணிவித்த மாங்கல்யம் அல்ல.
குலதெய்வம் கோவிலில் பூஜை முடிந்து பெண்களுக்கு மஞ்சள் கயிறை கொடுத்த பூசாரியிடம் வேண்டாம் என்று மறுக்க, அவரோ கோவிலில் கொடுப்பதை வேண்டாம் என சொல்லகூடாது என்று கூற பூரணியும், சந்திராவும் சொல்லி வாங்க வைத்துவிட்டனர்.
அதுதான் நந்தினியின் மாங்கல்யத்தை காப்பாற்றிக்கொடுத்தது. ஏழுமலை தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவர் சட்டென இடுப்பில் முடிந்து வைத்திருந்த கயிறை மாற்றி ஏழுமலை பார்க்கும் படி உண்டியலில் போட்டுவிட்டு வந்தார்.
அங்கேயே நின்று சிறிதுநேரம் பார்த்துகொண்டிருந்தவர் ஒரு பெருமூச்சோடு வீட்டினுள் நுழைந்தார் கோசலை. அவரை பார்த்ததுமே வேகமாக எழுந்துவந்த சந்திரா,
“அண்ணி, மித்ரா என்ன சொல்றா அண்ணி? உங்க தம்பி செய்யற அக்கிரமத்தை என்னால தடுக்க முடியலையே? கையாலாகதவளுக்கு பொண்ணா பிறந்ததால என் பொண்ணு என்னவெல்லாம் கஷ்டப்படறா?…” என தன் துக்கத்தை கொட்டியவரை பூரணியும் கோசலையும் அணைத்துக்கொண்டனர்.
“எல்லாம் சீக்கிரமே சரியாகிடும் சந்திரா, அழாதே…” என ஆறுதல் கூற மட்டுமே முடிந்தது கோசலையால்.
வந்ததுமே விஜியை அழைத்துகொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்ட நேசமணி சிறிதுநேரத்திலேயே வந்துவிட்டார். அவரை பின்தொடுத்து,
“என்ன சந்திராக்கா, வந்துட்டீகளா?…” என குரல் கொடுத்துக்கொண்டே வந்தாள் பக்கத்துவீட்டு பெண் நிர்மலா.
அவளது குரலை கேட்டு, “அய்யயோ, ஊர்வம்பு நிர்மலா வராளே? இப்போ என்ன செய்ய?…” என பதறியபடி அவள் நெருங்கி வரும் முன் தங்களின் முகத்தை அழுத்தித்துடைத்துகொண்டு அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போல பாவனை செய்தனர்.
வேகமாக வீட்டின் அடுக்களை பக்கத்தில் வந்துகொண்டிருந்தவளை, “இந்தாம்மா நிர்மலா, இங்க வா, இந்நேரம் என்ன வேணும் உனக்கு?…” என ஏழுமலையின் குரலில் ப்ரேக் அடித்தது போல நின்றுவிட்டாள்.